காதல் கடிதம் வரைந்த நண்பனும் காயம் பட்ட நானும்

உலகத்திலையே கஸ்டமான செயல் காதலுக்கு உதவுவதுதாங்க. அதைத் தான் நம்ம சமுத்திரகனியும் நாடோடிகளில் சொல்லியிருக்கின்றார். ஒரு காதலுக்கு நான் உதவப்போய் பட்ட அவஸ்தைதாங்க இந்தக் கதை. பெயர்களை மட்டும் மாத்தியிருக்கின்றேன்.

என் நண்பன் நாதன் எங்களுடன் கூடப் படித்த தர்சினி என்ற பெண்ணின் மீது ஓஎல்லில் மையல் கொண்டு காதலிக்கத் தொடங்கினான். ஒருதலைக் காதல் நண்பனின் விடாமுயற்சியால் இருதலையாகியது. நாளொரு ரீயூசனும் பொழுதொரு ஒழுங்கையுமாக காதல் வளர்ந்தது.

பின்னர் ஏஎல்லுக்கு வந்தபோது நான் கணிதப்பக்கம் செல்ல நண்பன் வணிகக்கல்விக்குச் செல்ல தர்சினி கலைப்பிரிவுக்குச் சென்றுவிட்டார். இதனால் ரீயூசனில் சந்திப்பது கஸ்டமாகியது அவர்களுக்கு, அதனால் நாதன் தர்சினியின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பெண்ணை நண்பியாக்கி அவளூடாக தன் தொடர்புகளை மேற்கொண்டான். இனித் தான் எனக்குச் சனி பிடித்த கதை.

ஒருநாள் நண்பன் என்ரை வகுப்புமுடிய வாசலில் காவல் நின்று என்னைக் கைது செய்தான். ஏன்டா எனக்கேட்க தர்சினி சில நாட்கள் வீட்டைவிட்டு வரவில்லையென்றும் உதவி செய்யும் நண்பியிடம் தனக்கு ஒரு காதல் கடிதம் இருப்பதாகச் சொல்லியனுப்பினாள் என்றான்.

அதற்க்கு நான் என்ன செய்வது எனக்கேட்க நாதனோ உடனே நீ அவள்ரை வீட்டை போய் அந்த கடிதத்தை வாங்கி வா என்றான். எனக்கோ கால் கை நடுங்கத் தொடங்கிவிட்டது. கள்ள மாங்காய் தேங்காய் என்றால் சிம்பிளாக களத்திலை இறங்கிறனான் இந்த காதல் கத்தரிக்காய் என்றால் கொஞ்சம் பயம். காரணம் என்னென்றால் ஊரிலை எல்லோரும் ரொம்ப நல்லவன் என நினைக்கும் போது அந்த நினைப்பில் மண் போட நான் விரும்புவதில்லை அதனால் உப்படியான வேலைகளுக்கு போவதில்லை.

ஆனால் என்ன செய்வது விதி வலியது நண்பனின் காதலுக்காக சிங்கத்தின் குகைக்குச் சென்றுபார்ப்போம் என அசட்டுத்துணிவுடன். தர்சினியின் ஊருக்கு கிளம்பினோம்.

எங்கட ஊரிலை இருந்து அவளின் ஊர் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரம். நானும் நாதனும் சைக்கிளில் தான் சென்றோம். போகும் வழியில் நாதனின் சைக்கிளை அவன்ரை வீட்டிலை விட்டுவிட்டு என்ரை சைக்களில் இருவரும் டவுள்ஸ் சென்றோம். ஏனென்றால் நண்பன் அவளின் வீட்டு ரோட்டில் உள்ள சந்தியில் சைக்கிளுடன் காவல் நிற்க நான் நடந்துபோய் கடிதத்தை வாங்கிவரவேண்டும். நானும் சைக்கிளில் போனால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் சைக்கிளுடன் தப்புவது கஸ்டம். அவனு முதலே பிளான் போட்டுத்தான் இருந்தான் எனக்குத் தான் அப்போ பின்விளைவுகள் புரியவில்லை.

தர்சினி வீட்டுச் சந்தியில் நண்பன் காத்திருக்க நான் நடந்துபோய் தர்சினி வீட்டு வாசலில் தர்சினி தர்சினி என அவளைக்கூப்பிட்டேன். அவள் வராமல் அவளின் தாய்க்குலம் வந்தார். எனக்கு கால்கள் படபடக்க தொடங்கின. என்ன விசயம் யார் நீங்கள் எனக்கேட்டார். அதற்க்கு நான் , தர்சினியின் வகுப்பில் படிக்கின்றவன் என்றும் சில நாட்கள் வகுப்பிற்க்கு போகவில்லை அதனால் தர்சினியிடம் நோட் கொப்பி வாங்க வந்தேன் என்றும் சொன்னேன். அதற்க்கு அவர் உள்லே வாங்க என்றான் நான் ஒரு மாதிரி இல்லை ஆண்டி நான் முற்றத்திலை நிற்கிறேன் நேரம் போய்விட்டது தர்சினியை ஒருக்கா வரச்சொல்லுங்கோ என தர்சினியும் வந்து கொப்பி ஒன்றைத் தந்தாள். அப்பாடா ஒரு பிரச்சனையும் இல்லை என நினைக்க பிரச்சனை தர்சினியின் சித்தி வடிவில் வந்தது.

எங்கேயோ போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய தர்சினியின் சித்தி என்னிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார். என்ரை பேர், ஊர், அப்பா என்ன செய்கிறார் என ஒரே கேள்வி நானும் ஒரு மாதிரிச் சமாளித்துக்கொண்டு என்ரை ஊர் பேருகளை மாற்றிச் சொல்லிவிட்டேன். அப்போதுதான் என் கையில் இருந்த வெக்டர் வேலாயுதம் சேர் எழுதிய "ஆள்கூற்றுக் கேத்திரகணிதம்" புத்தகத்தைப் பாத்துவிட்டார் சித்தி.

பார்த்த உடனேயே மேட்ஸ் படிக்கிற உனக்கு ஏன் லொஜிக் கொப்பி எனக்கேட்டார். நானும் பதட்டத்திலை எனக்கில்லை என் நண்பனுக்கு என உளறிவிட்டேன். அதோடை என்ரை கதையும் முடிஞ்சுது.

சித்தி வரும்போது சந்தியிலை நாதனையும் பார்த்திருக்கின்றார். அவருக்கு இந்த லவ் மேட்டர் தெரியும் உடனே அவரின் அக்காவிற்க்குச் சொன்னார் அந்த லொஜிக் கொப்பியைத் திறந்துபார் என்று. அவர் திறந்து பார்க்க உள்ளே ஒன்றும் இல்லை. எனக்கு ஒரே சந்தோஷம் அதுவும் ஒரு நிமிடம் தான் . பின்னர் சித்தி அந்தக் கொப்பியின் உறை(கவர்)யை கிழித்துப்பார்த்தால் கடிதம் வாயைப் பிளந்தது.

அவ்வளவு தான் உடனே சித்தி என்ரை கையை ஓடமுடியாமல் பிடித்தார். தர்சினியின் தாய் கேற்ரைப் பூட்டிவிட்டார். ஒருமாதிரி கையை உதறி அவர்களின் வேலியைப் பாயும்போது முள்ளுக்கம்பி குத்தி காலில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது. ரத்தம் சொட்டச் சொட்ட ஒரே ஓட்டமாக நண்பன் நிண்ட இடத்திற்க்குபோய் சைக்கிளில் ஒரே ஏறல் நாங்கள் சைக்கிள் உழக்கிய உழக்கில் சில நிமிடத்திலையே எங்கடை ஊருக்கு வந்துவிட்டோம். எங்கடை நல்ல காலம் தர்சினியின் வீட்டிலிருக்கும் அவரின் அப்பா,மாமா, சித்தப்பா எல்லோரும் வெளியே போய்விட்டார்கள். அதனால் அவர்களால் எங்களை துரத்திப்பிடிக்கமுடியவில்லை.

பிறகென்ன காயத்திற்க்கு மருந்துபோட்டு வீட்டிலை ஒரு மாதிரி மாடு ஒன்று குறுக்கை வந்து அதாலை சைக்கிளை வேலியுடன் இடிச்சுப்போட்டேன் எனச் சமாளித்துவிட்டேன். ஏன்டா உன்ரை கொப்பியைக் கொண்டுபோனாய் எனத் திட்டித்தீர்த்தான் நாதன்.

பிறகு நான் கொழும்பிற்க்கு வந்துவிட்டேன். நண்பன் முகாமைத்துவம் கற்க பல்கலைக் கழகம் சென்றுவிட்டான். அவர்களின் காதல் தொடர்ந்ததாக அறிந்தேன். இடையில் நாட்டுச் சூழல் காரணமாக தொடர்புகள் அறுந்துவிட்டன.

மீண்டும் 2003ல் யாழ்ப்பாணம் போனேன். நண்பனை ஊரிலை இன்னொரு பெண்ணுடன் கண்டேன். கம்பசில் காதலித்துக் கரம் பிடித்ததாக கூறினான்.முதற்காதல் பற்றி நான் ஒன்றுமே அவனிடம் கேட்கவில்லை. அதே நாட்களில் தர்சினியையும் வல்லிபுர ஆழ்வார்கோயிலில் கணவனுடனும் ஒரு 2 வயதுக் குழந்தையுடனும் கண்டேன்.

இருவரும் தங்கள் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள் ஆனால் என் கால் காயத்தின் தழும்பு இன்னமும் மாறவில்லை.

13 கருத்துக் கூறியவர்கள்:

காதலில் தோற்றவன் சொல்வது:

இதெல்லாம் தேவையா? காதலிக்கிறவனை விட காதலுக்கு உதவி செய்பவனுக்கு செருப்பாலை அடிக்கணும்.

Unknown சொல்வது:

ஹும்... ரிஸ்க்கெல்லாம் எடுத்து லெட்டர் வாங்கியிருக்கிறியள்.. சிங்கமண்ணா நீங்கள்..

வேந்தன் சொல்வது:

நாடோடிகள் பாகம் II.
//ஆனால் என் கால் காயத்தின் தழும்பு இன்னமும் மாறவில்லை.//
அதெல்லம் வீரத்தழும்பு அண்ணே..:)

சப்ராஸ் அபூ பக்கர் சொல்வது:

///நண்பனை ஊரிலை இன்னொரு பெண்ணுடன் கண்டேன். கம்பசில் காதலித்துக் கரம் பிடித்ததாக கூறினான்.முதற்காதல் பற்றி நான் ஒன்றுமே அவனிடம் கேட்கவில்லை. அதே நாட்களில் தர்சினியையும் வல்லிபுர ஆழ்வார்கோயிலில் கணவனுடனும் ஒரு 2 வயதுக் குழந்தையுடனும் கண்டேன்.///

எல்லா இடங்களிலையும் இது தான் நடக்குதா..... (கொஞ்சம் மனதுக்கு திருப்திங்கோ.... ஐயோ .... எனக்கு இப்படி எதுவுமே நடந்ததில்லீங்க......)

புல்லட் சொல்வது:

உப்பிடி எனக்குமொருக்கா நடந்தது... அத பதிவில பிறகொருநாள் சொல்லுறன்..
நீங்க நல்ல திரில்லா எழுதியிருக்கிறயள்...

Anonymous சொல்வது:

காதலர்களை விட இப்படி உதவி செய்பவர்கள் நிலைமைதான் பாவம். எப்படியோ நீங்க தப்பிச்சீங்க :)

வந்தியத்தேவன் சொல்வது:

//காதலில் தோற்றவன் said...
இதெல்லாம் தேவையா? காதலிக்கிறவனை விட காதலுக்கு உதவி செய்பவனுக்கு செருப்பாலை அடிக்கணும்.//

இப்போ இதெல்லாம் தேவையா எனக் கேள்வி எழுவது என்னவோ உண்மைதான் ஆனால் அந்தக்காலத்தில் இதெல்லாம் ஒரு திரில்லாக இருந்த விடயங்கள். சரி சரி நீங்களும் காதலுக்கு உதவி செய்து கஸ்டப்பட்டவரோ!

வந்தியத்தேவன் சொல்வது:

//கீத் குமாரசாமி said...
ஹும்... ரிஸ்க்கெல்லாம் எடுத்து லெட்டர் வாங்கியிருக்கிறியள்.. சிங்கமண்ணா நீங்கள்..//

எனக்கு வாங்கினாலும் பரவாயில்லை ஆனால் இன்னொருவருக்கு வாங்கி அடிபட்டதுதான் கவலை.

வந்தியத்தேவன் சொல்வது:

//வேந்தன் said...
அதெல்லம் வீரத்தழும்பு அண்ணே..:)//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கு,

வந்தியத்தேவன் சொல்வது:

// சப்ராஸ் அபூ பக்கர் said...
எல்லா இடங்களிலையும் இது தான் நடக்குதா..... (கொஞ்சம் மனதுக்கு திருப்திங்கோ.... ஐயோ .... எனக்கு இப்படி எதுவுமே நடந்ததில்லீங்க......)//

பெரும்பாலும் இதுதாங்கோ நடக்கிறது. என்ன செய்வது எங்கடை ஆட்கள் பெற்றோரைவிட்டுக் கொடுக்காமல் இருக்க காதலை விட்டுக்கொடுக்கின்றார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//புல்லட் said...
உப்பிடி எனக்குமொருக்கா நடந்தது... அத பதிவில பிறகொருநாள் சொல்லுறன்..
நீங்க நல்ல திரில்லா எழுதியிருக்கிறயள்...//

அதுதானே உங்கடை ஸ்டைலுக்கு கட்டுப்பெத்தையே நடங்கியிருக்கும். திரில்லோ அனுபவிதவனுக்குத் தானைய்யா தெரியும் அந்தக் கஸ்டம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// சின்ன அம்மிணி said...
காதலர்களை விட இப்படி உதவி செய்பவர்கள் நிலைமைதான் பாவம். எப்படியோ நீங்க தப்பிச்சீங்க :)//

உண்மைதான் சின்ன அம்மிணி. ஏதோ வேலிபாயும் தைரியம் இருந்தபடியால் தப்பிச்சேன்.

ARV Loshan சொல்வது:

ம்ம்ம்ம்ம் .. வாசித்து முடிக்கையில் நாடோடி படம் பார்த்து முடிக்கும்போது இருந்த உணர்வு..

இந்த வந்திக்குள்ளே இப்படி ஒரு வீரமா?

//எங்கடை ஆட்கள் பெற்றோரைவிட்டுக் கொடுக்காமல் இருக்க காதலை விட்டுக்கொடுக்கின்றார்கள்.

//
சத்தியமான வார்த்தைகள்..