முன்குறிப்பு : நான் இந்தப் படத்தின் ஆதாரமான ஹிந்திப்(A Wednesday) படம் பார்க்கவில்லை. தசாவதாரத்தின் பின்னர் ஒரு படம் முதல் நாள் முதல் காட்சி.
நாம் தினமும் பத்திரிகைகளில், சில தொலைக்காட்சிகளில வாசிக்கும் பார்க்கும் சம்பவங்கள் எம்மை சமூகத்தின் மீதும் சில மக்களின் மீதும் தார்மீக கோபம் கொள்ளச் செய்யும், அப்படிக் கோபம் கொண்ட ஒரு சாமனியனின் கதைதான் உன்னைப் போல் ஒருவன்.

கதை :
வழக்கம் போல் சொல்லமாட்டேன், திரையில் பார்க்க.
திரைக்கதை :
கமலின் வேகமான திரைக்கதை படத்தின் அச்சாணி. எத்தனை காலமாகிவிட்டது இப்படியொரு வேகமான திரைக்கதையைப் பார்த்து. பிரேசில் அர்ஜென்ரீனா விளையாடும் கால்பந்து இறுதி ஆட்டம் போன்ற விறுவிறுப்பான திரைக்கதை. நான் இங்கே கால்பந்தைக் குறிப்பிடக் காரணம் படம் முதல் பாதி 50 நிமிடங்கள், இரண்டாம் பாதி 50 நிமிடங்கள் (கால்பந்தில் 45+45). மோகன்லால், கமல், மற்றும் இன்னும் இரண்டு போலீஸ்காரர்களினூடு கதையைக் கொண்டுபோகும் உத்தி என கமல் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.
வசனம் :
சுஜாதாவின் பின்னர் தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த இன்னொரு நல்ல வசனகர்த்தாவாக இரா.முருகன் மிளிர்கின்றார். எள்ளலுடன் கூடிய வசனங்கள் அனைத்தும் கூர்மையானவை. பல இடங்களில் வசனங்கள் ரசிகர்களைக் கை தட்ட வைக்கிறது. எந்த இடங்கள் எனச் சொன்னால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் கெட்டுவிடும். சில இடங்களில் வரும் ஆங்கில வசனங்கள் கூட மிகவும் கூர்மையானவை. அத்துடன் சாதாரண ரசிகனுக்கும் புரியும் எளிமையான வசனங்கள் என இரா.முருகன் முதல் படத்திலையே சதமடித்திருக்கிறார்.
இயக்கம் :
சலங்கை ஒலியில் கோணங்கித் தனமாக படம் எடுத்த சின்னப் பொடியனான சக்ரி டொலட்டி இதை இயக்கியிருக்கிறார் (பின்னர் தசாவதாரத்தில் ஷிட்ராமாக மன்னிக்கவும் ஸ்ரீராமாக கோவிந்த் கமலுடன் அமெரிக்க காட்சிகளில் வருபவர்). கமல், மோகன் லால் என இரண்டு பிரமாண்டங்களை காட்சிகளில் பிரமாண்டம் இல்லாத படத்தில் திறமையாக இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு :
மனோஜ் சோனியின் ரெட் ஒன் கமேராவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். சமீபத்தில் பார்த்த ஒரு பிரமாண்ட படத்தின் ஒளிப்பதிவுடன் ஒப்பிடும்போது மிகமிகமிக அருமை. அதிலும் எந்த மொட்டை மாடிகளில் இருந்து கழுகுக் பார்வையாக சில காட்சிகள், ஒரு பானை சோற்றுக்குப் பதமான ஒரு சோறு.
இசை :
கமலின் தயாரிப்பான ஸ்ருதியின் அறிமுகம். பாடல்களும் பாடல் வரிகளும் பலராலும் ஏற்கனவே பாராட்டப்பட்டவை, ஆனால் படத்தில் பாடல்களே இல்லை. அல்லா ஜானேயின் சில வரிகள் மட்டும் ஒரு தடவை மட்டும் வருகின்றது. பின்னணி இசையில் ஸ்ருதி கம்பன் வீட்டுக் கட்டுத் தறியாக கலக்கியிருக்கிறார். கமல் மாடிப் படிகளில் ஏறும் காட்சிகளிலும் மோகன் லால் சம்பந்தப்பட்ட சில காட்சிகளிலும் ஸ்ருதி பிரமாதம். இன்னொரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவிற்க்கு தயார்.
நடிப்பு :
கமல், மோகன் லால் இருவரினதும் மிகையில்லாத இயல்பான நடிப்புகளை பாராட்டுவது என்பது சூரியனுக்கு டோர்ச் அடிப்பது போன்றது(வரிகள் உதவி கேபிளார், வேறை வார்த்தைகள் தேடினேன் கிடைக்கவில்லை), இவர்களுடன் இந்த இரண்டு போலிஸ்காரர்களும் மிகவும் திறமையாக தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள். லக்ஸ்மியும் தன் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்(லக்ஸ்மிக்கு வயது போய்விட்டது என பக்கத்து இருக்கை நண்பர் கவலைப்பட்டார்). சதிலீலாவதி சின்னப் பையன், எங்கேயோ போய்விட்டீர்கள் சிவாஜி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன் போன்றவர்களும் வந்துபோகின்றனர். சிகரட்டும் கையுமாக நவநாகரீக பெண்ணாக வரும் அனுஜா ஐயரும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
.jpg)
படத்தில் உள்ள சிறப்புகள் :
1. ஹீரோ அறிமுகப் பாடல், குத்துப்பாடல், குத்தாத பாடல் எனப் பாடலே இல்லை.
2. கதாநாயகி இல்லை, கத்துக் குட்டி ஹீரோக்களே இரண்டு ஹீரோயின் கேட்கும் போது ஹீரோயினே இல்லாத படம்.
3. முகத்தை குளோசப்பில் காட்டி பயமுறுத்தும் பஞ்ச் டயலாக் இல்லை. இரண்டு தடவைகள் கமல் மொபைல் போனைப் பார்த்து "your time starting now " என்பார் அதுதான் உண்மையான பஞ்ச்.
4. திணிக்கப்பட்ட நகைச்சுவைகள் இல்லை. திரைக்கதையுடன்மெல்லிய நகைச்சுவையும் பயணிக்கின்றது.
5. கதாநாயகன் 20 பேருடன் சண்டைபோடுவது இல்லை, வில்லன் இல்லை.
இப்படிப் பல தமிழ்சினிமாவின் பாரம்பரியங்களை உடைத்திருக்கின்றது இந்தப் படம். படத்தின் பல காட்சிகளில் நிறைய உள்குத்துகள் பின்நவீனத்துவமாக தெரிகின்றது.
மொத்ததில் பொன்விழா நாயகன் கமலின் மகுடத்தில் இன்னொரு வைரம் உன்னைப்போல் ஒருவன்.
உன்னைப் போல் ஒருவன் வேறு யாரும் அல்ல நீங்களும் நானும் தான்.