இலங்கை வலைப்பதிவர்கள்

முன்குறிப்பு : கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்க்கு முன்னர் எழுதிய பதிவு இது. நண்பர் மாயாவின் வேண்டுகோளின் படி மீள்பதிவாக எந்த மாற்றமும் செய்யாமல் இட்டிருக்கின்றேன். முன்னைய பதிவின் இணைப்பைக் கீழே கொடுத்திருக்கின்றேன். அதில் இந்தப் பதிவுடன் சம்பந்தப்பட்ட சில சர்ச்சையான பின்னூட்டங்கள் இருக்கின்றன, சென்று பாருங்கள். அத்துடன் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

வலைப்பதிவின் தாக்கம் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பெரிதாக ஏற்படவில்லை. தமிழகத்திலிருந்து பலர் தங்களுக்கு என ஒரு வலையோ பல வலைகளோ வைத்திருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் உள்ள பல இலங்கையர்கள் எத்தனையோவிதமான வலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இலங்கையில் வாழும் தமிழ்ப் பதிவாளர்களின் எண்ணிக்கை வெறும் நூற்றுக்குள் தான் அடங்கிவிடுகின்றது. இதே நேரம் இலங்கையில் ஆங்கிலத்தில் பதியும் பதிவாளர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கணணி சம்பந்தப்பட்டவர்களாகவும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுபவர்கள் ஆகவும் மட்டுமே இருக்கிறார்கள்.

மிகவும் சிறந்த எழுத்தாளர்கள் கருத்தாளர்கள் இருந்தும் இலங்கையிலிருந்து வலைப்பதிவர்கள் வெளியே வரதாதற்க்கு என்ன காரணங்கள் என நுனிப்புல் மேய்ச்சலே இந்தப் பதிவு.

முக்கியகாரணமாக நாட்டின் யுத்த சூழ்நிலையைக் குறிப்பிடலாம். இதனால் எழுத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையே பலரை எழுதவிடாமல் தடுக்கின்றது என்பது என் கருத்தாகும். இதனாலே எழுதுவதில் பல அரசியலைத் தொடாமல் அல்லது பட்டும்படாமல் எழுதுகின்றார்கள்.

அடுத்தது வலைபற்றியும் வலையுலகம் பற்றியும் அதிகமான விழிப்புணர்பு இல்லாததாகும். ஏற்கனவே வலையுலகம் பற்றி சில குறிப்புகளையும், வலைப்பதிவாளர்களையும் மெற்ரோ நியூஸ் பத்திரிகை அறிமுகம் செய்தது. இதன் பின்னால் தினக்குரலில் தாசன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் மாயாவால் இலங்கை வலைப்பதிவாளர்கள் திரட்டி ஆரம்பிக்கப்பட்டது. மாயாவின் இலங்கை வலைப்பதிவர் திரட்டியைவிட இன்னொரு திரட்டியான இலங்கை வலைப்பதிவுகள் திரட்டியும் இலங்கையிலிருந்து எழுபவர்களின் ஆக்கங்களை திரட்டுகின்றது. இவ்வளவு முயற்சிகள் செய்தும் ஏனோ பலர் வலைப்பதிவை திரும்பிப்பார்பதே இல்லை. அதே ஒரு முறை நிர்ஷன் தன் பதிவில் குறிப்பிட்டதுபோல் வலைப்பதிவை சில எழுதுலக ஜாம்பவான்களும் கல்வியாளர்களும் ஏதோ சாதாரண விடயமாகவும் பொழுதுபோகாமல் இருப்பவர்கள் த‌ங்கள் எண்ணங்களை கொட்டும் இடமாகவுமே கருதுகிறார்கள்.


ஏற்கனவே எனக்கு இலங்கை எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். சிறந்த் எழுத்தாளர்கள் இருந்தாலும் வாரம் ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்தாலும் இவர்கள் தங்களை இலங்கைக்கு வெளியே அறிமுகப்படுத்த ஏனோ தயங்குகிறார்கள். 2004ல் நானும் என் உறுவினர் ஒருவருமாகச் சேர்ந்து இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு இணையம் ஆரம்பித்தோம். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் மல்லிகை இதழிலும் இதனைப் பற்றி செய்திகள் வந்தன. தங்களது விபரங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கேட்டேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் என்னைத் தொடர்புகொண்டவர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். ஏனையவர்கள் ஏனோ தொடர்புகொள்ளவில்லை. கவிஞர் மேமன்கவி எனக்கு ஊக்கம் அளித்தவர்களில் முக்கியமானவர் அவரே எத்தனையோ பேரிடம் நேரடியாகச் சொல்லியும் பலர் விரைவில் அனுப்பிவைக்கின்றேன் என்றார்கள் ஆனாலும் இன்னமும் அந்த விரைவான காலம் வரவில்லை என நினைக்கின்றேன். அந்த முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் மு.மயூரன் போன்றவர்களின் முயற்சியால் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு அதில் பல எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இதே நேரம் இணையத்தில் பிரபலமான எழுத்தாளர்கள் வரிசையில் டொக்டர்.முருகானந்தன், திரு.உடுவை தில்லை நடராஜா, கவிஞர் மேமன்கவி இவர்கள் மூவருமே வலையில் எழுதுபவர்கள். புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதும் நம்மவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானதாகும்.

அடுத்த காரணமாக தொழில்நுட்ப அறிவும் இணைய வசதிகளும் இல்லாமையைக் குறிப்பிடலாம். கொழும்பு போன்ற மாநாகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே இணையச் சேவைகளை பெரும்பாலும் தங்கு தடை இன்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. ஏனைய இடங்களில் இருப்பவர்கள் இணையக் சேவை வழங்கும் கடைகளுக்குச் சென்றே தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்.

இன்னொரு காரணமாக பலர் வலையை சிறுபிள்ளை வேளாண்மை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இந்த சிறுபிள்ளை வேளாண்மை பலரை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் பலரது கருத்துக்கள் வலைப்பதிவாளர்களைப் பற்றி எதிர்மறையாகவே இருக்கின்றது அண்மைய உதாரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

இலங்கையிலிருக்கும் எழுத்து ஊடகங்களிலும் சரி இலத்திரனியல் ஊடகங்களிலும் சரி வலைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. சில பத்திரிகைகளில் சில விடயங்கள் வந்தாலும் வானொலி தொலைக்காட்சிகள் இதனை ஏனோ வெளிக்கொணரத் தயங்குகின்றன. அண்மையில் கூட வெற்றிஎவ் எம் வானொலியில் லோஷனை ஒருவர் வலைப்பதிவுகளைப் பற்றிக்கேட்டிருந்தார். அதற்க்கு அவர் இதனைப் பற்றி வானொலியில் சொல்வது சாத்தியம் இல்லை என்றார். (ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து). அதே நேரம் தமிழ்மொழிக்கென இருக்கும் இரண்டு தொலைக்காட்சிகளிலும் எந்த நிகழ்ச்சிகளோ நேர்முகங்களோ இதுவரை இடம் பெறவில்லை. தனியார் தொலைக்காட்சியில் இதற்கான நேரம் ஒதுக்கமாட்டார்கள். ஆனால் அரச தொலைக்காட்சியில் காலைவேளை நடைபெறும் நேர்முகங்களில் ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது இரண்டு வலைப்பதிவாளர்களையோ அழைத்து வலைப்பதிவு பற்றிக்கேட்கலாம்.

தமிழக ஊடகங்கள் எமது நாட்டு ஊடகங்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வலைப்பதிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்றே கூறமுடியும். சன் நியூஸில் வலைப்பதிவாளர்களைப் பற்றிய செய்திகளும் ஒரு விபரணமும் வந்தது. விகடன் தன் வரவேற்பறையில் வார ஒரு வலைப்பதிவை அறிமுகம் செய்கின்றது.

என் ஆதங்கம் என்னவென்றால் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களினதும் புத்திஜீவிகளினதும் எத்தனையோ சுவாரசியமானதும் ஆக்கபூர்வமானதுமான விடயங்கள் பலரையும் சென்றடையவேண்டும் என்பதே ஆகும். நிச்சயமாக அவர்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. இவர்களிடம் ஆற்றல் இருக்கின்றது. அதனைவெளிக்கொணர ஏனோ தயங்குகிறார்கள். என்னைப்போன்ற பலர் சும்மா விளையாட்டாக ஆரம்பித்த வலைப்பதிவு இன்றைக்கு தமிழ்மண நட்சத்திரமாக விளங்குகின்றது என்றால் இதற்கான காரணம் பின்னூட்டமிடும் வாசகர்களே.

இந்த இடத்தில் தமிழ்மணத்திடம் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன். சில வேளைகளில் இது அதிகப்பிரசங்கித் தனமாக இருந்தாலும், இலங்கை வலைப்பதிவாளர்கள் சார்பில் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். இதுவரை எனக்கு தெரிந்து இலங்கையிலிருந்து நட்சத்திரமாக மு.மயூரன், வன்னியன், த,அகிலன் போன்ற இலங்கையிலிருந்து வலைப்பதிவு செய்யும் பதிவர்களை நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கவிட்டீர்கள் இதேபோல் இலங்கையிலிருந்து வலைபதியும் ஏனையவர்களையும் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒரு தடவையோ அழைத்து நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்யுங்கள். என் நட்சத்திர வாரத்தில் இந்தக்கோரிக்கையை வைப்பது சரியானதா எனத் தெரியவில்லை.

ஏனைய வலைப்பதிவாளர்களிடமிருந்து இதுபற்றிய ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கின்றேன்.

இலங்கை வலைப்பதிவர்

8 கருத்துக் கூறியவர்கள்:

மாயா சொல்வது:

மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள் அண்ணா!

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வரவ பதிவு பண்ணிட்டேன்

Admin சொல்வது:

நல்ல பல கருத்துக்களை முன் வைத்து இருககின்றீர்கள். இலங்கை வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தல் தொடர்பில் பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

Subankan சொல்வது:

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நடந்ததன் பின்னர் இந்த நிலமைகள் பல மாறிக்கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. அதில் கலந்துகொள்ள முடியாத்தையிட்டு எனக்கு வருத்தம்தான். மாதமொருமுறை, அல்லது இரண்டு மாதங்களிற்கு ஒருமுறையாவது இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதன்மூலம் மேலும் சாதிக்கலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// மாயா said...
மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள் அண்ணா!//

இதனை இன்னொருதடவை சில பின்னூட்டங்களுடன் மீள்பதிவு செய்ய எண்ணியிருந்தேன் . நினைவூட்டியதற்க்கு நன்றிகள் மாயா.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
வரவ பதிவு பண்ணிட்டேன்//

நன்றிகள், வெறும் வரவைப் பதிவு செய்யாமல் கருத்தையும் சொல்லுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...
நல்ல பல கருத்துக்களை முன் வைத்து இருககின்றீர்கள். இலங்கை வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தல் தொடர்பில் பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.//

நிச்சயமாகச் சந்ரு. விரைவில் இன்னொரு பதிவர் சந்திப்பை இன்னொரு குழுவினர் செய்தீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே பலர் அறிமுகமானபடியால் இம்முறை செய்பவர்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நடந்ததன் பின்னர் இந்த நிலமைகள் பல மாறிக்கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. அதில் கலந்துகொள்ள முடியாத்தையிட்டு எனக்கு வருத்தம்தான். மாதமொருமுறை, அல்லது இரண்டு மாதங்களிற்கு ஒருமுறையாவது இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதன்மூலம் மேலும் சாதிக்கலாம்.

வருத்தம் வேண்டாம் நண்பரே, உங்களைப் போன்ற சமூகம் கொடுக்கமுடியாத பலர் இருக்கின்றீர்கள், இம்முறை நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள் பின்னால் நாங்கள் வருகின்றோம். தேவையான சகல உதவிகளும் செய்து கொடுக்கப்படும். ஒக்டோபர் அல்லது நவம்பர் பொருத்தமாக இருக்கும். சிலர் அனுசரணை வழங்கக்கூட காத்திருக்கின்றார்கள்.