சுஜாதா இன்றிருந்தால்....



எழுத்தாளர் சுஜாதா மறைந்து நாளையுடன் ஓராண்டு ஆகின்றது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது. அவரது இழப்பு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பேரிழுப்பு என்பதை யாரும் மறக்கமுடியாது. இறந்தபின்னரும் அவரது எழுத்துக்கள் இன்னமும் வெகுஜன இதழ்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இனியும் வரும்..

இந்த ஓராண்டுடிற்க்குள் உலகில் எத்தனை மாற்றங்கள். என்னைப்போன்ற சோம்பேறி( தேடிப்பிடித்து வாசிப்பது என்பது சில காலமாக குறைந்துவிட்டது) வாசகர்களுக்கு கற்றதும் பெற்றதும் மூலமாக அந்த நாட்களில் உலகத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஓரளவு சுருக்கமாக விளங்கப்படுத்தியவர் அமரர் சுஜாதா.

சுஜாதா இன்றிருந்தால் எவற்றைப் பற்றியெல்லாம் விகடன் கற்றதும் பெற்றதில் எழுதியிருப்பார்.

1. ஓபாமாவும் உலகப் பொருளாதாரமும்
தன் இயல்பான நடையில் பொருளாதார அடிப்படை அறிவில்லாதவனும் விளங்கக்கூடியவாறு உலக பொருளாதரத்தின் வீழ்ச்சியையும் ஓபாமாவின் எழுச்சியையும் அமெரிக்க கணணி வல்லுனர்களின் பிரச்சனைகளையும் எழுதியிருப்பார்.

2. சிலம்டோக் மில்லியனர்
அண்மையில் பரபரப்பான விடயமாக இருக்கின்ற இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு கோணத்தில் ஜோசித்திருப்பார்.

3. தசாவதாரம்
சுஜாதாவின் மறைவின் பின்னர் வெளியான கமலின் பிரமாண்ட தயாரிப்பு. கதைவிவாதத்தில் சுஜாதா பங்குபற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும், படத்தில் சில காட்சிகளில் கூட சுஜாதாவின் பாதிப்புகள் இருந்தன. வசனம் கமல் எழுதியதாக இருந்தாலும் சில இடங்கள் சுஜாதா டச்.

4. சுப்பிரமணியபுரம்
ஒவ்வொரு வருட இறுதியிலும் இவர் கற்றதும் பெற்றதிலும் கொடுக்கின்ற விருது பட்டியலில் சுப்பிரமணியபுரம் முதல் இடத்தைப் பிடித்திருக்கும்.

5. இந்தியக் கிரிக்கெட் அணியின் எழுச்சி
டோணியின் தலைமைத்துவத்தின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற பெற்றிகள் பற்றியும் ஐபில் போட்டிகள் பற்றியும் நிறையவே எழுதியிருப்பார்.

6. ஆஸ்கார், ரகுமான்
ரகுமானின் இசை பற்றியும், ரகுமானுடன் தன் அனுபவங்கள் பற்றியும் சிலம்டோக் மில்லியனர் இசைக் குறிப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்திருப்பார்.

7. சந்திராயன்
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளினால் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன் பற்றிய சுவையான தகவல்கள் வழங்கியிருப்பார்.

8. வலைப்பதிவாளர்கள்.
இன்றையகாலத்தில் வலைப்பதிவாளர்களும் இலக்கியத்தில் ஒரு அங்கம் வகிப்பதனாலும் விகடன் தன் வரவேற்பறையில் வாரம் ஒரு வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதனாலும் நிச்சயம் வலைப்பதிவாளர்கள் பற்றிய குறிப்புகள் இடையிடயே எழுதியிருப்பார். அத்துடன் தன் விருதுப்பட்டியலில் சிறந்த வலைப்பதிவு ஒன்றையும் குறிப்பிட்டிருப்பார்.

9. நான் கடவுள்
நான் கடவுள் படத்தையும் அகோரிகள் பற்றிய விவரங்களையும் தன் பாணியில் தந்திருப்பார். அகோரிகள் பற்றி கருடபுராணம் போல ஏதாவது ஒரு புராணத்தில் இருப்பதாகவும் எழுதியிருப்பார்.

10. எந்திரன்
எந்திரன் படத்தைப் பற்றியதோ அல்லது கதைபற்றியோ மூச்சுவிடாமல் ஐஸ்வர்யா ராய் பற்றியும் சூப்பர் ஸ்டார், சங்கர் பற்றியும் சுவையான தகவல்கள் கிடைத்திருக்கும்.

சுஜாதா பெரும்பாலும் அரசியல் பற்றி எழுதுவதில்லை என்பதால் உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலிகள், வக்கீல்கள் போராட்டம், போன்ற சமூக சார்ந்த விடயங்களை தவிர்த்திருந்திருப்பார்.

சுஜாதா இன்று நம்முள் இல்லாவிட்டாலும் அவரின் பாத்திரங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தே இருக்கும். கணேஷ், வசந்தையும், அனிதாவின் காதலையும், கெட்டவார்த்தை பேசுகின்ற விக்ரத்தையும், ஜீனோ நாயையும், குருபிரசாத்தையும் தமிழ் வாசகர்கள் அவ்வளவு எழுதில் மறக்கமாட்டார்கள். குறிப்பாக அவரின் மெக்சிகன் சலவைக்காரி ஜோக் இன்னமும் பூர்த்தியாகவே இல்லை. வசந்த் இதுவரை அந்த ஜோக்கை சொல்லவேயில்லை.

அமரர் சுஜாதாவின் எழுத்துக்கள் உள்ளவரை அவரது புகழ் மங்காது.

கலைமாமணி ஐஸ்வர்யா தனுஷ்.



இன்றைக்கு வெளியான தமிழக அரசின் கலைமாமணி விருதுப்பட்டியலில் ஐஸ்வர்யா தனுஷின் பெயரைப் பார்த்தது அதிர்ச்சியாகிவிட்டேன். இவர் சாதாரண ஒரு குடும்பப்பெண்(ரஜனி மகள் என்பதைத் தவிர )இவருக்கு எந்த வகையில் விருது கொடுத்திருக்கின்றார்கள்.

விருது பெறும் ஏனையவர்கள்.

அபிராமி ராமநாதன் - திரைப்பட தயாரிப்பாளர்
சேரன் - திரைப்பட இயக்குனர்
சுந்தர்.சி - நடிகர்
பரத் - நடிகர்
நயன்தாரா - நடிகை
அசின் - நடிகை
மீரா ஜாஸ்மின் - நடிகை
பசுபதி - குணசித்திர நடிகர்
ஷோபனா - குணசித்திர நடிகை
வையாபுரி - நகைச்சுவை நடிகர்
சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை
வேதம்புதிது கண்ணன் - வசனகர்த்தா
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்
ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர்
பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குனர்
சித்ரா சுவாமிநாதன் - புகைப்பட கலைஞர்
நவீனன் - பத்திரிகையாளர்
சீனிவாசன் - ஓவிய கலைஞர்
சுந்தர்.கே.விஜயன் - சின்னத்திரை இயக்குனர்
திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குனர்
பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா
அபிஷேக் - சின்னத்திரை நடிகர்
அனுஹாசன் - சின்னத்திரை நடிகை
அமர சிகாமணி - சின்னத்திரை

என்ன கொடுமை இது?

ராஜா, ரகுமான்,ஆஸ்கார்


இன்றைக்கு உலகத் திரைப்படவரலாற்றில் ஒரு மகத்தான நாள். ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. எதிர்பார்க்கப்பட்டதுபோல் இசைப்புயல் ஏஆர் ரஹுமான் தன் இரண்டு விருதுகளையும் பெற்று தமிழர்களுக்கு கெளரவம் கொடுத்துள்ளார். இன்னொரு தமிழச்சியான மாதங்கி அருள் பிரகாசமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்களில் ஒருவர். ஏனோ விருதுகிடைக்கவில்லை.

1992ல் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமான ரகுமானைப் பற்றி பலர் பல இடங்களி எழுதியிருப்பதால் அதனைத் தொடாமல் இன்னொரு விடயத்தை ஆராயலாம் என நினைக்கின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரகுமானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது பலர் புருவத்தை உயர்த்தினார்கள், காரணம் மெல்லிசை மன்னர், இசைஞானி என்ற இரண்டு இசை மேதைகளை விட்டுவிட்டு தற்போது வந்த இளைஞனுக்கு விருதா? என்ற கேள்வி அவர்களின் புருவ உயர்த்தலில் தொக்கி நின்றது.

இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் ரகுமான் அவர்கள் நிச்சயம் அந்த விருதுக்கு தகுதிவாய்ந்தவர் இதனை எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மூத்தோர்கள் இருக்க இளையவருக்கு கொடுத்த காரணம் என்ன? இதற்க்கு வைரமுத்துவின் உள்குத்து அரசியல் தான் காரணம் என்கிறார்கள் பலர்.

இந்த பதிவில் நான் இசைஞானியையோ அல்லது இசைப்புயலையோ இல்லை மெல்லிசை மன்னரையோ ஒப்பிடவரவில்லை. அவர் அவர் தங்கள் இசையில் உச்சம் தொட்டவர்கள்.

ஆனாலும் சிம்பொனி இசை, திருவாசகத்துக்கு இன்னொரு வடிவம், கெளவ் டூ நேம் இட் என ஆல்பம் என் சாதனை படைத்த பண்ணைபுரத் தமிழனை ஏன் இதுவரை இந்திய அரசு கெளரவிக்கவில்லை?

இன்னொரு சாராரின் வாதம் இசைஞானி இசையில் உச்சத்தை அடைந்தாலும் ரகுமான் அளவுக்கு அடக்கம் இல்லாதவர் கர்வம் பிடித்தவர். இதனைப் பல சந்தர்ப்பங்களில் பலராலும் அவதானிக்ககூடியதாக இருந்தது. அண்மையில் கூட இசைப்புயலுக்கு கோல்டன் குலோப் விருது கிடைத்த போது இசைஞானி அவரைப் பாராட்டவில்லை என சில இணையத்தளங்களில் சிண்டு முடிந்தார்கள்.

அத்துடன் கோல்டன் குலோப் விருது கிடைத்த ரகுமானுக்கு தமிழக அரசின் சார்பில் எந்தப் பாராட்டு விழாவோ அல்லது கோடம்பாக்கத்தின் பாராட்டுவிழாவோ இதுவரை எடுக்கப்படவில்லை. ஆஸ்கார் வாங்கியபின்னர் சேர்த்து எடுக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.

இளையராஜாவுக்கும் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஏன் உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை என்பதனை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

குட்டிக்குட்டி விழாக்களில் எல்லாம் தமிழ்மொழியில் பேச அகெளரவம் என நினைக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஆஸ்கார் என்ற உயரிய விழாவில் தமிழிலும் ஒருவார்த்தை பேசி தலை நிமிர வைத்த தமிழன் அல்லா ரக்கா ரகுமானுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி : இந்த நேரத்தில் ஏன் இந்தப் பதிவு எனக்கேட்பவர்கள் குசும்பனின் பதிவை ஒரு முறை சென்று பார்க்கவும்.