அதிரடி ஆர்ஜென்டீனா, ஆக்ரோச பிரேசில், உலக கோப்பை யாருக்கு?

ரோமுக்குப் போனால் ரோமானியனாக மாறு என்ற பழமொழிக்கு அமைய நானும் கிரிக்கெட்டை மறந்து செல்சீ, மஞ்சஸ்டர் யூனைட்டட், ஆர்சனல், கிறிஸ்டல் பலஸ், வெஸ்ட்காம்( மிகவும் அழகான மைதானம்) என உதைபந்தாட்ட ரசிகனாக மாறிவிட்டேன். ஆனாலும் ஏன் ஒரு பந்துக்கு 22 பேர் அடித்துக்கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை.

இந்த மாற்றத்தினால் தென்னாபிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பைப்போட்டிகளை பார்க்கும் பாய்க்கியம்(தொலைக்காட்சியில் தான்)கிடைத்தது. வீரர்களைவிட வக்கா வக்கா என அக்கா ஷகிரா (34 வயதாம் அப்போ அக்காதானே) ரொம்பவே கவர்ந்துவிட்டார்).

நேற்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. நடப்புச் சம்பியன் இத்தாலி, முன்னாள் சம்பியன் பிரான்ஸ், போட்டிகளை நடத்தும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் வெறும் கையுடன் வெளியேறிவிட்டன. இங்கிலாந்து மயிரிழையில் அடுத்த சுற்றுக்குச் சென்றாலும் பலம் வாய்ந்த ஜேர்மனியுடன் மோதவேண்டும்.



குழு A யில் முதன்முறை சாம்பியனான உருகுவே, முன்னால் சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ கலந்துகொண்டன. முதலாவது போட்டியில் மெக்சிகோவை 1 க்கு 1 என சமநிலைப் படுத்தி தென்னாபிரிக்கா தன்னுடைய திறமையை உலகிற்க்கு காட்டியது. பிரான்சுடனான போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றாலும் உருகுவேயுடனான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குழுவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதே நேரம் உருகுவே மெக்சிகோவையும் தென்னாபிரிக்கைவையும் வீழ்த்தி குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.

குழு B யில் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனா, தென்கொரியா, கிறீஸ், நைஜீரியா ஆகிய அணிகள் விளையாடின. ஆர்ஜென்டீனா விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்று முதல் இடத்தையும் தென்கொரியா கிறீசுடனான போட்டியில் வெற்றி பெற்றது அத்துடன் நைஜீரியாவை சமப்படுத்தி இரண்டாம் இடத்தில் பி பிரிவில் இடம் பெற்றது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, சுலவேனியா ஆகிய அணிகள் பிரிவு C யில் இடம் பெற்றன. இங்கிலாந்து இலகுவாக இந்தப் பிரிவில் முதலிடம் பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அமெரிக்காவைச் சமநிலைப்படுத்தியது, அடுத்த போட்டியில் அல்ஜீராவை கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி வாழ்வா சாவா என்ற சுலவேனியாவுடனான போட்டியில் டெஃபோவின் அபார கோலினால் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துவிட்டது. ஆனால் நாளைய போட்டியில் ஜேர்மனியுடன் மோத இருப்பதால் இங்கிலாந்தும் நடையைக்கட்டும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. அமெரிக்கா அல்ஜீரியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று கோல் அடிப்படையில் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.

பிரிவு Dயில் முன்னால் சாம்பியன் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா, சேர்பியா ஆகிய அணிகள் மோதின. ஆசியுடனான போட்டியில் 4 கோல்கள் அடித்த ஜேர்மன், சேர்பியாவுடனான அடுத்த போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கானாவுடனான இறுதிப்போட்டியில் மீண்டும் தன்னுடைய அதிரடியைக் காட்டி பிரிவில் முதலிடத்தை ஜேர்மனி பிடித்தது. சேர்பியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆசியுடனான போட்டியில் சம்நிலையையும் பெற்று கானா இரண்டாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.

பிரிவு Eயில் நெதர்லாந்து, ஜப்பான், கமரூன், டென்மார்க் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நெதர்லாந்து எதிர்த்து விளையாடிய மூன்று அணிகளையும் வென்று இலகுவாக முதலிடத்தை அடைந்தது. ஜப்பான் கமரூனையும் டென்மார்க்கையும் வீழ்த்தி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதே நேரம் பலராலும் எதிர்பார்க்கபபட்ட கமரூன் சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. நெதர்லாந்தும் ஆர்ஜென்டீனாவும் மாத்திரமே விளையாடிய அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரிவான Fவில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, பரகுவே, சொலவாக்கியா, நீயூசிலாந்து ஆகிய அணிகள் ஆடின. பரகுவே சொலவாக்கியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று மற்ற இரு போட்டிகளையும் சமநிலைப்படுத்தியது. சொலவாக்கியா பலம் வாய்ந்த இத்தாலியை வென்ற்றதுடன் நீயூசிலாந்துடனான போட்டியை சமநிலைப்படுத்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. நான்கு தடவைகள் சாம்பியனான நடப்புச் சாம்பியன் இத்தாலி ஒரு போட்டியைத் தானும் வெல்லாமல் கோப்பையை தென்னாபிரிக்காவில் பறிகொடுத்துவிட்டு வெறும் கையுடன் இத்தாலிக்குத் திரும்பினார்கள்.

ஐந்து தடவைகள் சாம்பியனான பிரேசில், இம்முறை உலகக்கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள போர்த்துக்கல், ஜவரி கோஸ்ட், வட கொரியா ஆகிய நாடுகள் பிரிவு G யில் இடம் பெற்றன. பிரேசில் வடகொரியா, கோஸ்ட்ரோரிக்கா இரண்டையும் வெற்றி பெற்றாலும் போர்த்துக்கல்லுடனான போட்டியை மிகவும் கடினமாக ஆடி சமநிலைப்படுத்தி பிரிவில் முதலிடம் எடுத்தது. போர்த்துக்கல் வடகொரியாவை ஏழுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலகுவாக வென்றாலும் பிரேசிலையும் ஜவரி கோஸ்ட்யும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் சுற்றில் போர்த்துக்கல்லும் உருகுவேயும் தான் எந்தக் கோலையும் எதிரணியினர் அடிக்கவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எட்டாவது பிரிவான Hசில் ஸ்பெயின், சிலி, சுவிஸ்ர்லாந்து மற்றும் கொன்டூரஸ் ஆகிய நாடுகள் விளையாடியன. முதலாவது போட்டியில் ஸ்பெயின் சுவிசிடம் அடிவாங்கிச் சறுக்கினாலும் அடுத்த போட்டிகளில் சுதாகரித்து வெற்றி பெற்று பிரிவில் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள். ஸ்பெயினிடம் தோல்வியடைந்த சிலி ஏனைய இரண்டு போட்டிகளையும் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இன்று இரண்டாவது சுற்றான லாஸ்ட் 16 ஆரம்பமாகியது. (கிரிக்கெட் போல் சூப்பர் சிக்ஸ்டீன், சூப்பர் சிக்ஸ் எனப் பெயரிட மோடி போல் பீபாவில் எவரும் இல்லையோ) முதல் போட்டியில் உருகுவே தென்கொரியாவும் மோதிய விறுவிறுப்பான போட்டியில் உருகுவே 2 க்கு 1 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தெரிவானது.

சில குறிப்புகள் :
1. இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் இந்திய அணிபோல் காணப்படுகின்றது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வெற்றி அரிதாக இருக்கின்றது. ஜெராட், ரூனி, ரெறி, லம்பார்ட், குறூச் எனப் பெரிய பட்டாளமே இருக்கின்றது. பயிற்சியாளருடனான சண்டைகளும், வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லையும் இவர்களைப் பின்னடையச் செய்கின்றது.

போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர் பலரது வீடுகளிலும் வாகனங்களிலும் இங்கிலாந்து கொடிகள் பறக்கவிடப்பட்டன இரண்டாவது போட்டியையும் சமநிலைப்படுத்தியதும் பலர் அவற்றை அகற்றிவிட்டனர். மீண்டும் சொலவேனியாவை வென்று அடுத்த சுற்றுக்கு சென்றதனால் கொடிகள் மீண்டும் தென்படுகின்றன.

2. 1986ல் ஆர்ஜென்டீனாவிற்க்கு இரண்டாம் தடவை உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்த டிக்கோ மரடோனாவின் பயிற்சியால் ஆர்ஜென்டீனா இம்முறை கிண்ணம் வென்றாலும் ஆச்சரியமில்லை. கோல் அடித்த வீரர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதும், கோல் அடித்த வேளைகளில் ஏனையவர்களை பாய்ந்து பாய்ந்து கட்டிப்பிடிப்பதும் என மனிதர் கலக்குகின்றார். சில பயிற்சிவிப்பாளர்கள் ஏனோ தானோ என இருக்கும் போது இவரின் நடைமுறைகள் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற அனைவருக்கும் சந்தோசம் தருகின்றது.

3. ரூனி எத்தனை கோல் அடிப்பார்? இன்றைய போட்டியில் வெல்வது யார்? இங்கிலாந்து ஜேர்மனியை 3க்கு 2 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தும் என பந்தய நிறுவனங்களின் கல்லா களைகட்டுகின்றது. பல முக்கிய போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்தபடியால் இவர்களுக்கு வருமானம் கூடுகின்றது. ஒரு நிறுவனம் போட்டிக்காலத்தில் வாங்குகின்ற தொலைக்காட்சி, மடிக்கணணி போன்றவற்றிற்கு இங்கிலாந்து கிண்ணம் சுவீகரித்தால் பணத்தை திரும்ப தருவதாக விளம்பரம் செய்திருக்கின்றார்கள்.

4. வழக்கமாக கால்ப்பந்துப் போட்டிகள் என்றால் அழகான காட்சிகளையும் பெண்களையும் காட்டும் கமேராமேன்கள் இம்முறை இனியவை நாற்பதுவில் ஊர்வலத்தைத் தவிர்த்து கருணாநிதி குடும்பத்தைக் காட்டியதுபோல் போட்டியை மட்டும் காட்டுகின்றார்கள்.



எதிர்வரும் 11ந்திகதி உலக சனத்தொகையில் 30%மான மக்கள் ரசிக்கும் போட்டியின் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை என்ன என்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ பொறுத்திருந்துபார்ப்போம்.

சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை.

12 கருத்துக் கூறியவர்கள்:

Bavan சொல்வது:

புட்பாலா??

தகவலுக்கு நன்றி குரு..:P (சுபாங்கனிசம்)

ஜனநாயக்கடமைகள் செய்தாச்சு..

வர்ட்டா..:)))

Bavan சொல்வது:

//சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை. //

ROFL.. இது ஒரு நல்ல கேள்வி..:P

anuthinan சொல்வது:

அண்ணே உதைபந்தாட்டம் பதிவு! ஆகவே, வாக்கும் கருத்து வழங்கலும் மட்டுமே!!!!

REPEAT
//சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை. //

ROFL.. இது ஒரு நல்ல கேள்வி..:P

K. Sethu | கா. சேது சொல்வது:

//சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை. //

பங்குபற்றுவதில்லை என ஊகித்துள்ளது தவறு. சுமார் 200 நாடுகள் பங்குபற்றியுள்ளன [ http://en.wikipedia.org/wiki/2010_FIFA_World_Cup_qualification ] இந்தியா, இலங்கை உட்பட.

தம் வலய முதல் சுற்றிலே தோல்வி அடைந்து அடுத்த சுற்றுகளுக்கு முன்னேராத நாடுகளில் அவை அடங்கும். [ http://en.wikipedia.org/wiki/2010_FIFA_World_Cup_qualification_(AFC)]

Chitra சொல்வது:

சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை.


........ same question embarrassed us. whenever you have time, read this for the story: http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_23.html

maruthamooran சொல்வது:

வந்தி….! நாடு மாறியதும் விளையாட்டையும் மாற்றியதற்கு வாழ்த்துக்களும் (கண்டனங்களும்)

இம்முறை கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகும் போது ஆர்வத்துடன் தான் இருந்தேன். ஆனாலும், அதன் பின்னர் என்னை ஆக்கிரமித்துக்கொண்ட வேலைப்பழு மற்றும் உறுவினர் ஒருவரின் மருத்துவமனை அனுமதி என்பன என்னை கால்பந்து பக்கமே தலையைத் திருப்ப விடவில்லை.

இந்தப் பதிவின் மூலம் நடந்து முடிந்த போட்டிகள் குறித்த சரியான பார்வையை அறியக் கிடைத்தது மகிழ்ச்சி. (இனி லலித் மோடிக்கு பதில் நீங்கள் தக்சின் சினவாத்திராவைப் பின்வற்றுவது நல்லது)

வாகா வாகா பாடிய இடுப்பழகிக்கு 34 வயதா? என்னைவிட இவ்வளவு வயது அதிகமென்று நீங்கள் குறிப்பிட்டுத்தான் தெரியும். என்னமா இடுப்பை ஆட்டுறா அந்த அக்கா.

என்.கே.அஷோக்பரன் சொல்வது:

சுருக்கமான, சுவையான அலசல். அது சரி இத்தனை கழகங்களைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள், நீங்கள் எந்த கழகத்தின் விசிறி?

நான் இங்கிலாந்து அணியின் ஆதரவாளன், இங்கிலாந்தணியிள் பிரச்சினை என்னவென்றால் நிறையப் பெருந்தலைகள் அவர்களைக் கட்டி மேய்ப்பதற்கிடையிலேயே கப்பெல்லோவுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது, மேலும் சில குறிப்பிட்ட வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அவர்கள் பிரகாசிக்காதவிடத்து அணியினர் விரக்தி அடைந்துவிடுகிறார்கள். றூணியின் மீது இங்கிலாந்து அணி அதிகம் தங்கியிருக்கிறது, அதுதான் அவர்கள் கோல் அடிக்கத் திணறுவதற்குக் காரணம். மேலும் தலைமைத்துவம், ஜெராட் பரவாயில்லை ஆனால் பேசாமல் அதை ரெரியிடமே விட்டுவைத்திருக்கலாம், ரெரியின் தலைமைத்துவத்தின் கீழ்தான் இங்கிலாந்து இம்முறை உலகக்கிண்ணத்திற்கு தோல்வியின்றித் தேர்வானது.

இந்திய காற்பந்தாட்ட அணி! நீங்கள் ஆசிய காற்பந்தாட்ட சவால் கேடயத்தைப் பார்க்கவில்லையா? இந்தியா தான் வெற்றிபெற்றது. இந்திய அணி இங்கிலாந்துப் பயிற்சியாளர் பொபி ஹௌடனின் கீழ் சிறப்பாக முன்னேறி வருகிறது - இந்திய அணித்தலைவர் பூட்டியா மிகப்பிரபலம், விளம்பரங்களிலும் தோன்றியிருக்கிறார், ஆனால் என்ன இந்த கிரிக்கட் மோகம் வர்த்தக ரீதியில் காற்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவில் தடையாக இருக்கிறது. (கொசுறுத் தகவல், இதுவரை இந்திய தேசிய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இலங்கையணிக்கெதிராகப் பெறப்பட்ட 7-1 வெற்றியாகும். இது 1963ல் பெறப்பட்டது)

AkashSankar சொல்வது:

அருமையாய் விளக்கி எழுதி இருக்குறீர்கள்...

ARV Loshan சொல்வது:

சுவையான விபரமான தொகுப்பு வந்தி.
என்னுடைய உலகக் கிண்ணப் பதிவை தயார் செய்து கொண்டிருக்கும் போதே உங்களுடையதை வாசிக்கக் கிடைத்ததால் கூறப்பட்ட சில விஷயங்களை அகற்றி விட்டேன்.

பல நல்ல விஷயங்களைத் தேடித் தந்துள்ளீர்கள்.

சேது ஐயா, அசோக் ஆகியோரின் தகவல்களும் அருமை.

போர்த்துக்கல், கோஸ்ட்ரோரிக்கா//
அது ஐவரி கோஸ்ட் :)

இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் இந்திய அணிபோல் காணப்படுகின்றது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வெற்றி அரிதாக இருக்கின்றது//
உண்மை.
ஆனால் அசோக் சொன்ன அளவு கடந்த எதிர்பார்ப்பே தோல்விகளுக்கான காரணம்.

வழக்கமாக கால்ப்பந்துப் போட்டிகள் என்றால் அழகான காட்சிகளையும் பெண்களையும் காட்டும் கமேராமேன்கள் இம்முறை இனியவை நாற்பதுவில் ஊர்வலத்தைத் தவிர்த்து கருணாநிதி குடும்பத்தைக் காட்டியதுபோல் போட்டியை மட்டும் காட்டுகின்றார்கள்.//

வந்தியின் நச் :)

ஆனால் புகைப்படங்களில் பல பார்த்திருப்பீர்களே.

வந்தி பிரேசில் ஆதரவாளரா?
என் அபிமான அணி ஆர்ஜென்டீனா இன்றும் இறுதியிலும் கலக்கும் என நம்புகிறேன்.

தர்ஷன் சொல்வது:

ஷகிராவுக்கு 34 வயதா?
Hips also lie
என் கணிப்பின் பிரகாரம் ஆர்ஜென்டினா,கானா, பிரேசில்,போர்த்துக்கல் என்பன அரையிறுதிக்கு வரும். ஆச்சரியங்கள் நிகழாவிடில்.
அசோக்பரனின் தகவல்களுக்கு நன்றி

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

இப்போதைக்கு ஆர்ஜன்டீனாவை அடிக்க ஆளே இல்லை.

பிரேசில் சில நேரம், அரையிருதியோடு திரும்பலாம்.

எனது பந்தயம் ஆர்ஜன்டினாவுக்கே, என்ன நளினமாக ஆடுகிறார்கள், பார்த்து கொண்டேயிருக்கலாம்..

Bavan சொல்வது:

// யோ வொய்ஸ் (யோகா) said...

எனது பந்தயம் ஆர்ஜன்டினாவுக்கே, என்ன நளினமாக ஆடுகிறார்கள், பார்த்து கொண்டேயிருக்கலாம்..//

என்ன? புட்பாலிலும் சியரிங் கேள்ஸ் ஆடுறாங்களா?..:P