சித்திரைப் புத்தாண்டு - இன்னொரு சாதாரண நாள்

நேற்று சித்திரைப்புத்தாண்டு 13ந்திகதி வாக்கிய பஞ்சாங்கப்படி 11மணி 7 நிமிடத்திற்க்குப் பிறந்தது அந்த நேரம் முதலே எஸ் எம் எஸ்சில் வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன பெரும்பாலான வாழ்த்துக்களில் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக பிரார்த்திக்கவும் என்ற வாசகவே அதிகமாக காணப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இருந்து வந்த குறும்செய்திகள் ஒரு இணையத்தளத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

திருக்கணித பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்கும் அன்பர்கள் நள்ளிரவு 12 மணி 47 நிமிடத்தில் இருந்து தங்கள் செய்திகளை(வாழ்த்துக்கள் என்பதை விட செய்தி என்பதே பொருத்தமான சொல் காரணம் வாழ்த்தைவிட ஒரு இனத்தின் அவலத்தைத் தான் பெரும்பாலான செய்திகள் தாங்கிவந்தன) அனுப்பினார்கள். ஒரு சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் செய்திகள் அனுப்பியபின்னர் போன் பண்ணி தாங்கள் அனுப்பிய செய்தி கிடைத்ததா என விசாரித்தார்கள்.

காலையில் தொலைக்காட்சியை திறந்தால் சன்னில் மஹதி பாடிக்கொண்டிருந்தார், கலைஞரில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பும் திருமாவளவனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்னொரு சானலில் யாரோ ஒருவர் பாடினார், இசையருவியில் ராஜாவின் ராஜகீதங்களை ஒருவர் சாக்ஸ்சபோனில் உருகிஉருகி வாசித்தார். காலையில் பாடியவர்கள் அனைவரும் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார்கள் என்பது சிறப்பாக இருந்தது.

கோவிலுக்கு கட்டாயம் போகவேண்டும் என்ற அம்மாவின் கட்டளையைத் தட்டாமல் கப்பித்தாவத்தை கயிலைநாதரைத் தரிசிக்க சென்றேன். பெரிதாக கூட்டம் இல்லை. வீதிகளில் கூட முன்னைய கலகலப்பு இல்லை. மக்கள் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை.

சன்னில் இடம்பெற்ற ரகுமானின் பேட்டி, விஜய் டீவியில் அனுவுடன் காபி குடித்த தயாநிதி மாறனின் பேட்டி என்பன இதனால் தவறிவிட்டது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் அடிக்கடி மறுஒளிபரப்புவார்கள் அதனால் மீண்டும் பார்க்க சந்தப்பம் கிடைக்கும்.

விஜய் டிவியில் மாத்தியோசி என்ற நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர்களும் அடுத்த பிரபுதேவாக்களும் ஆடிப்பாடினார்கள், அதிலும் ரவி வெட்கப்படாமல் ஜெயலக்ஸ்மியுடன் ஆடினார். சாய்பல்லவி அழகாகப்பாடினார். எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியதுபோல் பிரேம்கோபால் ஆடியபாடலும் பின்னர் அந்தப்பாடலுக்கு அவர்கொடுத்த விளக்கமும் அருமையாக இருந்தது. அனைவரும் எழுந்து பிரேம்கோபாலுக்கு மரியாதை செய்தார்கள்.

அடுத்து நீயா, நானா புகழ் கோபிநாத்தின் நெறியாள்கையில் பேராசிரியர் பெரியார் தாசனின் தலைமையில் சின்னத்திரைத் தொகுப்பாளர்கள் நடிக நடிகைகள் பங்குபற்றிய ஆய்த எழுத்து என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. சிறிது நேரமே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

பின்னர் நடிகர் சிவகுமாரின் கம்பன் என் காதலன் என்ற நீண்ட( இரண்டரை மணி நேரம்) இராமாயணச் சொற்பொழிவு நிகழ்ந்தது. மனிதர் என்ன அருமையாக பாடல்களைச் சொல்லி விளங்கப்படுத்தினார். கிட்டத்தட்ட 3000 பேர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள் பெரும்பான்மையானவர்கள் கல்லூரி மாணாவிகள், சில பிரபல கம்பன கழகத் தலைகளும் முன்னால் இருந்தார்கள் குப்புசாமி முதலியார், வழக்கறிஞர் முருகேசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

100 பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு இராமாயணத்தை மிகவும் சுவையாக நின்ற நிலையில் சொற்பொழிவாற்றினார். இராவணனைப் பற்றி விளக்கியபோது மாணவிகளிடம் பழத்த கரகோஷம். சீதையைக் கடத்தியதைத் தவிர வேறு எந்தக் கெட்டபழக்கமும் அவரிடம் இல்லை. சூர்ப்பனகை பற்றிய பாடல் விளக்கத்திற்க்கும் கரகோஷம் அதிகம்.

பாமரர்களுக்கும் புரியும் படி இவர் உரையாற்றியதுதான் சிறப்பாக இருந்தது. சிலவேளைகளில் கம்பன் விழா மேடைகளில் இவரைக் இனிக் காணமுடியும்.

இரவு சன்னில் அயன் சிறப்புக் கண்ணோட்டம் நடந்தது. தமன்னா கொஞ்சும் தமிழில் பேசினார். சூரியா, கே.வி.ஆனந்தை விட நண்டு ஜெகனே அதிகம் பேசினார். சன் பிக்சர்ஸ் பற்றி அதிகம் அலட்டிக்காமல் அனைவரும் ஏவிஎம்முக்கே நன்றி கூறினார்கள்.

யுவனின் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் வாமனன் படங்களின் இசைபற்றியும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார்கள். குங்கப்பூவும் பாடல்கள் கேட்கும் ரகம் வாமனனில் சில பாடல்கள் கேட்கும் ரகம். ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது யுவன் இளவரசனிலிருந்து ராஜாவாக முன்னேறிக்கொண்டிருக்கின்றார்.

நேத்ரா தொலைக்காட்சியில் உலகத் தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக சிலம்பாட்டம் ஒளிபரப்பினார்கள். (இவர்களுக்கு மட்டும் எப்படி இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் ஒளிபரப்பக் கிடைத்தது என்பது கேள்விக்குறி). சொந்தச் செலவில் சூணியம் வைக்கவில்லை.

மொத்ததில் நேற்றைய நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் சென்ற மற்றுமொரு சாதாரண நாளே.

2 கருத்துக் கூறியவர்கள்:

ராஜன் சொல்வது:

//நேத்ரா தொலைக்காட்சியில் உலகத் தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக சிலம்பாட்டம் ஒளிபரப்பினார்கள்.//

அதுக்குள்ளேயா.... புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Muruganandan M.K. சொல்வது:

"கோயிலில் பெரிதாக கூட்டம் இல்லை. வீதிகளில் கூட முன்னைய கலகலப்பு இல்லை. மக்கள் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை"

இன்னொரு சாதாரண நாள் என்றும் சொல்ல முடியவில்லையே.