Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

நானும் என் மருமக்களும்



கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னர் ஒரு  ஃபோரத்தில் அங்கத்தவராக இருந்தபோது  ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது

வணக்கம் வந்தி அண்ணா
நீங்கள் வடமராட்சியா? நானும் வடமராட்சி தான்.

என ஆரம்பித்த மெயில் நட்பு பின்னர் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தபின்னர், அதே பெண் சில நாட்களின் பின்னர் ,நீங்கள் பீகோனில் தான் ரீயூசன் போனீர்கள்? நீங்கள் படிக்கின்ற காலத்தில் சரியான குழப்படியாம் போன்ற என்னைப் பற்றிய சில தகவல்களையும் சொல்லி என்னை அசத்தினார். எப்படி இதெல்லாம் தெரியும்  எனக் கேட்டபோது என்னுடைய போட்டைவைப் பார்த்த தன் அத்தை முறையான ஒருவர் இவர் மயூரன் தானே என்னுடன் படித்தவர் என்றதுடன் என்னைப் பற்றிய சில குறிப்புகளையும் சொல்லியிருக்கின்றார். அதுவரை பச்சிளம் பாலகனாக உலாவிய என்னை மாமா என உறவு முறை சொல்லி அழைத்தவர் அந்தப் பெண் தான். (ஏன் மாமா எனக் கூப்பிட்டார், என்ற கேள்வி எல்லாம் கேட்ககூடாது, கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன்).


அதன் பின்னர் முதலாவது பதிவர் சந்திப்பு அமைப்பு குழுவில் இருந்த புல்லட், லோஷன், ஆதிரை, சுபானு, மது, பால்குடி ஆகியோரை விட தான் வயதில் இளையவன் என்பதாலும் இந்த குழுவிலையே நான் பெரியவன் என்பதால் என்னை அண்ணா என அழைக்காமல் மாமா என அழைக்கத் தொடங்கினான்.

இப்படி சதீஸ் தொடங்கிய மாமா இப்போ வலையுலக நண்பர்களால் அன்பாக மாம்ஸ் என அழைக்கப்படும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டது. இதிலை கொடுமை என்னவென்றால் லோஷன் போன்ற வயதுபோனவர்களும் என்னை மாமா என அழைப்பதுதான்.

உலகிலையே தாய்க்கு அடுத்த உன்னதமான உறவு மாமா தான். அதனால் தானோ என்னவோ என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது எனக்கு அந்த உறவு முறை பிடித்துக்கொண்டுவிட்டது.

இவர்கள் சில வேளை பொது இடங்களில் அதுவும் அழகான பெண்களுக்கு முன்னாள் என்னை மாமா என அழைத்து, என்னைத் திரும்பிப் பார்க்க முயன்ற பெண்களை திரும்பிப்பாராமலே செய்துவிட்டார்கள். இதுதான் இவர்களுக்கு மாமாவாக இருப்பதால் நான் படும் ஒரே ஒரு கஸ்டம்.

ஒரு முறை டொக்டர் முருகானந்த‌ன் தன்னை ஒரு சிறுவன் தாத்தா என அழைத்ததாகவும் அதனால் தனக்கு வயதாகிவிட்டது என கவலை அடைந்ததாகவும் தன் பேஸ்புக்கில் இட்டிருந்தார். அதேபோல தான் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களை சில சிறுவர்கள் அங்கிள் என அழைக்கும் போது முகம் கொஞ்சம் வாட்டமடையும். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றுவிட்ட விடவேண்டியதுதான்.

அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் 2012 ஆண்டு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க வாழ்த்துக்கின்றேன்.

நட்புகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என க‌ண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.

பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது.

உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான்.

பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.

பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு.

கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை.

இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.

சயந்தன்

ஆரம்பகால மூத்த‌ பதிவர், சாரலின் உரிமையாளர். இப்போது இலங்கைப் பதிவர்களின் அனைத்துலக சங்கத்தின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு பதிவுலகத்தை கூர்ந்து அவதானிக்கும் ஒருவர். நல்ல சிறுகதை எழுத்தாளர். இன்றைக்கு கூட முகநூலில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். நன்றாக நடனமாடக்கூடியவர் ஒருமுறை தன்னுடைய நடனம் ஒன்றை யூடூயூப்பில் இட்டு ட்விட்டரில் பகிர்ந்து அந்த ஒரு காணொளி மூலம் பல்லாயிரக்கணக்கான பிந்தொடர்பவர்களைப் பெற்றவர்.

தனது பிறந்தநாளுக்கு தன்னுடயகாதலி ஐபொட் பரிசாக தருவார் எனக் கனவு கண்டு அந்தக் கனவை இன்று நனவாக்க இருக்கின்றார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சயந்தன்.

கிருத்திகன்

வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார். அடிக்கடி சமூகத்தின் மீது தார்மீக கோபம் கொள்வது கிருத்திக்கு மிகவும் பிடித்த விடயம்.

நாளை(06.06.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கானா என்ற நட்புக்கு

"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" : ஆயில்யன்

கானா என்றால் இசைப் ப்ரியர்களுக்கு கானா உலகநாதனும் இசையமைப்பாளர் தேவாவும் நினைவுக்கு வருவார்கள் ஆனால் வலைப்பதிவர்களுக்கோ கானா பிரபா என்ற அழகான வதனத்தையும் சிரிப்பையும் கொண்டு உலகம் சுற்றும் உலாத்தல் பதிவர் தான் ஞாபகம் வருவார்.


ஒரு கறுத்தகொழும்பான் மாம்பழத்துடன் எங்கள் உறவு ஆரம்பித்தது. அதன் பின்னர் நான் வலையெழுத வந்தமைக்கும் கானாவின் நட்பும் ஒரு காரணம்.

நேரடியாக இதுவரைக் காணாவிட்டாலும் தினமும் இவரின் சிட்னியில் காலை இனிதே விடிந்தது என்ற ட்விட்டைப் படித்துவிட்டு தான் நான் நித்திரைக்கே போவது, தொலைபேசியில் உரையாடி இருந்தாலும் ஈமெயில்களீனூடும் சமூக வலைத்தளங்களினூடும் கானாவுடன் உரையாடுவது என்பது இனிமையானது.


வலையுலகில் உலாத்தல் கட்டுரைகள், இசைப்பிரிப்புகள், நேர்முகங்கள், ஈழத்து மரபுகள், தமிழ் சினிமா விமர்சனம் எழுதாவிட்டாலும் மலையாள சினிமா விமர்சனம் ஆங்கில சினிமா விமர்சனம் என பலதரப்பட்ட காத்திரமான பதிவுகளை எழுதும் சீரியசான பதிவர்.

என்னைப்போன்ற யூத்துகளுக்காக தனது லுமாலா சைக்கிள் காலக் காதல் கதையை எழுதி மேலிடத்தில் இருந்து வந்த செல்ல மிரட்டலுக்காக அதனை நிறுத்திய காதல் இளவரசன்.

ட்விட்டருக்கு வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனச் சொல்லியபடி கானா வரும் அழகை ரசிக்கவே அவரின் நட்புகள் காத்திருப்பது வழக்கம். அதிலும் கானா வந்தால் தான் ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்க்கும் எங்கள் அன்புச் சின்னப்பாண்டி ஆயில்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்கவர்(சின்னப்பாண்டி அண்ணோய் விரைவில் உங்களுக்கும் ஸ்பெசல் போஸ்ட் ரெடி ).

சினிமாப் பாடல்களில் அண்ணன் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். எந்தப்படத்தில் எந்தப்பாட்டு எனச் சந்தேகம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார். அதிலும் எங்கள் இசைஞானியின் பரமரசிகர்(இது ஒன்றே எம் இருவரையும் பிணைக்கும் இன்னொரு சங்கிலி). அதனால் தான் என்னவோ இராமராஜனின் தீவிர விசிறி.

ஆஸியில் தமிழ் வானொலி ஒன்றில் கானாவின் நிகழ்ச்சியை பல தடவை கேட்டு மகிழ்ந்துள்ளேன். எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தை அதிகம் நேசிப்பதனாலோ என்னவோ இவரின் நிகழ்ச்சி ஒன்றிற்க்கு முத்துமணி மாலை எனப் பெயரிட்டிருக்கின்றார். முத்துமணி மாலையும் அதில் அண்ணனின் பாடல் தெரிவுகளும் சிறப்பாகவே என்றைக்கும் இருக்கின்றது. அத்துடன் அண்ணன் சிறந்த மிமிக்ரிக் கலைஞரும் கூட, முத்துமணிமாலை நிகழ்ச்சி முன்னோட்ட விளம்பரத்தில் சிறுகுழந்தையின் குரலில் பேசுவது வேறுயாருமல்ல எங்கள் அண்ணன் கானாவே.

சரோசா அக்காவின் சாப்பாட்டுக்காகவே பகல் பந்தி என்ற வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர். இணையத்தில் சகல வானொலிகளையும் கேட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் எந்த வானொலியில் நடக்கின்றதோ அதனை ஏனையோருக்கு அறியத் தந்து தான் பெற்ற இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கர்ணன் இவர்.

அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவை எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).

நடிகைகள் ரசனையைப் பொறுத்தவரை அந்தகாலத்து பத்மினி வரை இந்தக்காலத்து ஹன்சிகா மேத்வானி வரை பாரபட்சமின்றி யூத்தாக மாறி ரசிப்பார். வெள்ளைக் கரப்பான் தமன்னாவினை ரசிப்பது எங்களின் இன்னொரு உறவான முன்னாள் பதுங்குகுழிப் பதிவர் டொன்லீக்கு பிடிக்காமல் தமன்னாவை தனது தம்பிக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டாராம்.

அண்மைக்காலமாக தனது உடம்பைத் தேர்த்திக்கொள்ள ஜிம்முக்கும் மனதைத் ஒருமுகப்படுத்த கோவிலுக்கும் செல்கின்றாராம்.

கானாவைப் பற்றி நிறைய எழுதலாம் ஆனாலும் இப்படியான பாராட்டுகளை அவர் என்றைக்கும் விரும்புவதில்லை.

இன்று (14.05.2011)தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் அண்ணன் ட்விட்டர் மன்னன் உலாத்தல் பொடி கானா பிரபாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் அதே கள்ளச்சிரிப்புடனும் கலகலப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல மடத்துவாசல் பிள்ளையாரையும் சிட்னி முருகனையும் வேண்டுகின்றேன்.

கன்னியின் செல்வன் - வரலாற்று மொக்கை

முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.

அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள்.

மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள்.

கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.

டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?

பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.

டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன்

லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?

வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்

லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.



கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.

டொன்லீ : அருள்மொழிவர்மனாக‌ லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும்.

வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான்.

கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே?

வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம்,

வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து

கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன்.

லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,

ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.

நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள்.

வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.

கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?

டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.

அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான்.

வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.

தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென

கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.

வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.

கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.

மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.

வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.

கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.

மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?

லோஷன் : ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.

கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?

டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.

கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.

வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.

லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.

வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.

ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.

கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.

லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.

டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது.

நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.

லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.

கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.

வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார்.

வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்

லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.

பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.

லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி

கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்.

மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்

லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.

டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.

கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.

டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.

கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.

ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?

வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.

லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.

எல்லோரும் ஒட்டுமொத்தமாக : அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .

ஹாட் அண்ட் சவர் ஆதிரை ஸ்பெசல் சூப் 19-01-2011

2009 ஆகஸ்ட் 3ந்திகதி வெள்ளவத்தை நளபாகம் வாசலில் புல்லட்டுடன் புன்சிரிப்புடன் நின்ற அந்த நண்பர் "ஹாய் நான் ஸ்ரீகரன் ஆதிரை என்ற பெயரில் புளொக் எழுதுகின்றனான். நீங்கள் ஹாட்லிதானே" இந்த வசனத்துடன் ஆரம்பமாகியது ஆதிரையுடனான என் நட்பு.

ஒரே பாடசாலையில் படித்த காரணத்தாலோ என்னவோ அடுத்த கேள்வியாக "நீங்கள் எந்த பேட்ச் வந்தி" எனக் கேட்டார், நான் பேட்சைச் சொன்னதும் வந்தி அண்ணா என்றார், அப்பவே நான் இவர் ஆப்படிக்கும் பார்ட்டி என விலகி இருக்கவேண்டும் விதி வலியது.

முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவில் ஒன்றாக இயங்கியபோது ஆதிரையுடனான நட்பு மேலும் மேலும் வளர்ந்தது.


அதன்பின்னர் ஆதிரையின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பல சம்பவங்களுடன் நானும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றேன் என்பது மகிழ்ச்சியான விடயம். குறிப்பாக சிலநாட்கள் ஆதிரை எலித் தொல்லையினால் கஸ்டப்பட்டபோது நாம் அவருக்கு அளித்த உதவிகளும் ஆலோசனைகளும் பதிவுலகம் அறிந்தவை. ஆதிரையின் எலியினால் அவரைவிட அவரின் உற்ற நண்பன் ஓய்வுபெற்ற பதிவர் புல்லட் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக பலதடவை புலம்பி இருக்கின்றார்.

லோஷனின் ஆதிரையின் எலிப் பதிவில் சுபாங்கன் இட்டிருந்த

"Subankan
எலியப்பத்தி எழுதுறதெண்டால் உங்களுக்குக் கொண்டாட்டம் போல. உந்த எலியை விரட்ட ஒரே வழி ஆதிரை அண்ணா ஒரு அண்ணியைத் தேடிக்கறதுதான். ( ஐடியா உபயம் - உங்கள் எலி வேட்டை பதிவு)."
என்ற பின்னூட்டம் தான் ஆதிரைக்கு இறுதியாக கைகொடுத்தபடியால் சுபாங்கனை அன்புடன் சின்னமாமா என அழைக்கின்றாராம்.

வெள்ளவத்தையில் லோஷன் திறந்துவைத்த தோசைத் திருவிழாவிற்கு(பொருத்தமானவர் )புல்லட்டின் ஏற்பாட்டில் சென்றபோது இரண்டாம் தடவை தோசை சாப்பிட வரிசையில் நின்ற இளம் பெண்களைப் பார்த்து ஆதிரை தன்னுடைய திருமணத்தை இட்டுக் கவலைப்பட்டது இப்போ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.

தனது நண்பன் மதுவின் மதுயிசத்தைப் பார்த்து ஆதிரையும் ஆதிரையிசம்உருவாக்க முயன்றார். ஆனாலும் மதுவின் முன்னால் ஆதிரையால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டு தன்னுடைய இசத்தை கைவிட்டதும் நண்பர்களுக்கு தெரிந்தவிடயம்.

மொரட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் இடியப்பம் சொதிக்குப் பெயர் போன மதுவிடம் பல்கலைக் கழகத்தில் கற்க முடியாத மதுயிசத்தை அலுவலகத்திலாவது கற்போம் என்ற நல்ல எண்ணத்தில் தன்னுடைய அலுவலகத்திலே மதுவையும் வேலைக்கு அமர்த்தி இருவரும் இப்போ ரூபியுடன் மல்லும் கட்டுகின்றார்கள். (யார் அந்த ரூபி என அறியத் துடிப்பவர்கள் இங்கே செல்லுங்கள் http://rubyonrails.org/).

அத்துடன் இவரின் அயராத உழைப்பும் விசாப் பிள்ளையாரின் அருளும்(பின்னே ஆரம்ப நாட்களில் இரவு 11 மணிவரை எல்லாம் அலுவலகத்தில் இருப்பார்)திறமையும் அவருக்கு பதவி உயர்வையும் கொடுத்துள்ளது.

ஆனால் இந்த பதவி உயர்வுக்கு விசாப் பிள்ளையாரைவிட தன்னுடைய பாஸ்வேர்ட்டைப் பறித்தவரின் ராசிதான் என ஆதிரை தனக்கு வேண்டிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி மகிழ்கின்றார்.

கந்தசட்டி விரத நேரத்தில் கூட தனது அபிமான நடிகை நயனுக்காக முதல் நாள் ஸ்பெசல் காட்சிக்கு தன்னுடைய நெருங்கிய இரண்டு நண்பர்களுடன் ஆதவன் படத்தை (ஆண் நண்பர்கள் தான் என ஆதிரைத தான் சொன்னார் நம்பிட்டம்)ஃபொக்ஸில் அமர்ந்து பார்த்துவிட்டு நயனை எண்ணை படிந்த முகத்துடன் காட்டிய கே.எஸ் ரவிக்குமாரைத் திட்டிய பெருமையும் ஆதிரைக்கே சாரும்.

கடலேறியாக அறியப்பட்டவர் அண்மைக்கால பெளதீக இரசாயன மாற்றங்களினால் தன் வலைத்தளத்தை என் பார்வையில் என‌ மாற்றிய காரணம் மட்டும் யாம் அறியோம்.

ட்விட்டரில் தத்துவம் அரசியல் நையாண்டி என ட்விட்டுகின்றவர் சில காலமாக அடக்கிவாசிப்பதும் பேஸ்புக்கில் இடையிடையே மட்டும் தலை காட்டுவதும் ஜீமெயில் சட்டில் இன்விசிபிள் மோட்டில் இருப்பதும் பாஸ்வேர்ட் பறிபோனது மட்டும் தானா இல்லை இதன் பின்னால் "ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவர்" இருக்கின்றாரோ என்பதும் மர்மமாகவே இருக்கின்றது.

கங்கோனுடன் ஒருமுறை தானும் விரைவில் கிரிக்கெட் பதிவு இடுகின்றேன் என ஆதிரை இட்ட சவாலையும் இந்தவருடம் ஆகக்குறைந்தது 100 பதிவுகளாவது இடுவேன் என தனது நண்பர்களிடம் இட்ட சவாலையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

லோஷனுடன் சேர்ந்தபின்னர் தனக்கும் அவரைப்போல் தொந்தி வந்தது என அடிக்கடி என்னிடத்தில் புலம்பி இப்போ என் ஆலோசனையில் தினமும் வெள்ளவத்தை கடற்கரையில் அரைமணி நேரம் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஆதிரையின் நண்பர்களின் ஆலோசனைகளை உள்வாங்கும் உத்வேகம் அவரிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று. யாரோ ஒருவரின் வற்புறுத்தலில் ஜிம்முக்கு போகின்றேன் என இடையிடையே ஜிம்முக்குச் சென்று அங்குள்ள உபகரணங்கள் ஒழுங்காக வேலை செய்கின்றதா என மட்டும் பார்க்கின்றார்.

சிலுவை சுமந்த சிங்காரி, எழுதாத உன் கவிதை என தன் அனுபவங்களை கதைகள், கவிதைகளாக வடித்தவர் சிலநாட்களாக எதுவும் எழுதாமல் இருக்கும் காரணமும் புரியாத புதிர்.

சூடான அரசியல் பதிவுகளை எழுதுவதில் ஆதிரையின் பாணியே தனியாக இருக்கும் இதனால் தானே என்னவோ சிலவேளைகளில் தன்னுடைய பிற்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன் என அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.

உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒன்றையாவது நேரடியாகப் பார்த்தால் தான் தன்னுடைய கிரிக்கெட் திறமைக்கு சிறப்பு என்கின்றார். ஏனென்றால் தானே பந்துவீசி தானே விக்கெட் காக்கும் திறமை ஆதிரையைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. தான் வீசிய பந்தைவிட வேகமாக ஓடக்கூடிய திறமை இது.

வழக்கமாக வரும் சூப்பில் அரசியல், சினிமா, விளையாட்டு எனப் பல விடயங்கள் வரும் ஏன் இன்றைக்கு மட்டும் ஒரே ஒரு பிளேவராக ஆதிரை மட்டும் இருக்கின்றது என்ற சந்தேகமா உங்களுக்கு ஹிஹிஹி.

ஆதிரையின் கவிதைகள் வலையில் மட்டுமல்ல பள்ளி கலைவிழாக்கள். பல்கலைக் கழக கலைவிழாக்களிலும் பிரசித்து பெற்றவை. பல்கலைக் கழகத்தை விட்டு விலகியும் இன்றும் கவியரங்கங்களுக்கு சிறப்பு கவிஞர் நம்ம ஆதிரைதான்.

இன்றுதான் எங்கள் சித்தப்பூ வலையுலக கவிஞர், கதாசிரியர், நீலக்கலர் நாயகன், ஆதிரை அவர்கள் இந்த உலகிற்க்கு அவதரித்த நந்நாள்.

என் சிறந்த நண்பன், விருப்புகுரிய வலைப்பதிவாளன், அன்புக்குரிய தம்பி, பாடசாலை பல்கலைக் கழக நண்பர்களிற்க்கு ஸ்ரீ, வலைப்பதிவு நண்பர்களுக்கு ஆதிரை அலைஸ் சித்தப்பூ அவர்களிற்க்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.



இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் பங்குச் சந்தை அச்சுதன் என்கின்ற அச்சுவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அச்சுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் லண்டன் ஒக்ஸ்போர்ட் சர்க்கசில் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கின்றது என்பதையும் அதில் கலந்துகொள்ள லண்டன்வாழ் பதிவர்களை அனைவரையும் அச்சுதன் அழைக்கின்றார்.

இன்னொரு வாழ்த்து.


பின்னூட்டப்புயல், சிரிப்புச் சுனாமி, கருப்பு நமீதா, பிரபல அனலிஸ்ட், பதிவுலகின் பாதுகாவலன், எங்கள் கும்மியின் குலவிளக்கு,கருத்து கற்பூரம் இரவு வேளைகளின் அணையா நிலவு, கிறிக்கட் பீரங்கி, ஆங்கிலத்தில் அடுத்த சேக்ஸ்பியர், தமிழின் பாரதி, எங்கள் பதிவுலக பெளர்ணமி, சிரித்தால் மாதவன், சிந்தித்தால் பார்த்தீபன். மொத்தத்தில் நீ ஒரு அடி தாங்கி, இடிதாங்கி, எங்கள் தண்ணி டாங்கி.. நேற்று வெட்டிகள் சங்கத்தலைமைப் பொறுப்பை தூக்கியெறிந்து காலை 10 மணிக்கு புதியதோர் விடியலில் காலடி எடுத்துவைத்த கன்கொன் எனப்படும் கோபிகிருஷ்ணா கனகலிங்கம் அவர்கள் வெற்றிமேல் வெற்றிபெற்று வீரத்திருமகனாக வலம்வர வாழ்த்துகின்றோம்.(வசன உதவி சுபாங்கு சக பவன்)

வாழ்த்துபவர்கள்
குரு, அங்கிள், சித்தப்பூ, சின்னமாமா, மது அண்ணா, சதீஸ் அண்ணா, குஞ்சு அதிகார மையத்தின் தூண்கள் வதீஸ் அவரின் நிருசா, மற்றும் அனுதினன்.

கொலைக் காற்று - இறுதிப்பாகம்

நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.

இதற்கு முன்னைய பகுதிகளை,
தரங்கத்திலும்,
எரியாத சுவடிகளிலும்,
சதீஷ் இன் பார்வையிலும்,
நா இலும்,
லோஷனின் களத்திலும்,
என் பார்வையிலும்
கன்கோனிலும்

படித்திருந்தால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லையென்றால் அவற்றைப் படித்தபின்னர் வாசியுங்கள்.

"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என சிஜடி அதிகாரி ராஜாவின் மொபைல் சிணுங்கியது.

"ஹலோ ராஜா ஹியர்"

மறுபக்கம் ஏதோ முக்கியமான‌ செய்தி என்பதை ராஜாவின் முகம் அப்பட்டமாக காட்டியது "ஒன் மினிட்" என அழைப்பில் இருந்தபடியே மீண்டும் தன் லப்டாப்பில் சூரியபிரகாசின் ஜீமெயிலை சேர்ச்சினார்.

"யுரேகா" என பலமாக சத்தமிட்ட ராஜாவை சூரியபிரகாஷ் உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"ஹரி அப் கைஸ் குற்றவாளி அரஸ்டாகிவிட்டான், நாம இப்போ குற்றத்தின் சூத்திரதாரியை அரஸ்ட் செய்யவேண்டும்" என்றபடியே தன்னுடைய மகேந்திராவில் ஏறினார் இல்லை பாய்ந்தார்.

ராஜாவின் ஜீப் மீண்டும் கெளதமின் அபார்ட்மெண்டில் நுழைந்தது. இம்முறை பாதுகாப்பு உத்தியோகத்தர் தானே கேட்டைத் திறந்ததுடன் ஐசி கேட்காமாலே அவர்களை பவ்வியமாக உள்ளே விட்டார்.

கெளதமின் வீட்டு அழைப்பு மணியை அழுத்த முன்னர் புன்முறுவலுடன் கதவைத் திறந்தான் கெளதம்.

"வர்ஷா எங்கே" என்றபடி உள்ளே நுழைந்தனர் ராஜாவும் அவரது சகாக்களும்.

"வாங்கோ மிஸ்டர் ராஜா குற்றவாளி பிடிபட்டுவிட்டானா?" என அவரைப் பார்த்து கேட்ட வர்ஷாவை

"ஆமாம் நான் அவளுடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்" என பலத்த சிரிப்புடன் ராஜா.

முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சியுடன் வர்ஷா "வாட் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை இது பொய்" எனக் கத்தினாள்.

"இதப்பாருங்க வர்ஷா நீங்களாக குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் இல்லை என்றால் கஸ்டம் தான் உங்கள் கூட்டாளிகள் எல்லோரையும் அரஸ்ட் பண்ணியாச்சு இனியும் உண்மையை மறைச்சு வேலையில்லை ஸ்பிக் அவுட்" ராஜா.

கொஞ்சம் பதட்டத்துடன் வர்ஷா பிளாஷ் பேக்கைச் சொல்லத் தொடங்கினாள்.

"என்னை பார்க்கின்ற எல்லோருக்கும் நான் நல்ல அழகி அறிவானவள் சகஜமாகப் பழகுகின்றவள் எனத் தான் தெரியும், ஆனாலும் என் மனசுக்குள் ஒரு சாத்தான் சின்ன வயதில் இருந்தே குடி இருக்கின்றது. நான் பணக்காரவீட்டின் ஒரே செல்லப்பிள்ளை என்பதால் சிறுவயசில் இருந்தே நான் கேட்பது எல்லாம் கிடைக்கும், அதிலும் எனக்கு புதிசுதான் வேண்டும். இப்படியான ஒரு பொசசிவ் கரேக்டர்".

"எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டமில்லை. விதுரன், சூர்யபிரகாஸ், இருவரும் என் நெருங்கிய நண்பர்கள், சூர்யபிரகாசுடனான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. இந்நிலையில் தான் எனக்கும் கெளதமுக்கு திருமணம் செய்ய என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். எனக்கு இந்ததிருமணத்தில் விருப்பமில்லை."

இடையில் குறுக்கிட்ட கெளதம் "அடிப்பாவி இதை முதலிலையே சொல்லி இருந்தால் நானும் ஜெனியுடன் சந்தோஷமாக இருந்திருப்பேனே" என கோபப்பட்டான்.

"கெளதம் கூல் அவளைப் பேசவிடுங்கள்" ராஜா

கம்மிப்போன தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் வர்ஷா.

"அப்போதுதான் என் பெற்றோருக்கு என் காதலைச் சொன்னேன் அவர்களோ ஒரு போலீஸ்காரனை உனக்கு கட்டித் தரமுடியாது கெளதத்தைக் கட்டினால் தான் உனக்கு சொத்துக் கிடைக்கும் என என்னை மிரட்டினார்கள். இதனால் நான் அவர்களின் இஸ்டத்துக்கு உடன்பட்டேன்."

"பின்னர் கெளதமும் சேகரும் என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அடுத்தநாள் சேகர் என்னைத் தொடர்பு கொண்டு கெளதம் ஜெனி காதலைச் சொல்லி இந்த திருமணத்தில் இருந்து என்னை விலகச் சொன்னான். இந்த விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது, எல்லாவற்றிலும் புதுசு கேட்கும் எனக்கு கணவன் மட்டும் செகண்ட் ஹாண்டா என்ற அதிர்ச்சியும் இந்த விஷயம் என் நண்பர்கள் நண்பிகளுக்குத் தெரிந்தால் பெரிய அவமானமும் நேரும் என்ற குழப்பத்தில் விதுரன், சூர்யபிரகாஷ் இருவரையும் வெளியில் சந்திக்க விரும்பினேன். அடுத்த நாளே நான் சூர்யபிரகாஷ், விதுரன், இந்தக் கதையில் முதன்முதலாக அறிமுகமாகும் தாஸ் என்ற சூர்யபிரகாசின் நண்பர் நால்வரும் கொள்பிட்டியிலுள்ள ஒரு ரெஸ்டோரண்டில் சந்தித்தோம். அங்கே... "

"இதைப் பார் ஹனி நீ ஒண்டுக்கும் கவலைப் படாதே, நான் எல்லாத்தையும் பார்த்துகொள்கின்றேன்" சூர்யபிரகாஷ்.

"கொய்யாலே இவ்வளவு நாளும் நீ கிழிச்சாய் " விதுரன்

"உங்கடை சண்டையை நிப்பாட்டுங்கோ, நானே குழம்பிப்போய் இருக்கிறன், இப்ப என்ன செய்யலாம்" வர்ஷா.

"ஓகே எல்லோரும் கவனமாக கேளுங்கோ" எனச் சொல்லிய சூர்யபிரகாஷ் சுற்று முற்றும் பார்த்தபடி தன் கையில் இருந்த வொட்காவை ஒரு உறிஞ்சு உறிஞ்சுபோட்டு தன் திட்டத்தை சொல்லத் தொடங்கினான்.

"வர்ஷா நாம எல்லோரும் பக்கா பிளானாக இரண்டு கொலைகள் செய்யவேண்டும், அந்த கொலைகளை செய்தது கெளதம் என அவனை மாட்டிவிட்டால் போதும் உனக்கும் உன் திருமணத்தில் இருந்து விடுதலை, எனக்கும் நீ கிடைப்பாய் விளங்குதோ."

"ஓம் விளங்குது ஆனால் யார் அந்த கொலைகளைச் செய்வது? எப்படிச் செய்வது? " வர்ஷா

"என் நண்பன் தாஸ் தான் எல்லாவற்றையும் செய்யப்போகின்றான், இவன் ஒரு ஹைடெக் கிரிமினல் " சூர்யாபிரகாஸ்.

"அப்போ நான் எப்படியும் கெளதத்தை திருமணம் செய்யத்தான் வேண்டுமா?" தன் சந்தேகத்தை வர்ஷா கேட்டாள்.

"இந்தப் பிளானுக்கே அதுதான் முக்கியம் இல்லையென்றால் கெளதத்தை மாட்டிவிடமுடியாது அத்துடன் நீ விவாகரத்து பெறும் போது கெளதத்திடம் இருந்து ஒரு தொகைப் பணத்தை ஜீவனாம்சமாகப் பெறலாம் இல்லையா you know matrimony may not be good but alimony is good" சூர்யபிரகாஷ்.

"திருமணம் முடிந்தபின்னர் நீயும் கெளதமும் கண்டி, காலி என கொழும்புக்கு வெளியில் ஹனிமூன் போங்கோ, நாங்கள் இங்கே எல்லாவற்றையும் கச்சிதமாக முடிக்கின்றோம்" விதுரன்.


"ம்ம்ம் நீங்கள் சொல்கின்றபடியே நான் செய்கின்றேன், ஆனாலும் இன்னொருத்தியுடன் லிவிங் டுகெதரில் இருந்தவனுடன் சில நாட்களாவது வாழவேண்டும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை." வர்ஷா

"இன்னொரு முக்கிய விஷயம் ஹனி நீ கெளதமுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுடன் அன்னியோன்யமாகத் தான் இருக்கவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் அவனுக்கு சந்தேகம் வந்திடும். More Over அவனுக்கு நீயும் செகண்ட் ஹாண்ட் தானே " மெல்லிய நக்கலுடன் சூர்யபிரகாஷ்.


"எல்லாம் எங்கடை பிளானின் படி ஒழுங்காக நடந்தது. எங்கடை ஹனிமூன் நேரத்தில் வர்ஷாவை தாஸ் கொலை செய்துவிட்டான். அடுத்தநாளே சேகரையும் போட்டாச்சு, சேகர் ஜெனி இருவரையும் யாழ் சேவகன் என்றவன் தான் கொலை செய்தான் என்ற அலிபியை ஏற்படுத்தவே அந்த பேக் புரொபைலை அவன் உருவாக்கினான். ஆனாலும் அந்த முட்டாள் ஸ்கிறின் ஷொட் எடுக்கும் போது மாட்டிக்கிட்டான்".

"அப்போ விதுரனை ஏன் கொன்றீர்கள்?" சிஜடி ராஜா

"அது அவன் செய்த துரோகத்திற்க்கு பரிசு விதுரன் ஒருமுறை நான் ட்ரிப் போனபோது பாத்ரூமுக்குள் எடுத்த படங்கள் அவை அதை வைத்து என்னை மிரட்டத் தொடங்கினான், அதைவிட அவனுக்கு இந்தக் கொலைகளால் தனக்கும் ஆபத்து எனத் தெரிந்து எம்மைவிட்டு விலகவும் முயன்றான்"

"ஏன் அவனை உங்கடை காசாலை சமாளிக்கமுடியவில்லையோ" சிஜடிராஜா

"அவனுக்கு காசைவிட என் உடம்பைப் பார்த்தபின்னர் என் உடம்பின் மீதுதான் ஆசை, தன்ரை சபலத்தினால் தனக்கு தானே ஆப்படித்துவிட்டான்"

"இதுதான் சொந்த செலவில் சூனியம் "

ஜோக்கடித்த கெளதத்தை முறைத்துப் பார்த்த ராஜா வர்ஷாவை தன் கண்களாலேயே மேலே சொல்லவும் என்றார்.

"விதுரனை சூர்யபிரகாஷ் கொன்றுவிட்டார் அத்துடன் அவனின் லப்டாபில் என்னுடைய படங்களும் சூர்யபிரகாசின் படங்களும் இருந்தன அதனால் அவனுடைய லப்டாப்பையும் உடைக்கவேண்டி வந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது சூர்யபிரகாஷ் எப்படி அரெஸ்ட்டானான் என்பதுதான் எனக்கு புரியவில்லை" என முடித்தாள் வர்ஷா.

"இனி நான் சொல்கின்றேன்" என்ற ராஜாவை

"ஒரு நிமிடம் மிஸ்டர் ராஜா இப்போ மை டேர்ன்" என்றான் கெளதம்.

"வர்ஷா உன்னை உன் பணத்திற்காகவும் அதைவிட உன் அழகிற்காகவும் ஜெனியை கைவிட்டுவிட்டு கட்டியது என் தப்புத்தான். ஆனாலும் திருமணத்தின் பின் நான் உனக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன் ஹனிமூனிலும் ஓய்வு கிடைத்த சில நிமிடங்களுக்கு நீ உடனடியாக உன் லாப்டாப்பைத் திறப்பதும் பேஸ்புக்கையும் உன் மெயிலையும் செக் பண்ணுவது எனக்கு எரிச்சலைத் தந்தாலும் நான் சந்தேகப்படவில்லை"

"எஸ்க்யூஸ் மீ" என்றபடி பிரிட்ஜில் இருந்து ஜில்லென்று ஒரு கிளாஸ் தண்ணி குடித்தபின்னர் கெளதம் தொடர்ந்தான்.

"நாங்கள் கொழும்பு வந்தபின்னரும் வீட்டில் தங்காமல் ஹோட்டலின் இன்னும் கொஞ்ச நாள் என்ஜோய் பண்ணுவம் என்றபோது எனக்கு உன் மேல் மெல்லிய சந்தேகம் வந்தது, விதுரன் உன்னைச் சந்தித்த இரவில் நான் நித்திரைபோல் நடித்தேன், ஆனாலும் வெளியில் வந்து நீங்கள் கதைத்ததை கேட்கவில்லை. அதே நேரம் அடுத்த நாள் நீ உன் லாப்டாப்பில் பேஸ்புக்கில் ஆதவன் என்றவனுடைய வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலின் லிங்குக்கு லைக் பண்ணுவதைப் பார்த்துவிட்டேன்,அத்துடன் ஆதவனின் காதல் பாடல்களுக்கு நீ அடித்த கொமெண்டுகளும் லைக்குகளும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் தந்தன. அதே நேரம் அந்தப் பெயரில் இருப்பர் யார் எனப் பார்த்தால் அவரின் புரொபைல் படம் நடிகர் கமலஹாசன் ஈமெயில் ஐடியும் athavansp@yahoo.com என இருந்தது இருவருக்கும் பொதுவான நண்பராக‌ விதுரன். அடுத்தநாள் விதுரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த நான் இந்த விடயத்தை சிஜடி ராஜாவிடம் ரகசியமாகத் தெரிவித்தேன். "

"ஓக்கே கெளதம் இனி என் டேர்ன்" என சிஜடி ராஜா தொடங்கினார்.

"கெளதம் ஆதவன் பற்றிச் சொன்னதும் அவரின் புரொபைலை கொஞ்சம் நோண்டினேன் அதில் சூர்யபிரகாசும் யாழ் சேவகனும் ஆதவனின் நண்பன் என இருந்தது. அப்போதுதான் என் சந்தேகம் சூர்யபிரகாசின் மேல் வரத்தொடங்கியது. இடையில் யாழ் சேவகன் போலி என்பதும் தெரிய வந்தது, சூர்யபிரகாசின் மேல் சரியான ஆதாரம் கிடைக்காமல் அரெஸ்ட் செய்யமுடியாது என்பதால் ஆதாரம் கிடைக்கும் வரை காத்திருந்தேன். அந்த ஆதாரமும் உடனேயே கிடைத்தது விதுரனின் பேர்சில் கிடைத்த போட்டோவில் வர்ஷாவின் தோளின் மேல் சூர்யபிரகாஷ் கைபோட்டபடி அருகே விதுரன் நிற்கும் படம் தான் அது"

"வர்ஷா, விதுரன், சூர்யபிரகாஷ் என எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்ததும் உடனடியாகவே சூர்யபிரகாசை கைது செய்யும் படி ஆணையிட்டேன், ஆனாலும் அவன் எங்கள் எந்த ட்ரீட்மெண்டுக்கும் அசையவில்லை. சூர்யபிரகாஷ் தான் கொலையாளி என நிரூபிக்க எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் அவனின் போலி புரொபைல்கள் கோர்ட்டில் எடுபடாது. அதே நேரம் சூர்யபிரகாசின் வீட்டைச் சோதனைப் போட்ட எமக்கு வர்ஷா வைத்திருக்கும் துப்பாக்கி போன்ற இன்னொரு துப்பாக்கியும் சில தோட்டாக்கள் சுடப்பட்ட நிலையில் கிடைத்தது."

"இவ் யூ டோண்ட் மைன்ட்" என்ற படி ஒரு கோல்ட் லீவை பத்த வைத்தபடி தொடர்ந்தார் ராஜா.

"விதுரனை தன்னுடைய இன்னொரு துப்பாக்கியால் கொன்றுவிட்டு வர்ஷாவின் துப்பாக்கி போன்ற துப்பாக்கியால் அவனின் உடமைகளைச் சேதப்படுத்தினான் சூர்யபிரகாஷ், இதுவும் கெளதமை மாட்டவைக்கும் சதிதான். இங்கே தான் சூர்யபிரகாசுக்கு எதிராக விதி விளையாடியது கெளதம் வடிவில். கெளதம் என்னுடன் கதைத்திருக்காவிட்டால் நாங்களும் கேஸ் முடியவேண்டும் என்ற எரிச்சலில் கெளதத்தை கைது செய்து கேசை மூடியிருப்போம்."

"எல்லாம் சரி மிஸ்டர் ராஜா நேற்று இங்கே எம்மைச் சுட்டவர்கள் யார்?" கெளதம்.

"அதுவும் வர்ஷா அண்ட் கோவின் நாடகம் தான் தாஸும் அவனது கூட்டாளிகள் சிலரும் தான், வர்ஷாவிற்க்கு மெல்லிய காயத்தை ஏற்படுத்துகின்றது போல் சுடுவதுடன் முடிந்தால் என்னை போடுவதும் அவர்களின் திட்டம். சகல மாஸ்டர் பிளானும் சூர்யபிரகாசின் மெயிலில் இருக்கின்றது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய மூளைசாலிகள் என்றாலும் ஒரு இடத்தில் எப்படியோ தடுமாறுவார்கள். சூர்யபிரகாசும் அப்படித் தடுமாறிய இடம் தான் அந்த ஈமெயில். தாஸ் குழுவின் போலீசிடம் அகப்பட்டால் கெளதம் தான் இதன் மாஸ்டர் மைன்ட் எனச் சொல்லி மாட்டிவிடுவது என சகல திட்டமும் அதில் இருந்தது, அவர்களின் திட்டத்திற்க்கு அப்பால் பட்ட கொலைதான் விதுரனின் கொலை ஆனாலும் அந்தக் கொலையால் தான் குற்றவாளிகள் அகப்பட்டும் கொண்டார்கள்." என தன்னுடைய பேச்சை முடித்துக்கொள்ள இருந்த ராஜா

"ஓஓ மறந்துபோனேன் அந்த ஈமெயிலை மடையன் சூர்யபிரகாஷ், விதுரன், தாஸ், வர்ஷா என அனைவரிடைய பெயரையும் போட்டிருந்தது தான் எல்லோரையும் சிக்கவைத்தது" என்றபடி அந்த ஈமெயிலின் பிரிண்டை கெளதத்துக்கு காட்டினார்.



"Subject KK எனப்போட்டிருக்கே KK என்றால் என்ன?" கெளதம்.

"கொலைக்காற்று" வர்ஷா

"மிஸ்டர் ராஜா கிரேட் இன்வெஸ்டிகேசன்" என்ற கெளதம் கண்கலங்கியபடி ஆனாலும் என் லைவ்தான் இப்படிப்போய்விட்டது என விம்மினான்.

"டோண்ட் வொறி கெளதம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, இந்த பிரச்சனைகளை மறந்துவிட்டு சில நாட்களில் நீங்கள் விரும்பினால் இன்னொரு வாழ்க்கையை தேடுங்கள், அதுவும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பேச்சிலார் லைவ்வை என்ஜோய் பண்ணுங்கள், எனிவே கேஸ் முடியும் வரை என்னுடன் தொடர்பில் இருங்கள்"

"வர்ஷா லெட்ஸ் கோ" என்றபடி அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் வர்ஷாவை அழைத்துவரும் படி கண்காட்டினார் ராஜா.

தன்னுடைய வரட்டுக்கெளரவத்தாலும் பிடிவாதத்தாலும் வாழ்க்கையை ஜெயிலில் கழிக்க‌ முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு போகும் வர்ஷாவை அந்த அப்பார்மெண்ட் மக்கள் பரிதாபம் கோபம் அனுதாபம் கலந்த பார்வை பார்த்தார்கள்.

சில நாட்களில் நீதிமன்றமும் நேரடிக்குற்றவாளிகளான சூர்யபிரகாஷ், தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனையும் குற்றத்துக்கு உடந்தையான வர்ஷாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன், சிறப்பாக துப்புத் துலக்கிய சிஜடி ராஜாவுக்கு பாராட்டையும் அள்ளிவழங்கியது.

நீதிமன்றத்தைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த ராஜாவின் மொபைலில் மும்மொழிகளிலும் பாராட்டுச் செய்தி இருந்தது அனுப்பியவரின் பெயரைப் பார்த்த ராஜாவிற்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முற்றும்.

பின்குறிப்பு : ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம். முன்னைய பதிவுகளை பல தடவை படித்துப்பார்த்து முடிச்சுகளை ஒருமாதிரி அவிழ்த்துவிட்டேன். இனிமேல் தொடர்கதை எழுதினால் கடைசியாக எழுத எவனாவது என்னைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு KK தான்.

2010ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

வணக்கம் நண்பர்களே

சென்ற ஆண்டில் நான் படித்து ரசித்த பதிவுகளின் பட்டியலை இட்டிருந்தேன். அதனைப்போலவே இந்த முறையும் டிசம்பர் கடைசியில் இடலாம் என நினைத்திருந்தால் வேலை, படிப்பு, குளிர், ஸ்னோ, சோம்பேறித்தனம், எனப் பல காரணங்களினால் தள்ளிப்போனது. இன்றைக்கு கிடைத்திருக்கும் நேரத்தில் முதல் பகுதியை எழுதினால் எப்படியும் அடுத்தபகுதி நாளையோ அல்லது சில நாட்களிலோ எழுதப்படும் என நினைத்து எழுதியதுதான் இந்தப் பதிவு,



இவை நான் ரசித்துப் படித்தவையே தவிர அந்தப் பதிவரின் முத்திரைப் பதிவோ அல்லது சிறப்புப் பதிவோ அல்ல. நான் குறிப்பிடுகின்ற பதிவைவிட அவர்கள் மிகவும் சிறந்தவற்றை எழுதியிருக்கலாம் ஆனால் எனக்கு அந்தப் பதிவர்களின் பெயர் நினைவில் வந்தால் இந்தவருடம் அவர்க:ள் எழுதிய இந்தப் பதிவுதான் ஏனோ ஞாபகத்தில் வருகின்றது.

இவ்வளவு முன்னுரை போதும் இனி நான் ரசித்தவை உங்களுக்காகவும்....

அசோக்பரன்

அண்மையில் இலங்கைத் தேசியகீதம் தமிழ்மொழியில் இசைக்ககூடாது என அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலத்திற்கு எதிராக தனது உள்ளக்குமறல்களை அசோக் இதில் கொட்டித் தீர்த்துள்ளார். அசோக்கின் பதிவுகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. இளம் கன்று பயமறியாது என்பதுபோல் அசோக்கின் இந்தப்பதிவும் சில அரசியல்வாதிகளை சாடுகின்றது.

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.


அச்சுதன்

செல்லமாக பங்குச் சந்தை என எம்மால் அழைக்கப்படும் அச்சுவால் சென்ற வருடம் எழுதப்பட்ட கட்டுரைகளில் பங்குச் சந்தையுடன் பொதுவான நாணயம் பற்றிய விடயங்களும் வந்தமை, என்னைப்போன்ற சாதாரண வாசகனைக் கூட ஈர்த்துவிட்டது. உலகில் சீனாவின் வல்லாதிக்கத்தையும் இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளகூடியதாக இருந்தது.

உலக வல்லரசுகளின் நாணயப் போர்


ஆதிரை

செம்மொழி மாநாட்டின் மறுபக்கத்தை அலசிய இந்தப் பதிவில் ஆதிரை சொன்ன பாட்டி பற்றிய உருவக கதை பலருக்கு புரிந்திருக்கும். கருணாநிதியின் புகழ் பாட நடத்திய இந்தமாநாட்டைப் பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பியின் பல்டி பற்றியும் பாட்டியின் கதையூடாக ஆதிரை கொண்டு சென்ற பாங்கு சிறப்பானது.

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்


பாலவாசகன்

நகைச்சுவை, கிரிக்கெட் போன்றவை அதிகம் பிடித்த எனக்கு இவர் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கி எழுதியது மட்டும் பிடிக்காமலா போகும். அதிலும் காதல் கவிதைகளை கிரிக்கெட் பாசையில் சொன்ன பாணியில் இவரது திறமையைப் பார்த்து நான் கிளீன்போல்ட் ஆகிவிட்டேன். மருத்துவரின் இந்தக் கவிதையைப் பார்த்து யார் யார் கிளீன்போல்ட்டானார்களோ சுபாங்கனுக்குத் தான் வெளிச்சம்.

கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !!


பவன்

மொக்கை என்றால் பவன் தான். எத்தனையோ மொக்கைகள் போட்டிருந்தாலும் சிலவற்றை நினைச்சு நினைச்சு சிரிக்கலாம். அதிலும் மன்மதன் அம்பு பாடலையும் தற்போதைய ஆஸி அணியின் நிலையையும் வைத்து பவன் செய்த சித்து விளையாட்டு அதிலும் திருகோணமலை வேகாத வெயிலில் உஷா ஃபேனுக்கடியில் இருந்து எழுதிய இந்தக் கவிதை பவனுக்கு ஒரு மைல் கல்தான்.

பொன்டிங்கின் சொம்பு..:P


புல்லட்

ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுக்கு வற்புறுத்தப்பட்ட முன்னாள் பதிவர் புல்லட்டின் பெண்கள் பற்றிய பதிவுகள் எனக்கு எப்பவும் பிடித்தவை.(சிலவேளைகளில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதோ தெரியவில்லை). இந்தப் பதிவும் சில பெண்களுக்கு கடுப்பை கிளப்பி புல்லட்டினை அடக்கியதோ யாம் அறியோம். புல்லட்டின் மீள் வருகையை அவரின் கோடிக்கணக்கான(?) வாசகர்கள் சார்பில் நானும் எதிர்பார்க்கின்றேன்.

கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3


கேபிள் சங்கர்

வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிளாரின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். (எந்த மொக்கைப் படத்தையும் முதல் நாள் பார்க்கும் தைரியம் இவருக்கு மட்டும் தான் உண்டு). சினிமாவில் இருப்பதாலோ என்னவோ பல பதிவுகள் சினிமாவைச் சார்ந்தவைதான். இடைக்கிடை எண்டர் கவிதை எழுதி அசரவைக்கின்றார். சன் டிவி விஜய் டிவி போட்டி பற்றியும் சூப்பர் சிங்கர் பற்றியும் எழுதிய இந்தப் பதிவில் நடுநிலையாக எழுதிய பதிவு இது.

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி


சேரன் கிரிஷ்

காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர். இடைக்கிடையே எழுதினாலும் அந்த எழுத்துக்களில் ஒரு அனல் அடிக்கும். சேரனிடம் இருந்து இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இலங்கையின் பொற்சிறையில் வாடும் பிராமணர்களைப் பற்றிய ஒரு பதிவு தான் இது.

பிராமணன்

சித்ரா

அமெரிக்காவில் இருந்து எழுதும் பெண் பதிவர். வெட்டி பேச்சு என வலை இருந்தாலும் சிரிப்பினூடாக பல சிந்தனைகளையும் எழுதுகின்றவர். பெண் பார்க்கும் படலத்தை தனக்கே உரிய படங்கள் போடும் பாணி நகைச்சுவை என அழகாக எழுதியிருக்கின்றார். இந்த வடைபோச்சே பலருக்கு பலவிதமாக ஏற்பட்ட அனுபவமாக இருக்கும்.

ஒரு வினாடியில் "வடை" போச்சே!


கெளபாய் மது

மதுயிசம் என்ற புதுவிடயத்தை என்னைப்போன்ற பச்சிளன் பாலகன்களுக்கு பரப்பியவர் நம்ம கெளபாய். இடையிடையே எழுதும் வேலைப்பளு கூடிய பதிவர். இவரின் பெரும்பாலான கதைகள் ரியலாகவே இருக்கும் அல்லது உண்மைக்கதைகளுக்கு கொஞ்சம் கற்பனை சாயம் பூசியிருப்பார். இந்தக் கதையும் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும்.

நீ ஒரு ரிச்சு கேள், நான் ஒரு பிச்சை போய்


டயானா

தன்னுடைய பாடசாலை அனுபவங்களை துறு துறு திருதிரு என எழுதியவர் ஏ.ஆர்.ரகுமானின் கொள்கைபரப்பாளராக (சும்மா தான் எந்த உள்குத்தும் இல்லை) ட்விட்டர் பேஸ்புக்கில் மாறியபின்னர் தன் வலைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கின்றாரில்லை. அவரின் பாடசாலை அனுபவங்கள் போல் பல்கலைக்கழக வானொலி அனுபவங்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!


ஈழத்துமுற்றம்

ஈழத்துமுற்றம் நான் புகுந்த வீடுகளில் ஒன்று. எத்தனையோ ஈழத்து வட்டார வழக்கு பதிவுகள் வந்தாலும், ஒரு காலத்தில் நாம் அனுபவித்த விடியோ படம் போடுகின்ற நிகழ்வை தம்பி வடலியூரான் அழகாக வர்ணித்திருப்பார். இதனை வாசித்தபோது அட இது நான் அனுபவித்த விடயம் என்ற எண்ணமே வந்தது.

இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்


ஜாக்கி சேகர்

இவரின் சாண்ட்விஜ் நாண்ட்வெஜ் எப்படி காரமோ அதுபோல் இடையிடயே எழுதும் சில பதிவுகளிலும் அனலடிக்கும். தமிழக அரசைச் சாடி எழுதிய இந்தப் பதிவு அவரின் சமூக அக்கறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...


ஜனா

காத்திரமான பதிவுகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இந்தவாரப் பதிவர் அறிமுகம் என எழுதியவர், பதிவர்களை வைத்து நடக்கும் மொக்கைகளில் பெரும்பாலும் சிக்குபவர்களில் நானும் கங்கோனும் சதமடிக்கும் நிலையில் இருக்கும் போது மன்மதன் அம்பு கமல் கவிதையில் ஈர்க்கப்பட்டு நம்ம மருத்துவர் பாலவாசகனை பாட்டுடைத் தலைவனாக்கி எழுதிய மெஹா மொக்கைக் கவிதை இது. அந்தக் கவிதையின் மெட்டில் ஜனாவின் வார்த்தைகள் அமர்ந்தமை ஜனாவிற்க்கே கைவந்த வார்த்தை ஜாலம்.

வாசகன் வம்பு!!


கானா பிரபா

என் பதிவுலக அண்ணா. எந்த விடயத்தையும் அநாயசமாக எழுதுவது இவருக்கு கைவந்த கலை. நாம் எல்லாம் ஒரு வலையை வைத்துக்கொண்டே கஸ்டப்படும்போது பலவிதமான வலைகளை வைத்திருக்கும் வலைஞன். உலகம் சுற்றும் வாலிபன் இவர். அண்மையில் யாழ் சென்றுவந்தபோது அங்கேயுள்ள தியேட்டரில் படம் பார்த்த கதையை தனக்கே உரியபாணியில் எழுதியிருந்தார். ஆனாலும் சூப்பர் பல்கனியில் எவருடனோ இருந்துபார்த்ததை மட்டும் என்னைப்போன்ற பாலகர்கள் மனம் நோகக்கூடாது என மறைத்தமை அவரின் நல்ல மனசுக்கு எடுத்துக்காட்டு.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை


கரவைக்குரல்

லண்டனில் நான் சந்தித்த முதல்ப் பதிவர். நம்ம மண் மணம் கமிழ எழுதும் இன்னொரு ஊடகவியளாளர். விரைவில் ஒரு குறும்படத்திலும் கதாநாயகனாக வலம்வரவிருக்கின்றார். பலரின் நன்மை கருதி இவர் வெளிநாட்டு வாழ்க்கையை எழுதவில்லை என அண்மையில் சந்தித்தபோது சொன்னார். ஆனாலும் இந்த பதிவில் அவர் எழுதியிருக்கும் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது.

பட்ட பாடு பெரும்பாடு


கங்கோன்

என்னைக் குரு எனச் சொல்லி என்னைக் கலாய்க்கும் பெரிய்ய மனதுக்காரர். நித்திரையால் எழுப்பி 1986ல் மெல்பேர்ன் டெஸ்ட்டில் ஆஸி சார்பில் யார் சதமடித்தது என்றால் உடனே சரியான பதில் கொடுக்கும் கிரிக்கெட் அகராதி. இவரின் தேடுதல் பாராட்டுக்கு அப்பால்பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல நல்லசமூக, மொக்கை, கதை கூட எழுதும் ஆற்றல் கொண்டவர் ஆனாலும் சில நாட்களாக முகனூலிலும் ட்விட்டரிலும் பொழுதைப்போக்குகின்றார். இந்தப் பதிவு விளையாட்டுப் பதிவு ஒன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு ஒரு சான்று.

பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.


கீர்த்தி

தன் கவிதைகளால் பலரைக் கவர்ந்தவர். அதனால் தானோ என்னவோ இந்தவருடம் பெரும்பாலும் கவிதைகளாகவே எழுதி இருக்கின்றார். எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால் கீர்த்தி தன் மொக்கைத் திறமையைக் காட்டிய இந்தப் பதிவு ஏனோ பிடித்துவிட்டது. ஸ்ரேயா என்ற மாட்டை வைத்து நம்ம பதிவர்கள் சிலர் மாட்டுப்பொங்கல் செய்கின்றார்கள் என தன் கற்பனையில் சிறப்பாகவே எழுதியிருந்தார்.

பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்


கீத்

கிருத்திகனின் பதிவுகள் அண்மைக்காலமாக பெரும்பாலும் சமூகம் சார்ந்தே காணப்படுகின்றது. சில இடங்களில் பேசாப் பொருளைக்கூட துணிச்சலாக பேசியிருந்தார். அண்மையில் இவர் எழுதிய ஒரு பதிவு இன்னொரு இணையத்தில் கூட உசாத்துணையாகச் சேர்த்திருந்தார்கள். இந்தப் பதிவில் சமூகவலைப்பின்னல்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டு மோகத் திருமணங்கள் பற்றியும் அலசியிருக்கின்றார்.

சில சமபவங்கள், வருத்தங்கள்


லோஷன்

அதிகார மையத்தின் முன்னாள்த் தலைவர். சகலவிதமான பதிவுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதுகின்றவர். நண்பர்களைக் கிண்டலடித்து பதிவு எழுதுவது என்பது இவருக்கு தனி இன்பம். யாழ் சென்றுவந்தபோது அந்த பயணத்தை படங்களுடன் இட்டிருந்தார். இவரின் எழுத்துக்கள் சொல்லாத பல விடயங்களை இவரின் கமேரா சொன்னது.

A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு


மருதமூரான்

இவரின் பதிவுகள் மட்டும் தான் சீரியசானவை,ஆனால் இவரோ பழகுவதற்க்கு இனிமையானவர். தனக்குப் பட்டதை எந்தவித பூசிமொழுகலும் இல்லாமல் சொல்லும் தைரியம் தான் இவரிடம் எனக்கு பிடித்தது. இந்தப்பதிவிலும் சொந்த ஊருக்கு சென்ற வலிகளைச் சொல்கின்றார்.

இடம்பெயர்வது மட்டுமல்ல, சிதைந்த தேசத்தில் மீண்டும் கால் வைப்பதும் வேதனையானது.


மு.மயூரன்

கட்டற்ற கணணிக்காதலன் இவர், சர்ச்சைகளில் சிக்கும் பதிவுகள் எழுதுவது இவருக்கு மட்டுமே கைவந்த கலை. இவரின் சில வரிகளே பல கதைகளைச் சொல்லும். இந்தப் பதிவின் தலைப்பே பல விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றது. அதையே மு,மயூரனும் முதல் வரியில் குறிப்பிடுகின்றார். "ஏ ஆர் ரஹ்மான் இந்த சிகப்பழகு முகப்பூச்சு இசையின் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரியானார்". இந்த வரிகளை இப்போதைய காலநிலையில் சிந்தித்தால் பலவிடயங்கள் புரியும்.

செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது


மயூரேசன்

இன்னொரு கணணிக் காதலன். கணணி தொழில்நுட்ப பதிவுகள், இடையிடையே சினிமா விமர்சனம் என எழுதுகின்றவர் எழுதிய வித்தியாசமான ஒரு வரலாற்றுப் பதிவு இது. இரண்டாம் உலகயுத்தம் பற்றிய இந்தப் பதிவு மயூரேசனின் தேடலை பறைசாற்றுகின்றது.

இலங்கையில் ஜப்பானியத் தாக்குதல்


மதிசுதா

குறுகிய காலத்தில் பதிவுலகம் முழுவது பிரபலமடைந்த பெருமை நம்ம சுடு சோற்றுப் புகழ் மதி சுதாவிற்கே சாரும். பதிவு எழுதி பிரசுரித்த கையுடன் இவரின் முதல் பின்னூட்டம் வந்துவிடும். பிரபல இயக்குனர் ஒருவரின் கதைத் திருட்டை அம்பலப்படுத்திய பதிவு இது.

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..


டொக்டர் எம்,கே.முருகானந்தன்

மருத்துவக் குறிப்புகளுடன் நல்ல நகைச்சுவைகள் சினிமா நூல் விமர்சனம் எனச் எழுதும் எங்கள் மருத்துவர். அண்மைக்காலமாக தன்னுடைய கமேராவினால் சுட்ட சில விடயங்களையும் பதிவாக்கியிருக்கின்றார். யாழ் மண்ணுக்கே உரிய தோட்டக்காணிகளை அழகாக படம் பிடித்ததுடன் மட்டுமல்லாமல் சின்னச் சின்ன குறிப்புகளுடன் அவற்றைத் தந்திருப்பது ரசனை.

யாழ்ப்பாணத் தோட்டங்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும். அப்படி அதிலும் இல்லையென்றால் நான் உங்கள் பதிவுகளை ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. சிலவேளைகளில் என் ஞாபகத்துக்கு உங்கள் பதிவுகள் வரவில்லை என்பதுதான் நிஜம்.

ஹாட் அண்ட் சவர் சூப் 19-08-2010

அரசியல்
பெரிதாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நிகழவில்லை என்பதால் அரசியல் இன்றைய சூப்பில் இல்லை.

நீண்ட நாள் சந்தேகம் : இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?

கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறும் முக்கோணத்தொடரின் கடைசியாக இந்தியா இலங்கை விளையாடியபோட்டியால் ஆசிய கிரிக்கெட் அதிர்ந்துபோய் ரணகளமாகி இருக்கின்றது. ரந்தீவ் செய்தது தவறுதான் அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், இப்போ பழைய குப்பைகளை இந்திய முன்னாள் வீரர்கள் கிளறுகின்றார்கள். இவர்கள் செய்யாத குழப்படிகளையா ரந்தீவ் செய்துவிட்டார்? ஆனாலும் வழக்கம்போல் பெரிய அண்ணனுக்கு பயந்து இலங்கை கிரிக்கெட் சபை மன்னிப்பு கேட்டுவிட்டது. இந்தியாவை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பை ரணகளமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அணித்தலைவர் டோணி அமைதியாக இருக்கின்றார்.

எத்தனையோ தேவையான விடயங்கள் இருக்க ஹிந்திய ஊடகங்கள் இதனை தூக்கிபிடிப்பது வேறு ஏதோ அரசியல் அல்லது உள்குத்து இருப்பது போல் தெரிகின்றது. இது பற்றி பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும் அதிகம் எழுதியபடியால் நான் பெரிதாக அலட்ட விரும்பவில்லை.

யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் மோகம் இன்னமும் குறையவில்லை என்பதற்க்கு நேற்று கெனிங்டன் ஓவலில் தொடங்கிய இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் போட்டி சாட்சி. மைதானத்தில் நல்ல கூட்டம், மைதானத்தில் அருகால் தான் தினமும் நான் பயனிக்கின்றனான். அதனால் தான் சனக்கூட்டத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.


சினிமா :

அண்மையில் தில்லாலங்கடியும் களவாணியும் பார்க்க கிடைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் இரண்டும். தில்லாலங்கடி ரீமேக், களவாணி அக்மார்க் ஒரிஜினல், இரண்டும் நகைச்சுவை நிறைந்த படங்கள். ஜெயம் ரவிக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது. தமன்னா அழகாக இருக்கின்றார். பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான். வழக்கம்போல் சரண்யா மனசுக்குள் மத்தாப்புதான்.

நாளைக்கு நான் மகான் அல்ல வெளியாகின்றது. கார்த்தி இதில் எப்படி நடித்திருக்கின்றார் எனப் பார்க்கவேண்டும், நான் மகான் அல்ல பாடல்களில் வழக்கம் போல் யுவன் ராஜாவாகி இருக்கின்றார். காதல் சொல்ல வந்தேன் படத்தின் சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடல் போல் மெஹா ஹிட். அருமையான மெலடி. ஆனால் படம் தான் பப்படம் என்கின்றார்கள்.

பதிவுலகம்

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பு நடந்து வரும் 23ந்திகதியுடன் ஒரு வருடமாகப்போகின்றது. சந்திப்பின் மூலம் கிடைத்த நன்மைகள் அல்லது விளைவுகள் என்னவென்றால் மதுவினால் இலங்கைப் பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டதும், பல நல்ல நண்பர்கள் கிடைத்து இன்றைக்கு அவர்கள் மாமன், மச்சான், சித்தப்பூ பெரியப்பூ என உறவு முறை கொண்டாடும் வரை நல்ல உறவுகளானதும் தான். எத்தனையோ விடயங்கள் நடைமுறப்படுத்த பலரும் முயன்றும் ஏனோ பலரின் ஒத்துழைப்பு இல்லாமையால் கைவிடப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது சந்திப்பும் சென்ற வருடம் டிசம்பரில் நடந்தது அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக நண்பர்களாக சந்திக்கின்றார்களே ஒழிய இன்னொரு பதிவர் சந்திப்புக்கு சாத்தியம் ஏனோ ஏற்படவில்லை. இடையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஒரு இடத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எத்தனையோ ஆற்றல்மிக்க துடிப்பான இளைஞர்கள் இப்போது பதிவு எழுதுகின்றார்கள், அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்.

சிறு விளக்கம் :
அண்மைக்காலத்தில் பெரும்பாலும் என்னுடைய பதிவுகளுக்கு நான் பதில் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் குறைந்துவிட்டது, இதனைச் சில நண்பர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் அறியத் தந்தார்கள். இதற்க்கான முக்கியமான காரணம் நேரம் மட்டுமே. பல தடவை பதில் அளிக்கமுயற்சி செய்வேன் ஆனாலும் ஏனோ முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலும் நான் ரசித்த பதிவுகளுக்கு தேவைப்பட்டால் வாக்கும் பின்னூட்டமும் அளித்துவருகின்றேன். பகலில் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. இரவிலும் அரைவாசி இரவில் நேரமில்லாதபடியால் இந்தப் பதிவு நள்ளிரவின் பின்னர் எழுதுகின்றேன். எத்தனையோ விடயங்கள் எழுத யோசித்தாலும் வேலைப்பளு, கல்விப்பளு எழுத விடுகின்றதில்லை. ஈட் கிரிக்கெட், ட்ரிங் கிரிக்கெட் என இருந்த நான் இப்போ கிரிக்கெட்டை கிரிகின்போவில் மட்டும் ஸ்கோர் பார்ப்பதுடன் விட்டுவிடுகின்றேன், ரந்தீவ் விவகாரம் கூட கங்கோனின் பதிவில் தான் அறிந்தேன். இனிமேல் எப்படியும் நேரம் ஒதுக்கி பதில் பின்னூட்டம் இட முயற்சிக்கின்றேன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.

நான்காம் ஆண்டும் நட்புகளும் - பகுதி 2

சரியாக ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வலைப்பதிவுக்கு வருகின்றேன். இரண்டாம் பகுதியில் என்னுடைய ஏனைய வலையுலக நட்புகள் தொடர்கின்றன. சில நாட்களாக வலையுலகம் எனக்கு தூரமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலும் பதிவுகள் வாசிக்கின்றேன், சிலதுக்கு மட்டும் பின்னூட்டம் இடுகின்றேன். நேரமின்மை முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் முன்னையதைப்போல் ஏனோ இப்போ எழுதமுடியவில்லை, என்ன காரணமோ யாம் அறியோம். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கின்றது. இந்தக் கதைகளை விட்டுவிட்டு விடயத்திற்க்கு வாறன்.


மது
பெயரைப் போலவே இவரின் பேச்சும் போதை தரும். மதுவின் கருத்துக்களின் பெரும்பாலும் அவருக்குரிய மதுயிசம் இருக்கும்(மதுயிசம் என்ன என அறியவேண்டியவர்கள் தங்கள் மின்னஞ்சலுடன் என்னை அல்லது கோபியைத் தொடர்பு கொள்ளுங்கள்). இவருக்குத் தெரியாத சந்துபொந்துகள் இல்லை (தொழில்நுட்பத்தில்). பெரிய்ய ஹக்கராகவேண்டியவர், நேர்மையான மனிதர் என்றபடியால் அதனை செயல்படுத்துவதில்லை.

டொக்டர் எம்.கே.முருகானந்தன்
இவரை வலையுலகிற்க்கு வரமுன்னரே ஒரு எழுத்தாளராக தெரியும் பின்னர் வைத்தியராக அவரிடம் பலமுறை வைத்தியம் கூடப் பார்த்தேன். தன்னுடைய கடினமான வேலைப் பளுவிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தன்னுடைய வலைப்பதிவு முகநூல் என அனைத்திலும் எழுதிக்கொண்டிருக்கின்ற கலை இவருக்கு மட்டுமே கைவந்தது. இவரின் எளிமையான தமிழில் பாமரனுக்கும் புரியும் படி எழுதும் மருத்துவப் புத்தகங்களும் கட்டுரைகளும் என்றைக்குமே மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கும். இவரின் சினிமா விமர்சனங்களை வாசித்து நான் பல படங்கள் பார்த்திருக்கின்றேன்.

மாயா
என்னை வந்தியத்தேவனாக மாறவைத்தவர்களில் இவரும் ஒருவர். பதிவுலகின் இன்னொரு மயூரன். ஆரம்பகால இலங்கைப் பதிவர்களில் ஒருவர், தற்போது லண்டனில் உயர்கல்விக்காக வசிக்கின்றார்(புலம் பெயர்ந்து அல்ல). இப்போது அடிக்கடி தொலைபேசியில் உரையாடினாலும் இன்னமும் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

நிர்ஷன்

வலையுலகின் மூலம் அறிமுகமானவர். 2007ல் ஒழுங்குபடுத்த முயன்ற பதிவர் சந்திப்பின் மூலம் தொலைபேசி மின்னஞ்சல் என தொடர்பில் இருந்தாலும் சென்ற வருடம் தான் நேரில் சந்தித்தேன். பதிவுலகத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொள்வோம். இவரின் துணிச்சல் வியக்கத்தக்கது.

நிலா

பின்நவீனத்துவ கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மூலம் கலக்கிக்கொண்டிருப்பவர். இவரின் சில கட்டுரைகளுக்கு அவரிடம் பேச்சுத்தமிழில் விளக்கம் கேட்டுக்கூட இருக்கின்றேம். சங்க இலக்கியங்கள் எல்லாம் முகநூலில் இட்டு தன் திறமையை அடிக்கடி காட்டுகின்றவர்.

சினேகிதி

நம்ம ஊரு சீனியர். வலையுலகில் பலகாலமாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் தத்தக்கபித்தக பதிவர். மின்னஞ்சல்கள், முகநூல் அரட்டைகள் என அடிக்கடி பேசுகின்ற ஒருவர். பதிவுகளில் காத்திரமாக இருந்தாலும் அரட்டைகளில் நகைச்சுவையாகவும் பேசுவார். அண்மைக்காலமாக இவரும் எழுதுவதைக் குறைத்துவிட்டார்.

சதீஸ்
இன்றைக்கு பிறந்தநாள் காணும் என் வலையுலக மருமகன். இவரைச் சந்தித்ததே சென்ற வருட அவரின் பிறந்தநாள் அன்றுதான். எவ்வளவு நக்கலடீத்தாலும் கோவம் பத்தாது. பதிவுலக நண்பர்களை உறவினராக்கிய பெருமை சதீசைத் தான் சேரும். காதலுக்கு மரியாதை கொடுப்பவர், சிறந்த கிரிக்கெட் வீரராம், என்னை மாமோய் என அழைக்கும் அழகோ அழகு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.

சுபாங்கன்

ஐந்தறைப் பெட்டியில் வசித்தவர் பவனின் வாஸ்து காரணமாக தரங்கத்தவராகிவிட்டார். சுபாங்கனுடன் எனது முதலாவது சந்திப்பு என்றைக்கும் மறக்கமுடியாமல் இருக்கிறன்(ம்). பழக நல்ல பொடியன் என நான் கூறினால் பவன் கோபிப்பான். எனக்கு சில பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைச் சொல்லித் தந்தவர். என்னைப்போல் இன்னொரு டயலொக்கின் 1000 நிமிடங்கள் வாடிக்கையாளர்.

தூயா

தமிழ்நாடுடோல்க் மூலம் அறிமுகமான இன்னொரு உறவு. மின்னஞ்சல் அரட்டைகள், முகநூல் என எங்கள் நட்பு இன்னமும் தொடர்கின்றது. இவரின் சமையல் குறிப்புகளைப் பார்த்து நானும் சிலதை முயற்சி செய்திருக்கின்றேன். என்னை முகநூலில் ஒரு சிறந்த விவசாயியாக மாற்றிய பெருமை என் அன்புச் சகோதரி தூயாவிற்க்கே சேரும். அனானித் தாக்குதல்கள் நடந்தால் ஆறுதல் கூறுகின்றவர்.

யோகா

யோகாவினையும் வலையுலகின் மூலம் அறிந்தாலும் பின்னர் நேரடியாக தொலைபேசியில் மின்னஞ்சலில் என நட்பு தொடந்துகொண்டேயிருக்கின்றது. சில தொழில்நுட்ப சிக்கல்களால் அண்மைக்காலமாக எழுதுவதை குறைத்துக்கொண்டமை கவலையளிக்கின்றது.

இவர்களை விட பலர் பின்னூட்டங்களின் மூலமும் முகநூலிலும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் பட்டியல் எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் மிகவும் நீண்டது. இங்கே பட்டியலில் இருக்கும் நண்பர்கள் ஏதோ ஒருவகையில் என்னுடன் தொடர்புடன் இருப்பவர்கள் மாத்திரமே.

என்னுடைய உளறல்களை தங்களுடைய பொன்னான நேரத்தை பயன்படுத்தி வாசிக்கும் அனைவருக்கும் என்னைப் பிந்தொடரும் அப்பாவிகள் 153 பேருக்கும் பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகள்.

பின்குறிப்பு : நேரமும் காலமும் கைகொடுத்தால் இங்கிலாந்து பற்றிய ஒரு தொடர் என் பார்வையில் எழுத இருக்கின்றேன். ஏதாவது உருப்படியாகவும் எழுதவேண்டும் தானே.

நான்காம் ஆண்டும் நட்புகளும்

இன்றுடன் நான் உளறத் தொடங்கி நான்கு வருடங்கள் முழுமையாக முடிந்துவிட்டன. 2006ல் ஏனோ தானோ எனத் தொடங்கிய வலைப்பதிவு இன்று வரை 270 பதிவுகள் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் 145 பிந்தொடர்பவர்கள் என ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக என்னை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கும் பெயருடனும் பெயரில்லாமலும் வந்து திட்டியவர்களுக்கும் பின்னூட்ட இட்ட திரட்டிகளில் ஓட்டுப்போட்ட நண்பர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய திரட்டிகளான தமிழ்மணம்,யாழ்தேவி, தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் என்னுடைய சில பதிவுகளையும் அறிமுகத்தையும் பிரசுரித்த தினக்குரல், இருக்கிறம், மெட்ரோ நீயூஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் , அத்துடன் ஈழத்துமுற்றம், சகலகலா வல்லவன் ஆகிய வலைகளில் என்னுடைய ஆக்கங்களை வெளியிட்ட அதன் நிர்வாகிகளுக்கும், என்னுடைய உளறல்களைப் பிந்தொடரும் 145 அப்பாவிகளுக்கும் அல்லது பொறுமைசாலிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.



ஏற்கனவே வலை எழுத வந்த கதையை எழுதியிருப்பதால், இந்தப் பதிவில் என்னை ஊக்குவிக்கின்ற வலையுலக நண்பர்களையும் வலையுலகில் எனக்கு கிடைத்த நண்பர்களையும் பற்றி ஒரு சின்ன தொகுப்பு.

முதலில் வலையுலகில் எனக்கு கிடைத்த குருநாதர்களைப் பற்றிப் பார்த்தபின்னர் நண்பர்களைப் பார்ப்போம்.

லக்கிலுக் :

என்னுடைய வலையுலக வாழ்க்கையை ஒரு துரோணராக இருந்து கற்பித்த குரு. இன்றைக்கு தனக்கென ஒரு பாணி, ஒரு வட்டம் என அமைத்து இடையிடையே என் வலையையும் எட்டிப் பார்க்கின்ற இனிய நண்பன். சில அரசியல் கருத்து வேறுபாடுகள் எமக்கிருவருக்கிடையில் இருந்தாலும் என்றைக்கும் அவர் என் குருதான்.

கானா பிரபா :
வலை எழுத வருமுன்னர் கிடைத்த இன்னொரு நட்பு. பின்னர் வலையுலகில் நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு. அனானித் தாக்குதல்களைச் கருத்தில் எடுக்கவேண்டாம் என பலவேளைகளில் ஆறுதல் கூறியதுடன் பின்னர் ஈழத்துமுற்றத்தில் என்னையும் இணைத்து இன்றைக்கும் உலாத்தல் நாயகனாக ட்விட்டர் சிங்கமாக வலம் வருகின்றவர். இன்று நண்பனாக, அண்ணனாக, குருவாக பல அவதாரம் எடுத்து என்னுடன் அன்பு பாராட்டுகின்றவர்.

லெனின் :
வலை எழுத முன்னரே லக்கியுடன் அறிமுகமான சகோதரன் என்னுடைய ஒரு தம்பி என்பதில் பெருமை அடையலாம். என்னுடைய வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்த பெருமை இவனுக்குத் தான் சேரும் (இவர் என எழுதினால் என்னுடன் கோவிப்பார்). நக்கல், நளினம், இவரிற்க்கு கைவந்த கலை. வலை ஒன்றை ஆரம்பித்து இடையில் வேலைப் பழுகாரணமாக‌ கைவிட்டுவிட்டு இன்று நறுமுகையின் சொந்தக்காரராக அடுத்த அடி வைத்திருக்கின்றார். எனக்கு மொக்கைப் பதிவுகளை எழுத ஊக்கம் கொடுத்த லெனினாந்தா இவர் தான்.

என் நட்புகளை ஒன்றானவன் இரண்டானவன் என வகைப்படுத்த முடியாதபடியால் அகர வரிசையில் (ஆங்கில) தருகின்றேன்.




அசோக்பரன் :
முதலாவது சந்திப்பில் அறிமுகமான நண்பர். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக கூறுகின்றவர். பின்னூட்டங்களில் மட்டுமல்ல பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்னுடன் நட்பு பாராட்டுகின்றவர். நடமாடும் கால்ப் பந்து திரட்டி.

அச்சுதன் :
பங்குச் சந்தை என அறியப்பட்டவர், தற்போது லண்டனில் இருக்கின்றார். நேரிலும் ஓரிருமுறை போனிலும் பேசியிருக்கின்றேன். லண்டனில் இருந்தும் பங்குச் சந்தையைக் கொண்டு நடத்துகின்றார். விரைவில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.

ஆதிரை :
முதலாவது பதிவர் சந்திப்பின் ஒரு அச்சாணி. நளபாகத்தின் முன்னாள் புல்லட்டை என்னுடன் கதைக்கவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் இன்றைக்கு என்னைக் கலாய்ப்பது என்றால் அவருக்கு அலாதி ப்ரியம். விசாப் பிள்ளையாரின் பக்தன். என் பாடசாலையில் எனக்கு சில வருடங்கள் இளையவர். நல்லதொரு தம்பியாக இருக்கவேண்டியவர் நல்ல நண்பனாக மாறிவிட்டார். இன்றும் எலித் தொல்லையால் கஸ்டப்படுவதாக வெள்ளவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திரமான பதிவர், சிலவேளைகளில் மொக்கையும் எழுதி என்னைக் கவலை அடையவைத்தவர். இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர்.

ஆயில்யன் :
வலையில் கிடைத்த இன்னொரு நட்பு இந்தச் சின்னப்பாண்டி. ட்விட்டரில் இவரும் கானாவும் இருந்தால் களை கட்டும். அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர். துரியோதனன் கர்ணன் நட்புக்குப் பின்னர் இவரதும் கானாவினதும் நட்பும் தான் பதிவுலகில் பிரபலம். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் (பதிவுலகில் தான்) சிக்காதவர்.

பவன் :
இதுவரை நேரில் கண்டிராத கலகலப்பான பொடியன். போனில் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன்,இவனிடம் உசாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர். எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம்.

பாலவாசகன் :
நேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது.

புல்லட் :
முதலாவது சந்திப்பின் ஆணி வேர். பல தடவை உணவகங்களில் சந்தித்த இனிய நண்பன். கொழும்பில் எந்த கடையில் சாப்பாடு ருசி என இவரிடம் கேட்டால் பதில்ல் கிடைக்கும். ஏனோ அண்மைக்காலமாக எழுதுவதில்லை. என்னை லண்டன் போனபின்னர் அடிக்கடி எழுதக்கூடாது போனவிடயத்தை கவனிக்கவும் என அன்பாக மிரட்டிய தம்பி. டைமிங் சென்சில் இன்னொரு கவுண்டமணி.(செந்தில் ஆதிரையா எனக்கேட்ககூடாது). தன்னுடைய அஞ்ஞாதவாசத்தை கைவிட்டு விரைவில் வலையுலகில் கலக்குவார் என புல்லட்டின் மூன்று கோடி வாசகர்கள் சார்பில் பத்துமலை முருகனை வேண்டுகின்றேன். (உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).

டொன் லீ :
நீண்ட காலமாக பதுங்குகுழியில் பதுங்கியே இருக்கும் சிங்கை மாதவன். வலையுலகில் ஆரம்பித்த நட்பு இன்று ட்விட்டரில் பரகுவே மொடல் அழகி லாரிசா ரிக்கீயூமீ பற்றி ட்விட்டுகின்ற வரை தொடர்கின்றது. பேஸ்புக்கில் ஃபார்பிலேயில் விவசாயம் கற்றுக்கொடுத்தது ஒரு யானையையும் எனக்கு அன்பளிப்புச் செய்த நண்பன். பதுங்குழியில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தன்னுடைய வலைப் பதிவை எழுதவேண்டும் என்பது பலரது விருப்பம். இப்போது தன்னை ஒரு வலைப்பதிவர் என்பதை விட ஒரு ட்விட்டியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றார் இந்தச் சிவதயாளன்.

ஜாக்கி சேகர் :
தன்னுடைய வெள்ளந்தியான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னுடன் நட்புப் பாராட்டும் இனிய நண்பன். இவரின் திரைவிமர்சனங்களால் பார்த்த படங்கள் சில, பாராமல் தப்பிய படங்கள் பல. என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பிற்க்கு இவரின் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் தான் காரணம். விரைவில் வெள்ளித்திரையிலும் மின்னவிருக்கும் நட்சத்திரம்.

கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்

என்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட குருவைப் பல இடங்களில் மிஞ்சிய சிஷ்யன். முதலாவது சந்திப்பில் அமைதியாக பம்மிக்கொண்டிருந்தவர் பின்னர் தன்னுடைய முதலாவது பின்னூட்டங்களால் பலரின் நட்பை பெற்றவர். கிரிக்கெட் தரவுகளில் இவர் ஒரு நடமாடும் களஞ்சியம். என்னைப்போல் ஒரு தாவரபோஷணி. விரைவில் பசுப்பையன் மதுவினால் மாமிச போசணியாக மாறப்போவதாக ஏதோவொரு சமூகவலைத்தளத்தில் தகவல் இருந்தது. எந்தவொரு விடயத்தைக்கேட்டாலும் கூகுள் அம்மன் அருளால் உடனே பெற்றுத் தருபவர். அண்மைக்காலமாக இந்த உருவத்தின் மீதும் பலரின் கண்ணூறு பட்டுள்ளதால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ளார். இவரின் ஜீமெயில் காதல் மேசேஜ்களைப் பார்த்தால் பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர். கங்கோன் மீண்டும் உன் எழுத்துக்கள் எமக்குத் தேவை ஆகையால் மீண்டும் வரவும்.

கரவைக் குரல் :
இலங்கைப் பதிவுலகின் மூத்த பதிவரான தாசனினால் அறிமுகம் செய்யப்பட்டவர். இன்றைக்கு லண்டனில் வசிக்கும் இன்னொரு பதிவர் அலைஸ் ஊடகவியளாளர். என்னுடைய பள்ளியின் இளையமாணவர். அடிக்கடி போனில் கதைத்தாலும் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை. அவரின் ஆவலும் விரைவில் நடந்தேறும் என நினைக்கின்றேன். ஈழத்து மண்வாசனையில் பல விடயங்களை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பதிவர் இவர்.

கீர்த்தி :
முதலாவது பதிவர் சந்திப்பில் சந்தித்த கவிதாயினி. முன்னர் தினமும் ஒரு கவிதை எழுதியவர் இப்போ இடையிடையே தான் எழுதுகின்றார். அடிக்கடி பேஸ்புக்கிலும் ஜீமெயிலிலும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு மறைந்துபோவர். நல்லதொரு நண்பி.

கிருத்திகன் :
பலதரப்பட்ட பதிவுகளை தன்னுடைய வலையில் எழுதிய கீத் எனப்படும் கிருத்திகனின் நட்பு பின்னர் பேஸ்புக், ட்விட்டர் எனப் பரவியது. இவரும் எனது பாடசாலை பழைய மாணவன். தன்னுடைய கருத்துகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத கீத் சிலவேளைகளில் அனானிகளால் சில விடயங்களில் நான் பாதிக்கப்பட்டபோது அவற்றை பெரிதாக எடுக்கவேண்டாம் என எனக்கு அறிவுரையும் வழங்கியவர். பாடசாலை காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்தான் என அவரின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். நல்ல நண்பன் என்பதை விட நல்லதொரு தம்பி என்றே கூறவேண்டும்.

லோஷன் :
பாடசாலைக் கால நண்பர், பின்னர் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தபடியால் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையுலகில் எனக்குப் பின்னர் வந்தாலும் பல பதிவுகளை எழுதிக் குவித்துள்ளார். சில நாட்களில் 3 அல்லது 4 பதிவு போட்டு சாதனை படைத்திருக்கின்றார். வலையுலகில் எழுதியபின்னர் மீண்டும் எம் நட்பு தொடங்கியது. நல்லதொரு நண்பன் சிலவேளைகளில் எனக்கு அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்.

மருதமூரான் :
பெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன்.

மு.மயூரன் :
வலைப்பதிவு எழுதுவதற்க்கு முன்னரே கணணி வகுப்பில் அறிமுகமானவர். இலங்கைப் பதிவுலகின் பிதாமகன் இவர் தான். தான் சொல்லவந்தவற்றை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் இவரின் குணம் தான் இவரின் மிகப்பெரிய பலம். பாமின், பாலினி எனப் பலவகையான விசைப்பலகைகளுடன் குடும்பம் நடத்தினாலும் லினெக்ஸ்தான் இவரின் முதல் மனைவி. இவருடன் இணைந்து சில விடயங்கள் செய்வதற்கான திட்டம் இருந்தது ஆனாலும் என்னுடைய பெயர்வும் வேறுசில காரணிகளும் அவற்றைத் தள்ளிப்போட்டுவிட்டன.

பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்.

பீட்ஷா, பேர்கர், சிப்ஸ்

பதிவரசியல்

சில நாட்களாக பதிவுலகம் கண்டங்களையும் தாண்டி அல்லோலபட்டுக் கொண்டிருக்கின்றது. வலை என்பது ஒன்லைன் டயறி என வரைவிலக்கணம் கொடுக்கின்றது புரொஜக்ட் மனேஜ்மெண்ட். வலையை தனிப்பட்ட விடயங்களை விட எத்தனையோ ஆக்கபூர்மான விடயங்களுக்கும் பயன்படுத்தலாம், பயன்படுத்துகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் குரோதங்களையும் காழ்ப்புணர்ச்சிகளையும் காட்ட வலையுலகை நாறடித்திருக்கின்றார்கள்.

வலை என்பது ஒருவர் தன்னுடைய கருத்துகளை அல்லது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். அவரின் கருத்துக்கள் பிடிக்கவில்லையா? வாசித்துவிட்டு சிரித்துவிட்டுப் போகவேண்டியதானே. அதனைவிட்டு விட்டு மற்றவர்களைத் தாக்கித் தான் ஏனையவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம். மற்றவர்களும் பாராட்டும் படி எழுதவேண்டும் அல்லது பலர் படிக்கும் திரட்டிகளில் இணைக்கவேண்டும் இதை எல்லாம் செய்யாமல் கடை விரித்தேன் கொள்வார் எவரும் இல்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.

அதிலும் அண்மைக்காலமாக மறைவாக்கு நேர்வாக்கு பிரச்சனைகளும் போலி ஐடிகளும் குழாயடிச் சண்டையாகவே மாற்றிவிட்டது. தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நிறுத்தும்படி சில சண்டைகள் நடந்துமுடிந்துள்ளன / நடக்கின்றன. இங்கே எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருதரும் புரபெசனல் எழுத்தாளர்கள் அல்ல. பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்கு எழுதத் தொடங்கி தேர்ந்த எழுத்தாளர்களாகி புத்தகம் கூட வெளியிட்டுள்ளார்கள். ஒரு சிலரின் தேடுதல்கள் ஆச்சரியப்பட வைக்கும். எத்தனை விதமான விடயங்களை எழுதுகின்றார்கள். ஒரு சிலரோ தனது துறை சார்ந்த பதிவுகளில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். வாசகனுக்கு சலிப்பூட்டாமல் எழுதுவது என்பது ஒரு கலை.

சிலரோ தங்களின் சுயவிளம்பரத்திற்க்காக ஏனையோர்களால் கொஞ்சம் கவனிக்கப்படும் பதிவர்களைத் தாக்கி எழுதுவதும் அவரோ இவரோ எனக் குற்றம் சாட்டுவதும் அவர்களின் எதிர்காலம் அரசியலில் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதையே காட்டுகின்றது. பலரால் ரசித்து எழுதிய சிலர் ஒரே வகையான பதிவுகளினால் சலிப்பூட்டுகின்றார்கள் என்பது அவர்களின் பதிவுகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இருந்து விளங்குகின்றது.

வலைப் பதிவுகள் பற்றி ஆங்கிலத்தில் புத்தகங்கள் வந்தாலும் இன்னும் தமிழில் நல்லதொரு புத்தகம் வரவில்லை என நினைக்கின்றேன். அண்மைக்காலத்தில் அதிகரித்த வலைப்பதிவர்களின் எண்ணிக்கை ஆரோக்கியமானது தான் ஆனாலும் புதிதாக எழுத வருபவர்கள் இந்தக் குழாயடிச் சண்டைகளைப் பார்த்து ஒதுங்கிப் போனாலும் ஆச்சரியமில்லை.

சில காலத்திற்க்கு முன்னர் நண்பர் ஒருவர் "வலை எழுத எதாவது படித்திருக்கவேண்டுமா?" என என்னைக் கேட்டார். இதுவரை டிப்ளோமா இன் புளொக் என்ற கற்கை நெறி ஆரம்பிக்கப்படவில்லை விரைவில் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம் உங்களுக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனை எழுதுங்கள் என்றேன் இன்றைக்கு அவர் பலரால் கவனிக்கப்படும் ஒரு வலைப்பதிவராகிவிட்டார்.

மிகவும் முக்கிய குறிப்பு : மொக்கைப் பதிவு எழுதுவதற்க்கும் திறமை வேண்டும். (இது சாதாரண டயலாக் தான் பஞ்ச் அல்ல)

கால்ப்பந்து 2010

உலகத்தின் மிகப் பெரும் விளையாட்டுத் திருவிழா நாளை தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கின்றது. உலகத்தின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 25% மக்கள் இந்த விளையாட்டை ரசிக்கப்போகின்றார்கள். இன்னும் சில நாட்களுக்கு பெற்றோல் விலை ஏற்றம், நயந்தாரா பிரச்சனை, ஜெனிலியாவின் பித்தலாட்டம், குளிர் போன்ற விடயங்களை விடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிப்பாரா? ரூனி தங்கக் காலணி வாங்குவரா? மீண்டும் ஆர்ஜென்டினா கப் தூக்குமா என்பவை தான் அனைவரினதும் பேச்சாக இருக்கும்.

செம்மொழி

சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள ஒரு நூலத்திற்க்கு செல்லவேண்டி இருந்தது. நூலகத்தின் முகப்பில் நூல் நிலையம் வரவேற்கின்றது என ஆங்கிலம், சீன, அரபி உட்பட 10 மொழிகளில் தமிழ் மொழியிலும் வரவேற்பு பலகை வரவேற்றது. 1934ல் கட்டப்பட்ட அந்த நூலத்தில் தமிழ் மொழி பார்த்ததும் புல்லரித்தது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என யார் சொன்னாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய தமிழ் என்றைக்கும் வாழும்.



ஐஃபா

சென்றவாரம் ஐஃபா விருதுகள் வழக்கம் போல் இந்திய திரைப்படங்களுக்குப் பதிலாக ஹிந்தித் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக தென்னிந்திய சினிமாவினர் இதனைப் பகிஸ்கரித்தாலும் இன்னொரு காரணம் ஐஃபா விருதுகள் பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்களுக்கே வழங்கப்படும். காரணம் இது சர்வதேச ஹிந்தியன் திரைப்பட விருது. ஆனாலும் இம்முறை சிறந்த நடிகைக்கான விருதை ஜெனிலீயா தவறவிட்டாலும் அவருக்கு இம்முறை ஆஸ்கார் கிடைக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அவரின் நடிப்பு உலக மகா நடிப்பு. ட்விட்டரிலும் தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கின்றார்.

ரசித்தது

நலம் நலமறிய ஆவல்

எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே. என்னை ஞாபகம் இருக்கின்றதா? ம்ம்ம் நீண்ண்ண்ண்ட நாட்களாக வலையுலகம் எனக்கு அந்நியப்பட்டிருந்தது. சில பதிவுகள் மட்டும் வாசித்துவிட்டு போய்விடுவேன், திரட்டிகளைக் கூட மறந்து(கடவுச் சொற்களையும் தான்) போனேன். எல்லாம் காலம் செய்த கோலம்.



வாழ்க்கையில் சில விடயங்கள் தீடிரெனத் தான் நடக்கும் என்றைக்கோ எதிர்பார்த்த விடயம் சரிவராது என மனம் தளர்ந்து சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என இருந்த விடயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தேறிவிட்டது, கல்விக்காக லண்டன் செல்லவேண்டி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில நண்பர்களுக்கு சொல்லமுடியாமல் விமான ஏறிவிட்டேன். இதனால் வலையுலகம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்தும் சில நாட்கள் மறந்து போய்விட்டேன்.

அதே நேரம் சொந்தநாட்டில் தாராளமாக கிடைத்த நேரம் இங்கே கிடைப்பது அரிது. ஆகவே அந்நியனாக மாறிவிட்டேன். அத்துடன் வலையில் வீண் பொழுதைப் போக்கவேண்டாம் என சிலர் அதிரடியாக கண்டித்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துவிட்டேன்.

என்னதான் விடுப்பு எடுத்தாலும் தட்டிய கீபோர்ட்டும் கிளிக்கிய மெளசும் சும்மா இருக்கவிடவில்லை அதனால் இடையிடையே எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஏதாவது எழுதுவேன். என்ன இனி திரைவிமர்சனம் உடனடியாக எழுதமுடியாது. இங்கே படம் பார்க்கின்ற காசுக்கு ஊரிலை ஒரு பட்டாளமே படம் பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு வந்தபின்னர் இங்கேயிருக்கும் பதிவர்கள் மாயாவும் கரவைக்குரலும் என்னுடன் தொடர்புகொண்டார்கள். கரவைக்குரல் பகிடியாக இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடத்த இலங்கையில் இருந்து ஆட்களை அழைத்துவரவேண்டும் என்றார்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? என்பது இன்னொரு நாட்டில் வசிக்கும் போதுதான் தெரிகின்றது. ஒரு சில சுதந்திரங்கள் கிடைத்தாலும் இலங்கையில் வாழ்ந்ததுபோல் இல்லை. ஒரு சோர்ட்சும் ரீசேர்ட்டும் என இங்கே குளிரில் திரியமுடியாது. அப்படிக் குளிர் வாட்டுகின்றது. விரைவில் சமர் வரும் வெயில் கொடுமையாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.

என் நாட்டையும் நண்பர்களையும் குறிப்பாக பதிவுலக ட்விட்டர் நண்பர்களையும் கும்மிகளையும் ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன். ஒன்றை இழந்துதான் இன்னொன்று கிடைக்கும் என்பதாலும் இன்றைய நவீன தொலைத்தொடர்பு முறைகளாலும் கொஞ்சம் மனத்திருப்தி.

சச்சினின் இரட்டைச் சதம்,நித்தியானந்தா, ரஞ்சிதா, நயந்தாரா, ஜனாதிபதித் தேர்தல், ஆயிரத்தில் ஒருவன், அசல், கோவா என இழந்தவை பல. அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவ்வளவு கிராக்கி இல்லை. கடும் குளிரிலும் மஞ்செஸ்டர் யுனைட்டடும் செல்சியும் ஒரு பந்துக்காக அடிபடுவதை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றார்கள் பின்னர் அது பற்றித்தான் செல்லும் இடம் எல்லாம் விவாதிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு பிளின்டொப், பீட்டர்சன், கொலிங்வூட் யார் என்பதே தெரியாது.

இங்கேயும் அம்மா பகவான் கல்கி பகவான் பக்தர்களும் இந்தியாவில் இருந்து வருகை தரும் ஜோதிடசிகாமணிகளும் அதிகம், இவர்களின் விளம்பரம் தொலைக்காட்சிகளிலும் வருகின்றது. மானாட மயிலாடவிற்க்கும் சில மெஹா சீரியல்களுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இனிவரும் நாட்களில் இன்னும் பல்சுவையான அம்சங்களுடன் மீண்டும் சந்திக்கின்றேன்(இந்தப் பதிவு எழுதி முடிக்கவே 4 நாட்கள் எடுத்தன).

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2

இவ்வளவு ராகத்துடன் அழகாக ஆனால் பட்டுவேட்டிக்கு பொருத்தமில்லாமல் கூலிங் கிளாசுடன் வழிபாடு செய்பவர் யார் எனப் பார்த்த்தால் அது அதிரடிப் பதிவர் புல்லட். புல்லட்டும் இவர்கள் இருவரையும் கண்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சகஜமாக கதைக்கத் தொடங்கினார். மூத்த அனுபவம் உடையவர் என்றபடியால் கங்கோனின் பிரச்சனைக்கு புல்லட்டிடம் ஐடியா கேட்டார்கள் இருவரும்.


புல்லட்டும் தன்னுடைய சில சொந்த அனுபவங்களை நண்பர்களின் கதை போல் சொல்லிவிட்டு, கங்கோனிற்க்கு வலிகாமத்தை விட வடமராட்சியில் கங்கோனிற்க்கு பொருத்தமானவர் கிடைப்பார், ஆகவே வந்தி அல்லது ஆதிரையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அத்துடன் ஆதிரையைத் தொடர்புகொண்டால் அவர் விடயத்தை வெளியில் கசிய விட்டுவிடுவார் வந்திதான் ரகசியம் காப்பதில் வல்லவர் நல்லவர் ஆகவே வந்திக்கு உடனடியாக கோல் பண்ணவும் வந்தி உதவுவார் என வந்தியை வலையில் மாட்டிய சந்தோஷத்தில் தான் உடனடியாக நெடுந்தீவுக்கு போகவேண்டும் ஆகவே உங்களைப் பின்னர் சந்திக்கின்றேன் என விடைபெற்றார்.



புல்லட் விடைபெற்ற மறுகணமே கங்கோன் வந்திக்கு கோல் எடுத்தார். வந்தியும் அப்பாவியாக வெள்ளிக்கிழமைகளில் தொண்டைமனாறு சந்நிதி கோயிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுர ஆழ்வார் கோயிலும் வழிபாட்டிற்க்கு பெயர் போனவை என கங்கோன் கோயிலுக்கு வழிபடச் செல்வதாக நினைத்து தன்னுடைய கருத்தை உளறிவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை வல்லிபுர ஆழ்வாருக்கு தன்னுடன் வர பாலாவையும் கேட்டால் பாலா கொஞ்சம் பின்னடித்தார். பாலா பின்னடிப்பதைப் பார்த்த கோபி பாலாவிற்க்கு ஒரு சின்னப் பார்ட்டி கொடுத்தால் தன்னுடன் வருவார் என நினைத்து ரியோ கூல் பாருக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் புல்லட் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருமாதிரி சமாளித்துக் கொண்டு இவ‌ என்ரை பட்ச் மேட் கண்ட இடத்திலை ஐஸ்கிறீம் குடிக்க வந்தோம் சமாளிக்க கங்கோனும் பாலாவும் நண்பனுக்கு ஏன் சங்கடம் கொடுப்பான் என விலகிவிட்டார்கள். அதே நேரம் புல்லட் போல் பலபேர் ஜோடிகளாக ரியோவில் இருப்பதைப் பார்த்த கங்கோன் தான் நிற்பது யாழ்ப்பாணத்திலா? இல்லை எம்சியிலா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தார்.

ஞாயிற்றுக்கிழமை கங்கோனும் பாலாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வல்லிபுர ஆழ்வார் நோக்கி வல்லை வெளியூடாக பயணத்தைத் தொடங்கினார்கள். வல்லை எதிர்க் காற்றில் பாலா பறந்துவிடாமல் இருக்க கங்கோனை இறுக்க பிடித்தபடி படபடக்கும் இதயத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சென்றடைந்தார். கோயில் வாசலில் அதே கச்சான் விற்க்கும் ஆச்சி மனசுக்குள் "குறுக்கால போவான் இங்கேயும் வந்துவிட்டான்" என புறுபுறுத்தாலும் கங்கோனைக் "கண்டதும் அப்பு ராசா உனக்கு தோதாக இங்கேயும் ஒண்டையும் காணவில்லையடி செவ்வாய்க் கிழமை தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு வாடி என்ரை குஞ்செல்லோ" என செல்லம் பொழிந்தார். ஆச்சியைக் கண்ட அதிர்ச்சியிலும் இங்கேயும் ஒன்றும் சரிவராது என்ற விரக்தியிலும் கங்கோனும் பாலாவும் நாமத்தை பட்டையாக நெற்றியில் இட்டபடி வீடு திரும்பினார்கள்.

அதே நேரம் ஃபேஸ்புக்கில் புல்லட் நெடுந்தீவில் வெங்காயம் உரித்து கதறிக் கதறி அழுத கதையும் குதிரையில் ஏறி விழுந்த கதையும் பரபரப்பாக நண்பர்கள் வட்டாரத்தில் அடிபட்டது. புல்லட் குதிரை மேல் இருந்ததைப் பார்த்து ஒருவர் குதிரை மேல் கழுதை போகின்றது என நக்கலடித்தார்.



கங்கோனும் தன்னுடைய கமேராவில் யாழ்ப்பாணத்தின் அழகையும் அழகானவர்களையும் படம் பிடித்தபடி நேற்று கொழுபுக்கிற்க்கு வெறும் கையுடன் வந்து சேர்ந்தார். வந்தவர் சும்மா இருக்காமல் தன்னுடைய அனுபவங்களை ட்விட்டரில் ட்விட்ட அவரின் பயணம் ஏன் வெற்றி அளிக்கவில்லை என ஆதிரை காரணம் கண்டுபிடித்துவிட்டார்.




கங்கோன் யாழ் செல்லும் போது விசாப் பிள்ளையாரை வணங்காமல் சென்றதுதான் காரணமாம். அதனால் விசாப் பிள்ளையாரை வணங்கிவிட்டு மீண்டும் பொங்கல் நேரத்தில் யாழ்ப்பாணம் சென்றால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் அத்துடன் தானும் அவருடன் வருவதாகவும் கங்கோனிற்க்கு உறுதி மொழி அளித்தார்.

அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து கங்கோன் அடுத்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன. எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.

பின்குறிப்பு : இந்த மொக்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை ட்விட்டரில் தந்த சுபாங்கன், பாலவாசகன், பவன் ஆகியோருக்கு நன்றிகள். மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன் யாவும் கற்பனை அல்ல.


பகுதி 1 : கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கிறிஸ்துமஸுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கங்கோனின் செய்தி " நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" இதன் பின்னர் அவர் தனது பயண விபரங்களை இடையிடையே அனுப்பிக்கொண்டிருந்தார். கங்கோனின் யாழ்ப்பாணத்திற்கான தீடிர் விஜயம் பற்றி ட்விட்டரில் பல வதந்திகள் வந்துகொண்டிருந்தன. ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர், அது இல்லை கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும், இவை எதுவும் இல்லை கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால் அவர் தனது காதலியைத் தேடி யாழ் செல்வதாகவும் பரபரப்பான செய்திகள் அவரது நண்பர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டன.



கொழும்பு கோட்டையில் பஸ்சில் ஏறி கங்கோன் அனுப்பிய ட்விட்டர் செய்தியில் இருந்து கங்கோன் பெண் பார்க்கத் தான் போகின்றார் என்ற விடயம் புலனாகியது. அந்தச் செய்தி இதுதான் " பஸ்சினுள் ஏறிவிட்டேன் பஸ் மிகவும் வரட்சியாக இருக்கின்றது எப்படித்தான் பொழுது போகப்போகின்றதோ". சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டுவிட்டதாகவும் பஸ் புறப்படும் தருவாயில் 2 அழகான பெண்கள் பஸ்சினுள் ஏறிவிட்டார்கள் எனவும் கங்கோனின் செய்தி ட்விட்டரில் வெளியானது.

சரியாக பின்னேரம் 4.15 அளவில் கோட்டையில் இருந்து கங்கோனின் பஸ் யாழ் நகர் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அந்தப் பெண்களிடம் கங்கோன் கொஞ்சம் கதை கொடுத்தார். அவர்கள் இருவரும் வலைப்பூக்கள் வாசிப்பவர்கள் என்ற உண்மையை அறிந்த கங்கோன் தன்னை அறிமுகம் செய்ய ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார். அவரைப் பழிவாங்க எண்ணிய கங்கோன் நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை அவர்களீடம் வாசிக்க கொடுக்க, அந்தக் கட்டுரைகளின் தாக்கத்தில் அதனை வாசித்த அந்த இரு பெண்களைத் தவிர ஏனையவர்கள் நன்றாக நித்திரைகொண்டார்கள். பின்னர் வவுனியாவில் பஸ்சில் இருந்து அவர்கள் இறங்கும்போது கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது.

ஒருமாதிரி வவுனியாவில் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த கங்கோனிற்க்கு யாழ் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. பொடியன் அந்த மகிழ்ச்சியான செய்தியையும் மொபைல் வெப் மூலம் ட்விட்டரில் அனைவருக்கும் அறிவிக்க விரும்பினால் அந்த இடத்தில் நெட்வேர்க் டவுணாகி இருந்தது. தன்னுடைய மொபைல்காரர்களைத் திட்டிக்கொண்டே கங்கோன் கண்டி வீதியுனூடாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.

கங்கோன் ஒரு சமூக அக்கறை உடையவர் என்பதால் அந்த வீதீயூடாக பயணிக்கும் போது கண்ட காட்சிகள் அவரது நெஞ்சையே கலங்கச் செய்தது. அந்தக் காட்சிகளைத் தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார். ஆடி அசைந்து கங்கோன் சென்ற பஸ் யாழை அடைந்தது.

யாழ் மண்ணில் நீண்ட நாட்களின் பின்னர் காலை வைக்கும் போது கங்கோன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். கொழும்பு நரக மன்னிக்கவும் நகர வாகனப் புகையும், குப்பையுமாக இருந்த வீதிகளுடன் ஒப்பிடும் போது யாழ் வீதிகள் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. அந்த உணர்ச்சிப் பெருக்கில் கங்கோன் "சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார்.

பயண அலுப்பில் அன்றைக்கு தன்னுடைய பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கமுடியாது அடுத்த நாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் ஆகவே வெள்ளியே தன்னுடைய கடமையைச் செய்வோம் என எண்ணியபடி காதல் பாடல்களை கேட்டபடி கங்கோன் நித்திரைக்குச் சென்றுவிட்டார்.

வெள்ளி அதிகாலையில் வழக்கமாக நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு, நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் சென்றார். நல்லூரில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார். கங்கோன் கையும் குறிப்புமாக அவரிடம் பிடிபட்ட பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் பாலவாசகனிடம் உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார். ஆச்சி பல இடங்களுக்கும் வியாபாரம் செய்ய செல்பவர் ஆகவே அவருக்கு பலரின் தொடர்புகள் இருக்கும் அதுதான் அவரிடம் சாதகத்தைக் கொடுத்தேன் எனக்குத் தோதான ஒரு பெண்ணைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார்.

ஒரு பதிவரின் கஸ்டம் இன்னொரு பதிவருக்குத் தான் தெரியும் என்பதுபோல் பாலாவும் இதெற்கெல்லாம் கவலைப் படாதே வா கோயிலுக்குள் சென்று முருகனிடம் ஒரு விண்ணப்பம் கொடுப்போம் என உள்ளே சென்றார்கள். உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.

பின்குறிப்பு : சில பல ஆணிகள் இருப்பதால் பகுதி 2 மதியம் அல்லது மாலையில் வெளியாகும்.

முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல.