மரணம் அனைவரும் எம் வாழ்க்கையில் சந்திக்கபோகும் சுவாரசியமான விடயம்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது எங்கள்(ஈழத்தமிழர்) வாழ்க்கையில் சகஜமான விடயம்.
கடந்தவாரம் என்னுடைய ஆச்சி திருமதி.மீனாட்சியம்மா செல்வத்துரை( பாட்டி,அப்பாவின் அம்மா) தன்னுடைய 96ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அந்த நாட்களில் பெண்களுக்கு கல்வி என்பது தேவையற்றது என கருதப்பட்டபோது தன்னுடைய விடாமுயற்சியால் ஒரு ஆசிரியையாக பணியாற்றியது மட்டுமல்ல தன்னுடைய கணவருடன் சமூக சீர்திருத்த விடயங்களில் அவருக்கு உதவியதுடன் அந்தநாள் தமிழரசுக் கட்சி மேடைகளிலும் பெண்கள் பிரதிநிதியாக உரையாற்றியதாக அடிக்கடி சொல்வார்.
எனது வாசிப்புப் பழக்கம் அவரிடம் இருந்தே எனக்கு தொற்றியது என என் உறவினர்கள் சொல்வார்கள். ஏனென்றால் பாண் சுற்றிவரும் சிறியதுண்டுப்பேப்பரில் கூட என்ன எழுதி இருக்கு என வாசித்துப்பார்க்கும் பழக்கம் ஆச்சிக்குண்டு. இணையத்தில் பத்திரிகைகள் வந்தபின்னரும் ஆச்சி வாசிப்பதற்காகவே நாம் பத்திரிகை வாங்கியதுண்டு. சிலவேளைகளில் பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளைக்கூட அவர் வாசித்துவிட்டு எமக்கு புதினமாகச் சொல்வார்.
இதேபோல் தான் அவரின் புத்தகவாசிப்பும் இருந்தது. பெரும்பாலும் ஆன்மீகப் புத்தகங்களையும் ஏனைய சஞ்சிகைகளான மல்லிகை, ஞானம், விகடன் குமுதம் வாசிப்பார். வாசிப்பதற்க்கு எதுவும் இல்லாத போது சிலவேளைகளில் தமிழ்க் கொம்யூட்டர் கூட வாசித்திருக்கின்றார். கடந்த சில வருடங்களாக மட்டும் அவர் பகலில் நித்திரைகொள்வதைப் பழக்கிக்கொண்டார்.
அவரது நீண்ட ஆயுளுக்கு அவரின் நேரம் தவறாத உணவுப் பழக்கம் முக்கியகாரணம் என நான் நினைக்கின்றேன். அத்துடன் தாவரபோஷணியாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். காலைச் சாப்பாடு காலை 9 மணிக்கும் மத்தியானச் சாப்பாடு மதியம் 2 மணிக்கும் இரவுச் சாப்பாட்ட்டை 8 மணிக்கும் ஆச்சி சாப்பிடுவார். மூன்று நேரச் சாப்பாட்டுக்குமுன்னர் அவன் சில நிமிடங்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர். சரியாக 9 மணிக்கு நித்திரைக்குப் போய்விடுவார். இதுதான் அவரின் தினசரிக் கொழும்பு வாழ்க்கையாக இருந்தது. யாழில் இருந்தபோது உறவினர்வீடுகள் கோவில்கள் என ஆச்சியின் பகல்பொழுது பயன்பட்டது.
அவரின் விருப்பம் போலவே அவர் தன்னுடைய சொந்தமண்ணில் தன் வாழ்க்கையைமுடித்துக்கொண்டார். இன்னும் 4 வருடங்கள் வாழ்ந்திருந்தால் ஆச்சியும் சதமடித்திருக்கலாம், என்ன செய்வது அவரின் விதி அவ்வளவுதான் என நினைக்கவேண்டியதுதான். அத்துடன் சிலவேளைகளில் தனது பேர்த்தி ஒருவர் 104 வயதுவரை வாழ்ந்ததுபோல் தானும் வாழக்கூடும் என இடைக்கிடை சொல்வார்.
இந்த வாரத்தில் என் நண்பனுடைய தந்தை ஒருவரும் இங்கே காலமாகினார். அவரின் ஈமக்கிரிகைகளில் கலந்துகொள்ள இங்கேயுள்ள மயானத்திற்க்குச் சென்றிருந்தேன். லண்டனில் மயானம் கூட பூங்காபோல் அழகாக உள்ளது. சீனன், வெள்ளைக்காரன்,கறுப்பன், இத்தாலிக்காரன், இந்தியன், ஈழத்தவன் என்ற பாகுபாடுகளின்றி அனைவரின் கல்லறைகளும் ஒரே தோட்டத்தில் சமரசம் உலாவும் இடம் இது என சொல்லாமல் சொல்லியது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்திருந்தால் வடகொரியாக்காரனும், தென்கொரியாக்காரனும் பக்கத்து பக்கத்து கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருக்கலாம். 1900ல் பிறந்து 1997களில் இறந்தவரின் கல்லறையும் பிறந்து சில மணித் துளிகள் மட்டும் இந்த பாவப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில் இருக்க விருப்பமில்லாத குழந்தையின் கல்லறைகூட பார்வைக்குப்பட்டது.
அவற்றைப் பார்த்தபின்னர் தான் ஏற்கனவே நான் எழுதிய மரணம் சம்பந்தப்பட்ட பதிவையும் ஆச்சிக்கு என் அஞ்சலியையும் எழுதமுடிவு செய்தேன். இனிப் பழைய பதிவிலிருந்து சில பத்திகள்.
எனக்கு ஒருகாலத்தில் மரணம் என்றால் பயமாகத் தான் இருந்தது. பக்கத்துவீட்டு ஆச்சி செத்தால் ஒரு கிழமைக்கு நான் வீட்டை விட்டு இரவில் வெளியே போகமாட்டன், பகலில் யாரும் ஆச்சியின் வீட்டைக் கடந்துபோவது என்றால் யாரும் உதவி செய்யவேண்டும். அவ்வளவு பயம் எனக்கு.
ஆனால் மரணங்கள் மலிந்த பூமியாக எங்கள் நாடு மாறிய பின்னர் மரணம் என்பது உதயன் பேப்பரில் வரும் ஒரு சாதாரண செய்தியாகவே மாறிவிட்டது. காரணம் மரணத்தைப் பார்த்து, கேட்டுச் சலித்துப்போனவர்கள் நாம்.
எங்கேயாவது தூரத்தில் ஷெல் விழுந்தாலோ, இல்லை குண்டுகள் வீசப்பட்டாலோ வீதியால் போகிற வருபவர்களை "எங்கேயாம்?" எனக் கேட்டால் அவர் "அது பருத்தித்துறையில் 12 ஆம்" என்பார். இங்கே 12 என்பது இழந்த உயிர்களின் எண்ணிக்கை, இன்னொருவர் கொஞ்சம் விளக்கமாக "அது நெல்லியடியில் 20 அதில் 5 குழந்தைகள் " என்பார், இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது.
கலியாண வீடுகள் மரண வீடுகளான நிகழ்வுகள் கூட எங்கள் மண்ணில் நிகழ்ந்தன. ஒரு முறை காலை ஒரு மரண வீட்டில் நின்றுவிட்டு பின்னேரம் கலியாண வீட்டில் நின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.
நேற்றிருந்தவர் இன்றிருக்க மாட்டார், இன்றிருப்பவர் நாளை இருக்கமாட்டார், இதுதான் விதி. ஒரு சின்ன சந்தேகம் இந்த விதி விதி என்கின்றோமே அது கடவுள் போன்றதா? இல்லை வேறு ஏதும் வடிவிலானதா?. மரணம் எந்த நேரமும் வரலாம், எப்படியும் வரலாம்.
சதா எந்த நேரமும் ஒருவன் மரணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனின் வாழ்க்கை அவ்வளவுதான். அதே நேரம் மரணம் வருகின்ற நேரம் வரட்டும் அதுவரை நாம் நம்ம பாட்டிலை இருப்போம் என அதனைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தால் அவன் சாதாரண மனிதன்.
இந்தவிதமான ஆசைகளையும் வைத்திருக்காமல், எதிலும் பற்று வைக்காமல் மரணத்தைக் கண்டு பயப்படாமல், எவன் மரணத்தை இலகுவாக ஏற்றுக்கொள்கின்றானோ அவன் ஞானி.
விவேகானந்தர், நபிகள் நாயகம், இயேசு நாதர், புத்த பிரான் என சமய வழிகாட்டிகள் மரணத்தை வென்றவர்கள். ஏனென்றால் அவர்கள் உலக லவ்கீக வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் மூலம் மரணத்தை வென்று இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள்.
உடனே உங்களுக்கு மரணத்தை வெல்லவேண்டுமென்றால் துறவியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம், நிச்சயமாக துறவியாகித்தான் நீங்கள் மரணத்தை வெல்லவேண்டும் என்றில்லை. உங்கள் நாளாந்த வாழ்க்கையிலையே மரணம் பற்றிய பிரக்ஞ்சை இன்றி அதுவரும்போது ஏற்றுக்கொள்ளுவோம் என என்றைக்கு எண்ணுகின்றீர்களோ அன்றைக்கு நீங்கள் மரணத்தை வென்றவர்கள்.
தனக்கு சில நிமிடங்களில் மரணம் வரும் எனத் தெரிந்தும், "நான் திரும்பி வரும்போது எனக்கு கொக்கா கோலா வாங்கி வையுங்கோடா" எனக் கூறிச் சென்ற என்னுடைய பாடசாலை மாணவனையும் இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.
முன்னாள் யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர். துரைராஜா அவர்களின் மரணம் தான் நான் பார்த்த மரண ஊர்வலங்களிலே, இதுதான் மக்கள் கூட்டம் அதிகமான ஊர்வலம் என நினைக்கின்றேன். வதிரி ஆலங்கட்டை மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்யதார்கள், அவரது சிதைக்கருகில் இன்னொரு சாமான்யனின் உடல் தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. என்னருகில் நின்ற என் நண்பன் "பாரடா புரபெசருக்கும், யாரோ ஒரு இனம் தெரியாத சாமான்யனுக்கும் ஒரு இடம் தான், வாழ்க்கையில் நாம் கடைசியாக வரும் இடம் இதுதான்" என்றான். அப்போது தான் எனக்கு இதுதான் சுடலை ஞானம் என்பார்கள் என்ற எண்ணம் வந்திருச்சு. சிலருக்கு சுடலைக்குப் போகும் வரை இந்த சுடலை ஞானம் வராது, சிலருக்கு முன்னரே வந்துவிடும்.
என் நண்பன் இன்றைக்கும் மரணம், விதி, ஆசை என எதிலும் பற்றில்லாமல் இருக்கின்றான் ஆனால் அவன் துறவியல்ல.
இங்கே மரணத்தில் இருந்து மனிதர்களைப் பிரிப்பது, அவர்களின் ஆசையாகும். ஒருவனுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துகொண்டே இருக்கும்.
ஒருவன் குழந்தையாக இருக்கும் போது மரணம் பற்றிய எந்த பிரச்சனையும் இருக்காது, வாலிபனாக மாறிய பின்னர், எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வாழ்வதால் அந்த நேரத்தில் மரணத்தைச் சந்திக்க கலங்குவான். திருமணம் ஆனபின்னர் தன் குழந்தைகள் வாழ்க்கைக்காக மீண்டும் மரணத்தைச் சந்திக்க தயங்குவான், பின்னர் அந்தக் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் திருமணம் செய்து, தன் பேரப்பிள்ளைகளின் நன்மைகளைப் பார்க்கும் வரை தான் இறக்ககூடாது என எண்ணுவார், இப்படி எண்ணி எண்ணி அவர் தன் 90 வயதுகளில் இறக்கும் வரை அவரின் ஆசை அழியாமல் தான் இருந்தது.
அதே நேரம் நமக்கு வேண்டியவர்களின் மரணம் நம்மை கதிகலங்க வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம் போன்றவற்றுடன் ஏனைய சின்னச் சின்ன காரணங்களும். உதாரணமாக ஒருவர் நன்றாக நண்டுக் கறி சமைப்பார் அவரது கறி அவரது உறவினர்களுக்குப் பிடிக்கும், அவர் இறந்தபின்னர் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் பலரின் மனதில் இருக்கும்.
சிலவேளைகளில் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வருவார் அல்லது வரமாலும் இருக்கலாம். சில விடயங்கள் வாழ்க்கையில் வந்துபோகும் அவற்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாது, எந்த நேரமும் ஒரு விரக்தி நிலையே இருக்கும். இது மனநோயைக் கூட உண்டாக்கலாம்.
இப்படியான சிந்தனைகளில் இருந்து விடுபடத்தான் பொழுதுபோக்குகள் உருவாகின, ஒருவன் தன் மனதை தேவையற்ற விடயங்களில் அலைபாயவிட்டால் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வருவது வரட்டும் இன்றைய நாளை நாம் சிறப்பாக வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை என்றைக்கும் ஒளிவீசும்.
ஆச்சியினதும் என் நண்பனின் தந்தையினதும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
மரணம் இன்பமானது
எழுதியது வந்தியத்தேவன் at 18 கருத்துக் கூறியவர்கள்
ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-2010
அரசியல்
இலங்கை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 20 மாதச் சிறைத் தண்டனையை இலங்கை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர்களில் சரத்தும் ஒருவர், ரணில் என்ற மண்குதிரையை நம்பி பலம்வாய்ந்த மஹிந்த ராஜபக்சாவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் நின்றதன் பயனை இப்போ சரத் சிறையில் நன்றாகவே அனுபவிக்கின்றார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களின் காணமல் போனமை கொலைக்கு காரணமானவர்களின் சரத்தும் ஒருவர் என பலர் கூறுகின்றார்கள். சரத்தின் மனைவி அனோமாவோ தன்னுடைய கணவன் ஒரு புண்ணிய ஆத்மா என்பதுபோல் கோயில் கோயிலாகப் போகின்றார். பாவம் அவருக்கு தமிழில் உள்ள முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி தெரியாது. இவருக்கு நியூட்டனின் 3ஆவது விதி தெரிந்திருந்தால் சரத் தமிழர்களின் மேல் காட்டிய அடாவடிகளுக்கு இன்னமும் அனுபவிப்பார் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருக்கும். தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது அனோமாவின் விடயத்தில் உண்மையாகிவிட்டது.
இராணுவத் தளபதி என்ற சிறப்புடன் ஓய்வு பெற்றிருக்கவேண்டிய சரத் இன்றைக்கு துரோகி என்ற பட்டத்துடன் சிறையில் இருக்கின்றார். பேசாமல் மஹிந்த சகோதரர்களின் சொற்படி கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்குமா? சேராத இடம் தன்னில் சேர்ந்து தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம். இல்லையென்றால் முன்னால் பாகிஸ்தான் அதிபர் முஷார்ப் போல் இராணுவப் புரட்சி செய்திருக்கவேண்டும், அதைச் செய்யும் தைரியமும் அவரிடம் இல்லை. இப்போ சிறையில் இருக்கும் சரத் தான் அந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிருழுந்திருக்கலாம் தியாகி என்ற பட்டமும் கிடைத்திருக்கும் என நினைக்கலாம். எது எப்படியோ வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்.
இந்தியா
கடந்த வார ஜூனியர் விகடனில் கார்த்தி சிதம்பரம்(ப.சிதம்பரம் மகன்) திருமாவளவனுக்கு தனியே சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுக்காட்டும் படி சவால் விட்டிருக்கின்றார். பல விகடன் வாசகர்கள் பின்னூட்டங்களில் பின்னிவிட்டார்கள். விகடனும் இனிமேல் கார்த்தி சிதம்பரம் போன்ற வாரிசு கத்துக்குட்டி அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்காது என நினைக்கின்றேன். பலர் கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் எப்படிக் கடந்த தேர்தலில் வென்றார், முடிந்தால் கார்த்தி தன்னுடைய தந்தையை திமுக, அதிமுக கூட்டு இல்லாமல் தனித்து வெற்றி ஈட்டிக்காட்டட்டும் எனக் காட்டமாக எழுதி இருக்கின்றார்கள். ராஜிவ் காந்தி சிலைக்கு செருப்பு அணிவித்த சம்பவம் தொடர்பில் தன்மானத் தமிழன் வெறுமாவளவன் மன்னிக்கவும் திருமாவளவன் தனக்கும் தன் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தன் வளர்ப்பு அன்னை சோனியாவிற்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம். இதை எல்லாம் பார்க்கும் போது எங்கள் தலைவர் கவுண்டமணி பல வருடங்களுக்கு முன்னர் சொன்ன "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்ற பஞ்ச் டயலாக்கே வந்து தொலைகின்றது.
கொமன்வெல்த் போட்டிகள் ஒருமாதிரி நிறைவு பெற்றுவிட்டன, தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை.அதே நேரம் இந்தியா பதக்கப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஊழல்களால் நிகழ்ந்த இந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு நிறையவே இருந்தாலும் வரும் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார்களா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இடையில் கல்மாடி போன்றவர்கள் குறுக்கிட்டால் இந்தியா பேக்கப் தான்.
விளையாட்டு
கிரிக்கெட் என்றாலே இப்போ சூதாட்டம் தான் நினைவுக்கு வருகின்றது. பாகிஸ்தான் அணிக்குள் நடந்த குத்துக்கள் வெட்டுகள் ஆறமுன்னர் ரெய்னா மேல் பூதம் பாய்ந்திரருக்கின்றது. ரெய்ணா நல்ல துடிப்பான இளைஞர் வேகமாக ஓட்டங்கள் எடுக்ககூடிய்வர். அவரிடம் இருந்து இப்படியான முடிவு மாற்றும் செய்ல்களை நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, சச்சின் மட்டும் தான் இந்தியா சார்பில் அணியில் இருக்கினறார் வழக்கம் போல் ஐசிசியும் ஆசிய வீரர்களை விட அவுஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றது. சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரைவில் நடக்க விருக்கும் உலக் கிண்ணப்போட்டிகளும் முடிவே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது போல் நடக்கும்.
சின்னத் திரை
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட நிகழ்ச்சி இறுதிப்போட்டியில் நடனத்திற்குப் பதில் நெஞ்சில் கல்லுடைப்படு நெருப்புக்குள் பாய்வது போன்ற சாகசம் செய்தவர்களுக்குத் தான் பரிசு என நினைத்து கலா மாஸ்டர் பாலா, ஸ்வேதாவிற்க்கே அந்த வீட்டை கொடுத்துவிட்டார். யாராவது ஒருவருக்கு பலத்த காயம் அல்லது இழப்பு வந்தால் தான் இந்த சாகசங்கள் பநிறுத்தப்படும். இவர்களின் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வைக்க இடம் போதாமல் அபுதாபியில் இடம் பெற்றது. இதில் உச்சக் கட்டக் காமெடி பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான்.
சில நாட்களுக்கு முன்னர் விகடனில் ஒரு பாடகர் தன்னை ஒரு பாடுப்ப்போட்டி நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் நடுவராகப் பணியாற்றச் சொல்லிக் கேட்டதுடன் தாம் கொடுக்கும் கொமென்ட்ஸைத் தான் சொல்லவேண்டும் என வற்புறுத்தினார்களாம். அவரோ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தன்பாட்டுக்குச் சென்றுவிட்டார். ரியாலிட்டி ஷோக்களும் மெஹா சீரியல்கள் போல் மக்களை பேக்காட்டவே பயன்படுகின்றது.
பதிவுலகம்
நீண்ட நாட்களாகச் சந்திக்காத இலங்கைப் பதிவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை விஹாரமகாதேவிப் பூங்காவில் அல்லது காலிமுகத்திடலில் சந்திக்கப்போவதாக பதிவர் ஆதிரை தெரிவித்திருன்ந்தார். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இந்தச் சந்திப்பின் இணைப்பாளர்களாகிய அனுதினன். வதீஸ், மற்றும் கங்கோனிடம் கேட்கும் படியும் ஆதிரை கூறினார். அத்துடன் இந்தச் சந்திப்பில் சில ஓய்வுபெற்ற பதிவர்கள் கலந்துகொள்ளப்போவதாகவும் கூறினார். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இணைப்பாளர்களில் எவரையாவது தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறவும்.
சுய புலம்பல்
அண்மையில் நண்பர் ஒருவர் சும்மா வெட்டியாக இருப்பவர்கள் தான் பதிவு எழுதுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நக்கலாகச் சொன்னார். பாவம் அவருக்குத் தெரியாது பெரும்பாலும் பதிவுலகில் வேலைகளுடன் அதிலும் ஐடியுடன் தொடர்புள்ளவர்கள் மட்டும் தான் எழுதுகின்றார்கள். சுவாரசியமாக எழுதினாலே பலர் உங்களை உற்றுக்கவனிப்பார்கள் என்ற உண்மை அந்த நண்பனுக்குத் தெரியாது. நான் கூட நீண்ட நாட்களின் பின்னர் எழுதக் காரணம் கல்வி சக வேலைப் பளுதான். எழுதுவதற்க்கு சில நிமிடங்கள் ஒதுக்கமுடியவில்லை. ஒரு சிலர் பதிவுகள் அதிலும் கமல் இசைஞானி சுஜாதா என்றால் அக்குவேறு ஆணிவேறாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுவேன் இதனால் பெரும்பாலான பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்காது வாக்கு மட்டும் இருக்கும். என் நேரப் பிரச்சனைகளால் என்னுடைய பதிவுகளுக்கே நான் பின்னூட்டம் இடுவதில்லை.
குட்டிக் கதை
அண்ணேன்டா
என் நண்பன் ஒருவன் தன்னுடன் கூடப்படித்த பெண் ஒருத்தி மேல் கொஞ்சம் காதல். இறுதிநாள் ஏஎல் சோதனை முடிந்தபின்னர் அவளுடன் கதைக்கவேண்டும் என ஆசைப்பட்டு காலிவீதியில் அவளுடன் சோதனை எப்படி? போன்ற சமூகப் பிரக்ஞ்சை உள்ள கேள்விகளைக் கேட்டு அவளையும் கூட நின்ற எம்மையும் கடுப்படித்தான், எல்லாவற்றிற்க்கும் அமைதியாகப் பதில் சொன்ன அந்தப் பெண் கடைசியாக போயிட்டுவாறன் அண்ணா எனப் பதில் அளித்து என் நண்பனுக்கு அங்கேயே மோஷன் போற நிலைக்கு கொண்டுவந்துவிட்டாள்.
பாஸ் என்கின்ற பாஸ்கரனில் எப்படி சந்தானம் ஆர்யாவை நண்பேண்டா என்பாரோ அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் அண்ணனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கின்றது. இது வெறும் புனைவுதான்.
படித்தது :
விரைவில் இத்தாலியில் மினிஸ்கேர்ட் அணிவதைத் தடை செய்யப்போகின்றார்களாம். அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம்.
ரசித்தது
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 21 கருத்துக் கூறியவர்கள்
ஷங்கரின் எந்திரன்
சன் பிக்சர்ஸின் விளம்பரம், ரஜனி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான், அமரர் சுஜாதா என பல பெரிய தலைகளின் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை இரண்டாம் நாளான நேற்றுப் பார்க்கும் சந்தரப்பம் கிடைத்தது.
கதை :
இராம நாரயணனின் கதை போன்ற ஒரு ஃபன்டாசி கலந்த சயன்ஸ் பிக்சன் கதை. கதையின் நாயகன் சுஜாதா என்பதால் சில இடங்களில் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா சாயல் காணப்படுகின்றது. இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. AI (Artificial intelligence) வைத்து உருவான கதை. அதனால் கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களான ஐபி எண், கொன்ரோல், ஆல்டர் டிலிட், சிலிக்கன் சிப், பைட் என பல விடயங்கள் வந்துபோகின்றது. விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா இதில் சிட்டியை பிரதானமாக்கி இருக்கின்றார்.
திரைக்கதை :
ஷங்கரின் வழக்கமான பிரமாண்டமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகின்றது என்றால் மிகையில்லை. பல இடங்களில் சுஜாதா கைகொடுத்திருக்கின்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னமும் வேகமான திரைக்கதை கிடைத்திருக்கும். முற்பாதி கலகலப்பாக இருந்தாலும் பின் பாதியில் சில இடங்களில் இழுவை. ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன்.
வசனம் :
சுஜாதா, ஷங்கர், கார்க்கி என மூவர் வசனம் எழுதியிருக்கின்றார்கள். விஞ்ஞான விடய வசனங்களில் சுஜாதா தெரிகின்றார். பல இடங்களில் ரஜனியின் பட பஞ்ச் டயலாக்குகளை இலகுவாக வசனமாக்கி இருக்கின்றார்கள். முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் சில இடங்களில் ஏற்படுகின்றது தவிர்த்திருக்கலாம். விஞ்ஞான வசனங்கள் வருவதால் கிராமத்து மக்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் கெளதம் வாசுதேவ மேனனின் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் வசனங்கள் பாராட்டத் தக்கது. மெல்லிய நகைச்சுவை கலந்த வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கின்றது. குறிப்பாக யுத்தம் ஆயுதம் கணணி சம்பந்தப்பட்ட வசனங்கள் கலக்கல். அதிலும் ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர்.
இயக்கம் :
சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜனியுடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். ஷங்கரின் ரசிகனாக அவர் ஒரு ஹொலிவூட் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜனியை தனது தேவைக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் இயக்கி இருக்கின்றார், ஏனென்றால் அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை. ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும். 
ரஜனிகாந்த்:
ரஜனி என்ற மந்திரச் சொல்லினால் தான் இந்தப் படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது, படுகின்றது. சிவாஜிக்குப் பின்னர் நடித்த படம்,விஞ்ஞானியாக ஒரு வேடம் இன்னொரு பரிமாணத்தில் ரோபோவாக ஒரு வேடம். ரோபோ மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை நினைவூட்டுகின்றது. இன்னமும் விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் என்பது போல் இளமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அந்த உருவத்துடன் ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. வில்லனாக வரும் காட்சிகளில் ஷங்கர் ரஜனியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிப்பையும் கறந்திருக்கின்றார். (ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை), தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது ஒழிய அவரிடம் எவரும் நடிப்பை அவ்வளவாக வாங்கிக்கொள்ளவில்லை. ரஜனியிம் இனி ஷங்கர் போன்றவர்களின் படங்களில் நடித்தால் மீண்டும் அந்தக் கால ரஜனி கிடைப்பார்.
தன்னுடைய ரசிர்களின் எதிர்பார்ப்புகளை மீறி எந்தவிதமான பஞ்ச்கள், சண்டைகள் இல்லாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ரஜனிக்கே உரிய நகைச்சுவையுடன் ரோபோவை உலாவ விட்டதும் பாராட்டுக்குரியது. வில்லன் ரஜனி தற்போதைய வில்லன்களுக்கு போட்டியாக உருவாகிவிட்டார். சாதாரண ரசிகர்களுக்கு இந்த ரஜனியைப் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை இந்தப் படத்தில் தேடத்தான் வேண்டும்.
சிட்டி :
யார் இந்த நடிகர் என நினைக்கின்றீர்களா? வேறை யாருமல்ல ரோபோ ரஜனி தான். எப்படி சில நடிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றுகின்றார்களோ அதுபோல் ரஜனியும் சிட்டியுடன் ஒன்றிவிட்டார். முதல்பாதியில் சிரிக்க வைக்கும் சிட்டி இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டுகின்றார். ஐசுக்கு காதல் சொல்லும் இடங்கள் கலக்கல்.
ஐஸ்வர்யா ராய் :
உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி வெள்ளித் திரையிலும் இன்னும் இளமையாகவே இருந்து மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றார். இருவரில் பார்த்த மாதிரியே அதே அழகுடன் இருக்கின்றார். ஜீன்ஸில் 50 கேஜி தாஜ்மஹாலாக இருந்தவர் இதில் 40 கேஜியாக குறைந்தது போல் இருக்கின்றது. குறிப்பாக கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் உடைகள் அபாரம், எந்த இடங்களிலும் அவரை ஆபாசமாகவோ கண்றாவியாக தோன்றவில்லை.
பல இடங்களில் நடிக்கவும் செய்கின்றார். அபிசேக் பச்சான் உங்கள் மனைவிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் தான் ரஜனிக்குப் பொருத்தமாக இருப்பார்.
இசை :
ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். என்னுடைய பிளேயரில் கிளிமஞ்சதாரோ மெஹா ஹிட். புதிய மனிதா பாடல் ஆரம்பக் காட்சிகளுடன் ஒட்டவில்லை. ஏனைய பாடல்களில் வழக்கம் போல் ஷங்கர் வித்தியாசமாகவே எடுத்திருக்கின்றார். இதனை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம் குறிப்பாக தீம் மியூசிக் கலக்கல்.
ஒளிப்பதிவு :
பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத் தரம். பாடல்காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது.
கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது. 
எடிட்டிங் :
ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் அழகாகவே கத்தரித்துள்ளது. பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.
சந்தானம் :
பாஸ் எ பாஸ்கரனில் சதமடித்தவர் இதில் டக் அவுட்டாகிவிட்டார்.
கருணாஸ்
திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை.
ஜஸ்ட் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பின்னணியில் பலர் உழைத்திருக்கின்றார்கள் என்பது படம் முடிந்தபின்னர் காட்டும் பட்டியலில் தெரிகின்றது. ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னணியில் உழைத்தவர்கள் பலர் வெளிநாட்டினர். நிச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.
மொத்தத்தில் எந்திரன்
ரஜனி ரசிகர்களுக்கு - மினித் தீபாவளி
ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை
ஷ்ங்கர் ரசிகர்களுக்கு - ஹொலிவூட் தரம்
சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்
டிஸ்கி :
நான் பார்த்த தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டும் தான். காரணம் அந்த தியேட்டரில் முதன் முதலாக தமிழ்ப் படம் என்பதால் பலருக்குத் தெரியவில்லை. மற்றும் படி லண்டனில் பல இடங்களில் ஒரு நாளைக்கு எட்டுக் காட்சிகளுக்கு மேல் நடக்கின்றது.
படம் தொடங்குமுன்னர் ஒரு சில ஆங்கில அனிமேசன் படங்களின் ட்ரைலர் போட்டார்கள்.
எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீண்ட நாட்களின் பின்னர் நேற்றுத் தான் ஓய்வு கிடைத்தது, அதனால் தான் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சினிமா விமர்சனம். இனி மன்மதன் அம்பு தான் திரையில்.
எழுதியது வந்தியத்தேவன் at 19 கருத்துக் கூறியவர்கள்
