Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்

கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். Save TN Fisherman

ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது.

சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே . யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை.



முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது.

எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள்.

நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.

இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).

அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும் கொல்லும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி

மொழிக்கு மாநாடு என்பது காலத்தின் கட்டாயம். இதுவரை நடந்தேறிய உலகத் தமிழாராட்சி மாநாடுகள் இதனைத் தான் செய்தன. அங்கே தமிழுக்கு மட்டும் தான் ஆராய்ச்சி நடந்தது. இன்றைக்கு இணையத்தில் ஆங்கிலத்திற்க்கு அடுத்து ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்க்கு என பொறுப்பான குழு இருக்கும் போது, கருணாநிதியால் முதலில் தமிழாராய்ச்சி மாநாடு என அறிவிக்கப்பட்டு பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அவர் கூறிய காரணம் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த போதிய அவகாசம் போதாது என தமிழாராய்ச்சி மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தான் என்னவோ தன்னுடைய தலைமையுரையில் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளை விட இது பெரியது சிறப்பானது என கூறினாரோ.

உண்மைதான் ஏனென்றால் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளில் தமிழைத் தான் ஆய்வு செய்தார்கள். கோவையிலோ தமிழர் தலைவன் என்பவரையல்லவா ஆய்வு செய்தார்கள்.

எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் வெளியே கேட்காத குரல்களுக்கும் மத்தியில் செம்மொழி மாநாடு நடந்துமுடிந்துவிட்டது. பலரால் எதிர்பார்க்கப்பட்டது போல் கருணாநிதிக்கு பிரமாண்டமாக நடந்த பாராட்டுவிழா போல் தான் செம்மொழி மாநாடு நடந்தேறியது.

முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மாநாட்டின் மைய்ய நோக்குப்பாடலே தமிழிசையில் இல்லாமல் தமிழில் அழகாகப் பாடமுடியாத தமிழைக்கொலை செய்யும் பாடகர்களினால் ஏஆர் ரகுமானால் பாடவைத்து தன்னை மலையாளி என காட்டிக்கொள்வதில் பேருவகை அடையும் கெளதம் வாசுதேவ மேனனினால் படமாக்கப்பட்டது. பாடலை கவிஞர் கருணாநிதி அழகாக தொகுத்திருந்தார். தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்த வரிகளை அழகுறத் தொகுத்தபடியால் இதனை அவர் எழுதிய கவிதை எனச் சொல்லமுடியாது தானே.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பது போல் கோவையில் எத்தனையோ மொழிஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் உரைகள் நிகழ்ந்திருந்தாலும் கவியரங்கத்தில் கருணாநிதி புகழ்பாடிய கவிஞர்கள் இதனைத் தலைவன் விழாவாகவே மாற்றிவிட்டார்கள்.

மு.மேத்தா,வாலி,நா.முத்துக்குமார் என மதிப்பு வைத்திருந்த கவிஞர்கள் தங்கள் மதிப்பையும் தமிழ்த் தாயின் மதிப்பையும் குறைத்தே விட்டார்கள். வைரமுத்து சொல்லவே தேவையில்லை கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கவே பிறந்தவர். அண்ணா நூற்றாண்டுக் கவியரங்கத்தில் தம்பிக்கு கவி பாடி, அண்ணாவை உயர்த்துகின்றேன் என மஹாத்மாவையே கீழிறக்கிய அற்பன். கருணாநிதியின் பேர்த்தி கயல்விழியோ கவிதை வாசிக்கும் போது "ஸ்டாப்" என ஆங்கிலத்தில் எழுதி அந்த இடங்களில் நிறுத்தி வாசிக்கும் "புகல்" வாய்ந்த கவிஞர், தன் தாத்தாவின் உமிழ்நீர் கூட தமிழ்நீர் எனப் புதிய கண்டுபிடிப்பை மாநாட்டு மேடையில் முழக்கி பெருமை சேர்த்துவிட்டார்.

வாலியோ தமிழுக்கு ஆராய்ச்சி செய்யாமல் குஷ்புவை ஆராய்ச்சி செய்தார். சோ என்ற விஷக் கிருமியைக் கண்டிக்கின்றேன் என சாதியை தமிழாராய்ச்சி மேடையில் உரைத்தார்.

ஐயா கவிஞர்களே நடந்ததோ செம்மொழி மாநாடு. ஒரு வரலாற்று நிகழ்வு அங்கே ஏன் அரசியல்? சினிமா?. உங்கள் தலைவன் சிறந்த கதாசிரியர் தான் அதனால் தான் என்னவோ மாநாடு தொடங்குவதற்க்குச் சிலநாட்களுக்கு முன்னரும் நல்லதொரு திரைக்கதை அமைத்திருந்தார். செம்மொழி மாநாட்டை கருணாநிதி தமிழுக்கு எடுத்த விழாவாக நடத்தி முடித்தபின்னர் அவருக்கு நீங்கள் எடுக்கும் பாராட்டுவிழாவில் அவரைப் பாராட்டி இருந்தால் ஒருதரும் உங்களைப் பழிக்கமாட்டார்களே? ஆனால் அப்படிச் செய்யாமல் நீங்கள் அனைவரும் இப்போ பாணபத்திர ஓணான்டியை விட கீழிறங்கிவிட்டீர்கள். இந்தக் கலங்கத்தைத் துடைக்க நீங்கள் எத்தனை கவிராயன் கவிதையோ, கிருஷ்ணாவதாரமோ, கண்ணீர்ப்பூக்களோ எழுதினாலும் முடியாது.

கவியரங்கம் தொடங்குமுன்னரே கருணாநிதி என்னைப் பாடாமல் என் தமிழைப் பாடுங்கள் என உத்தரவிட்டிருக்கலாம். ஏனோ செய்யவில்லை.

இனியவை நாற்பது என்ற தமிழக் கலாச்சார ஊர்வலத்தினை காட்டிய கலைஞர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் மன்னரையும், மஹாராணிகளையும், இளவரசர்களையும், இளவரசியையும் அவரது புதிய தோழி பச்சைத் தமிழச்சி குஷ்புவையும் காட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். கருணாநிதியின் குடும்ப அங்கத்தவர்கள் 84 பேர் மேடையில் அமர்ந்திருந்ததாக விகடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தமிழை ஆட்சிமொழியாக கொண்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்களை அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். சில நாடுகளில் இருந்து அரசியல்ப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் பக்கத்து நாடான இலங்கையில் இருந்து எந்த அரசியல்வாதிகளும்(தமிழ் பேசும்) அழைக்கப்படவில்லை.

பேராசிரியர் சிவத்தம்பி ஆரம்பத்தில் இதற்க்குச் செல்லமாட்டேன் என மறத்து பின்னர் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றி நாமும் ஆங்கிலம் பேசுவோம் என செம்மொழி மாநாட்டில் நிரூபித்துள்ளார்.

கம்பனுக்கு கவிபாடும் கம்பவாரிதி ஜெயராயோ "நாம் தமிழ்த் தாய் பெற்றவர்கள், கருணாநிதியோ தமிழத் தாயைப் பெற்றவர்" என ஒரு வரியைச் சொல்லி கருணாநிதியைக் குளிர்வித்திருக்கின்றார். யாழ் நூலகம் எரித்தவர்களுக்கு துணை போனவருக்கு பாராட்டுவிழா நடத்தியவர்களிடம் இதனைவிட அதிகம் எதிர்பார்த்தேன்.

தமிழில் கதைத்தால் குற்றமென அபராதம் விதிக்கும் பத்மா சுப்பிரமணியத்தின் நடன நிகழ்வு, ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற வாசுகி ஜெகதீஸ்வரனின் இந்திய வம்சாவளி நடனங்கள். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேஸ்வரன் நாட்டுக்கூத்தை வாசுகியின் நடனத்திற்க்குப் பதிலாக இலங்கையில் இருந்து தருவித்திருக்கலாமே.

இன்னும் பல குற்றச்சாட்டுகளை எழுதலாம். ஆனாலும் என்னை தமிழனாகப் பார்க்காமல் ஈழத்தமிழனாகப் பார்க்கும் சில திமுக அன்பர்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இதனை எழுதியிருக்கின்றேன் என நினைத்து திட்டுவார்கள். அன்பர்களே தமிழனாக இருந்து நான் சொன்ன சில குற்றச்சாட்டுகளைப் ஆராய்ந்தால் நடந்தது தலைவனுக்கு பாராட்டுவிழாவே அன்றி தமிழன்னைகான விழா இல்லை என்பது புலப்படும்.

தனக்கு பாராட்டு விழாவாக இல்லாமல் இதனை செம்மொழி விழாவாகவே நடத்தியிருந்தால் கலைஞர் கருணாநிதி என்றென்றும் தமிழர் மனங்களில் பழைய கசப்புகளை மறந்து இடம் பிடித்திருப்பார்.

பட உதவி : ஆனந்த விகடன்