அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆரம்பித்த நவரச நாயகன் கார்த்திக் இசைஞானி கூட்டணி நினைவெல்லாம் நித்யா, வருஷம் 16, அக்னி நட்சத்திரம், கோபுரவாசலிலே, கிழக்குவாசல், தெய்வவாக்கு என பல படங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.
1. பனிவிழும் மலர் வனம்
ராஜாவின் எவர்கிரீன் ஹிட்டுகளில் இந்தப்பாடலும் ஒன்று. மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ராஜாவின் அனைத்துப்பாடல்களும் இனிமை. இந்தப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் என்றே கூறலாம். ராஜாவின் ஆர்ப்பாட்டமில்லாத மெலடியும் வைரமுத்துவின் காதல் வரிகளும் பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகது. அத்துடன் எஸ்.பி.பியின் குரலும் குறிப்பாக பனிவிழும் மலர் வனம் என்ற வரிகளை ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக பாடுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று.
2. நான் தேடும் செவந்திப்பூவிது
இன்னொரு எவர்கிரீன் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். ஆனால் படமாக்கியவிதம் சொதப்பல். பாடலுக்கு முன்னால் இசைஞானி பாடும் ஆலாவிற்கும் அதனைத் தொடர்ந்து வரும் கிட்டார் இசைக்கும் எத்தனையோ விருதுகள் கொடுக்கலாம். முதல் சரணத்தில் இடைஇசையாக வரும் புல்லாங்குழலும் கிட்டாரும் மயக்கம் தரும். கூடப்பாடும் எஸ்.ஜானகியின் தேன்குரலும் இந்தப்பாடலுக்கு பிளஸ். இந்தபாடலைக்கேட்டால் கட்டாயம் காதல் தேசத்திற்க்கு போகும் எண்ணம் எவருக்கும் வரும்.
3. காதல் கவிதைகள் படித்திடும்
"I love this idiot, I love this lovable idiot" என்ற சித்ராவின் குரலுடன் இனிமையான புல்லாங்குழலுடன் தொடங்கும் இந்தப்பாடலும் என்றைக்கும் கேட்கும் இனிமையான மெலடி. பாடுநிலா எஸ்.பி.பியும் சின்னகுயில் சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல். பல்லவியில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும்போதே இதம் தரும் காதல் கவிதைகள் என் சித்ரா குரல் ஒலிக்கும் இடம் இசைஞானியின் ஸ்பெசல் டச். துறுதுறுப்பான கார்த்திக்கும் படமாக்கியவிதமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
4. வா வா அன்பே அன்பே
அக்னி நட்சத்திரம் படத்தில் கிடைத்த இன்னொரு முத்து இந்தப்பாடல். அந்தப் படப்பாடல்கள் முழுவது சூப்பர் டூப்பர் ஹிட்ஸ். பத்மஸ்ரீ.கே,ஜே,ஜேசுதாசும் சின்னக்குயில் சித்ராவும் இணைந்துபாடிய டூயட்டுகளில் சிறந்த டூயட்டில் இதுவும் ஒன்று. பி.சி.ஸ்ரீராமின் கமிராவில் நிரோஷா மிகவும் அழகாகத் தெரிவார். படமாக்கப்பட்ட விதம் கவர்ச்சியாக இருந்தாலும் ஆபாசமாக இல்லை. இதயம் முழுதும் ராஜா வசம் தான்.
5. பழமுதிர்ச்சோலை எனக்காகதான்
வருஷம் 16 படத்தில் பத்மஸ்ரீ.கே.ஜே, ஜேசுதாசின் காந்தக்குரலில் இசைராஜாவின் இசையில் உருவான அழகான மெலடி.முதல் இடைஇசையில் வரும் புல்லாங்குழலும் தபேலாவும் கர்னாடக சங்கீதப்பாணியில் இருக்கும். சரணம் ஆரம்பிக்கும்போது ரம்சின் ரிதம் வெஸ்டேர் ஸ்டைலில் இருக்கும். இரண்டு பாணியையும் இணைத்து ராஜா கலக்கியிருப்பார். இரண்டாவது சரணம தூய கர்னாடக இசையாகவே இருக்கும். பாசிலின் இயக்கத்தில் வெளிவந்த அழகான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்.
ராஜாவும் கார்த்திக்கும் - பகுதி 1
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இசை, இளையராஜா, கார்த்திக், சினிமா
*** இவர்களைத் தெரியுமா? ***
சில காலங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த சிலர் இப்போ எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைப் பற்றிய சில சிறுகுறிப்புகள்.
தயாரிப்பாளர்கள்:
எத்தனையோ தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்களாலும், பொருத்தமில்லாத கதைகளாலும் பிரமாண்ட விளமபரங்களாலும் போண்டியாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஞாபகம் வைத்த்திருப்பது கடினம் அதில் ஒருவரை மட்டும் உங்களுக்குத் தெரிகின்றதா?
ஜென்டில்மேன் குஞ்சுமோன்:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வாழ்வளித்த வள்ளல். பின்னர் மகனை( மகனின் பெயர் எபி என ஞாபாகம்) வைத்து கோடிஸ்வரன் என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்னர் படம் எடுத்தார். இன்னமும் படமும் வெளிவரவில்லை இவரும் படம் எடுப்பதில்லை. அந்த படத்தின் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. நம்ம ஊர் எவ் எம் வானொலிகள் ஆரம்பித்த காலத்தில் வெளிவந்த பாடல் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். பாடல் ஞாபகம் இல்லை. இந்தப் பாடலை கானாபிரபா கண்டுபிடித்துக்கொடுப்பார் என நினைக்கின்றேன். ஷங்கர் தன் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இவருக்கு ஏன் நிதி உதவி செய்யக்கூடாது?
இயக்குனர்கள் :
ஆர்.வி.உதயகுமார்:
கமல், ரஜனியை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர். பலகாலமாக படம் எதையும் இயக்கவில்லை.
பாண்டியராஜன் :
கதாநாயகனாக நடிப்பதை சில காலமாக நிறுத்தியிருந்தார். துணை நடிகராக பல படங்களில் தலைகாட்டுபவர் சில காலமாக படங்களை இயக்குவதை ஏனோ நிறுத்திவிட்டார். ஆண்பாவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம மற்றக்முடியாது.
எஸ்பி.முத்துராமன்:
ரஜனி, கமலை வைத்து ஏவிஎம் நிறுவனத்துக்கு பல படங்களை இயக்கிவெற்றிகொடுத்தவர். இவர்களை இருவரையும் வசூல் நாயகன்களாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் ஏனைய நடிகர்களை வைத்து படம் இயக்கிய படங்கள் மிகச் சிலவாகும்.
மணிவண்ணன் :
நூறாவது நாள், அமைதிப்படை என பல சிறந்தபடங்களைக் கொடுத்தவர். பின்னர் இவர் இயக்கிய படங்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும் படங்களீல் வில்லனாகவும் கொமடியனாகவும் வந்துபோனார். நண்பர் முரளிகண்ணன் இவர் பற்றிய சிறப்பான பதிவு ஒன்றைப்போட்டிருக்கின்றார்.
சசி :
ரோஜாக்கூட்டம், சொல்லாமலே என சிறந்த காதல் படங்களைக் கொடுத்தவர். தற்போது என்ன செய்கின்றார் எனத் தெரியவில்லை.
இசையமைப்பாளர்கள் :
கார்த்திக்ராஜா:
டும்டும்டும், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளைபோகுமே, அல்பம்( செல்லமே செல்லம் ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ்ப் பாடல்) என பலபாடல்களில் உள்ளத்தை கொள்ளைகொண்ட இசைராஜாவின் முதல்வாரிசு, தம்பி யுவன் இசை உலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார். ஏனோ வாரிசுகளில் இரண்டாமவருக்குத் தான் செல்வாக்கு அதிகம் என நினைக்கின்றேன். தற்போது புதிதாக ஒரு படத்திற்க்கு இசையமைப்பதாக அறியக்கிடைத்தது.
தேவா:
காப்பி ராக மன்னர் தேவா, பாடல்கள் பல ஒரே மாதிரியும் எங்கேயோ கேட்டதுபோல் இருந்தாலும், கானாப்பாடல்களில் கொடிகட்டிப்பறந்தவர். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். வாலி, குஷி, நேருக்கே நேர், கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், ஸ்ரீகாந்த் தேவாவின் வரவின் பின்னர் ஒதுங்கிவிட்டாரோ தெரியவில்லை.
எஸ்ஏ ராஜ்குமார் :
லாலலா புகழ் இசையமைப்பாளர் அனேகமாக இவரது பாடல்கள் மெல்லிசையாகவே இருக்கும். இயக்குனர் விக்ரமனி ஆஸ்தான இசையமைப்பாளர். சில காலமாகக் காணாமல் போய்விட்டார்.
நடிகர்கள் :
கார்த்திக் :
80களின் காதல் மன்னன், இளவரசன் எனப் பல பட்டங்களைக் கூறலாம். இளஞிகளைக் கட்டிப்போட்ட நடிகர். எத்தனையோ ஹிட் கொடுத்தவர். அரசியல்வாதியாகி 2011 ஆம் ஆண்டில் முதல்வராகும் கனவில் இருப்பதாலோ என்னவோ படங்களில் அதிகம் காணவில்லை.
முரளி :
மைக் மோகனிற்க்கு பின்னர் அதிகம் மைக் பிடித்த நடிகர். காதலைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் பலகாலம் கல்லூரிக்கு போனதிலும் இவரது சாதனையை வருங்கால கதாநாயகர்கள் உடைப்பது என்பது மிகவும் கஸ்டம். இறுதியாக இவரின் நல்ல படம் என்றால் சுந்தரா ராவல்ஸ் தான்.
பிரபு :
என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை மிகப் பிரபலமாக்கியவர். சமீபகாலமாக துணை நடிகராகத் தான் வருகின்றாரே ஒழிய கதாநாயகனாக வருவதில்லை.
நடிகைகள் :
நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் காலத்திற்கேற்ப அடிக்கடி மாறுவதால் பட்டியல் இடமுடியாது. ஆனாலும் திவ்யா உன்னி, மீரா ஜாஸ்மின் போன்ற சில கேரளத்து கிளிகள் காணாமல் போனது கவலை அளிக்கின்றது. அல்லது நடிகைகள் தங்கள் காலம் முடிய சின்னத் திரையில் கிளிசரினுடன் அவதாரம் எடுக்கிறார்கள்.
இன்னும் யார் யாரை நீங்கள் தேடுகின்றீர்கள் என அறியத்தாருங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கார்த்திக், கார்த்திக் ராஜா, சினிமா, மணிவண்ணன்
