கெளபாய் மதுவின் தொலைபேசி அழைப்புடன் தான் நேற்றைய காலைப்பொழுது எனக்கு விடிந்தது. அத்துடன் அவர் என்னை கொஞ்சம் நேரத்திற்க்கு வருமாறு அன்புக் கட்டளை இட்டார். மதுவின் கட்டளையை மதித்து நான், லோஷன், ஆதிரை, புல்லட் நால்வரும் ஒன்றாகவே சென்றோம். தனித்து தனித்து சென்றால் ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்கு விற்றுவிடுவோம் என்ற லோஷனின் சிறந்த எண்ணத்திற்காக இந்த முடிவு. காரணம் சில நாட்களாக இலங்கைப் பதிவுலகில் ஒருவரை ஒருத்தர் வாரியிருந்தார்கள். ஆகவே இந்த முடிவின் படி மூவரும் ஒரே நேரத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை வாசலில் நின்றோம்.
திடீரென எங்கள் முன்னால் வேர்த்து விறுவிறுத்து ஒரு பாரிய உருவம் நீலக் கலர் சேர்ட்டில் சேர்ட்டில் மேல்பாகம் ஈரமாக காட்சியளித்தார். யார் அவர் எனப் பார்த்தால் நம்ம கங்கோன் கனககோபி. அவரில் மேல் இருக்கும் அன்பில் என்ன நடந்தது எனக் கேட்டால் " ஓடியாடி வேலை செய்ததில் களைத்துப்போனேன்" என்றார். பெரும்பாலும் ட்விடரிலும் பேஸ்புக்கிலும் குடியிருக்கும் அவர் முதன் முறையாக வேலை செய்திருக்கின்றார் என்ற ரகசியம் பின்னர் தெரியவந்தது.
அப்படியே கோபியின் தரிசனம் முடித்து உள்ளே போனால் நம்ம கெளபோய் ஜெல் எல்லாம் பூசி திருமண விருந்துபசார கெட்டப்பில் நிற்கின்றார். அப்படியே மதுவுக்கு எங்கள் வருகையைத் தெரிவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் பார்த்தால் குசினிக்குள் கீர்த்தியும் இன்னொருவரும்(மேகலா) மும்முரமாக சன்குவிக் கரைத்துக்கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு உதவியாக சுபாங்கன். அப்படியே அவர்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு நிற்க மேமன் கவி அவர்கள் வந்தார் அவருக்கும் சாகித்திய விருது பெற்றதற்கான ஒரு வாழ்த்தை தெரிவித்துவிட்டு நின்ற போது புன்னகையுடன் மயில்வாகனம் செந்தூரன் வந்தார்.
இப்படி ஒவ்வொருவராக வந்து என்னை நலம் விசாரிக்க நான் அவர்களை நலம் விசாரிக்க கொஞ்ச நேரம் இப்படியே போகும் போது தீடிரென குசினிப் பக்கம் சலசலப்பு. கீர்த்திதான் சன் குவிக்கில் சீனிக்குப் பதில் உப்பைப் போட்டுவிட்டாரோ ? இல்லை அருகில் நின்ற சுபாங்கன் பயித்தம் பணியாரம் சாப்பிட்டுவிட்டு மயங்கிபோனாரோ? என்ற பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தால் நம்ம கங்கோன் தன்னுடைய அக்மார்க் சிரிப்புடன் நின்றார். என்ன விடயம் என்றால் கீர்த்தி கங்கோனிடம் பாத்திரங்கள் கழுவ சோப் வாங்கிவரச் சொன்னால் கங்கோன் டெட்டோல் சோப் வாங்கி வந்திருக்கின்றார்.
இந்த சுவையான சம்பவத்துடன் சரியாக 2 மணிக்கு கீர்த்தியின் தலைமையுரையுடன் பதிவர் சந்திப்பு இனிதே ஆரம்பமானது. கீர்த்தி தனது உரையில் முதலாவது சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை தொட்டுவிட்டுச் சென்றார். அதனைத் தொடர்ந்து பதிவர் அறிமுகம் நடைபெற்றது, சில புதியமுகங்கள் அறிமுகமானார்கள்.
இதனைத் தொடர்ந்து பயனுறப் பதிவு எழுதுவது எப்படி என்ற பொருளில் மதுவர்மன் கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்தார். எவரையும் இப்படித் தான் எழுதவேண்டும் என எவரும் வற்புறுத்தமுடியாது, அவரவர் தங்கள் தங்கள் பாணியில் ஏனையவர்கள் விரும்பிப் படிக்கும் படி பதிவுகளை எழுதினால் சிறப்பானது எனவும், அத்துடன் கண்ணுக்கு உறுத்தாத கலரில் வலைகளின் டெம்ளேட்டுகள் தேவையென்றும் சிலாகிக்கப்பட்டது. கலந்துரையாடல் மொக்கைப் பதிவுகளை நோக்கிச் சென்றபோது கீர்த்தி தான் ஒரு மொக்கைப் பதிவு எழுத மிகவும் கஸ்டப்பட்டதாகவும் மொக்கைப் பதிவு எழுதுவது ஏனையவர் நினைப்பது போல் இலகுவானது அல்ல எனவும் கூறி மொக்கை மன்னன் புல்லட்டின் ரசிகை தான் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார். அதே நேரம் காத்திரமான பதிவுகளில் கொஞ்சமேனும் நகைச்சுவை இருந்தால் பதிவுகள் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் என டொக்டர் முருகானந்தனின் பதிவு ஒன்றை உதாரணம் காட்டி வந்தியத்தேவன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் உறுபசி வலையின் சொந்தக்காரர் நிலா தர்ஷாயணி பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் சரளமாகவும் எடுத்துரைத்தார். ஆண் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் நட்பு பாராட்டுவது போல் பெண் பதிவர்களால் நேரடியாகவோ ஏனைய சமூக இணையத் தளங்களிலோ நட்பாக இருக்கமுடியவில்லை எனவும் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். அவருக்கு சார்பாகவும் எதிராகவும் பெரும்பாலான கருத்துகளை ஆண்களே பதில் அளித்துக்கொண்டிருக்கும் போது மேகலா என்ற பதிவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஆணாதிக்க கருத்துக்கள் சிலவற்றைச் சொன்னபின்னர் கலந்துரையாடல் பெண்ணியம் சார்பாக சென்றது. அவர் எந்தவொரு ஆண் வலைப்பதிவர்களும் தங்கள் மனைவியை பதிவு எழுதச் சொல்லிவிட்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்களா? என்ற கேள்வியைக்கேட்டு சபையைக் கலகலப்பாக்கினார்.
அதனைத் தொடர்ந்து மது சகோதரர்களின் கைவண்ணத்தில் சுடப்பட்ட பருத்தித்துறை வடையும் கீர்த்தியின் சமையல் அனுபவத்தில் உருவாக்கப்பட்ட பயிற்றம் பணியாரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வடையின் சுவை பலரையும் கவர்ந்தது. நளபாகத்தில் பெண்களை விட ஆண்கள் சிறந்தவர்கள் என்பதற்க்கு சான்றாக அமைந்தது. குளிர்பானமாக மு.மயூரனின் கலவையில் உருவான சன்குவிக் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சிற்றுண்டியைத் தொடர்ந்து கெளபோய் மது இலங்கைப் பதிவர் கூகுள் குழுமத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அதன் தொழில்நுட்பத்துடன் இலகுவாக விளக்கினார். இந்தக் கலந்துரையாடல் பெரிதாக நேரம் எடுக்கவில்லை. அத்துடன் மாதம் தோறும் ஏதாவது ஒரு பொருளில் ஒரு நாள் சில மணி நேரம் குழுமத்தில் விவாதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இறுதியாக பின்னூட்டங்கள் குறித்தான கலந்துரையாடலை மு.மயூரன் ஆரம்பித்து வைக்க கலந்துரையாடல் பின்னூட்டங்கள் போல மிகவும் சூடாகவே போனது. மு.மயூரன் தனக்கு பெயரில்லாமல் வரும் அனானிப் பின்னூட்டங்களை வரவேற்பதாகவும் இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார். அவரின் கருத்தை வழிமொழிந்த லோஷன் சில பின்னூட்டங்கள் தனிநபர் தாக்குதலாக இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் மற்றும் படி எவருக்கும் தங்கள் கருத்துகளைச் சொல்லும் உரிமை இருப்பதாகவும் கூறினார். வந்தியத்தேவன், சந்ரு போன்றவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். மதுவர்மன் சில பின்னூட்டங்கள் கும்மிக்கு வழி வகுப்பதாகவும் இதனைத் தவிர்த்தால் சில நல்ல பதிவுகள் காப்பாற்றப்படும் எனவும் தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டார்.
அதே நேரம் நிமல் பின்னூட்டங்களை இரண்டாக பிரித்தார். முதலாவது வாழ்த்துப் பின்னூட்டம் அதாவது ஒருவரின் பதிவைப் புகழ்ந்தல் குறிப்பாக கலக்கல், நல்ல பதிவு, சூப்பர் போன்ற ஒற்றை வரிப்பின்னூட்டங்கள், இப்படியான பின்னூட்டங்களை விரும்புவர்கள் அனானி அதர் ஓப்சன் பின்னூட்ட வசதியை நீக்கியே விடலாம். அடுத்ததாக பின்னூட்டங்களில் வரும் விமர்சனங்கள் இதற்க்கு அனானிப் பின்னூட்டம் அவசியம் என நிமல் தன் கருத்தைச் சொன்னார்.
நிமலைப் போலவே மன்னார் அமுதனும் பின்னூட்டங்களை 2 ஆக பிரித்தார். ஒன்று விமர்சனப் பின்னூட்டம் இன்னொன்று விசமப் பின்னூட்டம். விஷமப் பின்னூட்டங்களினால் தான் பலர் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும், இல்லையென்றால் பின்னூட்டங்களில் ஆரோக்கியமான விமர்சனம் விவாதம் நடக்கும் எனத் தன் கருத்தைத் தெரிவித்தவர். அத்துடன் கடந்த சில நாட்களாக ஒரு சஞ்சிகையில் வந்த கருத்தால் சில ஊடகவியளாலர்கள் காண்டாகிய சம்பவத்தைத் தொட்டு அதனை ஒரு சர்ச்சையாக்கிவிட்டார். மன்னார் அமுதனுக்கு ஹிசாமும் லோஷனும் பதில் அளித்தாலும் அந்த சர்ச்சை முற்றுப் பெறாமால் முடிந்துவிட்டது,
அடுத்து மதுவின் ஏற்பாட்டில் பதிவர்களுக்கிடையிலான போட்டி கலகலப்பாக நடைபெற்றது. என் அணியில் லோஷன், புல்லட், அசோக்பரன் போன்ற உடல்வாகு உள்ளவர்கள் இருந்தபடியால் நாம் உருவாக்குய வட்டத்தால் முழுமையாக எம்மைச் சுற்ற முடியவில்லை என்பதால் நாம் போட்டியில் இருந்து விலகி வெற்றி பெற்ற குழுவிற்க்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். இந்த விளையாட்டுகளின் பொறிமுறைகளை மது தன் பதிவில் எழுதுவார்.
இப்படியே நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பாடசாலைக் காலத்தில் இருந்த அனுபவத்துடன் இரண்டாவது சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.
பட உதவி : சுபாங்கன், ஆதிரை
ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான விதி மீறல் விசாரணையை ஆரம்பித்தது பீபா
-
* உலகக் கிண்ண உதைப்ந்தாட்டத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் விதிமீறல்கள்
தொடர்பாக அர்ஜென்டினா உதைபந்தாட்டச் சங்கத்தின் மீதும்,, ஆர்ஜென்ரீனா
வீரர்கள...
23 hours ago
