கடந்த சிலநாட்களாக புரட்சித்தலைவர் கேப்டன் விஜயகாந்திற்க்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கும் நடக்கும் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வடிவேலு விஜயகாந்த் என்ன மஹாத்மா எனவும் கேள்விக்கேட்கிறார். அத்துடன் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் தேர்தலில் நின்றாலும் அவரை எதிர்த்து தான் வெற்றிபெறுவேன் எனவும் வடிவேலு வெடிவேலாக வெடித்திருக்கிறார். வடிவேல், விஜயகாந்த் மோதலைப் பற்றி பலரும் பலவிதமாக கிழிகிழி எனக் கிழித்துவிட்டதால் அதனை விட்டுவிட்டு வடிவேல் அரசியல் பிரவேசம் செய்வாரா இல்லையா என ஒரு சின்ன அலசல்.
இதனை சீரியசாக எடுப்பவர்கள் சீரியசாகவும் மொக்கையாகவோ நகைச்சுவையாகவோ எடுக்கக்கூடியவர் அப்படியேயும் எடுக்கவும்.
வடிவேலின் இந்த அறிக்கைப்போர்களுக்கும் வழக்குகளுக்கும் பின்னால் நிச்சயமாக ஒரு பெரிய சக்தி இருப்பதுபோல் தெரிகின்றது. சிலவேளைகளில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வடிவேலுக்கு ஆசனம் கிடைக்கவும் கூடும் யார் கண்டார். தமிழக அரசியலில்தான் எத்தனையோ கட்சிமாறிய காட்சிகளும் அரசியல் குழிபறிப்புகளும் நிகழ்ந்துள்ளன.
வரும் சட்டமன்றத்தேர்தலைப் பொறுத்தவரை சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், விஜய ரி ராஜேந்தர், ஜேகேரித்திஷ் என ஒரு நடிகர் பட்டாளாமே முதல்வர் நாற்காலிக்கு குறிவைக்கின்றனர். யார் யாருடன் கூட்டணி, யார் யாரை முறிப்பது என பல விடயங்கள் திரைக்குப் பின்னால் இப்பவே தயாரகியனிலையில் இருக்கலாம், சிறந்த உதாரணம் அண்மையில் பாமக கூட்டணியில் இருந்து பிரிந்ததும் மருத்துவர் இராமதாஸ் அடுத்த கூட்டணி யாருடன் அமைப்பது என சிந்திப்பதுமாகவும் இருக்கின்றார். போயஸ் கார்டனிலிருந்து அழைப்புவந்தால் சிலவேளைகளில் கூட்டணி மாறிவிடுவார். வைகோ மீண்டும் தாய் கழகத்திற்க்கு வந்துசேர்வார். இதெல்லாம் நம்ம கவுண்டர் பாசையில் அரசியலில் சகஜமான விடயங்கள்.
அதே நேரம் கலைஞருக்கு விஜயகாந்தை தன் பக்கம் இழுக்ககூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றது. அண்மைக்காலமாக சில காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்த் தம்முடன் கூட்டணி வைப்பார் என பூடகமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே விஜயகாந்த் அப்படிக் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் தெரிந்தோ தெரியாமலோ திமுக கூட்டணியில் விஜயகாந்தும் ஒரு அங்கமாகிவிடுவார். இந்நிலையில் வடிவேலின் வழக்குகள் செல்லபடியற்றவையாகிவிடும். சிம்பு மேல் உள்ள குற்றச்சாட்டுகளும் விஜயரி ராஜேந்தரை கூட்டணிக்குள் சேர்க்கும் ஒரு முயற்சி என்றும் தகவல். காரணம் சில நாட்களாக ராஜேந்தர் மாறன் சகோதரர்க்ளுடன் மிகவும் அந்நியோன்யமாக இருக்கின்றார். மாறன் சகோதரர்கள் இதுவரை தாம் எந்தக்கட்சி என்பதை வெளிப்படையாக கூறாவிட்டாலும் திமுகவுக்கு எதிரிகளாக மாறிவிட்டார்கள். தினமும் சன்னில் ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், வைகோ என திமுக எதிர்முகாம்காரர்களின் கூடாரம் ஆகிவிட்டது சன் நிறுவனம்.
விஜயகாந்தைப் பொறுத்தவரை இவரது செயல்பாடுகள் இவரும் அரசியலில் கலந்தபின்னர் தனது கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டார்போல் தான் தெரிகின்றது. ஏனைய எதிரணி அரசியல்வாதிகள் போல் கலைஞர் எதிர்ப்புத் தான் இவரது தாரக மந்திரம், கலைஞரைக் குடும்ப அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டும் இவர் செய்வதும் அதேதான்.

இவற்றை எல்லாம் விட அக்டோபரில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியல் பிரவேசம் செய்யலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இதனால் பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுமா? இல்லை ரஜனி வழமைபோல் இப்போ வருவார் அப்போ வருவார் எனப் பத்திரிகைகள் பூச்சாண்டி காட்டுகின்றனவோ தெரியவில்லை.
சென்ற தேர்தலிலும் திமுக, அதிமுக இரண்டு கட்சியிலும் சினிமா நட்சத்திரங்கள் அணி திரண்டிருந்தன. சிம்ரன் கூட இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். ஆனால் இம்முறை பல நடிகர்களே கட்சித் தலைவர்களாக இருப்பதால் இன்னும் சுவராசியமாக இருக்கும்.
இவற்றைஎல்லாம் விட சிலவேளைகளில் நாளையே இல்லை சில நாட்களிலோ விஜயகாந்தும் வடிவேலும் கட்டிப்பிடித்தபடி நாங்க மதுரைக்கார பசங்க எங்களுக்கை அடிச்சுக்குவோம் அதைக்கேட்க நீங்க யார் எனக்கேட்டாலும் கேட்கலாம். ஏதோ சில நாட்களுக்கு பத்திரிகைகளுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது.
பின்குறிப்பு. வடிவேல் அடுத்த முதல்வர் என தலையங்கம் இட்டது என்ன சின்னப்புள்ளைத் தனமாக இருக்கு என யாரும் கேட்ககூடாது. கேட்டால் நான் அழுதிடுவேன்.

