ஏவிஎம்மின் அயன் - அட்டகாசம்.

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு வேகமான திரைக்கதையுடைய படத்தைப் பார்த்து, சென்னை ஏர்போர்ட்டில் ஆரம்பிக்கின்ற படம் கொங்கோ, மலேசியா, சென்னை என பல இடங்கள் பறந்து அதே ஏர்போர்ட்டில் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

சூர்யா :

மிகவும் சாதாரணமாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து சாமார்த்தியமாக கடத்தல் செய்யும் இளைஞனாக படம் முழுவதும் வியாபித்திருக்கின்றார். கொங்கோ சண்டைக்காட்சியிலும், மலேசியா கார் ஷேசிங் காட்சியிலும் ஆக்சன் ஹீரோவாக மாறி, தமன்னாவுடன் காதல்காட்சிகளில் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ரிகாரணமாக சர்வசாதாரணமாக காதல் வயப்படுகின்றார். பாடல்களில் பழைய காக்க காக்க அன்புச்செல்வன் போல் மிடுக்காகவும் அழகாகவும் இருக்கின்றார்.

தியேட்டரில் ஏன் இத்தனை பெண்கள் கூட்டம் என்பது சூரியாவின் சட்டை இல்லாத உடும்பைப் பார்த்த்போதுதான் புரிந்தது. பெரும்பாலும் முதல் வாரத்துதில் தியேட்டரில் இளைஞிகள் கூட்டம் இருக்காது ஆனால் இரண்டாவது நாளான இன்றே சூரியாவைப் பார்க்க ரொம்பக்கூட்டம். அடுத்தகாட்சி வரிசையில் முதல் பத்துபேர் அக்மார் பாடசாலை மாணவிகள்.

ஜோதிகா உங்கள் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்.

கே.வி.ஆனந்த் :
கனாக் கண்டேன் வியாபார ரீதியில் போகாவிட்டாலும் வித்தியாசமான கதையால் முதல் படத்திலையே திரும்பிப்பார்க்க வைத்த பிரபல ஒளிப்பதிவாளர். இந்தப் படத்திலும் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவிடம் கொடுத்துவிட்டு கதை,திரைக்கதை,வசனத்தை சுபாவுடன் பங்குபோட்டதுடன் மிரட்டலாகவும் இயக்கியிருக்கின்றார். அதிலும் எப்படிக் கடத்துகின்றார்கள் என்பதை பிளாஷ்பேக்கில் சொல்வதும் வித்தியாசமாக இருந்தது.

நண்டு ஜெகனும் சூரியாவும் ஒரு வீட்டில் நுழைந்து செய்யும் அலப்பறைகளும் பின்னஎ அதேபோல் காட்சிகள் தமன்னா வீட்டில் நடப்பதும் தியேட்டரையே கலகலக்க வைத்தது. கேவி ஆனந்தின் அடுத்த படம் என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கின்றேன்.

எம் எஸ் பிரபு:
இன்னொரு ஒளிப்பதிவாளரின் படத்தில் தன் திறமைகள் அனைத்தையும் காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். குறிப்பாக கொங்கோ காட்சிகளில் திரையில் ஒரு மெல்லிய கறுப்பால் ஆபிரிக்கா கண்டத்தின் கலரை கண்முன்னர் கொண்டுவருகின்றார். அத்துடன் கொங்கோ மலைகளை அதளபாதாளம் வரை கமேரா சுட்டுத் தள்ளியிருக்கின்றது. மலேசியா கார் ஷேசிங்காகட்டும் கொங்கோ சண்டையாகட்டும் பறந்து பறந்து படமாக்கியிருக்கின்றார்.

பாடல் காட்சிகள் அழகாகவந்திருக்கின்றன. குறிப்பாக பாலைவனத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் கொள்ளை அழகு. விழிமூடி ஜோசிக்கின்றேன் பாடல் ஒவ்வொரு காட்சியும் ஹக்கூ கவிதை.

சுபா :
வசனத்தில் தங்கள் எழுத்தை காட்டிய சுபா இரட்டையர்கள் கதையிலும் குறிப்பாக கடத்தல் காட்சிகளில் தங்கள் கதை எழுதிய வாசித்த அனுபவங்களை எடுத்துவிட்டிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. சில டெக்னிக்கள் ஏற்கனவே அறியப்பட்டாலும் மினரல் வாட்டர் போத்தலில் வைரம் கடத்தியது விசிலடிக்க வைத்த காட்சி.

எடிட்டர் ஆண்டனி :
படத்தை தூக்கி நிறுத்திய ஒருவரில் இவரும் ஒருவர். தேவையான இடங்களில் கத்தரியை நன்கு பயன்படுத்தியிருக்கின்றார். போரடிக்கின்றது போல் ஒரு காட்சியும் இல்லை. திரைப்படத்தின் வேகத்திற்க்கு இவரே முக்கிய காரணம்.

ஹாரீஸ் ஜெயராஜ் :
காக்க காக்க, கஜனி, வாரணம் ஆயிரம் என சூரியாவுடன் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துவிட்டு இப்போ நான்காவதாக அயனையும் ஹிட் பண்ணியுள்ளார். விழிமூடி ஜோசிகின்றேன் ,நெஞ்சே நெஞ்சே சன் மியூசிக்கில் இனி தினமும் ஒளிபரப்பாகும். ஹானி ஹானி பாடல் வரிகளே விளங்கவில்லை. பின்னணி இசை சுமார் தான். இன்னும் கொஞ்சம் மினைக்கெட்டிருக்கலாம்.

சண்டைப் பயிற்சி :
கொங்கோவில் நடக்கும் முதல் சண்டைக்காட்சிகள் ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தின. கட்டடங்களுக்கு கட்டடம் சூரியா தாவிகிறதும் பின்னர் அடியாட்களை அடித்துத்வைப்பது அட்டகாசம். நல்லவேளை கட்டடங்களுக்கு இடையில் பெரிதாக இடைவெளி இல்லை இல்லையென்றால் சூரியாவும் இன்னொரு விஜயாக புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயற்பட்டிருப்பார். அதிலும் கூரையில் நடக்கும் சண்டை கண்ணுக்கு குளிரிச்சியாக இருக்கின்றது.

நண்டு ஜெகன் :
சூரியாவுக்கு அடுத்ததாக இந்தப்படத்தில் பேசப்படுவார். கனாக் கண்டேனில் விவேக்கைவைத்து காமெடி என்றபெயரில் மொக்கைபோட்ட கேவிஆனந்த் இந்தமுறை நண்டு ஜெகனை காமெடி மற்றும் துணைப் பாத்திரத்தில் உலாவவிட்டது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதுவரவு. சந்தானத்திற்க்கு போட்டியாளாராக வரும் வாய்ப்பு உள்ளது. தங்கையை சூரியாவுடன் காதல் பண்ண வைக்கும் இடங்கள் மட்டும் கொஞ்சம் லாஜிக் மீறுகின்றது. அண்ணனாக இல்லாமல் மாமாவாக அந்தக் காட்சிகளில் தெரிகின்றார், தவிர்த்திருக்கலாம். இவரின் டைமிங் காமடிகள் கலகல. குறிப்பாக "தமன்னாவை நீ பார்க்கத் தான் சினேகா செய்வது எல்லாம் நமீதா" என்ற இடத்தில் விசில் மழை.

இளைய திலகம் பிரபு :
கல்யாண் ஜூவலேர்ஸ் கெட்டப்பில் இல்லாமல் நான்கு நாள் வெள்ளைத் தாடி சேர்ட் என படத்தை நிறைத்து நிறைவாகவும் செய்திருக்கின்றார். நீண்ட நாட்களின் பின்னர் பெயர் சொல்லும் கதாபாத்திரம். சூர்யாவின் குரு வழிகாட்டியாக கடத்தல் செய்பவர். குளோசப் காட்சிகளில் திரையை நிறைக்கின்றார். இனிமேல் இவர் கதாநாயகனாக நடிப்பது கஸ்டம் தான் காரணம் டூயட் எல்லாம் ஆட முடியாது. இவரின் முடிவுதான் வழக்கமான தமிழ்சினிமாபோல் அமைந்தது கவலை.

தமன்னா :
கல்லூரியில் அறிமுகமானவர் கதாநாயகியாக வந்துபோகாமல் சில இடங்களில் குறிப்பாக காதல்காட்சிகளில் ஜோதிகாவைப் பொறாமைப்பட வைத்து நடித்தும் உள்ளார். அசின் அல்லது நயந்தாரா செய்திருந்தால் இன்னும் நல்லாயிருக்கும். அவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று இவரிடம் மிஸ்போல் எனக்குத் தெரிகின்றது. விக்னேஸ்வரன் ஆதவன் போன்ற தமன்னா ரசிகர்கள் மன்னிப்பார்களாக.

வில்லன் :
வட இந்திய முகச் சாயல் என்பதால் இவரைத் தெரிவுசெய்திருந்தாலும் தன் பங்கை ஓரளவு சிறப்பாக செய்திருக்கின்றார். கோலங்கள் ஆதியின் குரல் நல்லாக செட் ஆகியிருக்கின்றது. சாயலில் பைவ் ஸ்டார் கிருஷ்ணா போல் இருக்கின்றார். இவருக்குப் பதிலாக டானியல் பாலாஜியை நடிக்க வைத்திருக்கலாம்.

பொன்வண்ணன், ரேணுகா(சூரியாவின் தாய்), போன்றொரும் தங்கள் பங்கை திறம்படவே செய்திருக்கின்றார்கள்.

சில கேள்விகள்:
1 . அயன் என்ற பெயர் எதற்காக? காரணம் அயன் என்றால் பிரம்மா என வடமொழியில் அர்த்தம். அயன் தமிழ்ப் பெயரும் அல்ல என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் அயன் என்றால் படத்திற்க்குப் பொருத்தமாக இருக்கும்.
2. கடத்தல் செய்யும் முறைகளை அக்குவேறு ஆணிவேறாகக் காட்டுகின்றார்கள் இது ஏனையவர்களை கடத்தல் செய்யத் தூண்டாதா?
3. ஒரு குற்றவாளி எப்படி பின்னர் அரச உத்தியோகத்தில் சேரலாம்?

இப்படிச் சில கேள்விகளை சும்மாவிட்டுவிட்டு பார்த்தால் அயன் அட்டகாசம் தான்.

டிஸ்கி : சன் பிக்சர்சின் தயாரிப்பு என சன் குழுமத்தின் சகல சானல்களிலும் காட்டுகின்றார்கள் ஆனால் நான் பார்த்த தியேட்டரில் ஏவிஎம்மின் அயன் தான். ஒரு வரிகூட சன் பிக்சர்ஸ் பெயர் வரவில்லை. என்ன காரணமோ?

8 கருத்துக் கூறியவர்கள்:

ராஜன் சொல்வது:

யோவ் கதை என்னாய்யா...? அதை விட்டுட்டு சிம்ரன் டான்ஸ் நல்லா இருக்கு, நமீதா இடுப்பு பரவாயில்லைன்னு... இது இன்னாயா... விமர்சனமா இது....

வந்தியத்தேவன் சொல்வது:

யோவ் ராசா நான் என் விமர்சனத்தில் கதையைச் சொல்லி பார்ப்பவர்களின் சுவாரசியத்தைக் கெடுக்கவிரும்பவில்லை. இன்றைக்கு எனக்குப் பக்கத்தில் இருந்து படம் பார்த்த ஒரு அதிகப்பிரசங்கி நேற்றே பார்த்துவிட்டு அடுத்த காட்சி இது அடுத்த காட்சி இதென்றார்.

கதை வழக்கமான தமிழ்சினிமா கதைதான், தாதா, காதல், பழிவாங்கல், சென்டிமென்ட், காமெடி ஐட்டம் பாடல் என சகலதும் உண்டு,

Anonymous சொல்வது:

சன் குழுமம் தயாரிக்கவில்லை விநியோகம் மட்டும் அதுவும் இந்தியாவில் மட்டும் செய்கின்றது. தயாரிப்பு ஏவிஎம், புலம் பெயர் நாடுகளில் விநியோகம் ஐங்கரன். திரைப்படத் துறையினர் ஈழத்தமிழருக்கு வழங்கிய ஆதரவை மறந்துவிட்டீர்களா? சன் டீவி ஸ்ரீ ல‌ங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அவர்கள் நேரடியாக உண்ணாவிரதத்தை ஒளிபரப்பியதுதான்.

வெண்காட்டான் சொல்வது:

1st the ad for Ayan came as produced by Aingaran. onthe next day i saw the ad as suntv. Aingaran made lot of tamils by its monopoly and cural ways. but this is the only eelam tamil company which we can be proud. but suntv took many movies from them adn now they are out of market. murpakal saien pitpakal vilayum. but suntv is the producer. it took the share of aingaran. aingaran is no more porcucing any film. they gave enthiran aslo to suntv. ellathayum vida suntv is biased. they never support tamil problem. they never show muthukumaran´s funural or news.

வேத்தியன் சொல்வது:

நீங்களும் நம்ம ஊரா???
நம்ம கடையில வந்து கமென்ட அடிச்சது பாத்தேன்...
எந்த இடம்??
நானும் கொழும்பு தான்...
ஆனந்த தாண்டவம் பாமன்கடை ஈரோஸ்ல ஓடுதுங்க...

Muruganandan M.K. சொல்வது:

வழமையான கதையம்சம் கொண்ட கதை போலத் தெரிகிறது. உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.

வந்தியத்தேவன் சொல்வது:

அனானி,வெண்காட்டான் உங்கள் சன் குழுமம் பற்றிய கருத்துக்களுக்கு நன்றிகள்.

வருகைக்கு நன்றிகள் வேத்தியன் இலங்கைப் பதிவாளர்கள் பலரைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கின்றேன்,

டொக்டர் இந்தப் படத்தின் கதை சாதாரண கதைதான் ஆனால் திரைக்கதை அமைத்துள்ள விதமும் ஒளிப்பதிவும் சூரியாவின் சண்டைக்காட்சிகளும் கொஞ்சம் புதிது. தீ வில்லு 1977 பெருமாள் போன்ற படங்களை விட எவ்வளவோ மேல் பார்க்கலாம்.

Muruganandan M.K. சொல்வது:

நன்றி வந்தியத்தேவன். பார்க்க இருக்கிறேன்.