ஜனாதிபதித் தேர்தல்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. பிரதான கட்சிகள் தங்கள் இதுவரை செய்த அபிவிருத்தியை விட எதிர்க் கட்சியியைத் திட்டுவதையே பெரும்பாலும் செய்கின்றன. தொலைக்காட்சிகள் செய்திகளின் போது சிலரது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தணிக்கை செய்தே வெளியிடுகின்றார்கள்.
இணையத் தளங்களில் வெளியிடப்படுகின்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளில் சரத் பொன்சேகாவிற்கு அதிகம் வாக்குகள் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலான இணையக கருத்துக் கணிப்புகளில் படித்த நகரவாசிகளே கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் வாக்கு வங்கி கிராமங்களிலையே இருக்கின்றது. இதனால் இந்தக் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே மாறுகின்றன. அதே நேரம் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள்(முஸ்லீம்கள் உட்பட) சரத் பொன்சேகாவை ஆதரிப்பது போன்ற சில கருத்துக் கணிப்புகளும் வெளிவருகின்றன. இவை சிலவேளைகளில் திட்டமிட்ட செயல்பாடுகள் போல் தெரிகின்றன.
மெஹா ஜோக் :
"ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வராதாம்" சொன்னவர் அவசரகாலச் சட்டத்திற்க்கு எதிராகவோ சார்பாகவோ வாக்களிக்க வக்கில்லாத ஐதேக எம்பி.
3 Idiots
அமீர் கான், மாதவன், ஷர்மான், போமன் இரானி மற்றும் கரினாவின் தேர்ந்த நடிப்பில் உருவான 3 இடியட்ஸ் படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மீண்டும் ஹிந்தித் திரையுலகம் வித்தியாசமான ஒரு படத்தை தந்துள்ளது. முன்னாபாய் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இந்தப் படமும் நகைச்சுவையுடன் சில நல்ல கருத்துகளையும் சொல்கின்றது. படத்தின் பலமே அமீர்கானின் நடிப்பும் இளமையும் தான். சில இடங்களில் அமீர்கானை விட மாதவன் நன்றாக நடித்திருக்கின்றார்.
அண்மைக் காலமாக நல்ல படங்களைத் தந்துகொண்டிருக்கும் ஹிந்தித் திரையுலகை தமிழ்த் திரையுலகம் பார்த்து சில நல்ல படங்களை ரீமேக் செய்தாலோ அல்லது அதேபோன்ற் வித்தியாசமான கதையை எடுத்தால் தமிழ்த் திரையுலகம் கதை விடயத்தில் இன்னமும் முன்னேறலாம். இல்லையென்றால் வழக்கமான டெம்ளேட் கதைகளையும் அதீத விளம்பரத்தையும் நம்பி பத்தோடு ஒன்றாக மாறவேண்டும் தான்.
கிரிக்கெட்
சங்ககாரவின் குழந்தைகள் அணி டோணியின் இளமை அணியை நேற்று துவைத்து எடுத்துவிட்டது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை இந்திய ஒருநாள் தொடரில் வெற்றியைத் தவறவிட்ட இலங்கை முதல் போட்டியில் வங்கதேசத்தையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவையும் இலகுவாக வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் நேஹ்ராவை இன்னும் ஏன் அணியில் வைத்திருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தை யாரும் தீர்ப்பீர்களா? இந்தியாவில் கூட இலங்கை வீரர்கள் அவரின் பந்துவீச்சை துவம்சன் செய்யததை மறந்துபோய் மீண்டும் நேற்று விளையாடி அடிமேல் அடிவாங்கினார்.
அத்துடன் இந்திய வீரர்களின் களத்தடுப்பு ரொபின்சிங்கின் விலகலின் பின்னர் மிகவும் பிந்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை புதியவர்கள் இளம் கன்று பயமறியாதது என்பது போல் சகல துறைகளிலும் கலக்கியே வருகின்றார்கள். நேற்று டில்ஷான் விளையாடமால் போனாலும் சமரவீராவின் அதிரடியும் சங்ககாரவின் பொறுப்பான ஆட்டமும் வெலகெதரவின் சிறப்பான பந்துவீச்சும் இலங்கை அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. ஏனைய போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் இதே ஆக்ரோசத்துடன் விளையாடுகின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
5ஆவது திருமணம்
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா தன்னுடைய 67 வயதில் 5ஆவது தடவையாக 37 வயதுப் தோபியா மடிமா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் அண்மையில் தென்னாபிரிக்காவில் பாராம்பரிய முறைப்படி நடைபெற்றது. ஏற்கனவே இவர் தோபியாவுடன் தொடர்பு இருந்து 3 குழந்தைகள் இருப்பதும் நீண்ட நாள் குடும்பம் நடத்திய பின்னரே இந்தத் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரசித்த கவிதை
அரசியல்வாதிகளில் பலர்
அரக்கர்கள் என்பதாலேயே
ராட்சஸ வடிவில்
கட் அவுட் கட்டப்படுகின்றது
எலெக்ஷன் என்றதுமே
கலெக்சன் ஆரம்பம் - அவர்கள்
கொடுப்பது வாய்க்கரிசி
பெறுவது வாக்குச் சீட்டு
சுவரொட்டி ஒட்டியவன்
வயிறு ஒட்டி வாடுகின்றான்
ஊர்வல்ம் தொண்டனுக்கு
கார்வலம் தலைவனுக்கு
தலைவனை வாழ்க என்று சொல்லி
தான் மட்டும் வீழ்பவன் - இவனைத்
தொண்டன் என்றழைப்பதா?
முண்டம் என்று சொல்வதா?
கைதியின் தவறுகளுக்கு
நீதிபதிக்கு தண்டனையா?
தலைவனின் ஊழல்களுக்கு
தொண்டனின் தீக்குளிப்பா?
கும்பகர்ணக் குடிமகனே
புரிந்து கொண்டால்
விழித்துக் கொள்வாய்
விழிக்காவிட்டால் டாஸ்மார்க்கோடு
அழிந்துபோவாய்.
எழுதியவர் பிரபல க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமார்.
அன்பு நண்பர் சுபாங்கனின் அன்புக்காக இந்த அசல் நாயகி பாவனாவின் படம் பட உதவியும் அவரே தான். நன்றி சுபாங்கன்.
ஹாட் அண்ட் சவர் சூப் 06-01-2010
எழுதியது வந்தியத்தேவன் at 18 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கவிதை, கிரிக்கெட், சினிமா, சூப்
இளைய தளபதி விஜய்க்கு ஒரு கடிதம்
வணக்கம் ங்ண்ணா
நலம் நலமறிய ஆவல், வேட்டைக்காரன் வசூல் வேட்டையாடுவதால் சந்தோஷமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
நான் ஒரு சராசரி சினிமா ரசிகன். அதிகமாக தமிழ்ப் படங்களையும் சில தேர்ந்தெடுத்த ஹிந்தி, ஆங்கிலப் படங்களையும் பார்ப்பவன். அண்மைக்காலமாக உங்கள் படங்கள் ஒரே வகையான படங்களாக வருவது கவலையளிக்கின்றது. வருங்கால சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என எதோ ஒரு அமைப்பு சில காலம் முன்னர் உங்களுக்கு விருது வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன். 
ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்பு போட்டு மிகவும் சாதாரண நடிகனாக இருந்த உங்களை விக்ரமனின் பூவே உனக்காக படம் தான் அடுத்த கட்டத்திற்க்கு உயர்த்திச் சென்றது. அந்தப் படத்தினால் பல ரசிகர்கள் உங்களுக்கு உருவானார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நன்றாகவே நடித்திருந்தீர்கள்.
கமல், ரஜனி படங்களுக்குப் பின்னர் காதலுக்கு மரியாதை படம் தான் அதிகம் தடவை சிடியில் நான் பார்த்த படம். ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை போன்ற ரீமேக் படங்களில் உங்கள் பங்கு சிறப்பாகவே இருந்தது.
இடையிடயே மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, உதயா போன்ற சில பப்படங்களைக் கொடுத்தாலும் ரசிகர்களின் மனதில் கில்லியாக உங்களை உயர்த்தியவர் தரணிதான். கில்லி படம் போல் விறுவிறுப்பான வேகமான திரைக்கதையுடன் அண்மைக்காலங்களில் உங்கள் எந்தப் படங்களும் வரவில்லை. சிலர் போக்கிரியை கில்லியின் வேகத்துக்கு ஒப்பிட்டாலும் கில்லிதான் என்றைக்கும் முதல்வன்.
அண்மைக்காலமாக அதிரடி மசாலாப் படங்களில் அதிகம் நடிக்கும் நீங்கள் ஏன் தற்போது பிரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே போன்ற நல்ல காதல் கதைகளில் நடிப்பதில்லை. நீங்கள் குருவாக நினைக்கும் ரஜனிகாந்த் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்திருக்கின்றார். அவரின் மசாலாப் படங்களில் கதையும் திரைக்கதையும் லாஜிக்குடன் பெரும்பாலும் இருக்கும். அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ஒருநாளும் லாஜிக் மீறி ஓடும் ரயிலுக்குத் தாவுவதோ, அருவில் குதித்து உயிர் தப்புவதோ இல்லை.
நீங்கள் மசாலாப் படம் நடிக்கவேண்டாம் எனச் சொல்லவில்லை, இடையிடையே நல்ல கதை அம்சமுள்ள படங்களிலும் நடிக்கலாமே இதுதான் இப்போதைய பல ரசிகர்களின் கருத்து.
நீங்கள் நடித்த ஆதி, குருவி, மதுர, வில்லு போன்ற படங்களை நீங்கள் மீண்டும் ஒரு தடவை பார்த்தீர்களா? அப்படிப் பார்க்கவில்லை என்றால் மீண்டும் ஒரு தடவை பாருங்கள்? எங்கே நீங்கள் சறுக்கியிருக்கின்றீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
இனியாவது உங்களை சூப்பர் ஸ்டார் உயரத்திற்க்கு வைத்துக் கதை சொல்பவர்களிடம் இருந்து தப்பி பாசில், சித்திக், செல்வபாரதி போன்றோரின் நல்ல இயக்குனர்களிடம் பேரரசு போன்ற மசாலப் படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்களிடம் கதை கேட்டு நல்ல படங்களில் நடியுங்கள். இல்லையென்றால் விஜய டி. ராஜேந்தர் போல் இணையங்களிலும் எஸ் எம் எஸ்களிலும் உங்களை பலர் வேட்டையாடுவார்கள்.
உங்களிடம் இருந்து நல்ல படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மிகவும் சாதாரண ரசிகர்களை இனியும் ஏமாற்றிவிடாதீர்கள்.
மீண்டும் என்னைக் கடிதம் எழுதவைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.
நன்றிகள்
இங்ஙனம்
உங்களின் ரசிகன்
பின்குறிப்பு : தயவு செய்து உங்கள் படங்களை சன் குழுமத்துடன் கொடுத்து வெற்றி என்ற மாயையில் விழுந்துவிடாதீர்கள்
எழுதியது வந்தியத்தேவன் at 32 கருத்துக் கூறியவர்கள்
கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2
இவ்வளவு ராகத்துடன் அழகாக ஆனால் பட்டுவேட்டிக்கு பொருத்தமில்லாமல் கூலிங் கிளாசுடன் வழிபாடு செய்பவர் யார் எனப் பார்த்த்தால் அது அதிரடிப் பதிவர் புல்லட். புல்லட்டும் இவர்கள் இருவரையும் கண்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சகஜமாக கதைக்கத் தொடங்கினார். மூத்த அனுபவம் உடையவர் என்றபடியால் கங்கோனின் பிரச்சனைக்கு புல்லட்டிடம் ஐடியா கேட்டார்கள் இருவரும். 
புல்லட்டும் தன்னுடைய சில சொந்த அனுபவங்களை நண்பர்களின் கதை போல் சொல்லிவிட்டு, கங்கோனிற்க்கு வலிகாமத்தை விட வடமராட்சியில் கங்கோனிற்க்கு பொருத்தமானவர் கிடைப்பார், ஆகவே வந்தி அல்லது ஆதிரையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அத்துடன் ஆதிரையைத் தொடர்புகொண்டால் அவர் விடயத்தை வெளியில் கசிய விட்டுவிடுவார் வந்திதான் ரகசியம் காப்பதில் வல்லவர் நல்லவர் ஆகவே வந்திக்கு உடனடியாக கோல் பண்ணவும் வந்தி உதவுவார் என வந்தியை வலையில் மாட்டிய சந்தோஷத்தில் தான் உடனடியாக நெடுந்தீவுக்கு போகவேண்டும் ஆகவே உங்களைப் பின்னர் சந்திக்கின்றேன் என விடைபெற்றார்.
புல்லட் விடைபெற்ற மறுகணமே கங்கோன் வந்திக்கு கோல் எடுத்தார். வந்தியும் அப்பாவியாக வெள்ளிக்கிழமைகளில் தொண்டைமனாறு சந்நிதி கோயிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுர ஆழ்வார் கோயிலும் வழிபாட்டிற்க்கு பெயர் போனவை என கங்கோன் கோயிலுக்கு வழிபடச் செல்வதாக நினைத்து தன்னுடைய கருத்தை உளறிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை வல்லிபுர ஆழ்வாருக்கு தன்னுடன் வர பாலாவையும் கேட்டால் பாலா கொஞ்சம் பின்னடித்தார். பாலா பின்னடிப்பதைப் பார்த்த கோபி பாலாவிற்க்கு ஒரு சின்னப் பார்ட்டி கொடுத்தால் தன்னுடன் வருவார் என நினைத்து ரியோ கூல் பாருக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் புல்லட் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருமாதிரி சமாளித்துக் கொண்டு இவ என்ரை பட்ச் மேட் கண்ட இடத்திலை ஐஸ்கிறீம் குடிக்க வந்தோம் சமாளிக்க கங்கோனும் பாலாவும் நண்பனுக்கு ஏன் சங்கடம் கொடுப்பான் என விலகிவிட்டார்கள். அதே நேரம் புல்லட் போல் பலபேர் ஜோடிகளாக ரியோவில் இருப்பதைப் பார்த்த கங்கோன் தான் நிற்பது யாழ்ப்பாணத்திலா? இல்லை எம்சியிலா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தார்.
ஞாயிற்றுக்கிழமை கங்கோனும் பாலாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வல்லிபுர ஆழ்வார் நோக்கி வல்லை வெளியூடாக பயணத்தைத் தொடங்கினார்கள். வல்லை எதிர்க் காற்றில் பாலா பறந்துவிடாமல் இருக்க கங்கோனை இறுக்க பிடித்தபடி படபடக்கும் இதயத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சென்றடைந்தார். கோயில் வாசலில் அதே கச்சான் விற்க்கும் ஆச்சி மனசுக்குள் "குறுக்கால போவான் இங்கேயும் வந்துவிட்டான்" என புறுபுறுத்தாலும் கங்கோனைக் "கண்டதும் அப்பு ராசா உனக்கு தோதாக இங்கேயும் ஒண்டையும் காணவில்லையடி செவ்வாய்க் கிழமை தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு வாடி என்ரை குஞ்செல்லோ" என செல்லம் பொழிந்தார். ஆச்சியைக் கண்ட அதிர்ச்சியிலும் இங்கேயும் ஒன்றும் சரிவராது என்ற விரக்தியிலும் கங்கோனும் பாலாவும் நாமத்தை பட்டையாக நெற்றியில் இட்டபடி வீடு திரும்பினார்கள்.
அதே நேரம் ஃபேஸ்புக்கில் புல்லட் நெடுந்தீவில் வெங்காயம் உரித்து கதறிக் கதறி அழுத கதையும் குதிரையில் ஏறி விழுந்த கதையும் பரபரப்பாக நண்பர்கள் வட்டாரத்தில் அடிபட்டது. புல்லட் குதிரை மேல் இருந்ததைப் பார்த்து ஒருவர் குதிரை மேல் கழுதை போகின்றது என நக்கலடித்தார். 
கங்கோனும் தன்னுடைய கமேராவில் யாழ்ப்பாணத்தின் அழகையும் அழகானவர்களையும் படம் பிடித்தபடி நேற்று கொழுபுக்கிற்க்கு வெறும் கையுடன் வந்து சேர்ந்தார். வந்தவர் சும்மா இருக்காமல் தன்னுடைய அனுபவங்களை ட்விட்டரில் ட்விட்ட அவரின் பயணம் ஏன் வெற்றி அளிக்கவில்லை என ஆதிரை காரணம் கண்டுபிடித்துவிட்டார். 
கங்கோன் யாழ் செல்லும் போது விசாப் பிள்ளையாரை வணங்காமல் சென்றதுதான் காரணமாம். அதனால் விசாப் பிள்ளையாரை வணங்கிவிட்டு மீண்டும் பொங்கல் நேரத்தில் யாழ்ப்பாணம் சென்றால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் அத்துடன் தானும் அவருடன் வருவதாகவும் கங்கோனிற்க்கு உறுதி மொழி அளித்தார்.
அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து கங்கோன் அடுத்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன. எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.
பின்குறிப்பு : இந்த மொக்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை ட்விட்டரில் தந்த சுபாங்கன், பாலவாசகன், பவன் ஆகியோருக்கு நன்றிகள். மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன் யாவும் கற்பனை அல்ல.
பகுதி 1 : கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1
எழுதியது வந்தியத்தேவன் at 29 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் நையாண்டி, பதிவர் வட்டம், பம்பல்
