2010 புதுவருடம் சில அனுபவங்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு சாதாரண நாள் தான் எமக்கு. அங்கே வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் புது ஆடை அணிந்து தேவாலாயம் சென்று வருவார்கள். கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டுக்கு எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கச் செல்வது. பெரும்பாலு கிறிஸ்துமஸ், புதுவருடம் திருவெம்பாவைக் காலத்தில் வருவதால் சிலவேளைகளில் விருந்துபசாரத்தில் கேக் விடுபட்டுவிடும்.

பின்னர் கொழும்பிற்க்கு வாழ்க்கை மாறியபின்னர் ஆங்கிலப் புதுவருடம் கொஞ்சம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஆனாலும் சில காலம் வெடி கொழுத்துதல், நண்பர்களுடன் வீதிகளில் திரிதல் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம் அப்போதைய நாட்டின் சூழ்நிலை. 2002ல் முதல் முறையாக ஆங்கிலப் புத்தாண்டை 31ந்திகதி இரவே சக்தி நிறுவனத்தில் கொழும்பு மாநகர சபை முன்றலில் நடந்த இன்னிசையுடன் தொடங்கி, நடு இரவில் வெள்ளவத்தை கடற்கரையில் வெடி கொழுத்தி மகிழ்ந்தேன்(தோம்).

2003ல் நாட்டில் நிலவிய சமாதானத்தால் வெள்ளவத்தை கடற்கரையால் ரோந்து போன காவல்துறை வாகனத்தில் நாம் கொழுத்திப்போட்ட ஈர்க்கு வானம் பட்டும் அவர்கள் சிரித்தபடி புதுவருட வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதன் பின்னர் புதுவருடக் கொண்டாட்டங்கள் அதிகம் களைகட்டவில்லை. காரணம் நண்பர்கள் ஒவ்வொருவராக தொழில், கல்வி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றமை.

கொழும்பைப் பொறுத்தவரை ஆங்கிலப் புதுவருடம் என்பது இன, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக அண்மைக் காலங்களில் மாறிவிட்டது. முக்கியமாக இந்து ஆலயங்களில் சிலவற்றில் அதிகாலையில் விசேட பூஜைகள் செய்கின்றார்கள், இந்துக்கள் பட்டு உடுப்புகளில் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போல் கோயில்களுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றார்கள். அத்துடன் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கத்தினால் ஆங்கிலப் புத்தாண்டு இன்னும் பிரபலமாகிவிட்டது. இது சரியோ தவறோ எனக்குத் தெரியாது.

நான் அறிந்தவரை 2000 ஆவது ஆண்டு பிறந்தது தான் உலகெங்கும் அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதாகும். கொழும்பிலும் அந்த வருடத்தை கோலாகலமாக கொண்டாடினார்கள். ஆனால் அதனைவிட அதிகமான மகிழ்ச்சியுடன் இந்தவருடம் கொண்டாடப்பட்டதாக தெரிகின்றது. நான் வாழ்கின்ற இடத்தில் வழக்கம்போல் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.

இரவு நீண்ட நேரம் இணையத்தில் உலா வராததால் இணையத்தில் தமிழ்மணத்தைத் திறந்தால் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக என்னுடைய இரண்டு பதிவுகளும் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளன. எனக்கு ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் திறந்த நன்றிகள். அத்துடன் நான் ஓட்டுப்போட்ட பலரின் பதிவுகள் அடுத்த கட்டத்திற்கு தெரிவாகி இருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

2010 புத்தாண்டானது மகிழ்ச்சியாகவே தொடங்கியிருக்கின்றது. 2009ல் என் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், பிரச்சனைகள், சோகங்கள் என மோசமாகவே சென்றவிட்டது ஆனால் 2010ல் முதல் நாளில் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. ஏனைய நாட்கள் எப்படி இருக்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.

வழக்கம் போல் சன் டிவியில் டாப் 10 படங்களில் அவர்கள் தயாரிப்பும், கலைஞரில் அவர்கள் வாங்கிய படங்களும் தெரிவாகின. விஜயில் நீயா? நானா? ஸ்பெசல் நிகழ்ச்சியில் கோபிநாத்துடன் சேர்ந்து சில ஜோதிடர்களும் மக்களை நிரம்பவே குழப்பினார்கள்.

எது எப்படியோ இந்த வருட ஆரம்பம் இன்று, ஆதலால் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு : இது என்னுடைய 250 ஆவது பதிவு.

13 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

புதுவருட வாழ்த்துக்கள் அண்ணா....

யாழ்ப்பாணத்தில் அதிகமாகவே கொண்டாடினார்கள்....
வவுனியாவிலும் பரவாயில்லை....

தமிழ்மண விருதுப் போட்டிகளில் அடுத்தகட்டத்திற்கு சென்றமைக்கு வாழ்த்துக்கள்.... இறுதி வாக்கெடுப்பிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்......

Subankan சொல்வது:

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR ANNA

Subankan சொல்வது:

ஆங், சொல்ல மறந்திட்டன், தமிழ்மண விருதுகள் வெல்ல வாழ்த்துகள்!!!

balavasakan சொல்வது:

##யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. ##

ஆமாண்ண யாரோ நம்ம வாலுகள் நேற்றஃ நள்ளிரவு என் வீட்டில் வெடிகொளுத்தி போட்டாங்கள்....

##என்னுடைய இரண்டு பதிவுகளும் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளன##

பாத்தோம் வாழ்த்துக்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

##வழக்கம் போல் சன் டிவியில் டாப் 10 படங்களில் அவர்கள் தயாரிப்பும், கலைஞரில் அவர்கள் வாங்கிய படங்களும் தெரிவாகின. விஜயில் நீயா? நானா? ஸ்பெசல் நிகழ்ச்சியில் கோபிநாத்துடன் சேர்ந்து சில ஜோதிடர்களும் மக்களை நிரம்பவே குழப்பினார்கள்.##

நான் இப்ப இதொண்ணும் பாப்பதில்லை முட்டாளாக்கிறாங்கள் மனுசர தொலைக்காட்சிப்பெட்டி இப்ப கிரிக்கெட் மட்ச் பாக்க மட்டும் தான்

மீண்டும் ஒரு முறை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown சொல்வது:

250 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா.....

Bavan சொல்வது:

வாழ்த்துக்கள் அண்ணா 250வது பதிவுக்கும் தமிழ்மணப் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்றமைக்கும்..

இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...:)

ஆயில்யன் சொல்வது:

வாழ்த்துக்கள் புத்தாண்டிற்கும் - 250வது பதிவிற்கும் :)

ARV Loshan சொல்வது:

உண்மை தான் வந்தி..
வருவன கலப்பான எல்லாவற்றையும் தமிழன் எடுத்து தமக்கே உரியதாக்குவது என்றும் வழமை தானே.. அதிலே ஒன்று தான் இந்த ஹப்பி நியூ இயர்.. இத்தனை சோகங்கள் மத்தியில் ஒரு நாள் கொண்டாடுவதில் தப்பில்லையே..
நம் தான் எதையுமே கொண்டாடுவதில்லை.. கொண்டாடுவோர் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே//

தமிழ்மணம் தந்த சந்தோசமான (எனக்கும் தான்) தகவலை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
நல்ல வேளை எம் இரு பதிவுகளும் வேறு வேறு பிரிவுகளில்.. :)

புல்லட் சொல்வது:

ஓம் அண்ணே! யாழ்ப்பாணத்தில் ஒரே ரணகளம்தான்.. அதுக்கு முதல் நாம் இருப்பது யாழ்ப்பாணத்திலா அம்பாந்தோட்டையிலா என்று சந்தேகம் வருது.. எங்குபார்த்தாலும் சிங்கள மொழிதான்..

தமிழ் மணத்தில அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..

எல்லாவற்றுக்கும் மேல் அனைத்து பதிவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Atchuthan Srirangan சொல்வது:

250 ஆவது பதிவு கண்ட பாலகருக்கு பங்குச்சந்தை பாலகரின் வாழ்த்துக்கள்.

சி தயாளன் சொல்வது:

இனிய புதுவருட வாழ்த்துகள்...மக்களின் வாழ்வில் நிம்மதி ஏற்பட வேண்டுமானால் இப்படியான சந்தோசங்கள் பண்டிகைகள் தான் தரக்கூடிய நிலையில் உள்ளன..

உண்மைத்தமிழன் சொல்வது:

புத்தாண்டு வாழ்த்துக்களோடு 250-வது பதிவிற்கும் சேர்த்து வாழ்த்துகிறேன்..! வாழ்க வளமுடன்..!

வடலியூரான் சொல்வது:

I wish u for ur 250th blog & new yr