கல்லூரிச் சாலையில் சில பசுமை நினைவுகள்

அன்புத் தோழி சினேகிதியின் தொடரோட்டம் ( பள்ளிப் பயின்றதொரு காலம் ). கீத்தின் பதிவில் விட்ட அறிக்கையால் இன்றே எழுதவேண்டிய நிர்ப்பந்தம். அதனை சகோதரப் பாடசாலை மாணவி சாயினி நக்கலும் அடித்திருந்தார். ஆஹா சிங்கம் சிலிர்த்து எழுந்து 15 வருடங்களுக்கு முன்னைய நாட்களை அசைபோடப்போகின்றது.


கல்லூரிச் சாலை இன்பங்கள், துன்பங்கள், ஏன் இரு தடவை மரணத்தைக்கூட எட்டிப்பார்க்க வைத்த சாலை. காலையில் ஆறரை மணிக்கு கலகலக்கும் சாலை மதியம் வரை வெள்ளுடை வேந்தர்களாலும் வெள்ளுடைத் தேவதைகளாலும் அழகாகத் தெரியும் சாலை.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஆண்டு 7 சி தொடக்கம் ஆண்டு 13 சி வரையிலான இனிமையான 8 வருடங்கள் (இடையில் ஒரு 6 மாதம் கொழும்பில் அஞ்ஞாதவாசம் ). சண்டைகள், வட்டவாரியால் குத்தல்கள், நூலகத்தில் வசித்தல், விளையாட்டுப்போட்டிகளில் எங்கள் இல்லத்துக்காக கத்தல்கள், கதறல்கள், மழைக்காலத்தில் நீச்சல்கள், சகோதரப் பாடசாலை மாணவிகளுடன் கொழுவல்கள், ஆசிரியர்களிடம் அடிவாங்கல்கள் என நீண்டுகொண்டு போகும் எங்கள் குறும்புகள்.



ஓஎல் வரை எல்லா ஆசிரியரையும் பிடித்திருந்தாலும் ஏனோ ஏஎல்லில் அவர்களைக் கொஞ்சம் பிடிக்கவில்லை(கண்டிப்பு அதிகமாக இருந்தபடியாலோ தெரியாது).

எங்கள் அதிபர் திரு.பாலசிங்கம்

நாங்கள் பள்ளியில் நுழைந்த போது எங்கள் அதிபர் பாலசிங்கம் சேர்தான், மிகவும் சாந்தமானவர், பெரும்பாலும் கோபப்படாதாவர் ஒருமுறை மட்டும் எங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பக்கத்து வகுப்புடன் சண்டைபோட்டதற்க்கு நல்ல அடிபோட்டார். பாடசாலையால் விலகியபின்னரும் வழியில் கண்டால் அன்புடன் விசாரிப்பவர்.

செல்வி. ஆறுமுகம் ஆசிரியை.

எங்கள் சமய ஆசிரியை அன்பானவர், என்றைக்கும் மாணவர்களைக் கடிந்ததில்லை. எதனையும் வெட்கப்படாமல் செய்யவேண்டும் என்பார் இதனால் என்னை கொஞ்சக் காலம் தமிழ்த் தினப் போட்டிகளுக்கு பாஓதலுக்கு அனுப்பினார்( நல்லாப் பாடுகின்றவர்கள் வெட்கத்தினால் செல்லவராதபோது) பாடசாலையின் பங்குபற்றல் இருக்கவேண்டும் என என்னை அனுப்பி வட இந்து மகளிர்களிடம் வெற்றிக்கு முதல்படியை அனுபவரீதியாக உணரச் செய்தவர்.

திரு. சர்வானந்தா ஆசிரியர்

கணிதத்தை இலகுவாக சொல்லிகொடுத்தவர். தானும் தன் பாடமும் உண்டென வகுப்புகளில் கற்பித்தல் மட்டுமே செய்தவர். அவரின் பாட நேரம் மட்டும் எந்தவித வேறுகதைகள் பிராக்குகள் இன்றி கணிதமாகவே இருக்கும்.

திரு. இரகுபரன் ஆசிரியர்

பிரெஞ்சு தாடியும் நல்ல உயரமும் கொண்ட எங்கள் விஞ்ஞான ஆசிரியர். எமக்கு விஞ்ஞானம் மட்டுமல்லாமல் ஏனைய விடயங்களான நல்லனவற்றைத் தேடி வாசித்தல், நாடக உத்திகள், உருவக நாடகங்கள் மூலம் உட்கருத்துகள் எனப் பலவற்றைச் சொல்லித் தந்தவர். நல்ல எழுத்தாளரும் கூட. சிறந்த நாடக இயக்குனர். இவரின் தப்பிவந்த தாடி ஆடு என்ற நாடகம் இன்றைக்கும் பாடசாலையில் பிரபலம்.

அடிவாங்கிய சம்பவங்கள் பெரிதாக இல்லை. பெரும்பாலும் உப அதிபர். திரு.பொன்னம்பலம் அவர்கள் வகுப்பில் சத்தம் போட்டால் முன் வரிசையில் அம்ர்ந்திருக்கும் எங்கடை குழுவிற்க்குத் தான் நன்றாக அடிபோடுவார். அதிலும் என்ரை குரல் வைஎம்சிஏ பில்டிங் வரை கேட்கின்றது என எனக்கு ஸ்பெசல் அடி (அந்த பில்டிங்குக்கும் எங்கள் வகுப்பிற்க்கும் இடையில் கிட்டத்தட்ட 200 மீற்றர் தூரம்).

மற்றும் படி ஒருமுறை வகுப்பில் கதைத்தற்க்கு எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் திருமதி.இராமநாதன் ஆசிரியை "நான் இனி வகுப்பில் கதைக்க மாட்டேன்" என 200 முறை எழுதவைத்தார்.

சாரணனாகவும் இருந்ததில் நான் பெரும்பாலும் ஒழுக்கமான மாணவனாகவே பாடசாலை நாட்களில் இருந்தேன், இருந்து வருகின்றேன்.

ரியூசன் ஆசிரியர்களில் எனக்கு ஓஎல் வரை கணிதம் படிப்பித்த அண்மையில் மறைந்த அமரர் விமலன் ஆசிரியரும் மறைந்த கணித வல்லுனர் அமரர்.வெக்டர் வேலாயுதம் ஆசிரியரும் இன்றைக்கும் மனதில் நிற்பவர்கள்.

விமலன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர் ஆனாலும் எங்களின் மேல் நல்ல அக்கறை உடையவர். இவரினதும் சர்வானந்தா ஆசிரியரினதும் திறமையான கற்பித்தலாலும் அக்கறையாலும் கணித பாடத்தில் விசேட சித்தி அடைய முடிந்தது. இவரின் மறைவு கணித மாணவர்களுக்கு இழப்புத்தான்.

அதேபோல் தான் வெக்டர் சேரும், மாணவர்களைப் பெரிதாக கடியமாட்டார். காரணம் நீங்கள் விடும் பிழைகள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பார். இன்றைக்கு அதனை அனுபவிப்பவர்களில் நானும் ஒருவன். இவரின் இழப்பு பேரிழப்புத்தான். அதே நேரம் இவரின் சீடரான பிரேம்நாத் ஆசிரியரிடமும் படித்தேன். மாணவர்களைக் கலகலப்பாகவும் அதே நேரம் கண்டிப்பாகவும் நடத்திய ஆசிரியர். (என்னை விட இவர் பற்றி நண்பர் லோஷனுக்கு அதிகம் தெரியும்).

இவர்கள் மட்டுமல்ல எம்மை ஆளாக்கிய பல ஆசான்கள் இருக்கின்றார்கள் பதிவின் நீளம் காரணமாக அவர்கள் அனைவரையும் எழுதமுடியவில்லை.

பப்பி லவ் கதைகள் காதல் கதைகள் என ஒரு இலவும் இல்லை.

சும்மா எழுந்தமானமாக மூன்று பேரை அழைக்காமல் என்னுடைய பாடசாலையினதும் அருகில் உள்ள பாடசாலைகளான மெதடிஸ், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இருந்தும் ஒவ்வொருவரை அழைக்கின்றேன். எனது பாடசாலை மாணவர்களான டொக்டர்.முருகானந்தன், மருதமூரான், கரவைக் குரல், பால்குடி, பனையூரான், கீத், ஆதிரை என நீண்ட பட்டியல் இருப்பதால் குழுக்கல் முறையில் இருவரைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

1. மருதமூரான்.
2. சந்திரவதனா அக்கா (வட இந்து)
3. கரவைக் குரல்
4. சாயினி(பாவை) (மெதடிஸ்ட்) (பரீட்சைகள் முடிந்தபின்னர் ஆறுதலாக எழுதவும்).

டிஸ்கி: சனி ஞாயிறுகளில் பதிவு எழுதுவதில்லை என்ற என் வைராக்கியத்தை இன்றைக்கு உடைத்த சினேகிதிக்கு கண்டனங்கள்.

39 கருத்துக் கூறியவர்கள்:

கவிக்கிழவன் சொல்வது:

வர வர உங்களது படைப்புகளில் ஒரு அர்த்தம் விளங்குகின்றது. உங்களுடைய சொந்த அனுபவத்தை சொனாலும் வாசிபவர்களும் தங்களுடைய அனுபவங்களை
ஜோசிச்சு பாக்க முடிகிறது
தனித்துவமான எழுத்தாளன் துணைக்கு வேறு ஒருவரை சுட்டுவது இல்லை

Nimal சொல்வது:

//சாரணனாகவும் இருந்ததில் நான் பெரும்பாலும் ஒழுக்கமான மாணவனாகவே பாடசாலை நாட்களில் இருந்தேன், இருந்து வருகின்றேன்.//

//பப்பி லவ் கதைகள் காதல் கதைகள் என ஒரு இலவும் இல்லை.//

இந்த அப்ரோச் பிடிச்சிருக்கு...!

Admin சொல்வது:

//சாரணனாகவும் இருந்ததில் நான் பெரும்பாலும் ஒழுக்கமான மாணவனாகவே பாடசாலை நாட்களில் இருந்தேன், இருந்து வருகின்றேன்.//



அப்படியே தொடரட்டும்.


பாடசாலை நண்பர்கள் பலர் இன்று வலையுலக நண்பர்களாய் இருப்பது இன்னும் மகிழ்ச்சியான விடயமே.


தொடரட்டும் நட்பு

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

i can't write comments in tamil, so later i'll put u a comment on this post, coz i'm now in my classes

any way nice post vanthi.

Unknown சொல்வது:

//ஏனோ ஏஎல்லில் அவர்களைக் கொஞ்சம் பிடிக்கவில்லை//

கண்டிப்பாலல்ல...
உணர்தரத்தில் தானே நமக்கெல்லாம் ஒரு புதிய 'இது' வந்து நம்மை நாமே கதாநாயகனாக்கிக் கொளவது வழக்கம்? அதனால் தான்...

அது சரி, சின்ன சசந்தேகம்...
நீங்க பள்ளிக் கூடத்தில படிச்சீங்களா, சோல்லவே இல்ல??? (சும்மா.. நகைச்சுவைக்காக..)

ம்...
பாடசாலைப் பருவம் தான் மகிழ்ச்சசியான பருவம் என்று சொல்வார்கள்.

சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொல்வது:

பசுமையான கல்லுரி நினைவுகள் எங்களையும் குளிர வைத்தது .....

வாழ்த்துக்கள் .........

Subankan சொல்வது:

// கனககோபி said...
//ஏனோ ஏஎல்லில் அவர்களைக் கொஞ்சம் பிடிக்கவில்லை//

கண்டிப்பாலல்ல...
உணர்தரத்தில் தானே நமக்கெல்லாம் ஒரு புதிய 'இது' வந்து நம்மை நாமே கதாநாயகனாக்கிக் கொளவது வழக்கம்? அதனால் தான்...//

அதுவும் உண்மைதான்.

Unknown சொல்வது:

நல்ல வேளை என்னை மாட்டெல்ல வந்தியண்ணா... இன்னொரு கருத்து, பள்ளிக் காலத்தை ஒரு பதிவுக்குள் அடக்க முடியாது... ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு...

///அவரின் பாட நேரம் மட்டும் எந்தவித வேறுகதைகள் பிராக்குகள் இன்றி கணிதமாகவே இருக்கும்///
வெளிப்படை உண்மை

///"நான் இனி வகுப்பில் கதைக்க மாட்டேன்" என 200 முறை எழுதவைத்தார்///
நிலுவை வைக்காமல் எழுதினியளா?

///அதிலும் என்ரை குரல் வைஎம்சிஏ பில்டிங் வரை கேட்கின்றது என எனக்கு ஸ்பெசல் அடி///
அப்ப அந்தக் காலத்திலேயே உங்கட வொய்ஸ் பிரபலம் போல இருக்கு

///இவர்கள் மட்டுமல்ல எம்மை ஆளாக்கிய பல ஆசான்கள் இருக்கின்றார்கள் பதிவின் நீளம் காரணமாக அவர்கள் அனைவரையும் எழுதமுடியவில்லை. ///
இது 100% உண்மை

///பப்பி லவ் கதைகள் காதல் கதைகள் என ஒரு இலவும் இல்லை. ///
பச்சைப் பொய்

பால்குடி சொல்வது:

அண்ணே நீங்கள் ‘சீ’ வகுப்போ, அப்ப உருப்பட்ட மாரித்தான். ஏனெண்டா நானும் சா/த வரை ‘சீ’ வகுப்புத்தான். இரகுவரன் ஆசிரியர் உங்கட காலத்திலேயே வந்திட்டாரோ? அவருடைய சில நாடகங்களில் நடிக்கக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.
பலரை மேடையேற்றி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்ததில் ஆறுமுகம் ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.

Unknown சொல்வது:

வந்தியாரே என்னை நல்லாகத்தான் மாட்டிவிட்டுட்டீங்க,
என்ன சொல்ல எதைச்சொல்ல எண்டு இருக்கு,
வெகுவிரைவில் முடிந்ததை பகிர்கின்றேன்

சினேகிதி சொல்வது:

வந்தியண்ணா நீங்கள் எறும்பை விட சுறுசுறுப்பு. டக்கெண்டு எழுதிட்டிங்கிள். இதுக்குள்ள எனக்கு கண்டிப்பு வேறயா :)

உண்மையா உங்கட பாடசாலை இவ்வளவு வடிவா?:)

ஹாட்லிக்கு என்ன பட்டப்பெயர்?


\\///பப்பி லவ் கதைகள் காதல் கதைகள் என ஒரு இலவும் இல்லை. ///
பச்சைப் பொய்
\\

அதானே சரியான சிவத்தப்பொய்.

மெதடிஸ்ல நெற்போல் விளையாடுற அக்காமாரைக் கேட்டால்தான் தெரியும்.

Muruganandan M.K. சொல்வது:

நேற்று இரகுவரன் சேரின் 50வது பிறந்த தினம். தனது தாயும் மனைவின் தாய் தந்தையரும் அண்மையில் காலமானதால் கொண்டாடவில்லை.
ஆனால் தனக்கு உதவிய, தான் கடமைப்பட்ட பலருக்கு அத் தினத்தில் தானே பரிசு கொடுத்து கெளரவித்த ஒரு வித்தியாசமான மனிதன்.
நீங்கள் அவரைப் பற்றி எழுதியது இப்பொழுதுதான் தெரிய வந்தது. நாளை அறியத் தருவேன்.

பால்குடி சொல்வது:

இரகுவரன் ஆசிரியரின் ஐம்பதாவது பிறந்த நாளின் போது நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிக்க முடியாவிட்டாலும் இதனூடு தெரிவிக்கிறேன்.
தகவலுக்கு நன்றி ஐயா.
ஹாட்லியின் அண்மைக் காலத் தோற்றமே படங்களிலுள்ளது.
குறிப்பாக இரண்டாவது படத்திலுள்ள பகுதிகள் நான் படித்த காலங்களில் செல்லமுடியா வலயமாக்கப் பட்டிருந்தது. அண்மையில்தான் ஹாட்லியின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

Muruganandan M.K. சொல்வது:

தகவலுக்கு நன்றி பால்குடி. ஹாட்லியின் இன்றைய தோற்றத்தைக் கண்டு பிரமித்திருந்தேன். மிக அழகாக இருக்கிறது. கருத்துச் சொல்ல வேண்டும் என நினைத்தும் மறந்துவிட்டேன்.
கல்லூரிக்கு முன்பாக இருந்த காணியில் திறந்த Stadium அமைக்கப்பட்டு வருவதாக அறிந்தேன்.

maruthamooran சொல்வது:

////திரு. சர்வானந்தா ஆசிரியர்

கணிதத்தை இலகுவாக சொல்லிகொடுத்தவர். தானும் தன் பாடமும் உண்டென வகுப்புகளில் கற்பித்தல் மட்டுமே செய்தவர். அவரின் பாட நேரம் மட்டும் எந்தவித வேறுகதைகள் பிராக்குகள் இன்றி கணிதமாகவே இருக்கும். ////

எனக்கு கணிதப் பாடத்துக்கும் இடையில் நல்ல பாலமாக இருந்தவர்கள் ஆசிரியர்கள் லோகநாதன் (மருதங்கேணி இந்து தமிழ் வித்தியாலயம்), சர்வானந்தா (ஹாட்லிக் கல்லூரி) மற்றும் ஆசிரியை கிருபா (புற்றளை மகா வித்தியாலயம்) ஆகியோர். சர்வானந்தா அவர்களிடம் பாடசாலையில் கற்க முடியவில்லை என்ற போதிலும் தனியார் வகுப்பில் அவரிடம் கற்றிருக்கிறேன். என்னுடன் அன்பாகவே பழகியிருக்கிறார். அவரை என்னால் மறக்க முடியாது. இந்த தனியார் வகுப்பில் பனையூரானும் (நாங்கள் அவரை ‘கப்பல்’ என்று அழைப்போம்.) கல்வி பயின்றார்.

வந்தி……. என்னங்க சொல்லாமல் கொள்ளாமல் மாட்டி விட்டீர்கள். பதிவு எழுதுவததென்பது எனக்கு பாடசாலை நாட்களில் ஆங்கில பாடம் மாதிரி…… ஆனாலும், தங்களின் அழைப்பை ஏற்று விரைவில் எழுதுகிறேன்.

பனையூரான் சொல்வது:

மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கொண்டு போட்டியள் வந்தி. நீங்கள் குறிப்பிட்ட அநேகமானோரிடம் நாங்களும் கற்றுள்ளோம். நினைவுகளை மீட்டியத்தில் ஒரு ஏக்கம் மேலிடுகிறது. நன்றி

மதுவர்மன் சொல்வது:

வந்தி,

உங்கள் வலைப்பதிவுப் பக்கத்தின் பின்னூட்டப்பகுதியில், பின்னூட்டமிட்டவர்களின் பெயர் தெரிவதில்லையே ஏன்?

அதை ஒருமுறை சரிசெய்வீர்களா?

யார் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது தெரியாமலிருப்பது ஒரு மாதிரியுள்ளது...

Muruganandan M.K. சொல்வது:

மதுவர்மன் கூறியது போல வந்தி,

எனது வலைப்பதிவுப் பக்கத்தின் பின்னூட்டப்பகுதியிலும் பின்னூட்டமிட்டவர்களின் பெயர் தெரிவதில்லையே. சரிசெய்வது எப்படி?

வந்தியத்தேவன் சொல்வது:

//கவிக்கிழவன் said...
வர வர உங்களது படைப்புகளில் ஒரு அர்த்தம் விளங்குகின்றது. உங்களுடைய சொந்த அனுபவத்தை சொனாலும் வாசிபவர்களும் தங்களுடைய அனுபவங்களை
ஜோசிச்சு பாக்க முடிகிறது //

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் ஐயா. பல அனுபவங்கள் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் அவற்றில் சில ஒரே மாதிரி அனுபவங்களாக இருக்ககூடியவை.

//தனித்துவமான எழுத்தாளன் துணைக்கு வேறு ஒருவரை சுட்டுவது இல்லை//

என்ன சொல்கின்றீர்கள் எனப் புரியவில்லை. இது ஒரு தொடர் விளையாட்டு என்பதால் ஏனைய நால்வரை அழைத்தேனே ஒழிய என் துணைக்கு நான் யாரையும் வைத்திருப்பதில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//நிமல்-NiMaL said...

இந்த அப்ரோச் பிடிச்சிருக்கு...!//

நன்றிகள் நிமல் இதனால் தான் என்னால் உங்களைப்போல் காதல் கதை எழுதமுடியவில்லை என நினைக்கின்றேன் ஹிஹிஹி.

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...

அப்படியே தொடரட்டும். //

தொடர்கின்றேன்

//பாடசாலை நண்பர்கள் பலர் இன்று வலையுலக நண்பர்களாய் இருப்பது இன்னும் மகிழ்ச்சியான விடயமே. //

பாடசாலையில் இவர்கள் வெவ்வேறு ஆண்டுகளில் படித்தவர்கள், வலையுலகிற்க்கு வந்தபின்னர் தான் என் சக பாடசாலை மாணவர்கள் எனக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
i can't write comments in tamil, so later i'll put u a comment on this post, coz i'm now in my classes

any way nice post vanthi.//

நன்றிகள் யோ உங்கள் ஆதரவுக்கும் வருகைக்கும்

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...

கண்டிப்பாலல்ல...
உணர்தரத்தில் தானே நமக்கெல்லாம் ஒரு புதிய 'இது' வந்து நம்மை நாமே கதாநாயகனாக்கிக் கொளவது வழக்கம்? அதனால் தான்...//

அதனாலும் இருக்கலாம் அத்துடன். சாதாரண தரம் வரை ஆசிரியர்கள் கல்விக்கு அப்பால் ஒழுக்கம், தலைமைத்துவம், கடமை, கட்டுப்பாடு எனப் பல விடயங்களைச் சொல்லித்தருவார்கள், ஆனால் உயர்தரத்தில் பல்கலைக் கழகம் ஒன்றே குறிக்கோளாக இருப்பதால் இயந்திரத்தனமான படிப்பு மட்டுமே காரணம்காட்டி அவர்கள் எம்முடன் பழகியிருக்கலாம்.

//அது சரி, சின்ன சசந்தேகம்...
நீங்க பள்ளிக் கூடத்தில படிச்சீங்களா, சோல்லவே இல்ல??? (சும்மா.. நகைச்சுவைக்காக..)//

இதில் என்ன சந்தேகம் நீங்களே படித்திருக்கும் நான் படிக்காமல் இருந்திருப்பேனா. என்ன நீங்கள் ஐந்தாம் வகுப்பு பெயில் நான் நாலாம் வகுப்பு பாஸ்.

//பாடசாலைப் பருவம் தான் மகிழ்ச்சசியான பருவம் என்று சொல்வார்கள்.

சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.//

அதுதான் உண்மை பாடசாலைப் பருவத்தில் தான் பல அனுபவங்கள் கிடைக்கு, பாரட்டுக்கு நன்றிகள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
பசுமையான கல்லுரி நினைவுகள் எங்களையும் குளிர வைத்தது .....

வாழ்த்துக்கள் .........//

நன்றிகள் உலவு. உங்கள் திரட்டியில் இணைத்தபின்னர் வலைகளில் உங்கள் திரட்டி பற்றிய விளம்பரத்தை இடாமல் உங்கள் கருத்துகளைச் சொல்லும் உங்கள் நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...

அதுவும் உண்மைதான்.//
உண்மைதான் யாழ்ப்பாண உலாத்தல் எப்படியிருந்தது.

வந்தியத்தேவன் சொல்வது:

// Kiruthikan Kumarasamy said...
நல்ல வேளை என்னை மாட்டெல்ல வந்தியண்ணா... இன்னொரு கருத்து, பள்ளிக் காலத்தை ஒரு பதிவுக்குள் அடக்க முடியாது... ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு...//

குழுக்கள் முறையில் தேர்தெடுத்ததால் தாங்கள் மாட்டவில்லை. நிச்சயமாக எத்தனை கொடுமைகள் பாடசாலை நாட்களில் செய்திருப்போம்.

//வெளிப்படை உண்மை//

ஆஹா கணித மாணவன் என நிரூபித்துவிட்டீர்கள்.

//நிலுவை வைக்காமல் எழுதினியளா?//

இரண்டு பேனைகளை ஒன்றாக வைத்து எழுதி பிடிபட்டும் மீண்டும் 100 முறை எழுதியது. ஒரே கலர் பேனை என்றால் பிரச்சனை இருந்திருக்காது ஒரு வரி நீலத்தில் இன்னொரு வரி சிவப்பில் இருந்தபடியால் ரீச்சர் கண்டுபிடித்துவிட்டார்.

//அப்ப அந்தக் காலத்திலேயே உங்கட வொய்ஸ் பிரபலம் போல இருக்கு//
ஆஹா ஆஹா உண்மைதான். இந்தக் குரலால் தான் பல தடவை அடிவாங்கினேன்.

//பச்சைப் பொய்//

அடப்பாவி என்னில் நம்பிக்கை இல்லையா?

வந்தியத்தேவன் சொல்வது:

//பால்குடி said...
அண்ணே நீங்கள் ‘சீ’ வகுப்போ, அப்ப உருப்பட்ட மாரித்தான். ஏனெண்டா நானும் சா/த வரை ‘சீ’ வகுப்புத்தான். //

எங்கள் காலத்தில் சீ வகுப்பு குழப்படி குறைந்த வகுப்பு. ( நான் படித்த வகுப்பே குழப்படி இல்லையென்றால் மற்ற வகுப்புகளின் நிலை எப்படியிருந்திருக்கும்).

//இரகுவரன் ஆசிரியர் உங்கட காலத்திலேயே வந்திட்டாரோ? அவருடைய சில நாடகங்களில் நடிக்கக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். //

ஓம் நாங்கள் எங்கள் பாடசாலைக்கு மீண்டும் போனபோது அவர் வந்துவிட்டார். ஆஹா அப்போ நாங்கள் படம் எடுத்தால் பால்குடிதான் ஹீரோ, என் உயரத்திற்கு ஹீரோயினுக்கு எங்கே போவது.

//பலரை மேடையேற்றி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்ததில் ஆறுமுகம் ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.//

உண்மைதான். நவராத்திரிக் காலத்தில் ரீச்சர் எங்களுக்கு கோலம் போட மாலை கட்ட எல்லாம் பழக்கியவர்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கரவைக்குரல் said...
வந்தியாரே என்னை நல்லாகத்தான் மாட்டிவிட்டுட்டீங்க,
என்ன சொல்ல எதைச்சொல்ல எண்டு இருக்கு,
வெகுவிரைவில் முடிந்ததை பகிர்கின்றேன்//

தம்பி விரைவில் உங்கள் கால அனுபவங்களை எழுதுங்கள். நீங்கள் கலைச் சேவை செய்த கதைகளையே எழுதலாமே.

வந்தியத்தேவன் சொல்வது:

//சினேகிதி said...
வந்தியண்ணா நீங்கள் எறும்பை விட சுறுசுறுப்பு. டக்கெண்டு எழுதிட்டிங்கிள். இதுக்குள்ள எனக்கு கண்டிப்பு வேறயா :)//

செய்யிறதையும் செய்துவிட்டு கதையைப் பார். நான் கற்பனையில் என்றாலும் காதல் படிக்கட்டுகள் தொடர் விளையாட்டு எழுதி உங்களை மாட்டிவிடுகிறன்.

//உண்மையா உங்கட பாடசாலை இவ்வளவு வடிவா?:)//

ஆமாம் உங்கள் பாடசாலைக் கட்டிடங்கள் தான் வடிவு.

// ஹாட்லிக்கு என்ன பட்டப்பெயர்? //

மூளைசாலிகளின் கல்லூரி.

//அதானே சரியான சிவத்தப்பொய்.

மெதடிஸ்ல நெற்போல் விளையாடுற அக்காமாரைக் கேட்டால்தான் தெரியும்.//

ஓம் ஓம் அவர்கள் விளையாடுவதை நாங்கள் சில நேரம் எங்கள் மைதான மதிலில் இருந்து பார்ப்போம். சிலவேளைகளில் அவர்களுக்கு ஒலிபெருக்கி தேவைப்பட்டால் நாங்கள் தான் அந்த சேவையை வழங்குவது. யார் ஒலிபெருக்கியுடன் போவது என்பதில் பெரும் போட்டி.

வந்தியத்தேவன் சொல்வது:

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
நேற்று இரகுவரன் சேரின் 50வது பிறந்த தினம். தனது தாயும் மனைவின் தாய் தந்தையரும் அண்மையில் காலமானதால் கொண்டாடவில்லை.
ஆனால் தனக்கு உதவிய, தான் கடமைப்பட்ட பலருக்கு அத் தினத்தில் தானே பரிசு கொடுத்து கெளரவித்த ஒரு வித்தியாசமான மனிதன்.
நீங்கள் அவரைப் பற்றி எழுதியது இப்பொழுதுதான் தெரிய வந்தது. நாளை அறியத் தருவேன்.//

இது ஒரு தற்செயலான நிகழ்வாக எனக்குப் படவில்லை. ஆசிரியரின் மேல் நாங்கள் வைத்திருந்த பற்றின் காரணமாக அவரின் பிறந்த தினத்திற்காக எழுதப்பட்டதுபோல் வந்துவிட்டது. ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவும் படித்தேன் நன்றிகள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//பால்குடி said...
இரகுவரன் ஆசிரியரின் ஐம்பதாவது பிறந்த நாளின் போது நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிக்க முடியாவிட்டாலும் இதனூடு தெரிவிக்கிறேன்.
தகவலுக்கு நன்றி ஐயா.//

டொக்டர் எங்கள் வாழ்த்துக்களை ஆசிரியருக்குத் தெரிவிப்பார்,

//ஹாட்லியின் அண்மைக் காலத் தோற்றமே படங்களிலுள்ளது.//

2003ல் நான் இறுதியாகச் சென்றபோது( என் பாடசாலைக்குச் செல்ல சிலரிடம் அனுமதி எடுக்கவேண்டும்)இந்தக் முகப்பு உடைந்த நிலையில் தான் காணப்பட்டது.

//குறிப்பாக இரண்டாவது படத்திலுள்ள பகுதிகள் நான் படித்த காலங்களில் செல்லமுடியா வலயமாக்கப் பட்டிருந்தது. அண்மையில்தான் ஹாட்லியின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.//

நாங்கள் ஆடிப்பாடித் திரிந்த பகுதிகள் அவைதான்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
தகவலுக்கு நன்றி பால்குடி. ஹாட்லியின் இன்றைய தோற்றத்தைக் கண்டு பிரமித்திருந்தேன். மிக அழகாக இருக்கிறது. கருத்துச் சொல்ல வேண்டும் என நினைத்தும் மறந்துவிட்டேன்.
கல்லூரிக்கு முன்பாக இருந்த காணியில் திறந்த Stadium அமைக்கப்பட்டு வருவதாக அறிந்தேன்.//

நானும் பழைய மாணவர் சங்க கூட்டத்தில் இந்த விடயத்தையும் புதிதாக மாணவர் தங்கு விடுதி கட்டும் திட்டத்தையும் அறிந்தேன். முன்னர் இருந்த விடுதி சேதமடைந்து விட்டது. யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் எங்கள் பாடசாலையும் ஒன்று. எங்கள் நூலகமும் தீக்கிரையானது. அத்துடன் அதிபருக்கான வீடு ஒன்றும் முன்னாள் உள்ள லோயரின் காணியில் அமைக்கப்பட இருக்கின்றது,

வந்தியத்தேவன் சொல்வது:

// மருதமூரான். said...
வந்தி……. என்னங்க சொல்லாமல் கொள்ளாமல் மாட்டி விட்டீர்கள். பதிவு எழுதுவததென்பது எனக்கு பாடசாலை நாட்களில் ஆங்கில பாடம் மாதிரி…… ஆனாலும், தங்களின் அழைப்பை ஏற்று விரைவில் எழுதுகிறேன்.//

விரைவில் எழுதவும், உங்கள் பார்வையில் உயர்தர ஆசிரியர்கள் பற்றிய செய்திகள் அறியலாம். தற்போது நீங்கள் ஆங்கிலத்தில் பீட்டர் விடுவதாக பேஸ்புக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வந்தியத்தேவன் சொல்வது:

//பனையூரான் said...
மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கொண்டு போட்டியள் வந்தி. நீங்கள் குறிப்பிட்ட அநேகமானோரிடம் நாங்களும் கற்றுள்ளோம். நினைவுகளை மீட்டியத்தில் ஒரு ஏக்கம் மேலிடுகிறது. நன்றி//

நன்றி பனையூரான், கீத்தின் தேவதை வரம் தந்தால் மீண்டும் அந்த 9சீயில் நாங்கள் படித்த கட்டிடத்தில் அதே நண்பர்களுடன் கலகலப்பாக இருக்க வரம் கேட்பேன். எந்தவித கவலைகளும் இன்றி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்த நாட்கள் அவை.

வந்தியத்தேவன் சொல்வது:

// மதுவர்மன் said...
உங்கள் வலைப்பதிவுப் பக்கத்தின் பின்னூட்டப்பகுதியில், பின்னூட்டமிட்டவர்களின் பெயர் தெரிவதில்லையே ஏன்?

அதை ஒருமுறை சரிசெய்வீர்களா?

யார் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது தெரியாமலிருப்பது ஒரு மாதிரியுள்ளது...//

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
மதுவர்மன் கூறியது போல வந்தி,

எனது வலைப்பதிவுப் பக்கத்தின் பின்னூட்டப்பகுதியிலும் பின்னூட்டமிட்டவர்களின் பெயர் தெரிவதில்லையே. சரிசெய்வது எப்படி?//

ஓரிரு நாட்களில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டுவிடும். இதுபற்றி ஒரு பதிவுகூடப் போட்டிருக்கின்றேன். தங்கள் கருத்துகளுக்கு நன்றி மது மற்றும் டொக்டர்.

Chandravathanaa சொல்வது:

வந்தி,
அழைப்புக்கு நன்றி.
ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.

Unknown சொல்வது:

//தம்பி விரைவில் உங்கள் கால அனுபவங்களை எழுதுங்கள்//

தங்கள் உத்தரவு வத்தியார் அவர்களே
வெகுவிரைவில் பகிர்வேன்

//நீங்கள் கலைச் சேவை செய்த கதைகளையே எழுதலாமே.//

ஹீஹிஹி
கலைச்சேவையா?
அப்பிடி எழுதச்சொன்னால் அப்படி எல்லாம் எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை கண்டியளோ

மதுவர்மன் சொல்வது:

இப்போது அருமை, பின்னூட்டமிட்டவர்கள் யாரென்று தெரிகின்ரது...


அத்துடன், பதிவுப்பக்கத்திலேயே பின்னூட்டப்பெட்டி தெரியக்கூடிய வசதியை இப்போது Blogger வழங்குகின்றது. அதையும் உங்கள் வார்ப்புருவில் ஏற்படுத்திவிட்டீர்களானால் இனும் அருமையாக இருக்கும்..

tamilgarden.blogspot.com ஐ சென்று பாருங்கள்..

Chandravathanaa சொல்வது:

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்