2009 ஆகஸ்ட் 3ந்திகதி வெள்ளவத்தை நளபாகம் வாசலில் புல்லட்டுடன் புன்சிரிப்புடன் நின்ற அந்த நண்பர் "ஹாய் நான் ஸ்ரீகரன் ஆதிரை என்ற பெயரில் புளொக் எழுதுகின்றனான். நீங்கள் ஹாட்லிதானே" இந்த வசனத்துடன் ஆரம்பமாகியது ஆதிரையுடனான என் நட்பு.
ஒரே பாடசாலையில் படித்த காரணத்தாலோ என்னவோ அடுத்த கேள்வியாக "நீங்கள் எந்த பேட்ச் வந்தி" எனக் கேட்டார், நான் பேட்சைச் சொன்னதும் வந்தி அண்ணா என்றார், அப்பவே நான் இவர் ஆப்படிக்கும் பார்ட்டி என விலகி இருக்கவேண்டும் விதி வலியது.
முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவில் ஒன்றாக இயங்கியபோது ஆதிரையுடனான நட்பு மேலும் மேலும் வளர்ந்தது.

அதன்பின்னர் ஆதிரையின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பல சம்பவங்களுடன் நானும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றேன் என்பது மகிழ்ச்சியான விடயம். குறிப்பாக சிலநாட்கள் ஆதிரை எலித் தொல்லையினால் கஸ்டப்பட்டபோது நாம் அவருக்கு அளித்த உதவிகளும் ஆலோசனைகளும் பதிவுலகம் அறிந்தவை. ஆதிரையின் எலியினால் அவரைவிட அவரின் உற்ற நண்பன் ஓய்வுபெற்ற பதிவர் புல்லட் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக பலதடவை புலம்பி இருக்கின்றார்.
லோஷனின் ஆதிரையின் எலிப் பதிவில் சுபாங்கன் இட்டிருந்த
"Subankan
எலியப்பத்தி எழுதுறதெண்டால் உங்களுக்குக் கொண்டாட்டம் போல. உந்த எலியை விரட்ட ஒரே வழி ஆதிரை அண்ணா ஒரு அண்ணியைத் தேடிக்கறதுதான். ( ஐடியா உபயம் - உங்கள் எலி வேட்டை பதிவு)."
என்ற பின்னூட்டம் தான் ஆதிரைக்கு இறுதியாக கைகொடுத்தபடியால் சுபாங்கனை அன்புடன் சின்னமாமா என அழைக்கின்றாராம்.
வெள்ளவத்தையில் லோஷன் திறந்துவைத்த தோசைத் திருவிழாவிற்கு(பொருத்தமானவர் )புல்லட்டின் ஏற்பாட்டில் சென்றபோது இரண்டாம் தடவை தோசை சாப்பிட வரிசையில் நின்ற இளம் பெண்களைப் பார்த்து ஆதிரை தன்னுடைய திருமணத்தை இட்டுக் கவலைப்பட்டது இப்போ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.
தனது நண்பன் மதுவின் மதுயிசத்தைப் பார்த்து ஆதிரையும் ஆதிரையிசம்உருவாக்க முயன்றார். ஆனாலும் மதுவின் முன்னால் ஆதிரையால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டு தன்னுடைய இசத்தை கைவிட்டதும் நண்பர்களுக்கு தெரிந்தவிடயம்.
மொரட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் இடியப்பம் சொதிக்குப் பெயர் போன மதுவிடம் பல்கலைக் கழகத்தில் கற்க முடியாத மதுயிசத்தை அலுவலகத்திலாவது கற்போம் என்ற நல்ல எண்ணத்தில் தன்னுடைய அலுவலகத்திலே மதுவையும் வேலைக்கு அமர்த்தி இருவரும் இப்போ ரூபியுடன் மல்லும் கட்டுகின்றார்கள். (யார் அந்த ரூபி என அறியத் துடிப்பவர்கள் இங்கே செல்லுங்கள் http://rubyonrails.org/).
அத்துடன் இவரின் அயராத உழைப்பும் விசாப் பிள்ளையாரின் அருளும்(பின்னே ஆரம்ப நாட்களில் இரவு 11 மணிவரை எல்லாம் அலுவலகத்தில் இருப்பார்)திறமையும் அவருக்கு பதவி உயர்வையும் கொடுத்துள்ளது.
ஆனால் இந்த பதவி உயர்வுக்கு விசாப் பிள்ளையாரைவிட தன்னுடைய பாஸ்வேர்ட்டைப் பறித்தவரின் ராசிதான் என ஆதிரை தனக்கு வேண்டிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி மகிழ்கின்றார்.
கந்தசட்டி விரத நேரத்தில் கூட தனது அபிமான நடிகை நயனுக்காக முதல் நாள் ஸ்பெசல் காட்சிக்கு தன்னுடைய நெருங்கிய இரண்டு நண்பர்களுடன் ஆதவன் படத்தை (ஆண் நண்பர்கள் தான் என ஆதிரைத தான் சொன்னார் நம்பிட்டம்)ஃபொக்ஸில் அமர்ந்து பார்த்துவிட்டு நயனை எண்ணை படிந்த முகத்துடன் காட்டிய கே.எஸ் ரவிக்குமாரைத் திட்டிய பெருமையும் ஆதிரைக்கே சாரும்.
கடலேறியாக அறியப்பட்டவர் அண்மைக்கால பெளதீக இரசாயன மாற்றங்களினால் தன் வலைத்தளத்தை என் பார்வையில் என மாற்றிய காரணம் மட்டும் யாம் அறியோம்.
ட்விட்டரில் தத்துவம் அரசியல் நையாண்டி என ட்விட்டுகின்றவர் சில காலமாக அடக்கிவாசிப்பதும் பேஸ்புக்கில் இடையிடையே மட்டும் தலை காட்டுவதும் ஜீமெயில் சட்டில் இன்விசிபிள் மோட்டில் இருப்பதும் பாஸ்வேர்ட் பறிபோனது மட்டும் தானா இல்லை இதன் பின்னால் "ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவர்" இருக்கின்றாரோ என்பதும் மர்மமாகவே இருக்கின்றது.
கங்கோனுடன் ஒருமுறை தானும் விரைவில் கிரிக்கெட் பதிவு இடுகின்றேன் என ஆதிரை இட்ட சவாலையும் இந்தவருடம் ஆகக்குறைந்தது 100 பதிவுகளாவது இடுவேன் என தனது நண்பர்களிடம் இட்ட சவாலையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
லோஷனுடன் சேர்ந்தபின்னர் தனக்கும் அவரைப்போல் தொந்தி வந்தது என அடிக்கடி என்னிடத்தில் புலம்பி இப்போ என் ஆலோசனையில் தினமும் வெள்ளவத்தை கடற்கரையில் அரைமணி நேரம் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஆதிரையின் நண்பர்களின் ஆலோசனைகளை உள்வாங்கும் உத்வேகம் அவரிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று. யாரோ ஒருவரின் வற்புறுத்தலில் ஜிம்முக்கு போகின்றேன் என இடையிடையே ஜிம்முக்குச் சென்று அங்குள்ள உபகரணங்கள் ஒழுங்காக வேலை செய்கின்றதா என மட்டும் பார்க்கின்றார்.
சிலுவை சுமந்த சிங்காரி, எழுதாத உன் கவிதை என தன் அனுபவங்களை கதைகள், கவிதைகளாக வடித்தவர் சிலநாட்களாக எதுவும் எழுதாமல் இருக்கும் காரணமும் புரியாத புதிர்.
சூடான அரசியல் பதிவுகளை எழுதுவதில் ஆதிரையின் பாணியே தனியாக இருக்கும் இதனால் தானே என்னவோ சிலவேளைகளில் தன்னுடைய பிற்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன் என அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.

உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒன்றையாவது நேரடியாகப் பார்த்தால் தான் தன்னுடைய கிரிக்கெட் திறமைக்கு சிறப்பு என்கின்றார். ஏனென்றால் தானே பந்துவீசி தானே விக்கெட் காக்கும் திறமை ஆதிரையைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. தான் வீசிய பந்தைவிட வேகமாக ஓடக்கூடிய திறமை இது.
வழக்கமாக வரும் சூப்பில் அரசியல், சினிமா, விளையாட்டு எனப் பல விடயங்கள் வரும் ஏன் இன்றைக்கு மட்டும் ஒரே ஒரு பிளேவராக ஆதிரை மட்டும் இருக்கின்றது என்ற சந்தேகமா உங்களுக்கு ஹிஹிஹி.
ஆதிரையின் கவிதைகள் வலையில் மட்டுமல்ல பள்ளி கலைவிழாக்கள். பல்கலைக் கழக கலைவிழாக்களிலும் பிரசித்து பெற்றவை. பல்கலைக் கழகத்தை விட்டு விலகியும் இன்றும் கவியரங்கங்களுக்கு சிறப்பு கவிஞர் நம்ம ஆதிரைதான்.
இன்றுதான் எங்கள் சித்தப்பூ வலையுலக கவிஞர், கதாசிரியர், நீலக்கலர் நாயகன், ஆதிரை அவர்கள் இந்த உலகிற்க்கு அவதரித்த நந்நாள்.
என் சிறந்த நண்பன், விருப்புகுரிய வலைப்பதிவாளன், அன்புக்குரிய தம்பி, பாடசாலை பல்கலைக் கழக நண்பர்களிற்க்கு ஸ்ரீ, வலைப்பதிவு நண்பர்களுக்கு ஆதிரை அலைஸ் சித்தப்பூ அவர்களிற்க்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் பங்குச் சந்தை அச்சுதன் என்கின்ற அச்சுவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அச்சுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் லண்டன் ஒக்ஸ்போர்ட் சர்க்கசில் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கின்றது என்பதையும் அதில் கலந்துகொள்ள லண்டன்வாழ் பதிவர்களை அனைவரையும் அச்சுதன் அழைக்கின்றார்.
இன்னொரு வாழ்த்து.

பின்னூட்டப்புயல், சிரிப்புச் சுனாமி, கருப்பு நமீதா, பிரபல அனலிஸ்ட், பதிவுலகின் பாதுகாவலன், எங்கள் கும்மியின் குலவிளக்கு,கருத்து கற்பூரம் இரவு வேளைகளின் அணையா நிலவு, கிறிக்கட் பீரங்கி, ஆங்கிலத்தில் அடுத்த சேக்ஸ்பியர், தமிழின் பாரதி, எங்கள் பதிவுலக பெளர்ணமி, சிரித்தால் மாதவன், சிந்தித்தால் பார்த்தீபன். மொத்தத்தில் நீ ஒரு அடி தாங்கி, இடிதாங்கி, எங்கள் தண்ணி டாங்கி.. நேற்று வெட்டிகள் சங்கத்தலைமைப் பொறுப்பை தூக்கியெறிந்து காலை 10 மணிக்கு புதியதோர் விடியலில் காலடி எடுத்துவைத்த கன்கொன் எனப்படும் கோபிகிருஷ்ணா கனகலிங்கம் அவர்கள் வெற்றிமேல் வெற்றிபெற்று வீரத்திருமகனாக வலம்வர வாழ்த்துகின்றோம்.(வசன உதவி சுபாங்கு சக பவன்)
வாழ்த்துபவர்கள்
குரு, அங்கிள், சித்தப்பூ, சின்னமாமா, மது அண்ணா, சதீஸ் அண்ணா, குஞ்சு அதிகார மையத்தின் தூண்கள் வதீஸ் அவரின் நிருசா, மற்றும் அனுதினன்.