மாகோவில் நின்ற யாழ்தேவியும் தமிழ் விசைப்பலகையும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலில் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட இரண்டு விடயங்களைப் பற்றி சில விளக்கங்கள் கொடுக்கவேண்டியது இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்களின் நானும் ஒருவன் என்பதால் என்னுடைய கடப்பாடாக இந்தப் பதிவு.

கலந்துரையாடல் ஆரம்பித்ததுமே சர்வேஸ்வரன் முதலில் விசைப்பலகை பற்றிய தன் கருத்துக்களைச் சொல்லத்தொடங்கினார். அவருடன் திரு.சேது, கவிஞர் மேமன்கவி, திரு,எழில்வேந்தன், மு.மயூரன் போன்றவர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லத்தொடங்கினார்கள். இதனை இணையத்தினூடாக பார்வையிட்டுக்கொண்ட வசந்தன், சயந்தன், கானாப்பிரபா போன்றவர்களும் தங்கள் கருத்துகளை இணைய அரட்டையில் கூறினார்கள் என அறிந்தேன்.

சில தொழில்நுட்ப சந்தேகங்கள், அனானிப் பின்னூட்டங்கள், வலையுலக விருதுகள் போன்றவற்றைப் கலந்தாலோசிக்க நினைத்த எமக்கு இந்த விசைப்பலகை விடயம் வலைப்பதிவர் சந்திப்பு அப்பால் பட்டதாகவே பட்டது. ஏனென்றால் பல சிக்கல்கள் நிறைந்த இந்த விடயத்தை பல புதியவர்கள் இருக்கும் ஒன்றுகூடலில் பேசியது பலரும் புருவத்தை உயர்த்தவும் நிகழ்வு முடிந்தபின்னர் எங்களிடம் இதனை ஒரு குறையாகவும் சொன்னார்கள்.

அதனால் தான் எங்களினால் இந்த விடயத்தை அரைமணி நேரம் கொடுத்தபின்னர் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. இதனால் தான் மயூரேசனுக்கு இதனைப் பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை(வசந்தனில் எதிர்ப்பாட்டு பதிவில் குறைபட்டிருந்தார்). அத்துடன் வசந்தன் இதனை வாக்கெடுப்பு நடத்தும் படி அரட்டையில் கூறியதாகவும் அறிந்தேன், பலருக்கு தமிழ் விசைப்பலகைகள் பற்றிய எண்ணக்கருவோ அல்லது விடயங்களோ தெரியாத போது எப்படி அதனை வாக்கெடுக்கமுடியும்.

கானாப்பிரபா கூறியதுபோல் விரும்பியவர்கள் விரும்பியதில் தட்டச்சு செய்துவிட்டுபோகட்டும் இதனைப் பற்றி அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மட்டும் அதற்கான இடத்தில் விவாதித்திருந்தால் பயன் கிடைத்திருக்கும். இதுபற்றி வசந்தனின் எதிர்ப்பாட்டு.

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

அடுத்து மருதமூரானின் திரட்டிகள் பற்றிய உரையில் அவர் யாழ்தேவிக்கு விளம்பரம் தேடினார் என்ற குற்றச்சாட்டும், யாழ்தேவி பற்றிய விவாதம் எந்த முடிவுக்கும் வராமல் போனதும். திரட்டிகள் பற்றிய உரைக்கு நான் தான் மருதமூரானை ஒழுங்குபடுத்தியது. அவர் ஆரம்பத்தில் திரட்டிகளின் பயன்கள் பற்றி கொஞ்சம் தெளிவாகச் சொன்னாலும் பின்னர் யாழ்தேவி என்ற திரட்டியைப் பற்றிப் பேசவந்தபின்னர் அதிலையே நின்றுவிட்டார்.

இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே சிலர் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள், அவர்களை கலந்துரையாடலில் கேள்விகளைக் கேட்கும்படி பணித்தோம். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியதும் பலரும் தங்கள் கேள்விகளை அடுக்கடுக்காக மருதமூரான் மேல் வீசினார்கள். அவரும் சளைக்காமல் தன் விளக்கத்தைச் சொன்னார்.

முதலில் மு.மயூரன் தனக்கு இந்தப்பெயர் பிடிக்கவில்லை என்றும் விஜயின் பட டைட்டில் போல் Filled with dreams என்ற வாசகமும் பிடிக்கவில்லை அத்துடன் ரயிலின் படம் எதற்க்கு எனக்கேட்டார்.

முதல் நாள் இரவே நான் மருதமூரானிடம் தொலைபேசியில் பேசியபோது யாழ்தேவி பெயர் பற்றிய சர்ச்சை கட்டாயம் வரும் என்பதைக் கூறினேன். நாம் நினைத்தபடியே யாழ்தேவி சூடுபிடிக்கத் தொடங்கியது. இதுபற்றி மருதமூரான் தன் பதிவில் யாழ்தேவி பற்றிய திறந்த வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

யாழ்தேவியின் முக்கிய குறைபாடாக பதிவர்களின் தொலைபேசி இலக்கம் தொடக்கம் பல தனிப்பட்ட விடயங்கள் கேட்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் இந்த விவாதத்திற்க்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, இதனை இன்னொரு பதிவர் தன் வலையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்தேவியின் பெயரை மாற்றுவதோ அல்லது அப்ப‌டியே வைத்துக்கொள்வதோ அதன் உரிமையாளர்களின் விருப்பம், விரும்பினால் அவர்கள் உத்தரா தேவி உடரட்ட மெனிக்கே என பெயரிட்டாலும் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

எது எப்படியாயினும் யாழ்தேவி மாகோ சந்தியில் இடைநடுவில் நிற்கின்றது. அதனை காங்கேசன்துறை வரை கொண்டு செல்வது எம் கையில் தான் இருக்கிறது. இன்னொரு திரட்டியான பூச்சரத்தின் உரிமையாளரும் வருகின்றேன் என உறுதியளித்திருந்தார் ஆனால் ஏனோ வரவில்லை, வந்திருந்தால் அவரது திரட்டி பற்றிய விபரங்களையும் கருத்துகளையும் அறிந்திருக்கலாம்.

சிலர் யாழ்தேவி தான் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருகிறதாக எண்ணியிருக்கிறார்கள், யாழ்தேவிக்கும் ஒன்றுகூடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட சில பதிவுகள்:

இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது.

அன்புள்ள காதலுக்கு, இல்லைங்க இலங்கைப் பதிவர்களுக்க...

என்ன சந்திப்பு

16 கருத்துக் கூறியவர்கள்:

maruthamooran சொல்வது:

வந்தி.....

தங்களின் சுயவிளக்கம் சரியானதே....... ஆனால், யாழ்தேவி திரட்டிக்கு விளம்பரம் தேடியதாக சிலரால் கூறப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். இதுகுறித்து என்னால் விளக்கமளிக்க முடியாது. ஏன் என்றால் யாழ்தேவி திரட்டி என்னுடையதல்ல. அதன் படைப்பில் நானும் பங்கெடுத்திருந்தான் அவ்வளவுதான். நானும் தனிப்பட்ட பதிவரே.... அந்த நிகழ்வில் நடந்த விவாதங்கள் யாழ்தேவி குறித்து நீண்ட விவாதத்துக்கு வழி அமைத்திருக்கலாம். விழாவினை ஒழுங்குபடுத்தியவர்கள் யாழ்தேவி குழுவினர் என்பது தவறே... சிலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தங்களின் பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

நன்றி பதிவுக்கு வந்தி. இது முதல் சந்திப்பு தானே அடுத்து முறை இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி சொல்வது:

//கானாப்பிரபா கூறியதுபோல் விரும்பியவர்கள் விரும்பியதில் தட்டச்சு செய்துவிட்டுபோகட்டும்//

அப்படி விட்டுவிடுவது நல்லது அல்ல என்றே நான் நினைக்கிறேன்.

phonetic முறையைப் பயன்படுத்துவது சிந்தனையைத் தடைசெய்கிறது நேரத்தை விரயப்படுத்துகிறது என்பதை எல்லோருக்கும் (தெரிந்தவர்கள்) எடுத்துரைக்கவேண்டும்.

Admin சொல்வது:

யாழ்தேவி பற்றிய சர்ச்சை தேவையற்றது என்றே படுகிறது. யாழ் என்பது ஒரு பிரதேசம் என்பதை விடுத்து யாழ் என்பதன் ஏனைய அர்த்தங்களை நினைத்தால் எந்தப் பிரட்சனையும் வரப் போவதில்லை.


அடுத்து யாழ் என்றதுமே எல்லோருக்கும் முதலில் யாழ் என்ற பிரதேசமே ஞாபகத்துக்கு வரும் இதனால் ஒரு பிரதேசம் சார்ந்ததா என்ற சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். இதனை தவிர்க்க முடியாது.

யாழ்தேவி பற்றி பலரும் அறியாது இருக்கின்றனர் என்பது வேறு விடயம் நான் கூட அண்மையில்தான் அறிந்தேன்

இவைகளை யாழ்தேவியுடன் தொடர்பு பட்டோர் கவனத்தில் எடுக்க வேண்டும். பதிவர் சந்திப்பிலே யாழ்தேவி பற்றிய கருத்தாடல்களுக்கு அதிக நேரம் எடுத்திருக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

உங்கள் அயராத உழைப்புக்கு எனது நன்றிகள்

யுவகிருஷ்ணா சொல்வது:

போனடிக் முறை சிந்தனையை தடை செய்கிறது போன்ற விவாதங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. நான் போனடிக் முறையில் தான் டைப் செய்கிறேன். எனக்குத் தெரிந்து சில பிரபலமான எழுத்தாளர்களும் இதே முறையில் தான் டைப் செய்கிறார்கள். எந்த வகையில் இது சிந்தனையை தடை செய்கிறது என்று புரியவில்லை.

சயந்தன் சொல்வது:

திரட்டிகுறித்த உரையை நான் பிறகுதான் கேட்டேன். ஆரம்பத்தில் அது யாழ்தேவி அறிமுக உரை என்று நினைத்தேன். ஆனால் பொதுவான திரட்டிகள் என்ற விடயம்தான் அது என பின்னர் அறிந்தேன்.

திரட்டிகளின் அறிமுகம்.. திரட்டிகளில் எவ்வாறு இணைப்பது.. திரட்டிகளில் இருக்கிற பரிந்துரை சூடான இடுகை நுட்பங்கள்.. ஓட்டு வசதிபற்றி அறிமுகங்களை .. இந்த விடயத்தில் பேசியிருக்கலாம்.

திரட்டிகள் அறிமுகத்தின்போது யாழ்தேவியும் வந்து போயிருக்கலாம்.

சயந்தன் சொல்வது:

சிந்தனையை தடை செய்யாது லக்கி.. ஆனால் அம்மா இங்கே வா என்பதை நீங்கள் மூளைக்குள் amma inkE vaa என பதித்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. எழுதுதல் இனிவரும் காலங்களில் கணணியோடு தங்கிவிடப்போவதால் மூளைகள் amma inkE vaa என்றே சிந்திக்கத்தொடங்கும். தமிழின் எழுத்துவடிவு மூளையிலிருந்து விலகத்தொடங்கும்.

Anonymous சொல்வது:

if M.mayuran dont like yarldevi, it is his real face in tamil struggle. he is the guy who said one useless site which write for moeny is a good social site. ellam visuvaasam than. nakka velikttachu. ella maathitriyum nakka venum.

Anonymous சொல்வது:

best is baamini format. because it is easy fro correction. noone thing in a proper way. all support the type which they know well. vanni.zip endu oru keyman iruku. it is simple and efficient. cool one. baamini is good because it is easy for old ppl also.and this is the standard for long period. all other formats are created by every tamil who knows computer.

ஊர்சுற்றி சொல்வது:

லக்கி,
நீங்கள் இரவுகளில் சிலபல பக்கங்களை எழுதித்தள்ளி விடுகிறீர்கள் என்று உங்கள் பழைய இடுகை ஒன்றில் சொன்ன ஞாபகம். அதனால் நீங்கள் எழுதியதைக் கையிலெடுத்துக்கொண்டு தட்டச்சினால் ஏதும் தடை ஏற்படாது.

ஆனால், என்போன்ற அரைகுறைகள் நேரடியாக தட்டச்சும்போது இதுபோன்ற சிக்கல்கள் வருகின்றன.

சயந்தனின் விளக்கம் அருமை.

நேரமும் மிச்சமாகிறதே லக்கி, தட்டுகளின் எண்ணிக்கையும் குறையும். :)

மாயா சொல்வது:

அருமையான விளக்கம் அண்ணா !
// கானாப்பிரபா கூறியதுபோல் விரும்பியவர்கள் விரும்பியதில் தட்டச்சு செய்துவிட்டுபோகட்டும் // என்று விட்டுவிடுதல் அவ்வளவு நல்லதல்ல என்பதே என் தனிப்பட்ட கருத்து ....

வசந்தன்(Vasanthan) சொல்வது:

ஐயா வந்தி,

'எந்த விசைப்பலகை முறை சிறந்தது' என்று வாக்கெடுக்கச் சொன்னதாக நீங்கள் விளங்கியிருக்கிறீர்கள். அப்படி விளங்கிய வகையில் எழுதியது என்னுடைய தவறேதான்.

நான் சொன்னது வேறு. பதிவர்கள் தாம் எந்தெந்த விசைப்பலகை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கணிப்பீட்டையே நான் எடுக்கச் சொன்னேன். இரண்டு முறைகளைப் பயன்படுத்தினால் (எழில்வேந்தன் கூறியதைப் போல) அவர்களின் எண்ணிக்கை இரண்டிலும் கூட்டப்பட வேண்டும்.

அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனங்களை அறிந்திருக்கிறார்களா என்ற கருத்துக்கணிப்பை எடுப்பதையும் ஒரு வேண்டுகோளாக இப்போது வைக்கிறேன்.

இக்கணிப்பீடுகள் பலவிதங்களில் உதவக்கூடும். தனிப்பட்டளவில் எனக்கு இந்த விவரங்கள் தேவையாகவுள்ளன;-).

கானாபிரபா சொல்லியதற்கு நான் எனது பதிவில் எழில்வேந்தன் அவர்களுக்கான பதிலில் பதிலளித்திருக்கிறேன்.

லக்கி,
தமிழ்ச்சிந்தனை பாதிப்படையும் என்பதே வாதம். ஆனால் இப்போது 'சிந்தனை முறையும் பாதிப்படையும்' என்ற கருத்தையும் சேர்க்கலாமோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்;-)
இதுபற்றி நானெழுதிய இடுகையிலேயே வந்து பின்னூட்டமிட்டுப் போயிருக்கிறீர்கள். ஆனால் இதுபற்றி ஒருசொல் சொல்லவில்லைப் பாருங்கள்;-)

ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான இடுகைகள் வாதங்கள் வலைப்பதிவுகளில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்றன. நாங்கள் எழுதுவது உங்களுக்கு விளங்கச் சிரமம் என்பது தெரியும்.

ஆனால் தமிழகப் பதிவர்கள்தாம் மிகத் தீவிரமாக ஆங்கில ஒலியியல் முறையை எதிர்த்து எழுதினார்கள்.

வசந்தன்(Vasanthan) சொல்வது:

ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்களுக்கென்றே தனியாக எழுத்துப்பிழைகள் இருக்கின்றன.
மற்ற விசைப்பலகை முறைகள் போலன்றி மிகமிகக் கூடுதல் கவனம், மீளச் சரிபார்க்க வேண்டிய தேவை என்பன இம்முறைக்கு உண்டு.
------------------
வைக்கப்படும் விமர்சனத்துக்கு சரியான எதிர்விமர்சனத்தை வைப்பதென்பது நியாயம். அல்லது ஆங்கில ஒலியியல் விசைப்பலகையால் தீங்கில்லை, இவை வெற்றுப் பயங்களே எனச் சொல்வதுகூட பரவாயில்லை. 'ஓம். நீங்கள் சொல்லிற வாதங்கள் நியாயமானவைதாம், ஆனால் என்னால உதை உடன விட ஏலாமல் கிடக்கு' என்று சொல்வதில் நேர்மையிருக்கிறது.
ஆனால் நசுக்கிடாமல் இருந்துகொண்டு, "எப்பிடி எழுதினாலும் சரிதானே? உதுக்கை ஏன் பிடுங்குப்படுவான்?" என்பதை எப்படிச் சொல்வது?

கரவைக்குரல் சொல்வது:

பிரதேசம் சம்பந்தப்படுத்தி தேவையற்ற விவாதங்கள் எடுக்கப்பட்டமை வருத்தமளிக்கிறது,இவையெல்லாம் ஒரு முன்னேற்றகரமான செயற்பாடுகள் அல்ல.
என்றாலும் இவற்றையெல்லாம் கருத்திலெடுக்காமல் தொடர்ந்து பயணிக்கட்டும் பதிவர் சந்திப்புக்கள்

ARV Loshan சொல்வது:

வந்தி, வந்தேன், பார்த்தேன், படித்தேன்..

தட்டச்சு சர்ச்சை எனக்கு வேண்டாம்.. நழுவல் என்று சொல்லி தெரியும் ஆனால் நான் தெரிந்தே என்னைக் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை..
தர்க்கத்தில் ஈடுபட நேரமும் இல்லை..

வந்தி உங்கள் விளக்கங்கள் நன்று

S. Mani சொல்வது:

இப் பதிவு மற்றும் வேறு சில வலைப்பதிவுகளிலுள்ள பதிவுகளிலும் தமிழ் விசைப்பலகை முறைகள் தொடர்பாக காணப்பட் கருத்துக்களையும் அது தொடர்பான பின்னூட்டங்களையும் படித்தேன். அது பற்றிய எனது புரிதல்களை ஒரு வலைப்பதிவாக ஆரம்பித்துள்ளேன்.

http://manimanasu.blogspot.com/2009/09/blog-post.html

தயவு செய்து எனது புரிதல்களை செவ்வை செய்யவும்.