*** வியாபாரமாகும் விளையாட்டு. ***

கன‌வான்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் ஆரம்ப கால‌ங்களில் பெரிதாக பணம் புழங்கவில்லை. அதுவும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டிகளில் கோப்பைக்குத்தான் போட்டி. பின்னர் ஒரு நாள் போட்டிகளின் ஆதிக்கமும், 83 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் எழுச்சியும் கிரிக்கெட்டை பணக்காரர்களின் விளையாட்டாக உருவெடுக்க வைத்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை என ஆசிய அணிகள் உலகக்கோப்பையை வென்றதன் பின்னர் உலக கிரிக்கெட் அரங்கில் வெள்ளையர்களின் விளையாட்டு ஆசியர்களின் கைகளுக்கு வந்தது. நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் காசுக்காக விளையாட ஆரம்பித்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் காட்டுகின்ற அக்கறையை விளையாட்டில் காட்டமறுத்து அடிமேல் அடிவாங்கினார்கள். மேற்கிந்தியவீரர்கள் தங்களுக்கு தகுந்த சம்பளம் இல்லை என்று போர்க்கொடிதூக்கினார்கள். லாராகூடதன் அணித்தலைவர் பதவியை இதற்காக ராஜினாமாச் செய்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உலகில் பணக்கார அமைப்பாக மாறியது. இந்தியாவில் ஏனைய விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டுக்கு பணம் அதிகம் செலவு செய்யப்படுகின்றது(ஆதாரம் க‌டந்த இரண்டுவார நீயா? நானா?). இதனால் ஹாக்கியில் படுதோல்வி அடைந்து இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கமுடியாத நிலை வந்தது.


க‌டந்த வருடம் இந்திய அணிக்கு உலககோப்பையில் ஏற்பட்ட படுதோல்வி விளையாட்டில் நிஜமான அக்கறையுள்ள கபில்தேவ் போன்ற சிலரை சீற்றமடைய வைத்தது. இதனால் ஐசிஎல்(இந்தியன் கிரிக்கெட் லீக்) உருவானது. ஐசிஎல்லுக்கு இந்தியாவில் மறைமுகமான தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பெரும்பாலும் ஐசிஎல்லில் விளையாடிய விளையாடுகின்ற ஏனைய நாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் மூத்தவீரர்களும் தங்கள் நாட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுமாவார்கள். சிறந்த உதாரணமாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மாவன் அத்தப்பத்துவைக் குறிப்பிடலாம். ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் ஐபிஎல்(இந்தியன் பிரிமியர் லீக்)உருவாக்கப்பட்டு பெரும் செலவில் ஒரு 20க்கு 20 போட்டியையும் கிரிக்கெட் வீரர்களுடன் சினிமா நடிகர்களையும் வைத்து நடாத்திமுடித்தார்கள். வீரர்கள் அடிமைகள் போல் விலைபேசப்பட்டு தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள். எஜமானர்களையே எதிர்த்த சிலரும் உண்டு. (ராகுல் ராவிட் மல்லையா பனிப்போர்). டோணி விலை கூடிய வீரராக இருந்தார்.

பின்னர் சில சர்ச்சைகளுடன் ஐபிஎல் போட்டிகள் இனிதே நிகழ்ந்தன. பிரீத்தி ஜிந்தாவின் கட்டுப்பிடி வைத்தியமும் ஹர்பஜனின் அறையும் மறக்கமுடிய்தா நிகழ்வுகள் ஆகின. மீண்டும் சில நாட்களுக்கு முன்னர் வங்களாதேச வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கிரிக்கெட் சபைகளை எதிர்த்து கபில்தேவின் ஐபிஎல்லில் விளையாட முடிவு செய்தார்கள். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களின் தடையை நீக்கியது. இங்கிலாந்து கவுண்டிகளில் எந்த வீரரும் விளையாடமுடியும் ஆனால் ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என பல கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் ஐசிசிக்கு பயந்து கூறிக்கொண்டன. ஐசிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்களின் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அண்மையில் நீக்கியது ஆனாலும் மீண்டும் இந்த தடை வரலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஐபிஎல்லும் செய்யும் சதிகளைப் பலரும் அறிந்தாலும் ஏனோ குரல்கொடுக்க தய‌ங்கவில்லை. பல நாடுகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் தனித்த அமைப்பாக இயங்கும்போது ஆசிய நாடுகளில் மட்டும் அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் அடங்கியிருப்பது வேதனைக்குரியது. அதேபோல் தெரிவுக்குழுவும் தங்களிற்க்கு பிடித்தவர்களைத் தான் தெரிவுசெய்கிறார்கள். சொதப்புகின்ற வீரர்களை மீண்டும் மீண்டும் எடுப்பார்கள், சிறந்த உதாரணம் அகர்கார். அதே நேரம் திறமையுள்ள வீரர்களுக்கு ஏனோ இடம் கொடுப்பதில்லை. ஐபிஎல்லில் திறமையாக விளையாடிய ஷான் மார்ஷ் இன்றைக்கு அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பவீரராக பரிமாணம் எடுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஹைடன் தான். ஆனால் இந்தியவீரர்களில் பிரகாசித்த பத்ரினாத், கோணீ, யுசூப் பதான், போன்ற வீரகளுக்கு ஓரிருபோட்டிகளில் மட்டும் இடம்கொடுத்து அவர்களை மீண்டும் ஒதுக்குகின்றனர் தெரிவாளர்கள். ஐசிஎல் என்றால் என்ன ஐபிஎல் என்றால் என்ன இரண்டும் திறமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தினால் எவரையும் வாங்கிவிடமுடியும் என நினைக்கின்றார்கள். இரண்டுபோட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்காது திறமைக்கேற்ற ஊதியம் என்றால் எத்தனை வீரர்கள் போட்டி போட்டுகொண்டு இணைவார்கள். அத்துடன் திறமையாக விளையாடினாலும் அணியில் சில நந்திகள் இருக்கும்வரை இளம் வீரர்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்தம் .

*** வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும். ***

வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.
வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை இருக்கின்றது.


கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன் குறிப்பாக டொக்டர் முருகானந்தன், சந்திரவதனா அக்கா, தாசன்( நீண்ட நாட்களாக காணவில்லை) போன்றவர்கள் நிச்சயம் இந்த அனுபவம் உடையவர்களாக இருப்பார்கள். இதனை எழுதச் சொன்ன லீனா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்.

*** வாசி வாசி நீ வாசி ***



வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது மிகவும் உண்மை. ஒரு மனிதனை நிலைத்திருக்க வைப்பது இரண்டு விடயங்கள் ஒன்று வாசிப்பு, இன்னொன்று அனுபவம்.

சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவரால் ஏனைய நாடுகள், கலாச்சாரம், புதிய தகவல்கள் என்பவற்றை வாசிப்பதால் அறியமுடிகின்றது. வாசிப்பு என்பது வெறுமனே தினசரிகள், வார மாத இதழ்கள் என்பதுடன் மட்டுப்படுத்தமுடியாது எவனொருவன் பரந்துபட்ட வாசிப்புக்கு தன்னைத் தானே உள்ளாக்குகின்றானோ அவனது அறிவு மென்மேலும் வளரும். அத்துடன் வாசிப்பை குறிப்பிட்ட பகுதிகளுடன் நிறுத்துவதும் தவறானது ஆகும். உதாரணமாக சிலர் பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் மட்டும்தான் வாசிப்பார்கள். இன்னொரு சாராரோ கட்டுரைகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே வாசிப்பார்கள். வாசிப்பதில் சகலகலா வல்லவனாக இருந்தால் உங்கள் அறிவு நிச்சயம் வளரும். 

இன்றைக்கு பலரிடம் பெரிதாக பேசப்படும் ஒரு விடயம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்பதாகும். இதற்கான முக்கியகாரணம் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கங்களும். பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே வாசித்து அறிகிறார்களே ஒழிய ஏனைய பக்கம் கண் வைப்பதே இல்லை. பாடசாலைகளில் நூலகம் இருந்தாலும் நூலகத்தில் நேரம் கழிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. 

இணையத்தின் வரவு வாசிப்பில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வரவின் பின்னர் பலர் புத்தக வடிவிலான நூல்களை வாசிப்பது குறைவு இணையத்திலேயே மின் நூல்களாகவும் ஏனைய வடிவிலும் வலைகளிலும் வாசிக்கின்றார்கள். இது ஒருவகையில் நன்மையான விடயமாகும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வலைப்பதிவாளர்கள் இருக்கமாட்டார்கள்.

இன்னொரு சாரார் தமிழ்மொழியில் வாசிப்பதை பாவமாக கருதுகிறார்கள். குறிப்பாக மேல்தட்டு மக்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சிறந்த உதாரணமாக அண்மையில் தசாவதாரம் புகழ் ஒளிப்பதிவாளர் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என புகழ்பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். அதே நேரம் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் நூல்களை விட ஆங்கில நூல்களுக்கு அதிகம் பேர் முண்டியடித்து வாங்குகின்றார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். 

ஆனாலும் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கம் மிகமிக அரிதாக பலரிடம் காணப்படுகின்றது. 

இனி எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

சிறுவயதுமுதல் அம்புலிமாமா, கோகுலம் வாசகனாக இருந்தேன். 7 வயதில் உறவினர் ஒருவர் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நகைச்சுவை நவீனத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல். 

பின்னர் பாடசாலையில்( 5 ஆம் வகுப்பு தொடக்கும் 8 ஆம் வகுப்பு வரை) பாடப்புத்தகத்தில் மறைத்து ராணி கொமிக்ஸ் வாசிப்பது எங்கள் வகுப்பு மாணவர்களின் மிகமுக்கிய கடமை. பாடசாலையில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை. அதனால் சில துணிந்த மாணவர்கள் ஏதோ ஒருவழியில் புத்தகங்களை வகுப்பறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பின்னர் ஒரு பாடவேளைக்கு 50 சதம் என ஏனைய மாணவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலித்துவிடுவார்கள். ஆசிரியர்களிடம் பிடிபட்டால் புத்தகத்தின் உரிமையாளரைக் காட்டிக்கொடுக்ககூடாது. அப்படிக் காட்டிக்கொடுத்தால் அந்த மாணவனுக்கு பின்னர் வாசிப்பதற்க்கு யாரும் புத்தகம் கொடுக்கமாட்டார்கள். 

சிலவேளைகளில் இருவர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தை சேர்ந்துவாசித்து கட்டணத்தை பங்குபோடுவதும் உண்டு. என் வகுப்பில் நூற்றுக்கு எண்பதுவீதமானவர்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு, எங்கள் கைச் செலவுக்கு உள்ள பணம் பெரும்பாலும் இதற்க்கே செலவிடப்பட்டது. என்றும் மறக்கமுடியாத சுவாரசியமான மலரும் நினைவுகள். இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம்.  மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கட்டன. ஒரு சிறிய அளவுமாணவர்களே இவற்றைப் படித்தோம். 

9 வகுப்புக்கு பின்னர் தேடல்கள் கொஞ்சம் மாறியது. பாடசாலை நூலகத்தில் ஊரிலிருக்கும் பொது நூலகத்திலும் பெரும்பாலான நேரங்கள் கழிந்தன. சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரை அறிமுகமாகினார்கள். ஏற்கனவே சில ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாவல் படித்தகாலமது. பெரும்பாலும் அவர்களது அந்தக்கால எழுத்துக்கள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தியதாலும் செங்கைஆழியான் போன்ற சிலர் மட்டும் வேறு வேறு களங்களில் எழுதியதால், இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலையில் மேலே குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர்களின் புத்தகத்துக்கு அனுமதிகள் இல்லை.( குறிப்பாக நாவல்களுக்கு). பொது நூலகத்தில் அவர்களை வாசிப்பது இரவலாக வீட்டுக்கு கொண்ட செல்லமுடியாது அங்கேயும் இப்போ கூடி இவர்களை வாசிக்காதே என செல்ல மிரட்டல். அதனால் இவர்களின் எழுத்தில் ஏதோ விடயம் இருக்கு என களவாக வாசிக்க பழகினேன். சுஜாதாவின் ஆங்கிலச் சொற்கள் வசந்தின் ஜோக்குகள் அப்போ புரியவில்லை. 

ஓஎல்(கபொத‌சாதரண தரம்) படிக்கும்போது அப்பா சாண்டில்ய‌னை அறிமுகப்படித்தினார் கடற்புறா முதல் முதல் வாசித்த சரித்திர நாவல், பின்னர் ஜவனராணி, கடல்ராணி என சாண்டில்யன் எனக்கு பொழுதுபோக்க உதவியுதடன் அந்தக்கால தமிழ் அரசர்களது வீரத்தையும் வெற்றிகளையும் அறியத்தந்தார். பலராலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் சிலாகிக்கப்பட்டாலும் எனக்கு அந்த வேளைகளில் வாசிக்க கிடைக்கவில்லை. நூலகத்தில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார். 

ஏஎல் (கபொத‌உயர்தரம்) சோதனை எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருந்த போது பொன்னியின் செல்வன் வாசிக்க கிடைத்தது. முதல் பாகத்தை இரவிரவாக விழித்திருந்து வாசித்தேன். அடுத்த நாள் இரண்டாம் பாகம் என இப்படியே மூன்றோ நாலு நாட்களில் முழுவதுமாக வாசித்துமுடிந்துவிட்டேன். வந்தியத்தேவனும், பழுவேட்டரையர்களும்(தசாவதாரம் நெப்போலியனின் ஒப்பனை பழுவேட்டரையர் போல் தெரிகின்றார்), பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனும், குந்தவை, பூங்குழலி, வானதி சேந்தன் அமுதன் என அனைத்துப்பாத்திரங்களும் கனவில் கூட வந்தார்கள். பல தடவைகள் வாசித்தும் இன்னும் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு சரித்திர நாவல் இதுவாகத்தான் இருக்கமுடியும். 

சிலர் சொல்வார்கள் வாசிக்கும்போது ஊண் உறக்கம் மறக்கின்றேன் என உண்மைதான். நானே இரு தடவைகள் சுய நினைவற்று வாசித்துக்கொண்டிருந்த வேளையில் நூலகத்தில் வைத்துப்பூட்டப்பட்டேன். பின்னர் நூலகர் திரும்ப வந்து என்னை திறந்துவெளியே விட்டார். 

இன்னும் எழுதலாம் ஆனால் எனக்கும் சலிப்புத் தட்டும் வாசிக்கும் உங்களுக்கும் சலிப்புத் தட்டும் ஆகவே இத்துடன் இந்த கதை நிறுத்தப்படுகின்றது. உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதவிவாகவோ இடுவீர்கள் என நினைக்கின்றேன்.