ஜெயிக்கபோவது யாரு?

பதிவுக்கு முன்னர் ஒரு முன்குறிப்பு :
சில நாட்களாக எந்தவிதபதிவுகளும் இடவில்லை. காரணம் பலருக்கு புரிந்திருக்கும். அரசியல்பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை ஆனாலும் நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் எழவு வீட்டில் கிரிக்கெட், சினிமா மொக்கை என என் பதிவுகளை இடமனம் இடம் தரமறுத்ததால் கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக வலைமனையில் புதிதாக எந்தப்பதிவும் இடவில்லை. ஆனாலும் தமிழ்மணத்தின் உதவியுடன் பெரும்பாலான வலைமனைகளுக்கு விஜயம் செய்து சிலருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டும்.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக முடிந்து மீண்டும் ஐசிசி டி20 உலக கிண்ணம் இன்றிரவு ஆரம்பமாகின்றது. போட்டிகளை நடத்தும் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் இன்றைய முதல் போட்டியில் மோதுகின்றன. நடப்புச் சம்பியன் இந்தியா நாளை வங்கதேசத்தை எதிர்தாடுகின்றது.


இங்கிலாந்தில் தற்போது கோடைகாலம் அதிலும் வெயில் இந்திய உபகண்டத்தைப்போல் இருப்பதால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு காலநிலை பிரச்சனை கொடுக்காது.

நான்கு குழுக்களாக 12 அணிகள் கலந்துகொள்கின்றன. இனவெறி காரணமாக சிம்பாவே சேர்த்துக்கொள்ளப்படவில்லை(?). ஒவ்வொரு குழுக்களிலும் முதல் இரண்டிடம் பெறும் அணிகள் சூப்பர் எட்டு போட்டிகளில் ஆடும். குழு சியில் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள் உள்ளன. இந்தக்குழுவில் மட்டும்தான் எந்த அணிகள் முதல் இரண்டு இடம் பெறும் என்பதைக் கணிப்பது கஸ்டம். ஏனையவற்றில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகள் இருப்பதால் ஏனைய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு அவ்வளவு சிரமம் இருக்காது.

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா இங்கிலாந்து போன்றவை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பெரும்பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. பாகிஸ்தான் அணியில் உள்ள சிக்கல்களால் சென்றமுறை இறுதிக்கு வந்ததுபோல் இம்முறையும் வருமா என்பது சந்தேகமே.

பயிற்சி ஆட்டங்களில் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா என்பன சிறப்பாக ஆடின. இந்தியாவின் நியூசிலாந்திடம் ரி20 போட்டிகளில் தோற்கும் பலன் பயிற்சி ஆட்டத்திலும் நிரூபணமாயிற்று. அதே நேரம் இந்தியா தன் விளையாட்டு எதிரியான பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது. இங்கிலாந்தும் பயிறிப்போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தன் நிலையை காட்டியது. பயிற்சி ஆட்டங்களின் போது இலங்கை தடுமாறியதும் சங்கககாராவின் புதிய தலைமையும் இலங்கைக்கு வெற்றி கொடுக்குமா?

சில முக்கியமான அணிகளின் பலம் பலவீனம் :

தென்னாபிரிக்கா :

சிமித் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியில் ஐபிஎலில் கலக்கிய கிப்ஸ், கலீஸ், டும்மினி, டீ வில்லியர்ஸ், மோர்கல், பவுச்சர் போன்ற நீண்ட பலமான‌ துடுப்பாட்ட வரிசை. வண்டர் மேர்வே, க‌லீஸ், டும்பினி, மோர்கல் என சகல துறைவீரர்கள் பலரும் போர்மில் இருப்பது. எனப்பலமான அணியாக காணப்படுகின்றது .பந்துவீச்சில் யூசுப் அப்துல்லா, டேல் ஸ்ரென் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அனுபவ வீரர் நிட்னி இல்லாதது கொஞ்சம் பலவீனமே. அத்துடன் உலகப்கோப்பைப்போட்டிகளில் இவர்களின் அதிர்ஷ்டமில்லாமை இன்னொரு பலவீனமாகும்.

அவுஸ்திரேலியா :
பொண்டிங் தலைமையிலான ஒருநாள் போட்டிகளின் நடப்புச் சம்பியன் ஆஸி இம்முறை எப்படியேனும் இருபது20 போட்டிகளிலும் தங்கள் பராக்கிரமத்தைக் காட்டவே செய்வார்கள். இவர்களின் அதிரடி தொடக்கவீரர்களான மத்யூ ஹெடன், கில்கிறிஸ்ட் இருவரும் ஐபிஎலில் அதிரடிவாணவேடிக்கை காட்டியவர்கள். இவர்கள் இருவரும் அணியில் இல்லாதது பெரியபலவீனமே. அத்துடன் ஷோன் மார்ஷ், சர்ச்சைகளின் நாயகன் அன்ரூ சைமண்ட்ஸ் அணியில் இல்லாதது இன்னொரு வகையில் ஆஸிக்கு ஆப்புத்தான். டேவிட் வார்னர், பொண்டிங், மைக்கள் கிளார்க், டேவிட் மற்றும் மைக்கள் ஹசி ஆகியோரில் துடுப்பாட்டம் பெரிதும் தங்கியிருக்கின்றது. பிரட் லீ, மிச்சல் ஜோன்சன், நேதன் பிராக்கன் மிரட்டல் வேகங்கள் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும்.

இந்தியா :
நடப்புச் சம்பியன் இந்தியா இம்முறையும் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ள எப்படியும் முயற்சி செய்யும். ஐபிஎலில் சொதப்பிய ஆரம்ப ஜோடிகளான கம்பீர், சேவாக் (இருவரும் டெல்லிக்காக ஆரம்பவீரர்களாக களமிறங்கியிருந்தாலும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை) இங்கிலாந்தில் பிரகாசிப்பார்களா? இல்லை பயிற்சிப்போட்டிகளின் போது கம்பீருடன் ரோகித் சர்மா களமிறக்கப்பட்டு அது வெற்றிகரமாக இருந்தபடியால் ரோகித் சர்மாவும் கம்பீரும் களமிறங்குவார்களா? சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான், யுவராஜ் சிங், டோணி என பலமான துடுப்பாட்ட வரிசை. இதில் ஜடேஜா ரெய்னா போன்றவர்கள் ஐபிஎல்லில் தங்கள் திறமையை நிருபித்தவர்கள்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஆர்பிசிங் ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். இஷாந்த் சர்மா, இர்பான் பதான், பிரவீன் குமார் காயத்திலிருந்து மீண்டால் ஷாகீர் கான் என வேகங்கள் அச்சுறுத்தலாம். சுழலில் பிரயன் ஓஜா, ஹர்பயன் மாயம் செய்யலாம். பகுதி நேரப்பந்து வீச்சாளர்களான ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், யூசுப் பதான்,ஜடஜா விக்கெட்டுகள் வீழ்த்தினால், இந்திய அணியின் இரண்டாம் முறை வெல்லும் கனவு நனவாகலாம்.

மிகப்பெரிய பலவீனமாக இந்திய அணியின் களத்தடுப்பு. பயிற்சி ஆட்டங்களின்போது கூட அப்பட்டமாக இவர்களின் களத்தடுப்பு பிழைகள் தெரிந்தன. ஐபிஎல்லில் சென்னையை அரையிறுதியில் தவறான வழியில் கொண்ட சென்ற டோனி அதே தவறுகளை செய்யக்கூடாது, அத்துடன் டோனி ஒருநாள் போட்டிகள் ஆடுவதுபோல் இருபது ஓவர் போட்டிகளில் ஆடுவதையும் நிறுத்தவேண்டும்.

இலங்கை :
சங்ககாரா தலைமையிலான பழைய வீரர்கள் சில புதிய வீரர்கள் என்ற கலவையான அணி. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஜெயசூரியாவுடன் பெரும்பாலும் டில்ஷான் ஆடவரலாம். தொடர்ந்து ஜெயவர்த்தனா, சங்கக்கார, மகரூப் சாமர சில்வா என பலம் குன்றிய துடுப்பாட்ட வரிசை. பந்துவீச்சில் மாலிங்காவில் மட்டும் வேகப்பந்துவீச்சில் தங்கியிருப்பது. திலான் துஷாரா, இசுரு உதான இருவரும் புதிய முகங்கள். சுழலில் முரளிதரன் அஜந்தா மெண்டிஸ். மெண்டிஸ் மந்திரம் ஐபிஎல்லில் அவ்வளவாக பலிக்கவில்லை. அத்துடன் இவர்கள் இருக்கும் குறூப்பும் அட்டமத்தில் சனி உள்ள குறூப். இலகுவாக வெல்ல நெதர்லாந்தோ ஸ்கொட்லாந்தோ இல்லை. ஆஸியும் மேற்கிந்தியத்தீவுகளும் இருவரில் ஒருவரையாவது வெல்லவேண்டும். இலங்கைக்கு ரி20யில் அவ்வளவு இலகுவாக வெற்றி கிடைக்காது.

இங்கிலாந்து :
சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய பலம், இதுவரை எவ்வித உலகக்கோப்பைகளும் கைப்பற்றவில்லையென்பது இவர்களின் பெரிய துரதிஷ்டம், போல் ஹொலிங்வூட் தலைமையிலான அணியில் பீட்டர்சன், ரவி போபரா, ஓவைஸ் ஷா என ஒருசில நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள். பந்துவீச்சிலும் அன்டர்சன் நம்ம மன்னார் பொடியன் டிமிதிரி மஸ்ஹரின்ஹஸ் ( உச்சரிப்பதே கஷ்டம்) சைட்பொட்டம் போன்றவர்கள் ஓரளவு பிரகாசித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

பாகிஸ்தான் :
யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் 17வயது நிரம்பிய
அஹமட் ஷெஷாட் பயிற்சிப்போட்டிகளின் போது திறமைகாட்டினார்.யூனிஸ் கான், சல்மான் பட், மிஷ்பா உல் ஹக், அப்ரிடி, ஷோயிப் மாலிக், யசீர் அரபாத், கம்ரன் அக்மல் என பலமான நீண்ட‌ துடுப்பாட்ட வரிசை. அண்மையில் ஆஸியை துபாயில் வெற்றி பெற்ற மனத்தைரியம் போன்றவை பாகிஸ்தானை இம்முறையும் இறுதிப்போட்டிவரை அழைத்துச் செல்லுமா? இல்லை இடையில் இவர்களின் கனவு பறிபோயிடுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பந்துவீச்சைப்பொறுத்தவை அக்தர், குல், தன்வீர் வேகங்கள் திறமைகாட்டினால் பாகிஸ்தான் கோப்பையைக்கூட வெல்லமுடியும். மிரட்டுகின்ற சுழல் பந்துவீச்சாளர் இல்லையென்பது மிகப்பெரிய பலவீனம்,

நியூசிலாந்து :

டானியல் விட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணியில் கொல்கத்தா நைட் ரைடருக்கு தலைமைதாங்கிய மெக்கலம், ஜெசி ரைடர், ரோஸ் டைலர், ஸ்கொட் ஸ்ரைரிஸ், நாதன் மெக்கலம், குப்தில், ஜேக்கப் ஓரம், கப்டன் விட்டோரி என பலமான துடுப்பாட்ட வரிசை எதிரணியின் பந்துவீச்சாளர்களை சின்னாபின்னப்படுத்தலாம். ஓ பிரெய்ன், இயன் பட்லர் போன்ற ஆகிய வேகங்களுடன் விட்டோரியின் சுழலும் ஜாலம் செய்தால் நியூசிலாந்தும் ஏனைய அணிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும்.


மேற்கிந்திய தீவுகள் :
கிறிஸ் கெய்ல் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், சர்வான், சந்திர‌போல், பிராவோ, போன்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரகள் இருந்தாலும் பலம் வாய்ந்த குறூப்பில் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்றால் ஆஸியை அல்லது இலங்கையை வென்றே ஆகவேண்டும் என்ற நிலை. பந்துவீச்சில் எட்வேர்ட்ஸ், ஜெரோம் டைலர், போன்றவர்கள் திறமைகாட்டினால் வெற்றிவாய்ப்புகள் கிடைக்கும். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் ஆகவே ஒருமுறை டாக்காவில் மினி உலகக்கிண்ணத்தை வென்றதுபோல் மேற்கிந்தியதீவுகள் முயற்சி செய்துபார்க்கலாம்.

என்னுடைய கணிப்பின் படி இங்கே எப்படி நாடுகளைப் பட்டியல் இட்டிருக்கின்றேனோ அதேபோல் தான் வெற்றுவாய்ப்புகளும். எதற்க்கு சில நாட்கள் பொறுத்திருந்துபார்ப்போம்.

டிஷ்கி 1: இங்கேயும் சியர்ஸ் லீடர்கள் ஆடுகின்றார்களா? என சியர்ஸ் லீடர்களின் பரமவிசிறிகள் கேட்கின்றார்கள்?

மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

இங்கிலாந்துக்கு முதல் அதிர்ச்சி தோல்வியை நெதர்லாந்த் கொடுத்துவிட்டது. முதல்போட்டியே விறுவிறுப்பாக இருந்தது. இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ?

செந்தூரன்