கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். Save TN Fisherman
ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது.
சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை.
இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார்.
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது.
இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே . யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!
அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை. 
முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது.
எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள்.
நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.
இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).
அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும் கொல்லும்.
தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்
தொடர் தோல்விகளால் துவளும் இலங்கை
ஒரே மைதானத்தில் தொடர்ந்து 4 தோல்விகள், கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் முதல்முறையாக ரி20 போட்டிகள் விளையாடப்பட்டது. முதலாவது போட்டியில் இலங்கை இந்தியாவை எதிர்த்தாடியது. அந்தப்போட்டிக்கு டில்ஷான் முதன்முறையாக தலைவராக விளையாடினார்.
இலங்கை எதிர் இந்தியா
முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 171 ஓட்டங்களை எடுத்த இலங்கை பதான் சகோதரர்களின் ஆபார ஆட்டத்தினால் இந்தியாவிடம் 3 விக்கெட்டுகளினால் தோல்வி அடைந்தது.
இலங்கை எதிர் பாகிஸ்தான்
பின்னர் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்ற உற்சாகத்திலும், இங்கிலாந்தில் ரி20 உலகக் கிண்ணப்போட்டிகளில் கோப்பையை பாகிஸ்தானிடம் பறிகொடுத்ததை பழிவாங்கவும் இலங்கையும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. 
சங்கக்காராவின் சமயோசிதமான தலைமைப் பொறுப்பும் கவனமும் எப்படியும் இலங்கை சொந்தமண்ணில் பாகிஸ்தானை பழிவாங்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அப்ரிடியின் அபார ஆட்டத்தினால் இலங்கை 52 ஓட்டங்களால் பரிதாபமாகத் தோற்றது.
இலங்கை எதிர் நியூசிலாந்து
பின்னர் இந்தமாதம் 2ந்திகதி நியூசிலாந்திற்கெதிரான முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் வெறும் 3ஓட்டங்களால் மாத்திரம் இலங்கை தோல்வியைத் தழுவியது. இந்தப்போட்டியுடன் தொடர்ந்து ஒரே மைதானத்தில் மூன்று போட்டிளில் இலங்கை அணி தோல்விய்டைந்த சாதனையை ஏற்படுத்தியது.
ஆகவே நியூசிலாந்திற்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை கட்டாயம் வெற்றி பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நேற்றுக் களம் இறங்கியது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைச் சமநிலையாக்கலாம் என்ற மனநிலையில் களம் இறங்கிய இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வாய்ப்பை வெட்டோரியிடம் பறிகொடுத்தது. ஏற்கனவே முதல் போட்டியில் முதலில் துடுப்பாடி வெற்றிக் கனியைப் பறித்த அனுபவத்தால் வெட்டோரி மீண்டும் துடுப்பாட்டத்தையே தேர்ந்தெடுத்தார்.
நியூசிலாந்து அணியில் விக்கெட் காப்பாளர் மக்கிலேசனுக்கு பதிலாக பிரண்டன் மக்கலத்தின் அண்ணன் நேதன் மக்கலம் களம் இறங்கினார். இலங்கை அணியில் கப்புஹெதரவுக்கு பதில் உடவத்த.
மக்கலமும் ஜெஸ்சி ரைடரும் எவ்வளவு அடிக்கமுடியுமோ அவ்வளவு அடி மாலிங்கா, குலசேகர பந்துவீச்சுகளில் அடித்து நொருக்கினார்கள், அவர்கள் அடித்து ஆடியதைப் பார்த்தபோது 220 ஓட்டங்கள் எடுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.
இவர்களைப் பிரிக்க மெண்டிசை அழைத்தார் சங்ககார ஆனால் மெண்டிசின் பந்தை தடுத்து ஆடிச் சாமாளித்துவிட்டார்கள். அரைச்சதத்திற்க்கு இரு ஓட்டம் இருக்கும்போது மக்கலம் ஜெயசூரியாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபக்கம் ரைடர் மெதுவாகவும் நிதானமாகவும் தொடங்கிய தன் ஆட்டத்தை 37 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் உட்பட 52 ஓட்டங்களுக்கு மெண்டிசின் சுழலில் இலகுவான பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குப்டில் தன் பங்குக்கு அடித்து ஆடி அணியின் மொத்த எண்ணிக்கையை 170 ஆக மாற்றினார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெயசூரியாவையும் மெண்டிசையும் தவிர ஏனையவர்கள் சோபிக்கவில்லை. அஞ்சலோ மெத்தியூசை ஏன் பந்துவீச சங்கக்கார அழைக்கவில்லை என்பது புரியாத புதிர். 
மீண்டும் கன்டபேரி எக்ஸ்பிரஸ்
அடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் போட்டியில் விளாசிய டில்சானை தனது முதலாவது ஓவர் ஐந்தாவது பந்துவீச்சில் வீழ்த்தினார் ஷேன் பொண்ட். அடுத்து வந்த உடவததையும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் மில்லில் பந்துவீச்சில் வெளியேறினார். ஜெயசூரியாவும் சில நாட்களாக ரி20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் தடுமாறுகின்றார், அந்த தடுமாற்றம் இன்றும் தெரிந்தது மில்லின் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி அடித்து டையிலரிடம் பிடிகொடுத்து 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
வந்தார் நேதன் மக்கலம்
பின்னர் வந்த மஹல ஜெவர்த்தனாவும் சங்ககாராவும் நன்றாக ஆடினார்கள் ஆனாலும் நேதன் மக்கலத்தின் முதலாவது ஓவரிலையே ரைடரிடம் பிடிகொடுத்து 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அஞ்சலோ மத்தியூசும் நேதன் மக்கலத்தின் பந்தில் டைலரிடம் பிடிகொடுத்து 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டமிழப்புடன் இலங்கை அணியின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருந்தது. பின்னர் சங்ககாரா அடித்து விளையாடினாலும் ஏனையவர்கள் அவருக்கு துணை நிற்கமுடியாமல் போனதால் வெற்றிக் கனியைப் பறிக்கமுடியவில்லை.
இறுதியாக இலங்கை அணி 148 ஓட்டங்களை எடுத்து 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் தொடர்ந்து நான்கு தடவை ஒரே மைதானத்தில் தோல்வியடைந்த புதிய சாதனையை இலங்கை தன் வசப் படுத்தியது. ஆர்.பிரேமதாச மைதானம் ராசி இல்லாத படியால் இலங்கை அணி தன் அடுத்த ரி20 போட்டியை வேறு ஒரு மைதானத்தில் நாடத்தினால் நல்லது.
மீண்டும் அணிக்குத் திரும்பிய ஷேன் பொண்ட் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நேதன் மக்கலம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மில்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சமீபகாலமாக சோபிக்காத ஓரம் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். முதல் போட்டியில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணித்தலைவர் வெட்டோரிக்கு எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதும் ஜெஸ்சி ரைடருக்கு வழங்கப்பட்டது. 
எதிர்வரும் 8ந்திகதி ஆரம்பமாகும் இலங்கை, இந்தியா மற்றும் நியூசிலாந்து பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் பலத்த சவால்கள் மூன்று அணிகளுக்கும் காத்திருக்கின்றது.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இந்தியா, இலங்கை, கிரிக்கெட், நியூசிலாந்து, பாகிஸ்தான், ரி20, விளையாட்டு
*** இந்தியா ஆஸ்திரேலியா பலப்பரீட்சை ***
நடக்குமா நடக்காதா என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் தொடர்கள் வரும் மாதம் 9ந்திகதி பெங்களூரில் ஆரம்பிக்க் இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆஸி அணி இந்தியா வந்தடைந்தது. கடந்த முறை இந்தியா சென்ற அணியைவிட மிகவும் பலம் குன்றியதாகவே இம்முறை ஆஸி அணி காணப்படுகின்றது. இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் குறைந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். அனுபவம் குறைந்தாலும் எந்த நேரமும் விஸ்வரூபம் எடுக்ககூடிய அணிவீரகளான மைக்கல் கிளார்க், சைமன் கட்டிச், ஷேன் வாட்சன்(ஐபிஎலில் கலக்கியவர்) ஹசி, ஸ்டுவேர்ட் கிளார்க், பிரட் ஹாடின் என இளைஞர்கள் பாண்டிங்குக்கும் ஹைடனுக்கும் கைகொடுப்பார்கள். பந்துவீச்சில் பிரட் லீ, மிக்சல் ஜோன்சன் என்ற வேகங்களுடன் புதிதாக சில வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சைமண்ட்ஸ் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக(மீன் பிடிக்க சென்ற பிரச்சனை) அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை இது ஆஸியைப் பொறுத்தவரை இழப்புதான். ரசிகளுக்கும் ஹர்பஜன் சைமண்ட்ஸ் தர்க்கம்களையும் தகராறுகளையும் பார்க்கமுடியாது .
இந்திய அணியைப் பொறுத்துவரை இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரில் இலங்கைஅணியிடம் வாங்கிக்கட்டினார்கள். முரளி, அஜந்தா மெண்டிஸ் சுழலில் கும்ளேயின் அணி பரிதாபமாகத் தோற்றது. ஆனால் இம்முறை சொந்தமண் என்ற பலமும் விக்கெட் காப்பாளர் டோணி மீண்டும் அணிக்கு வந்துள்ள பலமும் (இலங்கையில் தினேஷ் கார்த்திக்கும் பட்டேலும் சொதப்பினார்கள்)ஹர்பஜனின் சுழலும் கைகொடுக்கலாம். 
மும்மூர்த்திகளில் கங்குலிக்கு இடம் கொடுக்காதது இந்திய அணிக்கு சிலவேளைகளில் பாதகமாகமுடியலாம். இதேவேளை சச்சின், ராவிட் இந்த தொடரிலும் சோபிக்காவிட்டால் ஓய்வெடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். இலங்கையில் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் சொந்த மண்ணிலாவது அந்த சாதனையை முறியடிப்பாரா? பொறுத்திருந்துபார்ப்போம்.
ஆஸி அணிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் உதவி செய்ய இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்தவர் என்பதால் வீரர்களின் பலம்,பலவீனம் நன்கு தெரிந்திருக்கும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கேர்ஸ்டனும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.
அடுத்தமாதம் தொடக்கம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கின்றது. வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? .
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட்
டவுசர் கிழிந்தது
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, சிவிசீரிஸ்
மும்முனைத் தாக்குதல்
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சிபி(கொமன்வெல்த் பாங்க்) தொடர் நாளை பிரிஸ்பேனில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆரம்பமாகின்றது. உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை, 20க்கு20 சாம்பியன் இந்தியா என மூன்று பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்.
1979 களில் ஆரம்பமான இத்தொடர் (காலத்துக்கு காலம் பெயர் மட்டும் மாறியிருக்கின்றது) முதற்தொடரில் அக்காலத்தில் பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, மற்றும் ஆஸி அணிகள் மோதின. மேற்கிந்திய சாம்பியன் ஆனது. இதுவரை 6 தடவைகள் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது.
ஆஸி அணி இரண்டாவது தொடரில்(1980 1981) முதன் முறை சாம்பியனானது. இதுவரை 18 தடவை சாம்பியாகி இத்தொடரில் தங்களது ஆதிக்கத்தை என்றும் நிலைனாட்டிவருகின்றார்கள். 5 தடவை இத்தொடரில் விளையாடிய இந்தியாவும் 7 தடவை விளையாடிய இலங்கையும் ஒரு தடவை கூட சாம்பியன் ஆகவில்லை. 1996 97களில் விளையாடிய பாகிஸ்தான் அந்த வருடம் சாம்பியனாகிய ஒரே ஒரு ஆசிய அணியாகும். தவிர தென்ஆபிரிக்கா ஒரு தடவையும் கடந்தவருடம் நடந்தபோட்டியுடன் சேர்த்து இங்கிலாந்து இரண்டு தடவையும் சாம்பியனானது.
மூன்று அணிகளின் பலம் பலவீனத்தைப் பார்ப்போம்.
ஆஸ்திரேலியா
ஆஸியைப் பொறுத்தவரை பொண்டிங் தலைமையில் அனுபவவீரர்கள் பலருடன் சில இளம் வீரர்களையும் கொண்டிருக்கிறது. துடுப்பாட்டத்தில் ஹைடன், கிளார்க், பாண்டிங், அதிரடி கில்கிறிஸ்ட்(இவரது இறுதித் தொடர்),சைமண்ட்ஸ், மைக் ஹசே என அதிக பலத்துடன் காணப்படுகின்றது. பந்துவீச்சில் வேகங்கள் பிரட் லீ, ஜோன்சன்,பிராக்கனுடன் சுழலில் பிரட் ஹக்கும் பகுதி நேரத்தில் சைமண்ட்ஸ்,ஸ்ருவர்ட் கிளார்க், ஹோப்ஸ் என பலத்துடனே காணப்படுகின்றது.
பலம்:
1. சொந்த மண், பழகிய காலநிலை.
2. துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை என சகலதிலும் திறமையான வீரர்கள்.
3. உலகச் சாம்பியன்.
பலவீனம் :
1. வீரர்களின் வாய்ப்பேச்சுகளும், மைதானத்தில் ஒழுங்கீனமாக நடத்தல்.
இந்தியா:
முதன் முறையாக டோணி தலைமையில் இளம் இரத்தங்கள் பங்குகொள்ளும் போட்டி. சச்சின், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் தவிர்ந்த அனைவரும் 100 போட்டிகளுக்கு குறைவாக விளையாடியவர்கள். துடுப்பாட்டத்தில் சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ், உத்தப்பா, டோணி எனப் பலர். சகல துறையில் பதான். பந்துவீச்சில் வேகங்கள் பதான். ஸ்ரீ சாந், முனாப் பட்டேல், இசாந் சர்மா, பிரவீன் குமார் என நீளும் வரிசை. சுழலில் ஹர்பஜன், பியூஸ் சாவ்லா, மனோஜ் திவாரி ஆகியோருடன் பகுதி நேரமாக சேவாக், சச்சின், யுவராஜ் ரெய்னா போன்றோரும் மிரட்டத் தயாராக உள்ளனர்.
பலம்:
1. இளம் கன்று பயமறியாது இளம் வீரர்கள். இதுவே முக்கிய பலவீனமாகும்.
2. சச்சின், சச்சின், சச்சின்.
பலவீனம்:
1. இளம்வீரர்கள் என்பதால் போதிய அனுபவம் இல்லாமை.
2. தடுமாறும் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள்.
இலங்கை:
அடுத்து மஹேல ஜெயவர்த்தனவின் தலைமையிலான இலங்கை அணியை எடுத்துக்கொண்டால். இறுதியாக இங்கிலாந்துடனான ஒரு நாள்போட்டியில் சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்த கவலையுடன் இருக்கும் அணி. ஜெயசூரியா, தரங்கா, சங்ககாரா, தில்ஷான், ஜெயவர்த்தன, மஹுரூப் என அதிரடியாக மிரட்டும் வீரர்கள். பந்துவீச்சில் வாஸ், மாலிங்கா போன்ற வேகங்களுடன் சுழல் மாயவித்தை மன்னன் முரளி.
பலம்:
1. போராட்டகுணம்.
2. பலமான மத்திய தரவரிசை.
பலவீனம்:
1. அண்மைக்காலமாக சமிந்த வாஸின் பந்துவீச்சு எடுபடாமை,
2. ஜெயவர்த்தனவின் துடுப்பாட்டம் சமீபகாலமாக சோபிக்காமை.
பொறுத்திருந்துபார்ப்போம் வெல்லப்போவது மீண்டும் ஆஸியா? அல்லது முதன் முறையாக இந்தியா அல்லது இலங்கையா?
எழுதியது வந்தியத்தேவன் at 0 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, சிபிதொடர்
வீழ்ந்தது இந்தியா
இன்று மெல்பேர்னில் நடைபெற்ற 20க்கு 20 போட்டியில் உலக சாம்பியன் இந்தியாவை மிக இலகுவாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு கால்கோளாக இன்றைய 20க்கு 20 போட்டி அமைந்துள்ளது.
சீனியர்கள் (ஹர்பயன் சிங் தவிரகாயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய போட்டியில் விளையாடவில்லை)யாருமற்ற நிலையில் இளம் வீரர்களுடன் (பலர் 20க்கு 20 போட்டியில் விளையாடியவர்கள்) களம் புகுந்த இந்தியா நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட விரும்பியது. தற்போது அவ்வளவு ஃபார்மில் இல்லாத சேவக்கும் கம்பீரும் களம் புகுந்தனர். முதலாவது ஓவரிலேயே தேவையற்ற ஓட்டம் ஒன்றை எடுப்பதற்க்காக ஓடி சேவாக் ரன் அவுட் முறையில் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். என்ன காரணத்துக்காக இந்திய கிரிக்கெட் சபை இவரைத் திரும்ப திரும்ப ஆட்டத்தில் சேர்க்கிறார்களோ வெங்சகாருக்குத்தான் வெளிச்சம்.
அடுத்த பிராக்கனின் ஓவரில் கம்பீரும் 9 ஓட்டங்களுடன் ஹோப்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஸ் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார் பின்னர் மூன்றாவது ஓவரில் பிரட் லீயின் பந்தில் போல்ட்டாகி 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். நான்காவது ஓவரில் உத்தப்பா ஒரு ஓட்டம் போதும் என்ற மனநிலையில் பிராக்கனின் பந்துவீச்சில் டேவிட் ஹசியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 4 ஓவரில் இந்தியா எடுத்த மொத்த ஓட்ட எண்ணிக்கை 20.
பின்னர் ரோகித் சர்மாவும் அணியின் தலைவர் டோணியும் சிறிது நேரம் (3 ஓவர்கள்) விளையாடினார்கள். ஏழாவது ஓவரில் ரோகித் சர்மா 8 ஓட்டங்களுடன் ஹாப்சின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். டோணியுடன் இணை சேர்ந்த பதான் கொஞ்சம் அடித்து ஆடத்தொடங்க அதுவரை டெஸ்ட் மேட் ஆடிய டோணி 9ஓட்டங்களுடன் டேவிட் ஹசியின் பந்துவீச்சில் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். டோணி இன்னமும் டெஸ்ட் மேட்ச் மனநிலையில் இருந்து திரும்பவில்லை போல் தெரிகின்றது. டோணி எதிர்கொண்ட பந்துகளின் எண்ணீக்கை 27 எடுத்த ஓட்டங்கள் வெறும் 9 தான்.
அதன் பின்னர் ஆடவந்த பிரவீன் குமார் என்ற அறிமுக வீரரும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க. சர்ச்சை நாயகன் ஹர்பஜன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஹர்பஜனும் சைமன்ட்ஸ்சும் அருகருகில் சந்தித்தார்கள் ஆனால் எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படவில்லை. சைமண்ட்ஸ் தனது பொக்கட்டில் ரெக்கோடர் ஒன்று வைத்திருந்தார். ஹர்பயன் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியினருக்கு தன்னைக் கண்டாலே பயம் என அறிக்கை விட்ட ஸ்ரீ சாந் வந்தார் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றுவிட்டார். ஹர்பயன் ஸ்ரீ சாந் இருவரும் வோஜசின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இறுதியாக பதான் மீண்டும் பிராக்கனின் பந்து வீச்சில் கில்கிறிஸ்டிடம் பிடிகொடுத்து 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இந்திய அணியில் பதான் மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி மொத்தமாக 74 ஓட்டங்களுக்கு 17.3 ஒவரில் ஆட்டமிழந்தது. கென்யா அணி கடந்த வருட 20 க்கு 20 உலக கிண்ணப்போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக எடுத்த 73 ஓட்டங்கள்தான் அதிகுறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை. அதனை ஒரு ஓட்டத்தால் தாண்டி இந்தச் சாதனையை முறியடிக்க பதானின் துடுப்பாட்டம் விடவில்லை. இல்லையென்றால் இச் சாதனை இந்தியாவிற்க்கு கிடைத்திருக்கும்
ஆரம்பவீரர்களான கில்கிறிஸ்டும் தலைவர் கிளார்க்கும் இந்த இலக்கை இலகுவில் எட்டிவிடுவார்கள் எனப் பலர் நினைத்தபோதும் புதுமுக வீரர் பிரவீன் குமாரின் பந்துவீச்சில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த கில்லி அடுத்த பந்தில் கம்பீரிடம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கிளார்க் கொடுத்த இலகுவான ஒரு பிடியை ஹர்பஜனும் பதானும் தம்மிடையே எந்த பேச்சுவார்த்தையும் இன்றி ஒருவரும் ஒருவருடன் மோதித் தவறவிட்டுவிட்டார்கள். 11.2 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டநாயகன் விருது ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் சேவாக்கை ரன் அவுட்டாக்கியதும் திறம் பட அணியை வழி நடத்திய கிளார்க்குக்கு கிடைத்து.
இந்தியாவின் தவறுகள்:
1. இதுவரை(இந்தப்போட்டி தவிர) 2 தடவை ஆஸியுடன் 20க்கு 20 போட்டியில் மோதி இரண்டுத்டவையும் வெற்றி பெற்றதனால் எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்ற தலைக்கனம்.
2. சச்சினை சும்மா வைத்திருந்தது.
3. வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்.
4. இளம் வீரர்களால் எதனையும்சாதிக்க முடியும் என்ற இறுமாப்பு. ஆஸியில் பல அனுபவ வீரர்கள் விளையாடினார்கள்.
5. டோணியின் சவடால் பேச்சு. இந்த ஆட்டத்திற்க்கு முன்னர் இந்தப் போட்டி ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரு பயிற்சிப்போட்டியாக அமையும் எனக் கூறியது.
பொறுத்திருந்துபார்ப்போம் ஒரு நாள் போட்டிகளில் டோணியின் இளமை அணி என்ன செய்யப்போகின்றது என்பதை.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, கிளார்க், டோணி
இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும்.
இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது.
343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒப்பிடும்பொழுது முதலாவது இனிங்க்ஸ்சுக்கு இது குறைந்த ஓட்டம்) ஆஸியை வீழ்த்திய கும்ளேயின் அணி, ஜாபர், ராவிட், லக்ஸ்மன், டோணி, யுவராஜ் போன்றவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் வெறும் 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அனுபவ சச்சினும், 100 போட்டியில் விளையாடும் கங்குலியும் மட்டும் 105(இருவரும் சச்சின் 62, கங்குலி 43) எடுத்தார்கள்.
147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸி மீண்டும் தமது ஒற்றுமையான டீம் வேர்க்கினால் 351 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடை நிறுத்தி இந்தியாவிற்க்கு 499 என்ற இலக்கையும் இரண்டு நாட்களையும் கொடுத்தது.
இந்தியப் பெருஞ்சுவர் ராவிட், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானை இரட்டைச் சதத்தால் அசத்திய ஜாபர், சாதனை நாயகன் சச்சின், ஆக்ரோச வீரர் கங்குலி, பாகிஸ்தானை ஆட்டக்காணவைத்த யுவராஜ், அதிரடி டோணி, பொறுமையான லக்ஸ்மன் என இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை இரு நாட்களில் இந்த ஓட்டத்தை எடுத்து ஆஸி மண்ணில் ஒரு வெற்றியை நிலை நாட்டுவார்கள் என நினைத்தால் அனைத்திலும் மண்ணைப்போட்டுவிட்டார்கள்.
கங்குலியையும் லக்ஸ்மனையும் தவிர ஏனையவர்கள் அணியில் எப்படி ஆடினாலும் இடம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் வந்தார்கள், திரும்பச் சென்றார்கள், இரண்டு இனிங்க்ஸிலும் ராவிட் பார்வையாளர்களை பயங்கரமாகச் சோதித்துவிட்டார். முதலாவது இனிங்ஸ்சில் 62 ஆவது பந்தில் தான் ராவிட் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஆனால் பரிதாபம் 66வது பந்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவிட்டார். இரண்டாவது இனிங்ஸிலும் அதே ஆமை வேகம் 114 பந்தில் 16 ஓட்டங்கள். சில காலமாக இந்தியப் பெருஞ்சுவர் ஆட்டம் கண்டுவிட்டது.
ராவிட் போனால் என்ன சச்சின் இருக்கிறார் என்றால் சச்சினுக்கு என்ன அவசர வேலையோ 15 ஓட்டம் போதும் என்பதுபோல் அவுட்டாகிவிட்டார். கொஞ்ச நேரம் கங்குலியும் லக்ஸ்மணும் 41 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக எடுத்து நெஞ்சில் பால் வார்த்தார்கள். இந்த இனிங்கிசில் இதுதான் கூடுதல் இணைப்பாட்டம்.
இந்தியத் தேர்வாளர்கள் செய்த தவறுகளில் ஒன்று ஆஸி மண்ணில் அனுபவம் குறைந்த யுவராஜை தேர்ந்தெடுத்தது, இவருக்கு பதிலாக சேவாக்கை எடுத்திருந்தால் சில வேளைகளில் சேவாக் சிறப்பாக ஆடியிருப்பார். இன்னொரு தவறு இர்பான் பதானைத் தெரிவுசெய்யாதது.
தோல்வியும் வெற்றியும் சகஜம் தான் ஆனால் ஆஸியின் 15ஆவது தொடர் வெற்றியை இந்திய அணியால் நிறுத்த முடியாமல் போய்விட்டது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி வெறும் என வழமைபோல் நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.இந்திய அணிக்குத் தேவை கபில்தேவ் மாதிரியான ஒரு போராட்ட குணமுள்ள வீரர்.
அடுத்த இன்றைய ஆட்டம் டெஸ்ட் தரவரிசையில் 2ஆவதாக இருக்கும் தென்ஆபிரிக்காவுக்கும் வேஸ்ட்(Waste) இன்டீஸ் என செல்லமாக அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம்.
2000ஆவது ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எக்பஸ்டனின் பெற்ற வெற்றியின் பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு அன்னிய மண்ணில்( வங்கதேசம், சிம்பாவேயுடன் பெற்ற வெற்றிகள் நீங்கலாக) பெற்றதும் அதே நேரம் தென்ஆபிரிக்கா மண்ணில் முதல் தடவை பெற்றதுமான வெற்றியானது ஒரு சாதனைதான்.
அணித்தலைவர் கிரிஸ் கேயில் , சந்தர்போல் தவிர எனையவர்கள் பலர் அனுபவமற்ற வீரர்கள், இவர்கள் அனைவரது மொத்த ஓட்டங்களையும் கணக்கிட்டாலும் சச்சின் டெண்டுல்கரின் தனி நபர் மொத்த ஓட்டத்துக்கு சமமாகாது. ஆனாலும் இளம் கன்று பயமறியாது என்பது போல் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸின் எழுச்சி எனக் கொள்ளலாம்.
இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராவோவுக்கு இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு டெஸ்ட் வெற்றியை வைத்துக்கொண்டு வெஸ்ட் இன்டீஸ் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதெனக் கொள்ளமுடியாது.
இந்திய அணியை பொறுத்தவரை இந்த வருட முடிவு கசப்பாகிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு உற்சாகமான வருடம். அதே நேரம் இரு அணிகளுக்கும் அடுத்த வருடம் எப்படியிருக்கும் என சில நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த டெஸ்டில் ஆஸியின் 15 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இந்திய அணியால் நிறுத்த முடியுமா? காலம் பதில் சொல்லும்.
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியா


