Showing posts with label இங்கிலாந்து. Show all posts
Showing posts with label இங்கிலாந்து. Show all posts

மும்முனைப்போட்டி - இங்கிலாந்து தேர்தல்

இன்று இங்கிலாந்து பாராளமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் நடைபெற்ற சூடான விவாதங்கள் முடிவடைந்துவிட்டது. ஆளும் லேபர் கட்சி இம்முறை வெல்வதற்கான அறிகுறிகள் இல்லையென கடைசி நேர கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.



ஆளும் லேபர் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளரும் தற்போதைய பிரதம மந்திரியுமான கோர்டர் பிறவுணுக்கும் கொன்சவேர்ட்டி பார்ட்டி எனப்படும் பழமைவாதக் கட்சியின் டேவிட் கமரூனுக்கும் லிபரல் கட்சியின் நிக் கிளெக்கும் நடைபெறும் மும்முனைப்போட்டியில் கோர்டர் பிறவுண் பிந்தங்கி நின்கின்றார்.



ஆப்கான், ஈராக் பிரச்சனைகளும் பொருளாதார சிக்கல்களும் ஆளும் கட்சியை ஆட்டிப்படைத்தாலும் பழமைவாதக் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கைகள் முரண்பாடாக இருக்கின்றது. அதே நேரம் லிபரல் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்தில் புகழிடம் கோருகின்றவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள்.



கோர்டன் பிறவுண் தங்களால் மட்டும் தான் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லமுடியும் என்கிறார். அத்துடன் தங்கள் கட்சி தோல்வி அடைந்தால் அது தன்னுடைய தனிப்பட்ட தோல்வியே ஓழிய கட்சியின் தோல்வி அல்ல என ஒரு அறிக்கையும் விட்டிருக்கின்றார்.

மாற்றம் தேவை என பழமைவாதக் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றார்கள். 1966 ஆம் ஆண்டு பிறந்த டேவிட் கமரூனுக்கும் அவரைவிட ஒரு வயது குறைந்த நிக் கிளெக்குக்கும் தான் தற்போது போட்டி அதிகமாக உள்ளது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் கோர்டன் பிறவுண் தோல்விகளைத் தழுவினாலும் ஆசிய மக்களின் வாக்குகளையும் இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் வாக்குகளையும் பெரிதாக நம்பி இருக்கின்றார். கோர்டன் பிறவுணை மீண்டும் தெரிவு செய்தால் இங்கிலாந்து 1980களில் இருந்ததுபோல் இருக்கும் என டேவிட் கமரூன் கூறிவருகின்றார். அத்துடன் அவர் எம்ஜீஆர் பாணியில் சுப்பர்மார்க்கட்டுகளுக்கும் பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து மக்களுடன் மக்களாக இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

நிறவாத கருத்துகளை உடைய கட்சி எனப் பலரால் குற்றம் சாட்டப்படுகின்ற பழமைவாதக் கட்சியில் சில ஈழத்தமிழர்களிம் இந்தியர்களும் போட்டி இடுகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலும் இங்கிலாந்துப் பத்திரிகைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருக்கின்றன. நேற்றைய மாலை லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட்டின் ஆசிரியர் தலையங்கம் டேவிட் கமரூன் அடுத்த பிரதமராக வேண்டும் என எழுதியிருந்ததுடன், இறுதிக் கருத்துக் கணிப்பில் பழமைவாதக் கட்சி 36%, லேபர் 31% லிபரல் 27% என தெரிவித்திருந்தார்கள்.

அதே நேரம் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாது எனவும் தொங்குபாராளூமன்றம் ஏற்படலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எது எப்படியோ ஜோர்ஷ் புஷ் ஆப்கானில் இட்ட தீ இங்கிலாந்தின் ஆட்சி மாற்றத்திற்க்கு காரணமாக அமையலாம்.

இவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. வேட்பாளர்களே வீதியில் தனித்து நின்று(அல்லக்கை நொள்ளைக்கைகள் இல்லாமல்) துண்டுப் பிரசுரம் கொடுப்பதும் வீடுவீடாக ஏறி தங்களுக்கு வாக்கு கேட்பதும் அதிரடியான தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்த எமக்கு ஆச்சரியம் தான். இதே நேரம் பழமைவாதக் கட்சியினர் லேபர்க் கட்சியையும் கோர்டன் பிறவுணையும் நக்கலடித்து பல இடங்களில் பெரிய கோர்டிங்குகள் வைத்திருந்தார்கள். இதனைப் பலர் ரசிக்கவில்லை என்பதாலோ என்னவோ சில நாட்களில் அவற்றை எடுத்துவிட்டு தங்களின் வாக்குறுதிகளை வைத்திருக்கின்றார்கள்.

நான் இருக்கும் பகுதியின் வேட்பாளர் தமிழ்மொழியில் கடிதம் எழுதி ஏன் தனக்கு வாக்களிக்கவேண்டும் என விளக்கம் கொடுத்திருந்தார். எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள்.யார் வெல்கின்றார்கள் இதன் பின்னர் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"Only a vote for Labour will keep our society fair " - Gorden Brown



"Tactical voting could mean five more years of Gorden Brown" - David Cameron


"Vote with your hearts, vote for what you believe in" - Nick Clegg

நலம் நலமறிய ஆவல்

எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே. என்னை ஞாபகம் இருக்கின்றதா? ம்ம்ம் நீண்ண்ண்ண்ட நாட்களாக வலையுலகம் எனக்கு அந்நியப்பட்டிருந்தது. சில பதிவுகள் மட்டும் வாசித்துவிட்டு போய்விடுவேன், திரட்டிகளைக் கூட மறந்து(கடவுச் சொற்களையும் தான்) போனேன். எல்லாம் காலம் செய்த கோலம்.



வாழ்க்கையில் சில விடயங்கள் தீடிரெனத் தான் நடக்கும் என்றைக்கோ எதிர்பார்த்த விடயம் சரிவராது என மனம் தளர்ந்து சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என இருந்த விடயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தேறிவிட்டது, கல்விக்காக லண்டன் செல்லவேண்டி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில நண்பர்களுக்கு சொல்லமுடியாமல் விமான ஏறிவிட்டேன். இதனால் வலையுலகம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்தும் சில நாட்கள் மறந்து போய்விட்டேன்.

அதே நேரம் சொந்தநாட்டில் தாராளமாக கிடைத்த நேரம் இங்கே கிடைப்பது அரிது. ஆகவே அந்நியனாக மாறிவிட்டேன். அத்துடன் வலையில் வீண் பொழுதைப் போக்கவேண்டாம் என சிலர் அதிரடியாக கண்டித்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துவிட்டேன்.

என்னதான் விடுப்பு எடுத்தாலும் தட்டிய கீபோர்ட்டும் கிளிக்கிய மெளசும் சும்மா இருக்கவிடவில்லை அதனால் இடையிடையே எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஏதாவது எழுதுவேன். என்ன இனி திரைவிமர்சனம் உடனடியாக எழுதமுடியாது. இங்கே படம் பார்க்கின்ற காசுக்கு ஊரிலை ஒரு பட்டாளமே படம் பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு வந்தபின்னர் இங்கேயிருக்கும் பதிவர்கள் மாயாவும் கரவைக்குரலும் என்னுடன் தொடர்புகொண்டார்கள். கரவைக்குரல் பகிடியாக இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடத்த இலங்கையில் இருந்து ஆட்களை அழைத்துவரவேண்டும் என்றார்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? என்பது இன்னொரு நாட்டில் வசிக்கும் போதுதான் தெரிகின்றது. ஒரு சில சுதந்திரங்கள் கிடைத்தாலும் இலங்கையில் வாழ்ந்ததுபோல் இல்லை. ஒரு சோர்ட்சும் ரீசேர்ட்டும் என இங்கே குளிரில் திரியமுடியாது. அப்படிக் குளிர் வாட்டுகின்றது. விரைவில் சமர் வரும் வெயில் கொடுமையாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.

என் நாட்டையும் நண்பர்களையும் குறிப்பாக பதிவுலக ட்விட்டர் நண்பர்களையும் கும்மிகளையும் ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன். ஒன்றை இழந்துதான் இன்னொன்று கிடைக்கும் என்பதாலும் இன்றைய நவீன தொலைத்தொடர்பு முறைகளாலும் கொஞ்சம் மனத்திருப்தி.

சச்சினின் இரட்டைச் சதம்,நித்தியானந்தா, ரஞ்சிதா, நயந்தாரா, ஜனாதிபதித் தேர்தல், ஆயிரத்தில் ஒருவன், அசல், கோவா என இழந்தவை பல. அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவ்வளவு கிராக்கி இல்லை. கடும் குளிரிலும் மஞ்செஸ்டர் யுனைட்டடும் செல்சியும் ஒரு பந்துக்காக அடிபடுவதை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றார்கள் பின்னர் அது பற்றித்தான் செல்லும் இடம் எல்லாம் விவாதிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு பிளின்டொப், பீட்டர்சன், கொலிங்வூட் யார் என்பதே தெரியாது.

இங்கேயும் அம்மா பகவான் கல்கி பகவான் பக்தர்களும் இந்தியாவில் இருந்து வருகை தரும் ஜோதிடசிகாமணிகளும் அதிகம், இவர்களின் விளம்பரம் தொலைக்காட்சிகளிலும் வருகின்றது. மானாட மயிலாடவிற்க்கும் சில மெஹா சீரியல்களுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இனிவரும் நாட்களில் இன்னும் பல்சுவையான அம்சங்களுடன் மீண்டும் சந்திக்கின்றேன்(இந்தப் பதிவு எழுதி முடிக்கவே 4 நாட்கள் எடுத்தன).

சரித்திரம் படைத்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியில் கடைசிநாளான இன்று அவுஸ்திரேலியாவை 115 ஓட்டங்களால் தோற்கடித்தது இங்கிலாந்து.

லண்டன் லோட்ர்ஸ் மைதானத்தில் 1934 ஆம் ஆண்டிற்க்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 75 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை இன்று அன்றூ ஸ்ரோஸின் இங்கிலாந்து அணி முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.



522 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களை சொறப ஓட்டங்களில் இழந்திருந்தாலும் பின்னர் வந்த கிளார்க்கின் அபார சதத்தினாலும் பிராட் ஹடினுடான சிறந்த இணைப்பாட்டத்தினாலும் தங்கள் தோல்வியை சற்று நேரம் பிற்ப்போட்டது என்றே கூறலாம். இதற்கு மிச்சல் ஜோன்சனும் தன் பங்குக்கு கொஞ்சம் உதவினார்.

அன்றூ பிளின்டோவ் இரண்டாவது இனிங்சில் 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தன் லோர்ட்ஸ் மைதான இறுதிப்போட்டியிலிருந்து இனிமையான நினைவுகளுடன் விடைபெற்றார். போட்டியின் நாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது.

ரிக்கி பொண்டிங் வழக்கம்போல் நடுவர்கள் செயல்ப்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டைக் கூறினார். ஒரு போட்டியில் தோற்றால் நடுவர்களையும் எதிரணியையும் ஆடுகளத்தையும் குற்றம் சாட்டும் ஒரே அணி ஆஸி தான்.

2009ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 1 க்கு 0 என்ற நிலையில் முன்னணி வகிக்கின்றது. இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியா தன் திறமையைக்காட்டுமா? இல்லை இங்கிலாந்து இதே உத்வேகத்துடன் எதிர்வரும்போட்டிகளை வென்று கிண்ணத்தை சுவீகரிக்குமா?