Showing posts with label நியூயோர்க். Show all posts
Showing posts with label நியூயோர்க். Show all posts

நியூயோர்க் திரைவிமர்சனம்

விமர்சனத்திற்க்கு முன்னாள் சின்ன ஒரு பிளாஷ் பேக் :

2001 செப்டம்பர் 11 உலகையே புரட்டிப்போட்ட இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்காவில் வெளிநாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1200க்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்று வருடத்தின் பின்னர் பலர் தீவிரவாதி என எந்தவித ஆதாரமும் இல்லாதபடியால் விடுதலை ஆனார்கள். விடுதலையான பலர் மன உளைச்சலுக்கும், உட்காயங்களும் ஆளானார்கள். பின்னர் ஜோர்ஜ் புஷ் தான் யாரையும் சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிடவில்லை என தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தான் பதவி ஏற்பதற்க்கு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சித்திரவதை முகாம்களை மூடப்போவதாக அறிவித்தார்.

இனி நியூயோர்க்கினுள் செல்வோம்.

யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் கபீர் கானின் இயக்கத்தில் ஜோன் ஆப்ரகாம், கத்ரினா கைவ் இர்பான் கான் மற்றும் நீல் நித்தின் முகேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஹிந்தி திரைப்படம் நியூயோர்க்.

மேலே கூறப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலை அடிப்படையாக வைத்து முற்றுமுழுதாக அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது.



ஓமர்( நீல் நித்தின் முகேஷ்)ஒரு நாள் எவ்பிஐ(FBI)இனால் கைது செய்யப்படுகின்றான். அவனை விசாரிக்கும் எவ்பிஐ அதிகாரியான ரொஷான்(இர்பான் கான்)அவனுக்கு அவனுடைய‌ சினேகிதன் சாம் என்ற சமீர் ஷேக்குக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். இதனை மறுத்த ஓமர் தாம் இருவரும் அப்பாவிகள் என்று நியூயோர்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 1999ல் ஒன்றாகபடித்தவர்கள் எனவும் கூறகின்றான்.

1999ல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக வரும் ஓமர் அங்கே சாம் என்ற அமெரிக்க இந்தியன், மாயா என்ற அமெரிக்க இந்தியன்(கத்ரினா கைவ்)ஆகியோருடன் நட்பாக இருக்கும் அதேவேளை ஒருதலையாக மாயாவைக் காதலிக்கிறான். ஒருநாள் மாயா தன்னைக் காதலிக்கவில்லை சாமைத்தான் காதலிக்கிறாள் என அறிந்து அவளைவிட்டு விலக முயல்கின்றபோது இரட்டைக்கோபுரம் தாக்கப்படுகின்றது. அந்ததாக்குதலின் பின்னர் ஓமர் பிலடெல்பியாவிற்க்கு இடம் மாறுகின்றான்.

அதன்பின்னர் அவனை 2008 அல்லது 2009 கால கட்டத்தில் கைது செய்யும் ரொஷான் அவனை குற்றமற்றவன் என நிரூபிக்க சாமுடன் சென்று இணைந்து எவ்பிஐக்கு உளவுவேலை செய்யுமாறு வற்புறுத்துகிறார். இதனைடையில் அவர் சாமுக்கும் மாயாவுக்கும் திருமணமாகிவிட்டது அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது, மாயாவின் வாழ்க்கையும் சாமின் வாழ்க்கையும் நல்லாயிருக்கவேண்டும் என்றால் ஓமர் கட்டாயம் சாமை கண்காணித்து அவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்த ஒரு கட்டத்தில் அந்த வேலையைச் செய்ய ஓமர் ஒப்புக்கொள்கிறான்.

சாம் ஏன் தீவிரவாதியானான், மாயாவுக்கும் சாமுக்கும் எப்படித் திருமணம் நடந்தது? ஓமர் நண்பனை மனம் மாற்றினானா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் சக்தே இந்தியாவிற்க்கு பிறகு வந்த நல்ல படம் என்று நியூயோர்கை கூறலாம். இடையில் ஒரு சில மொக்கைப்படங்கள் தயாரித்திருந்தார்.

ஜோன் ஆப்ரகாம், நீல் நித்தின் முகேஷ், இர்பான் கான்(பார்ப்பதற்க்கு நம்ம எஸ் ஜே சூர்யா போல் இருக்கிறார்) கத்ரினா கைவ் ஆகியோர் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

ஆதித்யா சோப்ராவின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் சந்தீப் ஸ்ரீவத்சவா. இவரது கொஞ்சம் மெதுவான திரைக்கதையை இயக்கியிருக்கிறார் கபீர் கான். பல இடங்களில் அடுத்த காட்சி இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை. இது கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் தெளிவான திரைக்கதை என்பதால் ரசிக்கும்படி இருக்கின்றது.

இடைச்செருகல் இல்லாமல் திரைப்படத்துடன் ஒன்றிவருகின்ற பாடல்கள் என்பதாலோ என்னவோ பாடல்கள் போரடிக்கவில்லை. அத்துடன் வழமையான ஹிந்திப்படங்கள் போல் பாடல்களும் இல்லை மொத்தம் இரண்டோ மூன்று பாடல்கள் தான் படத்தில் வருகின்றது. ஒரு டூயட் கூட இல்லை என்பது அதிசயம் தான்.

அத்துடன் அதைக்களம் அமெரிக்காவில் இருந்தாலும் எந்தக் கெட்டவார்த்தையும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். வேட்டையாடு விளையாடுவிலும் இதேபோல் கெளதம் மேனன் முயற்சி செய்திருக்கலாம்.

அஷீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றது. மிக அழகாக நியூயோர்க் நகரத்தை படம் பிடித்துக்காட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டுக்காட்சிகளில் பின்னணியில் இரட்டைகோபுரத்தை காட்டியிருக்கிறார்கள்.

சித்திரவதை முகாம்( Detention Camp )காட்சிகள் வேறு சில நினைவுகளையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன் தீவிரவாதிகள் எனக் காண்பிக்கும் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்கும் அதேநேரத்தில் எவ்பிஐ அதிகாரியான இர்பான் கானும் ஒரு இஸ்லாமிய பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். அமெரிக்கா போலீசின் மனிதாபிமானமற்ற போக்கை சில காட்சிகளில் சாடியிருக்கிறார் இயக்குனர். இறுதிக்காட்சியில் அமெரிக்கர்கள் தீவிரவாதி ஒருவனின் மகனை ஹீரோவாககொள்கிறார்கள் என்ற அமெரிக்கர்களின் பரந்த மனப்பான்மையையும் இயக்குனர் பதிவுசெய்யத் தவறவில்லை.

தீவிரவாதி என்ற பெயர் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மாற்றுகின்றது என்பதை காத்திரமாக சொல்லும் படம் தான் நியூயோர்க்.

டிஸ்கி : இப்படியான படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? அப்படி வந்தாலும் ஏன் ஓடுவதில்லை? என்ற கேள்விக்கு யாராவது பதில் தாருங்கள்.