சுவாரஸ்யமற்ற டெஸ்டும் சமிந்த வாஸும்

மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு வெள்ளையடிக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டமும் டனேஷ் கனேரியாவின் சுழலும் மூன்றாவது டெஸ்ட்டை பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றிகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு அதிலும் சங்கக்கார, அஞ்சலோ மத்யூஸ் இருவரினாலும் அதுவும் முடியாமல் இறுதியில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முதலாவது இனிங்ஸ்சில் பாகிஸ்தான் மொகமட் யூசுப், குராம் மன்சூர் இருவரினதும் 90களால் 299 ஓட்டங்களை எடுத்தது. மொகமட் யூசுப் 90களில் தேவையற்ற ஓட்டம் ஓடி தன் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். திலான் துஷாரா தன் முதலாவது 5 விக்கெட்டுகளை எடுத்தார். 83 ஓட்டங்கள் மாத்திரம் கொடுத்திருந்தார்.

இலங்கை அணி தன் முதலாவது இனிங்சில் மீண்டும் அணிக்குத் திரும்பிய டனேஷ் கனேரியாவின் பந்துவீச்சில் 233 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவ்வளவு சோபிக்காத ஜெயவர்த்தன 79 ஓட்டங்களை பெற்றார். கனேரியா 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தன் இரண்டாவது இனிங்சில் சொயிப் மாலிக்கின்(134) சதமும் மிஸ்பா உல் ஹக்(65), கம்ரன் அக்மல்(74) இருவரினதும் அரைச்சதங்களும் கைகொடுக்க பாகிஸ்தான் இந்ததொடரில் தன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையான 425 ஐ ஒன்பது விக்கெட்டுக்களுக்கு இழந்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. ரங்கன ஹேரத் 157 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இவரது இத்தொடரின் இரண்டாவது 5 விக்கெட்டுகள் ஆகும்.



492 என்ற இமாலய இலக்கை நோக்கி தன் இரண்டாவது இனிங்சை தொடங்கிய இலங்கை அணி சங்கக்கார, சமரவீர, பரணவிதான‌ அஞ்சலோ மத்யூஸ் போன்றவர்களின் பொறுமையான துடுப்பாட்டத்தினால் தோல்வியில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்றே கூறவேண்டும். இன்றைய ஆட்டத்தில் சங்கக்கார அல்லது மத்யூஸ் இருவரில் ஒருவரது விக்கெட் விழுந்திருந்தாலும் ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இருந்திருக்கும். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களினால் இவர்களது விக்கெட்டை சாய்க்கமால் போகவே இரண்டு தலைவர்களும் சேர்ந்து ஆட்டம் சமநிலையில் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்ததொடரை இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இதுவரை இலங்கை அணி பாகிஸ்தானை இலங்கையில் வைத்து தொடர் வெற்றி ஈட்டியதில்லை. புதிய அணித்தலைவர் சங்கக்காரவின் புத்திசாலித்தனமான ஆட்ட நுட்பங்களும் அபார துடுப்பாட்டமும் இளமையான புதுமுக வீரர்களும் அவரது முதல் தொடரே வெற்றி பெற வைத்தது.

இலங்கைஅணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் சங்ககாராவும் பரணவிதான, அஞ்சலோ மத்யூஸ் திலான் சமரவீர போன்றவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, பாகிஸ்தான் அணியில் மாலிக், மொகமட் யூசூப், அறிமுக வீரர் பாவாட் அலாம் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார்கள்.

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மகேல ஜெயவர்த்தன, மாலிந்த வர்ணபுர, டில்ஷான் அவ்வளவு சோபிக்கவில்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அணித்தலைவர் யூனூஸ் கான் துடுப்பாட்டத்தில் சொதப்பினார் என்றே கூறவேண்டும்.

பந்துவீச்சில் முரளி இல்லாத குறையை ரங்கன ஹேரத் நிரப்பிவிட்டார் என்றே சொல்லவேண்டும். வேகப்பந்துவீச்சில் தொடரில் 17 விக்கெட்டுகளைப் பெற்ற நுவான் குலசேகரவும் திலான் துஷாராவும் சோபித்தார்கள். நுவான் குலசேகர முதன் முதலாக தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அஜந்த மெண்டிசின் சுழல் வேலை செய்யவில்லை. முரளி விளையாடியிருந்தால் நிச்சயம் ஆகக் குறைந்தது 20 விக்கெட்டுகளாவது வீழ்த்தியிருப்பார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் கடைசிப்போட்டியில் விளையாடிய டனேஷ் கனேரியாவும் சஜீட் அஜ்மலும் பிரகாசித்த அளவிற்க்கு உமர் குல்லால் பிரகாசிக்கம் முடியவில்லை. உமர் குல் 7 விக்கெட் மாத்திரமே மூன்று போட்டிகளில் வீழ்த்தினார் அத்துடன் அதிக ஓட்டங்களையும் கொடுத்தார்.

ஓய்வு பெற்ற சிங்கம்.

சமிந்த வாஸ் இலங்கை அணியின் அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளார். ஒருபக்கம் முரளி சுழலில் மாயம் செய்ய இன்னொரு பக்கம் வாஸ் வேகத்தில் அதிரடி காட்டுவார். இன்றைய போட்டியுடன் சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.



1994 ஆம் ஆண்டு கண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தன் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கிய வாஸ் அதே பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் தன் டெஸ்ட் வாழ்க்கையை நிறைவு செய்தார். முதல் போட்டியில் வாஸினால் எந்தவித விக்கெடும் வீழ்த்தப்படவில்லை. இறுதிப்போட்டியில் குராம் மன்சூரின் விக்கெட்டை வீழ்த்தினார். 111 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 355 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களையும் எடுத்திருந்தார். இவர் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 3089 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டில் வாஸின் பங்கு மகத்தானது. இன்றுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வாஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவார்.

எதிர்வரும் 30ந்திகதி இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகள் தம்புள்ளையில் தொடங்குகின்றது. அப்ரிடி, ரசாக் என அதிரடி வீரர்களுடன் பாகிஸ்தான் அணியும் முரளி, ஜெயசூரியா, தரங்க போன்றவர்களுடன் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்த இருக்கின்றார்கள். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் வென்று டெஸ்ட்டில் விட்ட தோல்விக்கு பழிதீர்க்குமா? இல்லை இலங்கை அணி இதனையும் வென்று சாதனை படைக்குமா?

மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

டில்ஷான் நல்ல நிலையில் இருந்திருந்தால், மூன்றாம் டெஸ்டை வெற்றி பெற முயற்சி செய்திருக்கலாம், அப்படி வென்றிருந்தால் வரலாற்றை பிரட்டி போட்டிருக்கலாம்,

"என்ன செய்ய என்ன செய்ய எல்லாம் அவன் செயல்"