Showing posts with label பின்நவீனத்துவம். Show all posts
Showing posts with label பின்நவீனத்துவம். Show all posts

எவன்டி உன்னைப் பெத்தான் - பின்நவீனத்துவப் பாடல்

அண்மைக்காலமாக நடிகர் சிம்பு எழுதிய வானம் படத்தின் எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியிருந்தாலும் சிலரிடம் பலத்த அடியும் வாங்கியிருக்கின்றது. அந்தப் பாடலில் மறைமுகமாக இருக்கும் தத்துவங்களை விளக்கவே இந்தப் பதிவு,

மிக முக்கிய குறிப்பு : இது ஒரு சீரியஸ் பதிவு ஆனாலும் கும்மிக்கு இடமிருக்கு,

பாடல் ஆரம்பிக்கும் போதே தமிழர்களின் சொந்தமொழியான ஆங்கிலத்தில்

Oh baby I feel like flying
Flying above up in the air
When I look at you looking and me like
you wanna make love to me then,

இந்த வரிகள் வருகின்றன. எனக்கு ஆங்கிலம் தெரியாதபடியால் இதனை விளங்கபடுத்த முடியவில்லை (இதனை விளங்கபடுத்தினால் கடைசியாக வரும் ஆங்கில வரிகளுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டும் அதனை விட ஆங்கிலம் தெரியாதவனாக இருப்பதே மேல்)

உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்.


இந்தவரிகளில் கவிஞர் சிம்பு அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற இராமாயண வரிகள் போல தன் காதலியைத் தான் பார்த்த அந்த வினாடியே தன்னை அவளிடம் தொலைத்துவிட்டதாக கூறியிருக்கின்றார். என்றைக்கும் ஆண்கள் தான் பெரும்பாலும் காதலில் தொலைகின்றார்கள் என்பதையும் இந்த இடத்தில் மறைமுகமாக காணோம் என்ற வரிகளில் சொல்கின்றார்.

சத்தியமா எனக்கு நீ வேணாம்,
கண்டிப்பா எனக்கு நான் வேணும்..

இந்த வரிகள் காதல் தோல்வியில் காதலியை வேண்டாம் எனச் சொல்கின்றாரா என நினைத்தால் அதுதான் இல்லை, ஏற்கனவே முதல் வரியில் அவளிடம் தன்னைத் தொலைத்தபடியால் அவளுக்குள் இருக்கும் அவனும் அவனுக்குள் இருக்கும் அவளும் தான் இங்கே உவமையாக காட்டப்படுகின்றது, நீ வேணாம் என்றால் காதல் தனக்கு தன்னுடைய இதயத்தை வேண்டாம் என்கின்றார். அதேமாதிரி நான் வேணும் என்பது காதலி வேண்டும் என்பது பொருள்.

ஒன்னு என்ன கண்டுபுடிச்சு குடு,
இல்ல ரொம்ப simple உன்னை எனக்கு குடு,
இல்ல தயவுசெஞ்சு ஒரு Gunனெடுத்து என்ன சுடு.


இந்த வரிகளில் காதலும் வியாபாரம் தான் என்பதை கவிஞர் அழகாக நிலையுறுத்துகின்றார். தன்னை தன் காதலி கண்டுபிடிக்கமாட்டார் ஆகவே அவர் கட்டாயம் தன்னை காதலுனுக்கு கொடுக்கவேண்டும் என்ற கொடுக்கல் வாங்கல் இங்கே காட்டப்படுகின்றது. அதே நேரம் காதலிலும் வன்முறை உண்டு என்பதைக் காட்ட Gunனெடுத்து என்ன சுடு என்கின்றார், இந்த இடத்தில் கவிஞரின் சிலேடை புகுந்து விளையாடுகின்றது Gun என ஆங்கிலத்தில் துப்பாக்கி எனவும் அர்த்தம் கொள்ளலாம் இல்லையென்றால் காதலி தன்னுடைய கண்ணால் பார்க்கவேண்டும் என்ற இரண்டாவது அர்த்தமும் கொள்ளலாம். கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்ற திருக்குறளின் அடிநாதம் தான் இந்த வரிகளில் தொனிக்கின்றது.

எவன்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்,
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்.

இந்த விஞ்ஞானபூர்வமான வரிகளுக்கு ஏன் பலரும் கண்டனம் தெரிவிக்கின்றார்கள் என்பது விளங்கவில்லை. எங்கடை ஊர்களில் யார் பெத்த புள்ளையோ என ஒரு சொலவடை உண்டு. அதனைத்தான் கவிஞர் சிம்பு கொஞ்சம் மாற்றி காதலியின் தாய்க்கும் தந்தைக்கும் அவரின் பிறப்பில் பங்குண்டு என்ற விஞ்ஞான விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதனை ஆணாதிக்க கருத்தாக பலர் விளங்கிக்கொண்டுள்ளமைதான் கவலையளிக்கின்றது.

முதலாவது சரணத்தில் தற்போதைய இளைஞர்கள் மட்டுமல்ல வயதுபோனவர்களும் பல மணி நேரத்தை செலவிடும் பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் என தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகளை காதலியுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். எத்தனை நாளுக்குத் தான் நிலாவுடனும் மலர்களுடனும் காதலியை ஒப்பிடுவது. 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களின் நினைவாகவே இருக்கும் பலர்போல காதலனும் தன் காதலியின் நினைவாக இருக்கின்றான் என்பதையே

என் Facebook statusசும் நீதான்,
என் Twitter tweetingகும் நீதான்,
என் Skype callலும் நீதான், நீதான்...
என் BBMமும் நீதான், என் FaceTimeமும் நீதான்,
என் iPhone iPad எல்லாமே நீதான்,
என் iTunes playlist நீதான்,
அதில் Love songகும் நீதான்,
அது play ஆகுற speaker நீதான்,

வரிகள் விளக்குகின்றன.

அடுத்த வரிகள் கவிஞரின் உச்சத்திறமையையே காட்டுகின்றன். உலகில் தாய் தந்தையருக்கு நிகரான எவரும் இல்லை என்பதுதான் வெளிப்படை உண்மை, அதையே உடைத்து தன் காதலியை தன் அப்பா அம்மாவுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். அத்துடன் தன்னுடைய சொத்தாக காதலியையே ஒப்பிடுகின்றார். இதற்க்கு எல்லாம் மேலாக கடவுளுடன் காதலியை ஒப்பிடுகின்றார். காரணம் இரண்டுமே பலருக்கு இன்னும் எட்டாத விடயம் என்பதால் கடவுளாகவும் கண்டுபிடிக்கமுடியாத விடயம் என்பதால் உயிர் எனவும் உவமிக்கின்றார்.

என் அப்பாவும் நீதான்,
என் அம்மாவும் நீதான்,
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்,
என் கடவுளும் நீதான்,
என் உயிரும் நீதான்,
எனக்கு எல்லாமே நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்...


இரண்டாவது சரணத்தில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையுடன் காதலியை ஒப்பிடுகின்றார், காலையில் எழும்பி பல் துலக்கும் பேஸ்டுடனும் பிரசுடனும் ஒப்பிட்டு என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதால் தலையை அழகுபடுத்தும் ஷவர் ஜெல்லும் தன் காதலிதான் என்கின்றார். இப்படியே பெண்களின் ஒப்பனைப் பொருட்களாக எல்லாம் தான் இருப்பதாகவும் புலம்பி ஹைலைட்டாக அவளின் வீட்டு வோட்ச்மேனாகவும் இருப்பான் என்பதைச் சொல்லி வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்க தான் சம்மதம் என்கின்றார்.

பின்னர் மனித உடம்பின் எலும்பு சதை இரத்தம் எல்லாவற்றிலும் தன் காதல் நிறைந்துள்ளது என புலம்புகின்றார். இறுதியாக காதலியின் நண்பனும் நான் தான், அவரின் காதலனும் தான் தான் என முடிக்கின்றார். இந்த இடத்தில் நட்பு காதலாக மாறலாம் என்ற தத்துவத்தைத் தொட்டுச் செல்கின்றார் கவிஞர் சிம்பு.

இப்படிப் பல அர்த்தங்கள் மறைந்திருக்கும் அற்புதமான பாடல் தான் எவன்டி உன்னைப் பெத்தான் என்றபாடல். இந்தப் பதிவைப் படித்தபின்னர் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் மறைபொருட்கள் துல்லியமாகத் தெரியும்.

கீழேயுள்ள காணொளியும் உங்களின் மனதை சந்தோஷப்படுத்தும்,



பின்குறிப்பு : இந்தப் பாடலின் வரிகளை எனக்கு தட்டச்சு செய்து தன்னுடைய வேலைப் பளுக்களுக்கிடையில் எனக்கு மின்னஞ்சிய எனது சிஷ்யன் கன்கோனுக்கும் மிக்க நன்றிகள்.

இந்தப் பாடலைக் கேட்டபின்னர் சிம்புவின் தந்தையாரின் "தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ! ..." என்ற கவித்துவமான வரிகள் எல்லாம் மறந்தேபோயின.

அந்தப்பாடலும் உங்கள் பார்வைக்கு.