நாம் சாதித்துவிட்டோம்

எம் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிவிட்டது. இலங்கை வலைப்பதிவர்களான நாம் இன்றைய ஒன்றுகூடலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம்.



கிட்டத்தட்ட 80 வலைப்பதிவர்கள் இன்று காலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கூடி, ஒவ்வொருவரையொருவர் அறிமுகம் செய்து பல்வேறுபட்ட விடயங்களை விவாதித்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இதனைப் பற்றிய நீண்ட பதிவினை பின்னர் எழுதுகின்றேன். ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவரும் எழுதுவார்கள். அதற்க்கு முன்னர் ஒரு சின்ன நுனிப்புல் மேய்தல்.



காலை சரியாக 9 மணி 15 நிமிடமளவில் புல்லட்டின் அறிமுகவுரையுடன் ஆரம்பமாகியது நிகழ்வு. புல்லட் ஏன் இந்த ஒன்றுகூடல், எப்படி நாம் இதனை தொடங்கினோம் என்ற விடயங்களை தனக்கே உரிய பாணியில் சபை கலகலக்க உரையாற்றினார்.





அடுத்து வலைப்பதிவும் சட்டமும் என்ற விடயத்தினை சுபானு விளக்கினார். காப்புரிமை, போன்ற விடயங்களையும் அத்துடன் இலங்கையில் வலைப்பதிவுகள் சம்பந்தமான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை என்பதையும் கூறினார்.



இன்று வலைப்பதிவின் 10ஆவது ஆண்டு நிறைவு என்பதால் ஆதிரையினால் பிறந்த நாள் கேக் வெட்டுவது என்ற விடயம் நிகழ்த்தப்பட்டது. எழுந்தமானமாக 10 வலைப்பதிவர்களைக் கொண்டு 10 மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு அந்த கேக்கினை எழுத்தாளார் திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, ஒளிபரப்பாளரும் இன்றைய சிறப்பு விருந்தினருமான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்டர் ஜீவராஜ் ஆகியோர்கள் அந்த கேக்கினை ஒன்றாக வெட்டினார்கள்.




அடுத்ததாக பதிவர்கள் ஓவ்வொருவராக தம்மை அறிமுகம் செய்துகொண்டார்கள். வந்திருந்த 80 பதிவர்களில் மிகச்சிலரே இன்னும் பதிவு எழுதாமல் இருப்பவர்கள். ஏனையவர்கள் பதிவர்கள்(யார் எவர் அவரின் வலைப்பூ பற்றிய‌ விபரம் அடுத்த பதிவில்).

இதனைத் தொடர்ந்து மருதமூரான் திரட்டிகள் பற்றிய தன் கருத்துகளையும் யாழ்தேவி திரட்டி மற்றும் யாழ்தேவி சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் செய்தார்.



அடுத்த நிகழ்வாக சிறப்புவிருந்தினராக வந்த முன்னாள் ஒளி/ஒலிபரப்பாளரும் ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான நீலாவணன் அவர்களின் மகனுமான‌ திரு.எஸ்.எழில்வேந்தன் சிறப்புரை ஆற்றினார். இவர் தன் உரையில் தானும் சிலகாலமாக வலைப்பதிவில் ஈடுபடுவதாகவும், பலரின் வலைப்பதிவுகளை வாசித்த அனுபவங்களையும் கூறினார்.



சிறப்புரையைத் தொடர்ந்து வலைப்பதிவும் தொழில்நுட்பமும் என்ற கருத்துரையை சேரன் கிரிஷ் அவர்கள் வழங்கினார். இவர் எப்படி ஹேக்கர்ஸ் இடமிருந்து உங்கள் வலையைப் பாதுகாப்பது, RSS ஓடைகள், போன்ற விடயங்களை மிகவும் சுருக்கமாகக் கூறினார்.



சேரன் கிருஷ்சைத் தொடர்ந்து லோஷனால் வலைப்பதிவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியாமக் கூறினார். லோஷனின் உரையினூடு வலைப்பதிவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது.



முதலில் விசைப்பலகை பற்றியும் பின்னர் யாழ் தேவி திரட்டிபற்றியும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்தன. அத்துடன் இன்னொரு பதிவர் தான் பதிவெழுதி பட்ட சிக்கல் ஒன்றையும் அத்துடன் புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும், தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகள் பற்றியும் அத்துடன் வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தாமல் எழுதுவது பற்றியும் ஒரு கருத்து கூறப்பட்டது.



இறுதியாக வந்தியத்தேவனின் பின்னூட்டத்துடன்( நன்றியுரை) நிகழ்வு இனிதே நிறைவுற்றது. (என் பின்னூட்டம் பின்னர் தனிப்பதிவாக.).நிகழ்வின் தொகுப்புரை சதீஷ் வழங்கினார். கலந்துகொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வடை, பற்றீஸ், கேக் மற்றும் நெஸ்கபே வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பிய கெளபாய் மதுவிற்கு மிக்க நன்றிகள். இந்த நேரடியொளிபரப்பை பலர் பார்த்ததோடு மட்டுமல்ல, தங்கள் கருத்துகளையும் தெரிவித்தார்கள். கானாபிரபா, சயந்தன், சினேகிதி, வசந்தன், தயாளன்,கிருத்திகன்(கீத்), மாயா, முகுந்த், ஜெயா, கேபிள் சங்கர், மம்போ, ப்ரிய்டமுடன் வசந்த், கோசலன்,டோன்டு, மாயவரத்தான், புதுவை சிவா, விமல், சேனன், டானி, எஸ்கர், தமிழன் ‍கறுப்பி போன்றவர்கள் என்னிடம் இருக்கும் பட்டியலில் உள்ள நண்பர்கள். (ஏனையவர்களின் பெயர் மறந்திருந்தால் மன்னிக்கவும்). அத்துடன் என்னில் தொலைபேசியில் கதைத்த வர்மா, சஜிதரன், தாசன், தங்கமுகுந்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

மேலதிக படங்கள் ஆதிரையின் வலையில் உள்ளது. ஒன்றுகூடல் படங்கள்

பல சுவையான விடயங்களுடன் பதிவர்களிடமிருந்து பதிவுகள் வரும் காத்திருங்கள்.

39 கருத்துக் கூறியவர்கள்:

கானா பிரபா சொல்வது:

ஒருவரான நிலாவாணன் // நீலாவணன்

அருமையான சந்திப்பை வீட்டில் இருந்து பார்த்து மகிழ்ந்தேன். இந்த ஒற்றுமையோடு தொடர்ந்து செயற்படுங்கள்,

Unknown சொல்வது:

நாங்களும் வந்தமுள்ள... நாங்களும் எழுதுவமுள்ள...!
உங்களிடமிருந்து இன்னும் பல புகைப்படங்களை எதிர்பார்க்கிறேன்... (என்ன காணேல ஒரு படத்திலயும். :-( )

வர்மா சொல்வது:

கலந்துகொள்ளமுடியாதவர்களூக்காக தாங்கள் தந்ததகவலுக்கு நன்றி.
அன்புடன்
வர்மா

Admin சொல்வது:

வர வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் கவலையோடு இருந்த என்னை நேரடியாக பங்கு கொண்டது போல் வீட்டிலே இருந்து சந்தோசமடைய வைத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.

ஒளிபரப்பு ஏட்பாடுகளைச் செய்த மது அவர்களுக்கு நன்றிகள் பல...

இன்று சாதித்துவிட்டோம் என்று சந்தோசம் அடையும் அதே வேளை இன்னும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது இன்றைய ஏற்பாடுகளைப் பார்க்கும் போது..

இனி வரும் காலங்களில் பல புதுமைகள் படைப்போம்... எனது 100 % பங்களிப்பு இனிவரும் காலங்களில் இருக்கும் நண்பர்களே.


அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல...

தங்க முகுந்தன் சொல்வது:

அருமையான செய்தி! பதிவர்கள் ஒன்றுபட்டு செயற்படுவதை எண்ணும்போது மனது மிக ஆனந்தமடைகிறது. நன்றிகள் விபரமான தகவல்களைத் தாருங்கள்!

dilsbro சொல்வது:

சபாஷ் நல்ல விசயம். சுடச்சுட பதித்துவிட்டீர்கள். முடிந்தால் ஒளிப்பதிவையும் சேருங்கள்.கலந்து கொள்ள முடியாத எங்களைப்போன்றவர்களுக்கு உதவியாகவிருக்கும்.

சந்தனமுல்லை சொல்வது:

மிகுந்த மகிழ்ச்சியேற்படுகிறது - தங்கள் இந்த ஒன்றுகூடல் இன்னும் பல உயரங்களடைய வாழ்த்துகிறேன்!! :-)

Unknown சொல்வது:

நாங்களும் நித்திரை கொள்ளாமல் இருந்து பாத்தனாங்கள்

சஜிதரன் சொல்வது:

நல்ல ஆரம்பம்... வாழ்த்துக்கள்... :)கணிசமான அளவு நேரடியாகக் கணினியில் பார்த்தேன்.. அடுத்த சந்திப்பொன்று நிகழ்ந்தால் நிச்சயம் கலந்து கொள்கிறேன்..

அதுசரி, கேட்போர் மத்தியில் (படங்களில்) பெண் பங்கேற்பாளர்களைக் காண முடிகிறது.. மைக் பிடித்து பேசுபவர்களில் யாரையும் காணோமே..? எதிர்காலத்தில் பெண்களது குரலையும் ஒலிக்கச் செய்வது ஆரோக்கியமான 'சொலிடாரிட்டி'யை உறுதி செய்யும்... இது ஒரு முன்மொழிவு மாத்திரமே.. விமர்சனம் அல்ல!! :)

துபாய் ராஜா சொல்வது:

அடிக்கடி தொடரட்டும் இலங்கை பதிவர்களின் இதுபோன்ற இனிய ஒன்றுகூடல்கள்.

தமிழன்-கறுப்பி... சொல்வது:

அறையில் இணையம் இல்லாததால பாக்க முடியேல்லை...

திருப்தியாக நடந்திருக்கிறதென்பது விளங்குது.

நிறைய புது முகங்கள் சந்தோசத்தை தருகிறது.


வாழத்துக்கள் மக்கள் சந்தோசம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu சொல்வது:

வந்தி,
சுருக்கமா சந்திப்பு முழுதையும் நல்லாச் சொல்லியிருக்கிறீங்கள். வந்த பதிவர்கள் அனைவரும் இதைப்பற்றி பதிவிடுவார்கள் ஆதலால் முழுமையான விபரம் வாசகர்களை எப்படியும் சேர்ந்துவிடும். நானும் ஒரு பதிவிடுகிறேன்.

வந்தி அப்படியே மதுவிற்க்கு என்பதை மதுவிற்கு என மாற்றிவிடுங்கள். :)

நன்றியுடன்
கௌபாய்மது.

maruthamooran சொல்வது:

‘பின்னூட்ட சிங்கம்’ வந்தி,

நீங்கள் ஒரு சிங்கம்தான்…. இவ்வளவு வலிகளையும் (சும்மா) தாங்கிக்கொண்டு வேகமாக பதிவிட்டுவிட்டுவிட்டீர்கள். தங்களின் முழுமையான பதிவை எதிர்பார்க்கிறேன்.

Anonymous சொல்வது:

இன்றய நாள் எம் நாட்டு பதிவர்களுக்கு ஒரு சிறந்தநாள். மிக அருமையாக இருந்ததது உங்கள் ஒன்று கூடலும், உடனேயே நீங்கள் தந்துவிட்ட இந்தப் பதிவும்.

மாயா சொல்வது:

வணக்கம் அந்தி அண்ணா !

ஒன்றுகூடலை நேரடியாகப் பார்த்ததில் திருப்தியாக இருந்தது. Livestreem ஊடாக ஒளிபரப்புச.செய்த மதுவதனனுக்கு நன்றி.(அவர் இதற்க்ககாக நிறைய செலவு செய்திருப்பார் என நினைக்கிறேன்)

உங்களிடமிருந்து விரிவான பதிவை படங்களுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்
மாயா

(இந்நிகழ்வை புல்லட் தன் வீடியோகமராவினால் எடுத்துக்கொண்டிருந்ததார் அதனை நாம் எவ்வாறு பெறுவது எனக் கூறுவீர்களா ?)

Jay சொல்வது:

அன்பின் வந்தி பல கோடி நன்றிகள். உங்கள் சிலரின் அயராத முயற்சியால்தான் இந்த நிகழ்வு நடந்தேறியது. மிக்க நன்றி!!

- யெஸ்.பாலபாரதி சொல்வது:

வாழ்த்துக்கள் நண்பர்களே..!

இதே ஒற்றுமை என்றும் தொடரட்டும்!!

வெற்றி-[க்]-கதிரவன் சொல்வது:

வந்தியத்தேவன் என்ற பெயரில். ஒரு பொடியன் எழுதுகிறான் என்று இதுநாள்வரை எண்ணினேன்.... -:))))

Thamiz Priyan சொல்வது:

இலங்கைப் பதிவர்கள் ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி!

சி தயாளன் சொல்வது:

முதல் சந்திப்பே சாதனைச்சந்திப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி...”தயாளன்” என்ற என் இயற்பெயரில் வந்து வாழ்த்துரைத்தது அடியேன் தான். :-)

M.Thevesh சொல்வது:

மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
இந்த ஒற்றுமை என்றும்
தொடரவேண்டும் என்பதே
என் கோரிக்கையாகும்.
சிறப்பகச்செயல் பட்டு
வெற்றிக்கனியாக்கிய யாவருக்கும்
வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் சொல்வது:

பின்னூட்டம் இட்ட இடப்போகின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். ஒன்றுகூடலை வெற்றிகரமாக நடத்திமுடித்துவிட்டாலும் அதன் பின்னரான சில வேலைகள் இன்னும் முடியவில்லை. ஆகவே உங்கள் பின்னூட்டத்திற்கான பதில்களை தனித்தனியே சில ம்ணித்தியாலங்கள் கழித்தோ அல்லது நாளையோ தருகின்றேன். பொறுத்தருளுங்கள்.

வேந்தன் சொல்வது:

இனிதே நிறைவேறிய இலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)

வசந்தன்(Vasanthan) சொல்வது:

கலந்துரையாடலுக்கு வாழ்த்து!

என்றாலும் எதிர்ப்பாட்டொன்று பாடவேண்டியதாப் போச்சு;-(

Unknown சொல்வது:

"ஒற்றுமையே பலம்" என்பதனை வலைப் பதிவர் சந்திப்பின் மூலம் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள், உங்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

உதய தாரகை சொல்வது:

சந்திப்பின் ஒலிக்கோப்புகளைக் கேட்டு, ஆனந்தம் கொண்டேன். கடல் கடந்து இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தம் தான்.

இந்தச் சந்திப்பு பற்றி என் வலைப்பதிவிலும் மிக விரைவில் பதிவிடுகிறேன்.

இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துக்கள்!! நன்றிகள்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

pirassath சொல்வது:

அருமையாகக் கூறியுள்ளீர்கள் வந்தி..
நாம் அனைவரும் தொடர்ந்தும இணைந்து எதிர்வரும் காலங்களில் இதேபோன்ற சந்திப்புக்களை நடத்துவோம். கன்னி முயற்சிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சுபானு சொல்வது:

ஆகா.. முந்தி விட்டீர்களே... ;)

ஊர்சுற்றி சொல்வது:

கலந்துகொண்ட எல்லோருக்கும் வழிநடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொல்வது:

நானும் கண்ணுற்றேன்!

சிறப்பான ஏற்பாடுகள்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!

Jackiesekar சொல்வது:

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் வந்திய தேவன்

ARV Loshan சொல்வது:

நிச்சயமாக வெற்றி தான்.. மகிழ்வான ஒரு அனுபவம்.. எனது பதிவை இன்று மாலைக்கு முதல் தரலாம் என நம்புகிறேன்..
கொஞ்சம் விபரமாக.. ;)

வந்திருந்த, இணைந்திருந்த அனைவருக்கும் நன்றிகள்..
படங்களுக்கு நன்றிகள் வந்தி..

மூன்று முத்தான வருடங்களுக்கும் வாழ்த்துக்கள்..

Kanags சொல்வது:

கொழும்பில் முதலாவது வலைப்பதிவர் மாநாடு வெகு சிறப்பாக நடதேறியமைக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி ஆமா எங்கட பக்கம் எடுத்த ஒரு படத்தையுமே காணுமே. எங்கள் முகங்கள் இல்லாத படமா தேடி போட்டீங்களோ? ஹி ஹி லொல்ஸ்

சுபானு சொல்வது:

என்றென்றைக்கும் நெஞ்சில் நிலைக்கும் இனிய நினைவுகள்.. பதிர்ந்தமைக்கு நன்றிகள்... :)

யுவகிருஷ்ணா சொல்வது:

ஒரு நிகழ்வை ஆர்கனைஸ் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல. சாதித்துக் காட்டியதற்கு வாழ்த்துகள் வந்தி & கோ.

வி. ஜெ. சந்திரன் சொல்வது:

வாழ்த்துக்கள், மிக சிறப்பாக ஒன்றுகூடல் நடந்ததை இட்டு மகிழ்ச்சி.

பெண்கள் சார்பாக சொல்வது:

பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்தார்கள்? அவர்கள் தொடர்பு கிடைக்குமா? அவர்களை தனித்தனியாக காட்டவில்லையே.. Zoom camera வசதி இருந்திருக்க வேண்டும்.. 7 பெண்கள் தான் வந்திருந்தார்களா? எக்ஸ்சட்ரா.. எக்ஸ்சட்ரா..

இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? பெண்கள் வருவதை எந்தத் தேவைக்காக ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன இத்தகைய கேள்விகள்.. & எதிர்காலத்தில் வர நினைப்பவர்களையும் வராமலே இருந்து விட வைப்பன என்று புரியவில்லையா??...

80 பேரில் 7 அல்லது 9 தான் பெண்கள் வந்திருந்தது எதனால்?? எழுதுபவர்களும் குறைவு என்பது ஒருபுறமிருக்க இது போன்றவற்றை எதிர்பார்த்ததால் தான் என்பது புரியவில்லை???