மரணம் இன்பமானது

மரணம் அனைவரும் எம் வாழ்க்கையில் சந்திக்கபோகும் சுவாரசியமான விடயம்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது எங்கள்(ஈழத்தமிழர்) வாழ்க்கையில் சகஜமான விடயம்.

கடந்தவாரம் என்னுடைய ஆச்சி திருமதி.மீனாட்சியம்மா செல்வத்துரை( பாட்டி,அப்பாவின் அம்மா) தன்னுடைய 96ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அந்த நாட்களில் பெண்களுக்கு கல்வி என்பது தேவையற்றது என கருதப்பட்டபோது தன்னுடைய விடாமுயற்சியால் ஒரு ஆசிரியையாக பணியாற்றியது மட்டுமல்ல தன்னுடைய கணவருடன் சமூக சீர்திருத்த விடயங்களில் அவருக்கு உதவியதுடன் அந்தநாள் தமிழரசுக் கட்சி மேடைகளிலும் பெண்கள் பிரதிநிதியாக உரையாற்றியதாக அடிக்கடி சொல்வார்.

எனது வாசிப்புப் பழக்கம் அவரிடம் இருந்தே எனக்கு தொற்றியது என என் உறவினர்கள் சொல்வார்கள். ஏனென்றால் பாண் சுற்றிவரும் சிறியதுண்டுப்பேப்பரில் கூட என்ன எழுதி இருக்கு என வாசித்துப்பார்க்கும் பழக்கம் ஆச்சிக்குண்டு. இணையத்தில் பத்திரிகைகள் வந்தபின்னரும் ஆச்சி வாசிப்பதற்காகவே நாம் பத்திரிகை வாங்கியதுண்டு. சிலவேளைகளில் பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளைக்கூட அவர் வாசித்துவிட்டு எமக்கு புதினமாகச் சொல்வார்.

இதேபோல் தான் அவரின் புத்தகவாசிப்பும் இருந்தது. பெரும்பாலும் ஆன்மீகப் புத்தகங்களையும் ஏனைய சஞ்சிகைகளான மல்லிகை, ஞானம், விகடன் குமுதம் வாசிப்பார். வாசிப்பதற்க்கு எதுவும் இல்லாத போது சிலவேளைகளில் தமிழ்க் கொம்யூட்டர் கூட வாசித்திருக்கின்றார். கடந்த சில வருடங்களாக மட்டும் அவர் பகலில் நித்திரைகொள்வதைப் பழக்கிக்கொண்டார்.

அவரது நீண்ட ஆயுளுக்கு அவரின் நேரம் தவறாத உணவுப் பழக்கம் முக்கியகாரணம் என நான் நினைக்கின்றேன். அத்துடன் தாவரபோஷணியாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். காலைச் சாப்பாடு காலை 9 மணிக்கும் மத்தியானச் சாப்பாடு மதியம் 2 மணிக்கும் இரவுச் சாப்பாட்ட்டை 8 மணிக்கும் ஆச்சி சாப்பிடுவார். மூன்று நேரச் சாப்பாட்டுக்குமுன்னர் அவன் சில நிமிடங்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர். சரியாக 9 மணிக்கு நித்திரைக்குப் போய்விடுவார். இதுதான் அவரின் தினசரிக் கொழும்பு வாழ்க்கையாக இருந்தது. யாழில் இருந்தபோது உறவினர்வீடுகள் கோவில்கள் என ஆச்சியின் பகல்பொழுது பயன்பட்டது.

அவரின் விருப்பம் போலவே அவர் தன்னுடைய சொந்தமண்ணில் தன் வாழ்க்கையைமுடித்துக்கொண்டார். இன்னும் 4 வருடங்கள் வாழ்ந்திருந்தால் ஆச்சியும் சதமடித்திருக்கலாம், என்ன செய்வது அவரின் விதி அவ்வளவுதான் என நினைக்கவேண்டியதுதான். அத்துடன் சிலவேளைகளில் தனது பேர்த்தி ஒருவர் 104 வயதுவரை வாழ்ந்ததுபோல் தானும் வாழக்கூடும் என இடைக்கிடை சொல்வார்.

இந்த வாரத்தில் என் நண்பனுடைய தந்தை ஒருவரும் இங்கே காலமாகினார். அவரின் ஈமக்கிரிகைகளில் கலந்துகொள்ள இங்கேயுள்ள மயானத்திற்க்குச் சென்றிருந்தேன். லண்டனில் மயானம் கூட பூங்காபோல் அழகாக உள்ளது. சீனன், வெள்ளைக்காரன்,கறுப்பன், இத்தாலிக்காரன், இந்தியன், ஈழத்தவன் என்ற பாகுபாடுகளின்றி அனைவரின் கல்லறைகளும் ஒரே தோட்டத்தில் சமரசம் உலாவும் இடம் இது என சொல்லாமல் சொல்லியது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்திருந்தால் வடகொரியாக்காரனும், தென்கொரியாக்காரனும் பக்கத்து பக்கத்து கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருக்கலாம். 1900ல் பிறந்து 1997களில் இறந்தவரின் கல்லறையும் பிறந்து சில மணித் துளிகள் மட்டும் இந்த பாவப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில் இருக்க விருப்பமில்லாத குழந்தையின் கல்லறைகூட பார்வைக்குப்பட்டது.

அவற்றைப் பார்த்தபின்னர் தான் ஏற்கனவே நான் எழுதிய மரணம் சம்பந்தப்பட்ட பதிவையும் ஆச்சிக்கு என் அஞ்சலியையும் எழுதமுடிவு செய்தேன். இனிப் பழைய பதிவிலிருந்து சில பத்திகள்.

எனக்கு ஒருகாலத்தில் மரணம் என்றால் பயமாகத் தான் இருந்தது. பக்கத்துவீட்டு ஆச்சி செத்தால் ஒரு கிழமைக்கு நான் வீட்டை விட்டு இரவில் வெளியே போகமாட்டன், பகலில் யாரும் ஆச்சியின் வீட்டைக் கடந்துபோவது என்றால் யாரும் உதவி செய்யவேண்டும். அவ்வளவு பயம் எனக்கு.

ஆனால் மரணங்கள் மலிந்த பூமியாக எங்கள் நாடு மாறிய பின்னர் மரணம் என்பது உதயன் பேப்பரில் வரும் ஒரு சாதாரண செய்தியாகவே மாறிவிட்டது. காரணம் மரணத்தைப் பார்த்து, கேட்டுச் சலித்துப்போனவர்கள் நாம்.

எங்கேயாவது தூரத்தில் ஷெல் விழுந்தாலோ, இல்லை குண்டுகள் வீசப்பட்டாலோ வீதியால் போகிற வருபவர்களை "எங்கேயாம்?" எனக் கேட்டால் அவர் "அது பருத்தித்துறையில் 12 ஆம்" என்பார். இங்கே 12 என்பது இழந்த உயிர்களின் எண்ணிக்கை, இன்னொருவர் கொஞ்சம் விளக்கமாக "அது நெல்லியடியில் 20 அதில் 5 குழந்தைகள் " என்பார், இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது.

கலியாண வீடுகள் மரண வீடுகளான நிகழ்வுகள் கூட எங்கள் மண்ணில் நிகழ்ந்தன. ஒரு முறை காலை ஒரு மரண வீட்டில் நின்றுவிட்டு பின்னேரம் கலியாண வீட்டில் நின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.

நேற்றிருந்தவர் இன்றிருக்க மாட்டார், இன்றிருப்பவர் நாளை இருக்கமாட்டார், இதுதான் விதி. ஒரு சின்ன சந்தேகம் இந்த விதி விதி என்கின்றோமே அது கடவுள் போன்றதா? இல்லை வேறு ஏதும் வடிவிலானதா?. மரணம் எந்த நேரமும் வரலாம், எப்படியும் வரலாம்.

சதா எந்த நேரமும் ஒருவன் மரணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனின் வாழ்க்கை அவ்வளவுதான். அதே நேரம் மரணம் வருகின்ற நேரம் வரட்டும் அதுவரை நாம் நம்ம பாட்டிலை இருப்போம் என அதனைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தால் அவன் சாதாரண மனிதன்.

இந்தவிதமான ஆசைகளையும் வைத்திருக்காமல், எதிலும் பற்று வைக்காமல் மரணத்தைக் கண்டு பயப்படாமல், எவன் மரணத்தை இலகுவாக ஏற்றுக்கொள்கின்றானோ அவன் ஞானி.

விவேகானந்தர், நபிகள் நாயகம், இயேசு நாதர், புத்த பிரான் என சமய வழிகாட்டிகள் மரணத்தை வென்றவர்கள். ஏனென்றால் அவர்கள் உலக லவ்கீக வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் மூலம் மரணத்தை வென்று இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள்.

உடனே உங்களுக்கு மரணத்தை வெல்லவேண்டுமென்றால் துறவியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம், நிச்சயமாக துறவியாகித்தான் நீங்கள் மரணத்தை வெல்லவேண்டும் என்றில்லை. உங்கள் நாளாந்த வாழ்க்கையிலையே மரணம் பற்றிய பிரக்ஞ்சை இன்றி அதுவரும்போது ஏற்றுக்கொள்ளுவோம் என என்றைக்கு எண்ணுகின்றீர்களோ அன்றைக்கு நீங்கள் மரணத்தை வென்றவர்கள்.

தனக்கு சில நிமிடங்களில் மரணம் வரும் எனத் தெரிந்தும், "நான் திரும்பி வரும்போது எனக்கு கொக்கா கோலா வாங்கி வையுங்கோடா" எனக் கூறிச் சென்ற என்னுடைய பாடசாலை மாணவனையும் இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.

முன்னாள் யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர். துரைராஜா அவர்களின் மரணம் தான் நான் பார்த்த மரண ஊர்வலங்களிலே, இதுதான் மக்கள் கூட்டம் அதிகமான ஊர்வலம் என நினைக்கின்றேன். வதிரி ஆலங்கட்டை மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்யதார்கள், அவரது சிதைக்கருகில் இன்னொரு சாமான்யனின் உடல் தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. என்னருகில் நின்ற என் நண்பன் "பாரடா புரபெசருக்கும், யாரோ ஒரு இனம் தெரியாத சாமான்யனுக்கும் ஒரு இடம் தான், வாழ்க்கையில் நாம் கடைசியாக வரும் இடம் இதுதான்" என்றான். அப்போது தான் எனக்கு இதுதான் சுடலை ஞானம் என்பார்கள் என்ற எண்ணம் வந்திருச்சு. சிலருக்கு சுடலைக்குப் போகும் வரை இந்த சுடலை ஞானம் வராது, சிலருக்கு முன்னரே வந்துவிடும்.

என் நண்பன் இன்றைக்கும் மரணம், விதி, ஆசை என எதிலும் பற்றில்லாமல் இருக்கின்றான் ஆனால் அவன் துறவியல்ல.

இங்கே மரணத்தில் இருந்து மனிதர்களைப் பிரிப்பது, அவர்களின் ஆசையாகும். ஒருவனுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துகொண்டே இருக்கும்.

ஒருவன் குழந்தையாக இருக்கும் போது மரணம் பற்றிய எந்த பிரச்சனையும் இருக்காது, வாலிபனாக மாறிய பின்னர், எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வாழ்வதால் அந்த நேரத்தில் மரணத்தைச் சந்திக்க கலங்குவான். திருமணம் ஆனபின்னர் தன் குழந்தைகள் வாழ்க்கைக்காக மீண்டும் மரணத்தைச் சந்திக்க தயங்குவான், பின்னர் அந்தக் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் திருமணம் செய்து, தன் பேரப்பிள்ளைகளின் நன்மைகளைப் பார்க்கும் வரை தான் இறக்ககூடாது என எண்ணுவார், இப்படி எண்ணி எண்ணி அவர் தன் 90 வயதுகளில் இறக்கும் வரை அவரின் ஆசை அழியாமல் தான் இருந்தது.

அதே நேரம் நமக்கு வேண்டியவர்களின் மரணம் நம்மை கதிகலங்க வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம் போன்றவற்றுடன் ஏனைய சின்னச் சின்ன காரணங்களும். உதாரணமாக ஒருவர் நன்றாக நண்டுக் கறி சமைப்பார் அவரது கறி அவரது உறவினர்களுக்குப் பிடிக்கும், அவர் இறந்தபின்னர் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் பலரின் மனதில் இருக்கும்.

சிலவேளைகளில் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வருவார் அல்லது வரமாலும் இருக்கலாம். சில விடயங்கள் வாழ்க்கையில் வந்துபோகும் அவற்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாது, எந்த நேரமும் ஒரு விரக்தி நிலையே இருக்கும். இது மனநோயைக் கூட உண்டாக்கலாம்.

இப்படியான சிந்தனைகளில் இருந்து விடுபடத்தான் பொழுதுபோக்குகள் உருவாகின, ஒருவன் தன் மனதை தேவையற்ற விடயங்களில் அலைபாயவிட்டால் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வருவது வரட்டும் இன்றைய நாளை நாம் சிறப்பாக வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை என்றைக்கும் ஒளிவீசும்.

ஆச்சியினதும் என் நண்பனின் தந்தையினதும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.

ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-2010

அரசியல்
இலங்கை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 20 மாதச் சிறைத் தண்டனையை இலங்கை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர்களில் சரத்தும் ஒருவர், ரணில் என்ற மண்குதிரையை நம்பி பலம்வாய்ந்த மஹிந்த ராஜபக்சாவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் நின்றதன் பயனை இப்போ சரத் சிறையில் நன்றாகவே அனுபவிக்கின்றார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களின் காணமல் போனமை கொலைக்கு காரணமானவர்களின் சரத்தும் ஒருவர் என பலர் கூறுகின்றார்கள். சரத்தின் மனைவி அனோமாவோ தன்னுடைய கணவன் ஒரு புண்ணிய ஆத்மா என்பதுபோல் கோயில் கோயிலாகப் போகின்றார். பாவம் அவருக்கு தமிழில் உள்ள முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி தெரியாது. இவருக்கு நியூட்டனின் 3ஆவது விதி தெரிந்திருந்தால் சரத் தமிழர்களின் மேல் காட்டிய அடாவடிகளுக்கு இன்னமும் அனுபவிப்பார் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருக்கும். தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது அனோமாவின் விடயத்தில் உண்மையாகிவிட்டது.

இராணுவத் தளபதி என்ற சிறப்புடன் ஓய்வு பெற்றிருக்கவேண்டிய சரத் இன்றைக்கு துரோகி என்ற பட்டத்துடன் சிறையில் இருக்கின்றார். பேசாமல் மஹிந்த சகோதரர்களின் சொற்படி கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்குமா? சேராத இடம் தன்னில் சேர்ந்து தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம். இல்லையென்றால் முன்னால் பாகிஸ்தான் அதிபர் முஷார்ப் போல் இராணுவப் புரட்சி செய்திருக்கவேண்டும், அதைச் செய்யும் தைரியமும் அவரிடம் இல்லை. இப்போ சிறையில் இருக்கும் சரத் தான் அந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிருழுந்திருக்கலாம் தியாகி என்ற பட்டமும் கிடைத்திருக்கும் என நினைக்கலாம். எது எப்படியோ வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்.

இந்தியா
கடந்த வார ஜூனியர் விகடனில் கார்த்தி சிதம்பரம்(ப.சிதம்பரம் மகன்) திருமாவளவனுக்கு தனியே சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுக்காட்டும் படி சவால் விட்டிருக்கின்றார். பல விகடன் வாசகர்கள் பின்னூட்டங்களில் பின்னிவிட்டார்கள். விகடனும் இனிமேல் கார்த்தி சிதம்பரம் போன்ற வாரிசு கத்துக்குட்டி அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்காது என நினைக்கின்றேன். பலர் கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் எப்படிக் கடந்த தேர்தலில் வென்றார், முடிந்தால் கார்த்தி தன்னுடைய தந்தையை திமுக, அதிமுக கூட்டு இல்லாமல் தனித்து வெற்றி ஈட்டிக்காட்டட்டும் எனக் காட்டமாக எழுதி இருக்கின்றார்கள். ராஜிவ் காந்தி சிலைக்கு செருப்பு அணிவித்த சம்பவம் தொடர்பில் தன்மானத் தமிழன் வெறுமாவளவன் மன்னிக்கவும் திருமாவளவன் தனக்கும் தன் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தன் வளர்ப்பு அன்னை சோனியாவிற்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம். இதை எல்லாம் பார்க்கும் போது எங்கள் தலைவர் கவுண்டமணி பல வருடங்களுக்கு முன்னர் சொன்ன "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்ற பஞ்ச் டயலாக்கே வந்து தொலைகின்றது.

கொமன்வெல்த் போட்டிகள் ஒருமாதிரி நிறைவு பெற்றுவிட்டன, தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை.அதே நேரம் இந்தியா பதக்கப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஊழல்களால் நிகழ்ந்த இந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு நிறையவே இருந்தாலும் வரும் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார்களா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இடையில் கல்மாடி போன்றவர்கள் குறுக்கிட்டால் இந்தியா பேக்கப் தான்.

விளையாட்டு

கிரிக்கெட் என்றாலே இப்போ சூதாட்டம் தான் நினைவுக்கு வருகின்றது. பாகிஸ்தான் அணிக்குள் நடந்த குத்துக்கள் வெட்டுகள் ஆறமுன்னர் ரெய்னா மேல் பூதம் பாய்ந்திரருக்கின்றது. ரெய்ணா நல்ல துடிப்பான இளைஞர் வேகமாக ஓட்டங்கள் எடுக்ககூடிய்வர். அவரிடம் இருந்து இப்படியான முடிவு மாற்றும் செய்ல்களை நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, சச்சின் மட்டும் தான் இந்தியா சார்பில் அணியில் இருக்கினறார் வழக்கம் போல் ஐசிசியும் ஆசிய வீரர்களை விட அவுஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றது. சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரைவில் நடக்க விருக்கும் உலக் கிண்ணப்போட்டிகளும் முடிவே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது போல் நடக்கும்.

சின்னத் திரை
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட நிகழ்ச்சி இறுதிப்போட்டியில் நடனத்திற்குப் பதில் நெஞ்சில் கல்லுடைப்படு நெருப்புக்குள் பாய்வது போன்ற சாகசம் செய்தவர்களுக்குத் தான் பரிசு என நினைத்து கலா மாஸ்டர் பாலா, ஸ்வேதாவிற்க்கே அந்த வீட்டை கொடுத்துவிட்டார். யாராவது ஒருவருக்கு பலத்த காயம் அல்லது இழப்பு வந்தால் தான் இந்த சாகசங்கள் பநிறுத்தப்படும். இவர்களின் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வைக்க இடம் போதாமல் அபுதாபியில் இடம் பெற்றது. இதில் உச்சக் கட்டக் காமெடி பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான்.

சில நாட்களுக்கு முன்னர் விகடனில் ஒரு பாடகர் தன்னை ஒரு பாடுப்ப்போட்டி நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் நடுவராகப் பணியாற்றச் சொல்லிக் கேட்டதுடன் தாம் கொடுக்கும் கொமென்ட்ஸைத் தான் சொல்லவேண்டும் என வற்புறுத்தினார்களாம். அவரோ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தன்பாட்டுக்குச் சென்றுவிட்டார். ரியாலிட்டி ஷோக்களும் மெஹா சீரியல்கள் போல் மக்களை பேக்காட்டவே பயன்படுகின்றது.

பதிவுலகம்
நீண்ட நாட்களாகச் சந்திக்காத இலங்கைப் பதிவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை விஹாரமகாதேவிப் பூங்காவில் அல்லது காலிமுகத்திடலில் சந்திக்கப்போவதாக பதிவர் ஆதிரை தெரிவித்திருன்ந்தார். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இந்தச் சந்திப்பின் இணைப்பாளர்களாகிய அனுதினன். வதீஸ், மற்றும் கங்கோனிடம் கேட்கும் படியும் ஆதிரை கூறினார். அத்துடன் இந்தச் சந்திப்பில் சில ஓய்வுபெற்ற பதிவர்கள் கலந்துகொள்ளப்போவதாகவும் கூறினார். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இணைப்பாளர்களில் எவரையாவது தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறவும்.

சுய புலம்பல்
அண்மையில் நண்பர் ஒருவர் சும்மா வெட்டியாக இருப்பவர்கள் தான் பதிவு எழுதுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நக்கலாகச் சொன்னார். பாவம் அவருக்குத் தெரியாது பெரும்பாலும் பதிவுலகில் வேலைகளுடன் அதிலும் ஐடியுடன் தொடர்புள்ளவர்கள் மட்டும் தான் எழுதுகின்றார்கள். சுவாரசியமாக எழுதினாலே பலர் உங்களை உற்றுக்கவனிப்பார்கள் என்ற உண்மை அந்த நண்பனுக்குத் தெரியாது. நான் கூட நீண்ட நாட்களின் பின்னர் எழுதக் காரணம் கல்வி சக வேலைப் பளுதான். எழுதுவதற்க்கு சில நிமிடங்கள் ஒதுக்கமுடியவில்லை. ஒரு சிலர் பதிவுகள் அதிலும் கமல் இசைஞானி சுஜாதா என்றால் அக்குவேறு ஆணிவேறாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுவேன் இதனால் பெரும்பாலான பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்காது வாக்கு மட்டும் இருக்கும். என் நேரப் பிரச்சனைகளால் என்னுடைய பதிவுகளுக்கே நான் பின்னூட்டம் இடுவதில்லை.

குட்டிக் கதை

அண்ணேன்டா
என் நண்பன் ஒருவன் தன்னுடன் கூடப்படித்த பெண் ஒருத்தி மேல் கொஞ்சம் காதல். இறுதிநாள் ஏஎல் சோதனை முடிந்தபின்னர் அவளுடன் கதைக்கவேண்டும் என ஆசைப்பட்டு காலிவீதியில் அவளுடன் சோதனை எப்படி? போன்ற சமூகப் பிரக்ஞ்சை உள்ள கேள்விகளைக் கேட்டு அவளையும் கூட நின்ற எம்மையும் கடுப்படித்தான், எல்லாவற்றிற்க்கும் அமைதியாகப் பதில் சொன்ன அந்தப் பெண் கடைசியாக போயிட்டுவாறன் அண்ணா எனப் பதில் அளித்து என் நண்பனுக்கு அங்கேயே மோஷன் போற நிலைக்கு கொண்டுவந்துவிட்டாள்.

பாஸ் என்கின்ற பாஸ்கரனில் எப்படி சந்தானம் ஆர்யாவை நண்பேண்டா என்பாரோ அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் அண்ணனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கின்றது. இது வெறும் புனைவுதான்.

படித்தது :

விரைவில் இத்தாலியில் மினிஸ்கேர்ட் அணிவதைத் தடை செய்யப்போகின்றார்களாம். அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம்.

ரசித்தது
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக்

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஷங்கரின் எந்திரன்

சன் பிக்சர்ஸின் விளம்பரம், ரஜனி, ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ரகுமான், அமரர் சுஜாதா என பல பெரிய தலைகளின் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை இரண்டாம் நாளான நேற்றுப் பார்க்கும் சந்தரப்பம் கிடைத்தது.

கதை :
இராம நாரயணனின் கதை போன்ற ஒரு ஃபன்டாசி கலந்த சயன்ஸ் பிக்சன் கதை. கதையின் நாயகன் சுஜாதா என்பதால் சில இடங்களில் மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா சாயல் காணப்படுகின்றது. இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. AI (Artificial intelligence) வைத்து உருவான கதை. அதனால் கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களான ஐபி எண், கொன்ரோல், ஆல்டர் டிலிட், சிலிக்கன் சிப், பைட் என பல விடயங்கள் வந்துபோகின்றது. விக்ரம் படத்தில் கொஞ்சம் விஞ்ஞானத்தை அக்னிபுத்திரன் வடிவில் செலுத்திய அமரர் சுஜாதா இதில் சிட்டியை பிரதானமாக்கி இருக்கின்றார்.



திரைக்கதை :
ஷங்கரின் வழக்கமான பிரமாண்டமான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகின்றது என்றால் மிகையில்லை. பல இடங்களில் சுஜாதா கைகொடுத்திருக்கின்றார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னமும் வேகமான திரைக்கதை கிடைத்திருக்கும். முற்பாதி கலகலப்பாக இருந்தாலும் பின் பாதியில் சில இடங்களில் இழுவை. ஷங்கரின் படங்களில் ஜீன்ஸுக்குப் பின்னர் கொஞ்சம் சறுக்கலான திரைக்கதையை இந்தப் படத்தில் தான் பார்க்கின்றேன்.

வசனம் :
சுஜாதா, ஷங்கர், கார்க்கி என மூவர் வசனம் எழுதியிருக்கின்றார்கள். விஞ்ஞான விடய வசனங்களில் சுஜாதா தெரிகின்றார். பல இடங்களில் ரஜனியின் பட பஞ்ச் டயலாக்குகளை இலகுவாக வசனமாக்கி இருக்கின்றார்கள். முன்னாடி கண்ணாடி என பஞ்சதந்திர கிரேசிமோகன் சாயலும் சில இடங்களில் ஏற்படுகின்றது தவிர்த்திருக்கலாம். விஞ்ஞான வசனங்கள் வருவதால் கிராமத்து மக்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் கெளதம் வாசுதேவ மேனனின் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் வசனங்கள் பாராட்டத் தக்கது. மெல்லிய நகைச்சுவை கலந்த வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கின்றது. குறிப்பாக யுத்தம் ஆயுதம் கணணி சம்பந்தப்பட்ட வசனங்கள் கலக்கல். அதிலும் ரோபோ சொல்லும் நா.முத்துக்குமாரின் கவிதை சூப்பரோ சூப்பர்.

இயக்கம் :
சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜனியுடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான். ஷங்கரின் ரசிகனாக அவர் ஒரு ஹொலிவூட் படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜனியை தனது தேவைக்கு ஏற்றபடி இந்தப் படத்தில் இயக்கி இருக்கின்றார், ஏனென்றால் அதிரடி ஆரம்பம், பஞ்ச் டயலாக், அறிமுகப் பாடல் என ரஜனியின் வழக்கமான படங்கள் போல் இதில் இல்லை. ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.



ரஜனிகாந்த்:
ரஜனி என்ற மந்திரச் சொல்லினால் தான் இந்தப் படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது, படுகின்றது. சிவாஜிக்குப் பின்னர் நடித்த படம்,விஞ்ஞானியாக ஒரு வேடம் இன்னொரு பரிமாணத்தில் ரோபோவாக ஒரு வேடம். ரோபோ மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை நினைவூட்டுகின்றது. இன்னமும் விஜய், அஜித் போன்றோருக்கு ரஜனி போட்டியாகத் தான் இருப்பார் என்பது போல் இளமையாகவே இருக்கின்றார். ஆனாலும் அந்த உருவத்துடன் ஒட்டாத தாடிக் காட்சிகளில் முதுமை அப்பட்டமாகத் தெரிகின்றது. வில்லனாக வரும் காட்சிகளில் ஷங்கர் ரஜனியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடிப்பையும் கறந்திருக்கின்றார். (ஒரு சில விமர்சர்கள் எழுதியதுபோல் விருது கொடுக்கும் அளவிற்க்கு எந்திரனில் ரஜனி நடிக்கவில்லை), தளபதிற்க்குப் பின்னர் ரஜனியின் ஸ்டைல் தான் நடிக்கின்றது ஒழிய அவரிடம் எவரும் நடிப்பை அவ்வளவாக வாங்கிக்கொள்ளவில்லை. ரஜனியிம் இனி ஷங்கர் போன்றவர்களின் படங்களில் நடித்தால் மீண்டும் அந்தக் கால ரஜனி கிடைப்பார்.

தன்னுடைய ரசிர்களின் எதிர்பார்ப்புகளை மீறி எந்தவிதமான பஞ்ச்கள், சண்டைகள் இல்லாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. ரஜனிக்கே உரிய நகைச்சுவையுடன் ரோபோவை உலாவ விட்டதும் பாராட்டுக்குரியது. வில்லன் ரஜனி தற்போதைய வில்லன்களுக்கு போட்டியாக உருவாகிவிட்டார். சாதாரண ரசிகர்களுக்கு இந்த ரஜனியைப் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை இந்தப் படத்தில் தேடத்தான் வேண்டும்.

சிட்டி :
யார் இந்த நடிகர் என நினைக்கின்றீர்களா? வேறை யாருமல்ல ரோபோ ரஜனி தான். எப்படி சில நடிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றுகின்றார்களோ அதுபோல் ரஜனியும் சிட்டியுடன் ஒன்றிவிட்டார். முதல்பாதியில் சிரிக்க வைக்கும் சிட்டி இரண்டாம் பாதியில் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டுகின்றார். ஐசுக்கு காதல் சொல்லும் இடங்கள் கலக்கல்.

ஐஸ்வர்யா ராய் :


உலகின் நிரந்தர அழகி அல்லது இந்த நூற்றாண்டின் அழகி வெள்ளித் திரையிலும் இன்னும் இளமையாகவே இருந்து மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றார். இருவரில் பார்த்த மாதிரியே அதே அழகுடன் இருக்கின்றார். ஜீன்ஸில் 50 கேஜி தாஜ்மஹாலாக இருந்தவர் இதில் 40 கேஜியாக குறைந்தது போல் இருக்கின்றது. குறிப்பாக கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் உடைகள் அபாரம், எந்த இடங்களிலும் அவரை ஆபாசமாகவோ கண்றாவியாக தோன்றவில்லை.

பல இடங்களில் நடிக்கவும் செய்கின்றார். அபிசேக் பச்சான் உங்கள் மனைவிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். ஐஸ்வர்யாவிற்கு மாற்றீடாக இன்னொரு நடிகையை சனாவின் இடத்தில் யோசித்தால் ஸ்ரீதேவி மட்டும் தான் ரஜனிக்குப் பொருத்தமாக இருப்பார்.

இசை :
ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்கின்றார்கள். என்னுடைய பிளேயரில் கிளிமஞ்சதாரோ மெஹா ஹிட். புதிய மனிதா பாடல் ஆரம்பக் காட்சிகளுடன் ஒட்டவில்லை. ஏனைய பாடல்களில் வழக்கம் போல் ஷங்கர் வித்தியாசமாகவே எடுத்திருக்கின்றார். இதனை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம் குறிப்பாக தீம் மியூசிக் கலக்கல்.

ஒளிப்பதிவு :
பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத் தரம். பாடல்காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது.

கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது.



எடிட்டிங் :
ஆண்டனியின் கத்தரி தேவையான இடங்களில் அழகாகவே கத்தரித்துள்ளது. பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.

சந்தானம் :
பாஸ் எ பாஸ்கரனில் சதமடித்தவர் இதில் டக் அவுட்டாகிவிட்டார்.

கருணாஸ்
திண்டுக்கல் சாரதிக்காக நன்றிக்கடனோ தெரியவில்லை.

ஜஸ்ட் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பின்னணியில் பலர் உழைத்திருக்கின்றார்கள் என்பது படம் முடிந்தபின்னர் காட்டும் பட்டியலில் தெரிகின்றது. ஐஸ்வர்யா ராயுக்கு குரல் கொடுத்தவர் தான் யார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னணியில் உழைத்தவர்கள் பலர் வெளிநாட்டினர். நிச்சயமாக தமிழ் வர்த்தக சினிமாவில் எந்திரன் ஒரு மைல் கல்லாகத் தான் இருக்கும்.

மொத்தத்தில் எந்திரன்
ரஜனி ரசிகர்களுக்கு - மினித் தீபாவளி
ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு - ஜொள்ளு மழை
ஷ்ங்கர் ரசிகர்களுக்கு - ஹொலிவூட் தரம்
சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்

டிஸ்கி :
நான் பார்த்த தியேட்டரில் வெறும் 50 பேர் மட்டும் தான். காரணம் அந்த தியேட்டரில் முதன் முதலாக தமிழ்ப் படம் என்பதால் பலருக்குத் தெரியவில்லை. மற்றும் படி லண்டனில் பல இடங்களில் ஒரு நாளைக்கு எட்டுக் காட்சிகளுக்கு மேல் நடக்கின்றது.

படம் தொடங்குமுன்னர் ஒரு சில ஆங்கில அனிமேசன் படங்களின் ட்ரைலர் போட்டார்கள்.

எமக்குப் பின்னால் இருந்த சில பெண்களும் ஆண்களும் கடுப்பைக் கிளப்பினார்கள். பொது இடத்தில் எப்படி என்ன கதைக்கவேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. வெள்ளைக்காரன் ஸ்டைல் ஆனால் வாய் திறந்தால் கூவம் தான். இவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் நேற்றுத் தான் ஓய்வு கிடைத்தது, அதனால் தான் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு சினிமா விமர்சனம். இனி மன்மதன் அம்பு தான் திரையில்.

சன் பிக்சர்சின் காமன் வெல்த்

கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

சிங் : வணக்கம் கலைஞர்ஜி

கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.

சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?

சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.

கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.

சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?

கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.

இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.

கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.

தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.

வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.

ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,

ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.

கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,

ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.

தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.

ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.

ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.

கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.

கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.

வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.

ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.

தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.

ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.

தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.

இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2010

அரசியல்

கடந்த சில நாட்களாக தர்மபுரி பஸ் எரிப்புப் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களின் தலைவி மேல் வைத்திருக்கும் அதீத அடிமைத்தனத்தில் அவர்கள் செய்த இந்த கொடுங்கோலுக்கு அரேபிய நாட்டுத் தண்டனைகள் தான் சரியானது. அப்பாவி மாணவிகளை கதறக் கதறக் தீக்கிரையாக்கிவர்களை இப்படியான கொலைச் செயலைச் செய்யத்தூண்டிய அரசியல்வாதிகளையும் கண்டிக்கவேண்டும் அல்லது தண்டனை கொடுக்கவேண்டும் ஆனாலும் எய்தவன் ஏதோ ஒரு நாட்டில் சுகமாக ஓய்வெடுக்க அம்புகள் மட்டுமே தூக்கில்.

தூக்குத் தண்டனை என்பது பெரியதொரு தண்டனைதான். அதே நேரம் இந்தக் குற்றவாளிகள் மிருகங்களை விடமிகக் கேவலமாக நடந்துகொண்டபடியால் இவர்களுக்கு தூக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும். அதே நேரம் மதுரை தினகரன் சம்பவ குற்றவாளிகளுக்கும் தூக்கு கொடுக்கவேண்டும். கண்கள் பனித்து இதயம் இனித்ததால் அந்த சம்பவம் விரைவில் மறக்கப்பட்டுவிடும். நம்ம உலக நாயகன் விருமாண்டியில் சொன்னது போல் மன்னிப்பவன் பெரிய மனிதன் என்ற கருத்து இந்த இரு சம்பவம் செய்தவர்களுக்கும் செய்யத் தூண்டியவர்களுக்கும் பொருந்தாது.

கிரிக்கெட்

இங்கிலாந்தில் இவ்வளவு நாளும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகளை கடந்த ஞாயிறுமுதல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டன. எல்லாப் புகழும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கே சேரும். இளம் வீரர்கள் முகமட் அமீரும் அசீப்பும் ஸ்பொட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிகொண்ட பாகிஸ்தான் அணி இப்போ சல்மான் பட் அமீரின் கைங்கரியத்தால் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கின்றது. மஜீர் மஜீட் என்ற லண்டன் வாழ் தொழிலதிபரே இந்த சூதாட்டத்தின் சூத்திரதாரி என ஸ்கொலண்ட்யார்ட் போலிஸார் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

அதே நேரம் அடுத்து வரும் பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் ரத்துச் செய்து தங்களுக்கு பணத்தை திரும்பத் தரும்படி இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ சில நாட்களுக்கு பாகீஸ்தான் கிரிக்கெட்டை வைத்து பத்திரிகைக கல்லா கட்டுவது நிச்சயம்.

அத்துடன் ஐபிஎல் புகழ மோடியும் சொந்தமாக விமானம் வாங்கியதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்கள். விளையாட்டு இப்போ வியாபாரமாக மாறிவிட்டது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.

ஷேன் வாட்சனுடனும் சில சூதாட்டவாதிகள் தொடர்புகொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.

சினிமா

எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். கிளிமஞ்சதாரோபாடல் மிகவும் பிடித்துவிட்டது சின்மயின் ஐஸ்கிறீம் குரல் ஐஸ்வர்யா ராஜை அப்படியே படம் போட்டுக் காட்டுகின்றது. புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார். இந்தப் பாடல்களில் புதியவகையான ஒரு இசை ஒலிகள் தெறிக்கின்றன. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ தெரியவில்லை இசைக் கோலங்கள் மேற்கத்தைய சாயலில் இருகின்றது. எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது.

எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கின் சில கொமெண்டுகள் மேடை நாகரிகத்துக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. ரஜனியின் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலக்கல். தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.

ஷங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும், அதே நேரம் சன் குழுமத்தின் படம் என்பதால் ஓவர் விளம்பரம் ஆபத்தாகவும் அமையலாம்,

சின்னத் திரை :

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் எதோ ஒரு சீசனில் ஈழத்து மைந்தர்கள் பிரேம் கோபாலும் பிரேமினியும் முதல் பரிசைப் பெற்றார்கள். பிரேம் கோபாலின் கடின உழைப்பு அவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி பரசைக் கொடுக்காவிட்டாலும் ஜோடி நம்பர் ஒன்னில் விட்டதைப் பிடித்துவிட்டார்.உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி ஈழத்தில் நடந்த குண்டுவெடிப்பை தத்ரூபமாக நிகழ்த்தி பலரின் பாராட்டைப் பெற்றவர் இம்முறையும் ஈழத்துய்ரத்தை மீண்டும் நிகழ்த்தினார். அதன் காணொளி கீழே:



இளவரசி டயனா :
நேற்று முந்தினம் இளவரசி டயானாவின் நினைவுதினம் கென்சிங்டன் கார்டனில் நினைவு கூரப்பட்டிருந்தது, அதே நேரம் சைனாவில் உள்ள ஷென்சன் விமான நிலையத்தில் டயனாவின் அரைகுறை ஆடைகளுடனான ஒரு விளம்பரம் உள்ளாடை ஒன்றுக்கு விளம்பரப்படுத்தியிருந்தது. அத்துடன் அந்த விளம்பரத்தில் "Feel the Romance of British Royality" என்ற வாசகமும் இருந்தது. டயானா போன்ற ஒரு பிரபலத்தை இறந்தபின்னரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் சீன உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான "ஜெலசி இன்டர்னெசலின் மேல் இதுவரை எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இது பற்றி அவரது கணவர் இளவரசர் சாள்ஸ்சும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.

எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். பாடல் ஹிட்டுக்கு நிரோஷாவின் கவர்ச்சியான அழகும் ஒரு காரணமாகும். கறுப்பானாலும் களையான அழகி நிரோஷாவுக்கு நல்ல படங்கள் கிடைத்தும் ஏனொ கோடாம்பக்கத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை. அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷாவின் பாடல். இசைஞானியின் இசையும் கலைஞானியும் நடிப்பும் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்,



சின்ன சந்தேகம் :
பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி.

நிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை

"துளித் துளி மழையாய் வந்தாளே" என ஹரீஷின் செல்போன் தமன்னாபோலவே சிணுங்கியது.

"ஞாயிறு காலேலையும் நித்திரை கொள்ளவிடாமாட்டங்கள்" என நினைத்தபடி தூக்க கலக்கத்தில் "ஹலோ" என்றான்.

"டேய் மச்சான் நாங்கள் எல்லோரும் கிரவுண்டுக்கு வந்துட்டம் உடனே வா" எஸ் எம் எஸ் போல் சொன்னான் நண்பன் வருண்.

"குளிச்சிட்டு வாறன்டா" என்றபடி பாத்ரூமில் நுழைந்தான் ஹரீஷ்.

ஹரீஷ் கணணிப் பொறியியளாலனாக ஒரு தனியார் கம்பனியில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு கொழும்பில் வசிக்கும் இளைஞன். வாரத்தில் ஐந்துநாளும் ஜாவாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சனி ஞாயிறு என்றால் நண்பர்களுடனும் கிரிக்கெட்டுடனும் குடும்பம் நடத்துபவன். ஆறடி உயர ஜிம்பாடி பார்ப்பவர்களை அவனை ஒரு விளையாட்டுவீரனாகவே எண்ணவைக்கும். பாடசாலைக் காலத்தில் பாடசாலை அணிக்கும், பல்கலைக் கழக வாழ்க்கையில் பல்கலைக் கழக அணிக்கும் கிரிக்கெட் விளையாடிய சகலதுறை வீரன். நல்ல படிப்பு, நல்ல வேலை என சகல செளபாக்கியங்களும் இருந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

"அம்மா டீ" உடலைத் துடைத்தபடி ஹரீஷ் குசினிக்குள் குரல் கொடுத்தான்.

டீயுடன் வந்த அவனின் தாய்,
"தம்பி உனக்கு அடுத்த பட்சில் படிச்ச ஒரு பெட்டையின் சாதகம் வந்திருக்கு, இனியாவது ஓம் என்று சொல்லடா?"

"காலமையே உங்கடை ஆக்கினியைத் தொடங்கிவிட்டியளே, நான் சிசிஎன்ஏ செய்யவேண்டும், இன்னும் நல்ல பொசிசனுக்கு வரவேண்டும் அதன் பிறகு பார்ப்பாம்" சலித்தபடி சொன்னான்.

"நீ இன்னும் அவளை மறக்கவில்லை போலிருக்கின்றது, துலைவாள் என்ரை பிள்ளைக்கு என்ன மருந்துபோட்டு மயக்கினாளோ"

"சும்மா அவளைத் திட்டாதை, எனக்கு டீயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" கோபத்துடன் பைக்கை உதைத்தான் ஹரீஷ்.

காலி வீதியில் போகும் போது பழைய ஏ எல் கால நினைவுகள் மெல்ல தாலாட்டத் தொடங்கின.

யாழில் பிரபலமான அந்தப் பாடசாலைகளின் வருடாந்த கிரிக்கெட் போர் நடந்துகொண்டிருந்தது. தன் கல்லூரிக்காக ஆரம்ப வீரனாக இறங்கிய ஹரீஷ் நான்குகள் ஆறுகள் என அடித்து நொருக்கிக்கொண்டிருந்தான். போட்டியைப் பார்க்கும் மாணவர்களினதும் ஏனைய பார்வையாளர்களினதும் சத்தம் வானைப் பிளந்தது. ஸ்கோர்போர்ட் பக்கம் இருந்த பக்கத்து பாடசாலை மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்திமட்டும் ஹரீஷின் ஒவ்வொரு ஓட்டத்தையும் கைத்தட்டியும் துள்ளியும் ரசித்தாள்.

முதல் நாள் ஆட்டம் முடிந்தது ஹரீஷ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தான். தன் சக மாணவர்கள் ஏனைய மாணவர்கள் என பலரும் கட்டிப்பிடித்தும் கைகொடுத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

"வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" ஒரு தேன்குரல் தன்னுடைய மெல்லிய கைகளை கொடுத்து மின்னல் போல் வாழ்த்திவிட்டுச் சென்றது.

அவளின் உருவம் ஹரீஷின் மனதில் மெல்லிய விம்பமாக பதிந்துவிட்டது. சில நிமிடங்களில் அவளை மறந்துவிட்டு அடுத்தநாள் போட்டியில் எப்படி எதிரணியை விழுத்துவது என அணித்தலைவருடன் ஆலோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

அடுத்தநாள் ஹரீஷ் தன் வேகத்தில் எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்தான். ஜோர்க்கர்களும் பெளன்சர்களும் எகிறிப்பறந்தன. அத்துடன் அவன் கல்லூரி வெற்றியையும் ஈட்டிவிட்டது. ஹரீஷ் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் போது மீண்டும் தூறலாக அதே தேன் குரலில் "வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்" இம்முறை கைகொடுக்காமல் மெல்லிய புன்னகை மட்டும். அவனும் ஒரு சிரிப்புடன் நன்றி எனச் சொல்லிவிட்டு அவளின் முகத்தையும் ரையையும் பார்த்தான்.

மறுநாள் மாலை ரியூசனில் ஹரீஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"இந்த முறை அவங்கடை ஆட்டத்துக்கு ஆப்படித்துவிட்டோம் மச்சான்."
"நீ ஆப்படிச்சாலும் அந்தக் கல்லூரி கோச்சின் மகள் நீ அடித்த ஓவ்வொரு அடிக்கும் கை தட்டினாளே"
"அட அவள் தேவா மாஸ்டரின் மகளோ, ரண்டு நாளும் என்னைப் பாராட்டினாள் அவளின் ரையைப் பார்த்தே நினைச்சேன். சூப்பர் பிகரடா"
"மச்சான் நீ நினைச்சால் அவளை மடக்கலாம்" நண்பர்கள் உசுப்பேத்தினார்கள்.
"இல்லையடா என்ரை லட்சியம் தேசிய அணியில் ஆடி மெக்ராத்தின் பந்துக்கு சிக்ஸ் அடிக்கவேண்டும்"
"அடப்பாவி நல்ல கனவு எனிவே உன் கனவு பலிக்க வாழ்த்துக்கள்"

கெமிஸ்ரி மாஸ்டர் உள்ளே வரவும் இவர்களின் கதையும் நின்றுவிட்டது.

வகுப்பு முடிந்ததும் "சொறி மச்சான் அம்மா நல்லூரானுக்கு ஒரு சலூட் அடித்துவிட்டு வரச்சொன்னார், நான் மற்றப்பக்கத்தாலை போறன் என்றபடி " சைக்கிளை எதிர்த்திசைக்கு திருப்பினான் ஹரீஷ்.

"ஹலோ ஹலோ" தன் பின்னால் ஒரு பெண் குரல் கூப்பிடுவதைக் கேட்டதும் சைக்கிளை ஸ்லோவாக்கி திரும்பிப் பார்த்தால் அந்த கோச்சின் மகள்.

"ஹலோ என்ன இந்தப் பக்கம்?" ஹரீஷ்
"நானும் உங்கடை ரீயூசன் தான் அடுத்த பேட்ச் நான் பயோ நீங்கள் மட்ஸ்தானே.."
"ஓமோம் நான் மட்ஸ்தான் அம்மாவின் விருப்பம் நான் எஞ்ஜினியராவது அப்பாவோ என்னை கிரிக்கெட் வீரனாக்கி அழகு பார்க்க விரும்புகின்றார், ஆமாம் உங்கடை பேர்?"

"ஐயோ உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் என் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன், லாவண்யா"

"உங்களைப்போலவே உங்கடை பேரும் அழகாக இருக்கு, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?"

"பிடிக்குமாவா? பைத்தியம் நான், ஊரிலை பொடியள் டெனிஸ் போலிலை விளையாடினாலும் ஒருக்கால் நிண்டு பார்த்துவிட்டுப்போற கேஸ் நான்"

"சொறி லாவண்யா நான் நல்லூர் கோயில் பூட்டமுன்னர் போகணும், அதாலை நாம் சைக்கிளில் கதைத்தபடி போவோமா?" என்றபடி இருவரும் பரலலாக கிரிக்கெட் பற்றிக் கதைத்தபடியே சென்றார்கள்.

கல்வியங்காட்டுச் சந்தியில் லாவண்யா தான் அரியாலைப் பக்கம் போகவேண்டும் என்றபடி ஹரீசுக்கு பாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அன்றைய ஹரீஷின் இரவை லாவண்யாவே ஆக்கிரமித்திருந்தாள், முரளியின் தூஷ்ராவில் இருந்து சகலதும் தெரிந்துவைத்திருக்கின்றாள். இப்படியான பெண் எனக்கு வாய்த்தால் தான் பொருத்தமாக இருக்கும்.

தினமும் ரியூசன் முடிய இருவரும் ஒன்றாக வரத்தொடங்கினார்கள். வகுப்புகளிலும் பொடியளிடை அரசல்புரசலாக இவர்கள் கதைதான். சிலர் நேரடியாகவே கேலி செய்தார்கள். எக்ஸாம் நெருங்கி வந்தபடியால் ஹரீஷின் கவனம் படிப்பிலும் போனது.

"எப்படியும் சோதினை முடிந்ததும் என்ரை லவ்வை அவளுக்குச் சொல்லவேண்டும். கார்ட்டுடன் கடிதம் எழுதிக்கொடுப்பதோ சீ அது பழைய முறை அப்போ நேரடியாக போலைப் போடவேண்டியதுதான். எப்படியும் ஓம் என்பாள்" என மனசுக்குள் நினைத்தபடி பாஸ் பேப்பரைப் புரட்டினான்.

சோதினையும் முடிஞ்சு விட்டது, வெள்ளிக்கிழமைகளில் காதலைச் சொன்னால் பலிக்கும் என எங்கேயோ வாசிச்ச நினைப்பில் ஒரு வெள்ளிக்கிழமை நல்லூரானைத் தரிசித்தபின்னர் அவளுக்காக கல்வியங்காட்டுச் சந்தியில் நின்றான் ஹரீஷ்.

"ஹாய் ஹரீஷ், எப்படி எக்ஸாம்?"
"டவுள் மேட்ஸ் ஓக்கே, கெமிஸ்ரி தான் கொஞ்சம் கஸ்டப்படுத்திவிட்டது".
"ஓ அப்படியா"
"நான் உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுகின்றேன்"
"எனக்காகவா ஏன் என்ன விசயம்?"
"ம்ம்ம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, சொல்லாமலும் இருக்க முடியவில்லை வாங்கோவன் லிங்கத்திலை ஒரு ஐஸ் கிறீம் குடிச்சபடி பேசுவம்"
"ஐயோ ஆளை விடுங்கோ யாராவது கண்டால் பிரச்சனை, பரவாயில்லை சொல்லுங்கோ"
"ஐ லவ் யூ"
"நினைச்சேன் இப்படி ஏதாவது உளறுவியல் என்று, என்னைப் பற்றி என்ன தெரியும்"
"தேவா மாஸ்டரின் மகள், பயோ படிக்கின்ற கெட்டிக்காரி, சுஜாதாவில் இருந்து கிரிக்கெட் வரை தெரிந்துவைத்திருக்கின்ற அறிவாளி, வேறை என்ன தெரியனும்?"

" என் பெயர் தெரியுமா?"
"லாவண்யா"
"முழுப்பெயர் தெரியுமா?"
"ம்ம்முழுப்பெயர்..."
" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்"..

இனிப் பவன் தொடர்வார்.

இந்த தொடர்கதையை நாம் சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது நான் எழுதியதன் தொடர்ச்சியை இன்னொருவர் எழுதுவார். இது ஒரு புதுவகையான முயற்சி. என்னைத் தொடர்ந்து நண்பர் பவன் எழுதுவான்.

பவனின் கதை நிலாக் காதல்

ஹாட் அண்ட் சவர் சூப் 19-08-2010

அரசியல்
பெரிதாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நிகழவில்லை என்பதால் அரசியல் இன்றைய சூப்பில் இல்லை.

நீண்ட நாள் சந்தேகம் : இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?

கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறும் முக்கோணத்தொடரின் கடைசியாக இந்தியா இலங்கை விளையாடியபோட்டியால் ஆசிய கிரிக்கெட் அதிர்ந்துபோய் ரணகளமாகி இருக்கின்றது. ரந்தீவ் செய்தது தவறுதான் அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், இப்போ பழைய குப்பைகளை இந்திய முன்னாள் வீரர்கள் கிளறுகின்றார்கள். இவர்கள் செய்யாத குழப்படிகளையா ரந்தீவ் செய்துவிட்டார்? ஆனாலும் வழக்கம்போல் பெரிய அண்ணனுக்கு பயந்து இலங்கை கிரிக்கெட் சபை மன்னிப்பு கேட்டுவிட்டது. இந்தியாவை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பை ரணகளமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அணித்தலைவர் டோணி அமைதியாக இருக்கின்றார்.

எத்தனையோ தேவையான விடயங்கள் இருக்க ஹிந்திய ஊடகங்கள் இதனை தூக்கிபிடிப்பது வேறு ஏதோ அரசியல் அல்லது உள்குத்து இருப்பது போல் தெரிகின்றது. இது பற்றி பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும் அதிகம் எழுதியபடியால் நான் பெரிதாக அலட்ட விரும்பவில்லை.

யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் மோகம் இன்னமும் குறையவில்லை என்பதற்க்கு நேற்று கெனிங்டன் ஓவலில் தொடங்கிய இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் போட்டி சாட்சி. மைதானத்தில் நல்ல கூட்டம், மைதானத்தில் அருகால் தான் தினமும் நான் பயனிக்கின்றனான். அதனால் தான் சனக்கூட்டத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.


சினிமா :

அண்மையில் தில்லாலங்கடியும் களவாணியும் பார்க்க கிடைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் இரண்டும். தில்லாலங்கடி ரீமேக், களவாணி அக்மார்க் ஒரிஜினல், இரண்டும் நகைச்சுவை நிறைந்த படங்கள். ஜெயம் ரவிக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது. தமன்னா அழகாக இருக்கின்றார். பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான். வழக்கம்போல் சரண்யா மனசுக்குள் மத்தாப்புதான்.

நாளைக்கு நான் மகான் அல்ல வெளியாகின்றது. கார்த்தி இதில் எப்படி நடித்திருக்கின்றார் எனப் பார்க்கவேண்டும், நான் மகான் அல்ல பாடல்களில் வழக்கம் போல் யுவன் ராஜாவாகி இருக்கின்றார். காதல் சொல்ல வந்தேன் படத்தின் சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடல் போல் மெஹா ஹிட். அருமையான மெலடி. ஆனால் படம் தான் பப்படம் என்கின்றார்கள்.

பதிவுலகம்

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பு நடந்து வரும் 23ந்திகதியுடன் ஒரு வருடமாகப்போகின்றது. சந்திப்பின் மூலம் கிடைத்த நன்மைகள் அல்லது விளைவுகள் என்னவென்றால் மதுவினால் இலங்கைப் பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டதும், பல நல்ல நண்பர்கள் கிடைத்து இன்றைக்கு அவர்கள் மாமன், மச்சான், சித்தப்பூ பெரியப்பூ என உறவு முறை கொண்டாடும் வரை நல்ல உறவுகளானதும் தான். எத்தனையோ விடயங்கள் நடைமுறப்படுத்த பலரும் முயன்றும் ஏனோ பலரின் ஒத்துழைப்பு இல்லாமையால் கைவிடப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது சந்திப்பும் சென்ற வருடம் டிசம்பரில் நடந்தது அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக நண்பர்களாக சந்திக்கின்றார்களே ஒழிய இன்னொரு பதிவர் சந்திப்புக்கு சாத்தியம் ஏனோ ஏற்படவில்லை. இடையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஒரு இடத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எத்தனையோ ஆற்றல்மிக்க துடிப்பான இளைஞர்கள் இப்போது பதிவு எழுதுகின்றார்கள், அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்.

சிறு விளக்கம் :
அண்மைக்காலத்தில் பெரும்பாலும் என்னுடைய பதிவுகளுக்கு நான் பதில் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் குறைந்துவிட்டது, இதனைச் சில நண்பர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் அறியத் தந்தார்கள். இதற்க்கான முக்கியமான காரணம் நேரம் மட்டுமே. பல தடவை பதில் அளிக்கமுயற்சி செய்வேன் ஆனாலும் ஏனோ முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலும் நான் ரசித்த பதிவுகளுக்கு தேவைப்பட்டால் வாக்கும் பின்னூட்டமும் அளித்துவருகின்றேன். பகலில் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. இரவிலும் அரைவாசி இரவில் நேரமில்லாதபடியால் இந்தப் பதிவு நள்ளிரவின் பின்னர் எழுதுகின்றேன். எத்தனையோ விடயங்கள் எழுத யோசித்தாலும் வேலைப்பளு, கல்விப்பளு எழுத விடுகின்றதில்லை. ஈட் கிரிக்கெட், ட்ரிங் கிரிக்கெட் என இருந்த நான் இப்போ கிரிக்கெட்டை கிரிகின்போவில் மட்டும் ஸ்கோர் பார்ப்பதுடன் விட்டுவிடுகின்றேன், ரந்தீவ் விவகாரம் கூட கங்கோனின் பதிவில் தான் அறிந்தேன். இனிமேல் எப்படியும் நேரம் ஒதுக்கி பதில் பின்னூட்டம் இட முயற்சிக்கின்றேன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.

ஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2010

அரசியல்

மீண்டும் இலங்கையின் அரசியல் அரங்கு சூடு பிடித்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆளும் கட்சியுடன் இணையப்போவதாக வந்த செய்திதான் இதற்கான காரணம். ஐக்கியதேசியக் கட்சியில் போட்டிபோடும்போதே பிரபா கணேசனுக்கு தெரிந்திருக்கும் எப்படியும் தாம் எதிர்க்கட்சிதான் என ஆனாலும் வெற்றி பெற்று சில நாட்களின் பின்னர் என்ன காரணத்துக்காகவோ அவர் ஆளும் கட்சியில் இணைய முனைகின்றார். ஏற்கனவே இவரின் அண்ணன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் ரணில் இடம் கொடுக்கவில்லை என பிரச்சனைப் பட்டார்கள். இந்த கட்சி தாவும் நபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா? ஆகக்குறைந்தது மக்களுக்கு திருப்பி அழைக்கும் அதிகாரம் தேவை? மக்கள் பிரபா கணேசனை ஆளும் கட்சி எம்மியாக பாராளமன்றத்துக்கு அனுப்பவில்லை? ஆளும் கட்சியில் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தமிழர் ஒருவர் வேண்டுமென்றால் இராதகிருஷ்ணனையே அனுப்பியிருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் பலர் ஆளும் கட்சிக்கு தாவ இருக்கின்றார்களால். ரணில் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு துறவியாகலாம்.

அரசியல் சண்டியன் மேர்வின் சில்வாவை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. காலம் பிந்திய முடிவு தான் ஆனாலும் பாராட்டவேண்டிய முடிவு. சென்ற வியாழக்கிழமை மேர்வின் சில்வாவின் புகழ் லண்டன் புகையிரதங்களிலும் நீளத்துக்கீழ் புகையிரதங்களிலும் மேலும் பரவி இலங்கைக்கு மேலும் புகழ் சேர்த்தது. இங்கே புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மெற்ரோ எனப்படும் பத்திரிகை இலவசமாக கிடைக்கும். அந்தப் பத்திரிகையில் மேர்வினின் படத்துடன் அவர் சமுர்த்தி உத்தியோகத்தரைக் கட்டிப்போட்ட செய்தி வெளியாகியது. இந்த ஜோக்கரை பாராளமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான். சந்திரிக்கா செய்த எத்தனையோ பிழைகளில் இந்தப் பிழையும் ஒன்று, கடைசியில் சந்திரிக்காவையே திட்டி அரசியல் நடத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்றவர் மேர்வின் சில்வா. இவரை சில நாள் ஊடக அமைச்சராக்கி அழகு பார்த்த ஜனாதிபதி இப்போ அவரின் சண்டித்தனம் கூடக்கூட இடை நிறுத்தியிருக்கின்றார். இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்கள் நாடுகளில்
கோன்கள் உயர்கின்றார்கள்
வரப்புகள் மட்டும்
அப்படியே இருக்கின்றன.

சினிமா

எந்திரன் இசை வெளியீடு பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றன. வழக்கம்போல் ரகுமானின் பாடல்கள் முதன்முறை கேட்கும் போது அவ்வளவு இதமாக இருக்கவில்லை. விண்ணைத்தாண்டி வருவாய், இராவணன் பாடல்கள் சில உடனடியாக பிடித்தது போல் எந்திரனில் எந்தப் பாடலும் முதலில் கவரவில்லை. கொஞ்சம் கொஞ்சம் கேட்டபின்னர் புதிய மனிதாவும் பூம்பூம் ரோபோடாவும் நல்லாயிருக்கு. எப்படியும் ஷங்கர் பாடல்களை அழகாக படமாக்கி ஹிட்டாக்கிவிடுவார். போதாக்குறைக்கு உழக அழகியும் இருக்கின்றார் சொல்லவா வேண்டும். எந்திரனின் வெற்றிக்கு காரணம் ஷங்கரா? சூப்பர் ஸ்டாரா? இல்லை சன் குழுமத்தின் ஓவர் டோஸ் விளம்பரமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மொக்கைப்படங்களான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, அம்பா சமுத்திரம் அப்பானிக்கே படம் வெளியாகி அடுத்த நாளே வெற்றிப்படம் என விளம்பரம் கொடுத்தவர்கள். ரோபோவுக்கு சும்மாவா இருப்பார்கள் அதிலும் சொந்தப்படம் வேறை பாவம் சன் நெட்வேர்க் இணைப்புகள் இருப்பவர்கள்.

நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.

கிரிக்கெட்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் பலம் குறைந்த நியூசிலாந்திடம் 200 ஓட்டங்களால் அவமானத் தோல்வியைத் தழுவியது. நியூசியின் புதிய தலைவர் ரோஸ் டைலரின் 95 ஓட்டங்களும் ஸ்டைரிசின் 89 ஓட்டங்களும் நியூசிக்கு 288 என்ற நல்ல ஓட்ட எண்ணிக்கையை கொடுக்க இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக், யுவராஜ் சிங், டோணி, ரைனா இலகுவாக இந்த எண்ணிக்கையை கடப்பார்கள் என நினைத்தால் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுவிட்டார்கள்.

இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் எட்பக்ஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்கிசில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் புரோட் பந்துவீசும் போது பாகிஸ்தானிய வீரர் ஹைடரை நோக்கீ பந்தால் எறிந்தவிடயத்தில் ஐசிசி இங்கிலாந்துக்கு சார்பாக நிற்பதுபோல் தோன்றுகின்றது. கனவான்கள் ஆட்டம் என்ற நிலையில் இருந்த கிரிக்கெட்டில் புரோட் செய்தது பாரிய தவறாகும் இன்னொரு வீரரை காயப்பட்டுத்தும் நோக்கில் எறிந்த பந்துக்கு வெறும் அபராதத்துடன் புரோட் தப்பிவிட்டார். ஆகக்குறைந்தது அவரை இந்த தொடரில் இருந்து நீக்கி இருக்கவேண்டும் ஆனால் ஏனோ ஐசிசி செய்யவில்லை. சில இங்கிலாந்து வீரர்களும் பத்திரிகைகளும் புரோட்டுக்கு ஆதரவாக அவர் மன அழுத்தத்தால் அப்படிச் செய்தார் என்றும் பின்னர் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் புரோட்டுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது ஐசிசிக்கு மட்டும் தெரியவில்லை. வெள்ளைத் தோலுக்கு என்றைக்கும் மதிப்பு அதிகம் தான்.

பேஸ்புக்கின் அசுர வளர்ச்சிக்கு கீழே உள்ள இந்தப் படமே சான்று. பட உதவி செய்த இளைப்பாறிக்கொண்டிருக்கும் புல்லட்டிற்க்கு நன்றிகள்.


நான்காம் ஆண்டும் நட்புகளும் - பகுதி 2

சரியாக ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வலைப்பதிவுக்கு வருகின்றேன். இரண்டாம் பகுதியில் என்னுடைய ஏனைய வலையுலக நட்புகள் தொடர்கின்றன. சில நாட்களாக வலையுலகம் எனக்கு தூரமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலும் பதிவுகள் வாசிக்கின்றேன், சிலதுக்கு மட்டும் பின்னூட்டம் இடுகின்றேன். நேரமின்மை முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் முன்னையதைப்போல் ஏனோ இப்போ எழுதமுடியவில்லை, என்ன காரணமோ யாம் அறியோம். இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கின்றது. இந்தக் கதைகளை விட்டுவிட்டு விடயத்திற்க்கு வாறன்.


மது
பெயரைப் போலவே இவரின் பேச்சும் போதை தரும். மதுவின் கருத்துக்களின் பெரும்பாலும் அவருக்குரிய மதுயிசம் இருக்கும்(மதுயிசம் என்ன என அறியவேண்டியவர்கள் தங்கள் மின்னஞ்சலுடன் என்னை அல்லது கோபியைத் தொடர்பு கொள்ளுங்கள்). இவருக்குத் தெரியாத சந்துபொந்துகள் இல்லை (தொழில்நுட்பத்தில்). பெரிய்ய ஹக்கராகவேண்டியவர், நேர்மையான மனிதர் என்றபடியால் அதனை செயல்படுத்துவதில்லை.

டொக்டர் எம்.கே.முருகானந்தன்
இவரை வலையுலகிற்க்கு வரமுன்னரே ஒரு எழுத்தாளராக தெரியும் பின்னர் வைத்தியராக அவரிடம் பலமுறை வைத்தியம் கூடப் பார்த்தேன். தன்னுடைய கடினமான வேலைப் பளுவிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தன்னுடைய வலைப்பதிவு முகநூல் என அனைத்திலும் எழுதிக்கொண்டிருக்கின்ற கலை இவருக்கு மட்டுமே கைவந்தது. இவரின் எளிமையான தமிழில் பாமரனுக்கும் புரியும் படி எழுதும் மருத்துவப் புத்தகங்களும் கட்டுரைகளும் என்றைக்குமே மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கும். இவரின் சினிமா விமர்சனங்களை வாசித்து நான் பல படங்கள் பார்த்திருக்கின்றேன்.

மாயா
என்னை வந்தியத்தேவனாக மாறவைத்தவர்களில் இவரும் ஒருவர். பதிவுலகின் இன்னொரு மயூரன். ஆரம்பகால இலங்கைப் பதிவர்களில் ஒருவர், தற்போது லண்டனில் உயர்கல்விக்காக வசிக்கின்றார்(புலம் பெயர்ந்து அல்ல). இப்போது அடிக்கடி தொலைபேசியில் உரையாடினாலும் இன்னமும் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

நிர்ஷன்

வலையுலகின் மூலம் அறிமுகமானவர். 2007ல் ஒழுங்குபடுத்த முயன்ற பதிவர் சந்திப்பின் மூலம் தொலைபேசி மின்னஞ்சல் என தொடர்பில் இருந்தாலும் சென்ற வருடம் தான் நேரில் சந்தித்தேன். பதிவுலகத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொள்வோம். இவரின் துணிச்சல் வியக்கத்தக்கது.

நிலா

பின்நவீனத்துவ கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மூலம் கலக்கிக்கொண்டிருப்பவர். இவரின் சில கட்டுரைகளுக்கு அவரிடம் பேச்சுத்தமிழில் விளக்கம் கேட்டுக்கூட இருக்கின்றேம். சங்க இலக்கியங்கள் எல்லாம் முகநூலில் இட்டு தன் திறமையை அடிக்கடி காட்டுகின்றவர்.

சினேகிதி

நம்ம ஊரு சீனியர். வலையுலகில் பலகாலமாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் தத்தக்கபித்தக பதிவர். மின்னஞ்சல்கள், முகநூல் அரட்டைகள் என அடிக்கடி பேசுகின்ற ஒருவர். பதிவுகளில் காத்திரமாக இருந்தாலும் அரட்டைகளில் நகைச்சுவையாகவும் பேசுவார். அண்மைக்காலமாக இவரும் எழுதுவதைக் குறைத்துவிட்டார்.

சதீஸ்
இன்றைக்கு பிறந்தநாள் காணும் என் வலையுலக மருமகன். இவரைச் சந்தித்ததே சென்ற வருட அவரின் பிறந்தநாள் அன்றுதான். எவ்வளவு நக்கலடீத்தாலும் கோவம் பத்தாது. பதிவுலக நண்பர்களை உறவினராக்கிய பெருமை சதீசைத் தான் சேரும். காதலுக்கு மரியாதை கொடுப்பவர், சிறந்த கிரிக்கெட் வீரராம், என்னை மாமோய் என அழைக்கும் அழகோ அழகு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.

சுபாங்கன்

ஐந்தறைப் பெட்டியில் வசித்தவர் பவனின் வாஸ்து காரணமாக தரங்கத்தவராகிவிட்டார். சுபாங்கனுடன் எனது முதலாவது சந்திப்பு என்றைக்கும் மறக்கமுடியாமல் இருக்கிறன்(ம்). பழக நல்ல பொடியன் என நான் கூறினால் பவன் கோபிப்பான். எனக்கு சில பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைச் சொல்லித் தந்தவர். என்னைப்போல் இன்னொரு டயலொக்கின் 1000 நிமிடங்கள் வாடிக்கையாளர்.

தூயா

தமிழ்நாடுடோல்க் மூலம் அறிமுகமான இன்னொரு உறவு. மின்னஞ்சல் அரட்டைகள், முகநூல் என எங்கள் நட்பு இன்னமும் தொடர்கின்றது. இவரின் சமையல் குறிப்புகளைப் பார்த்து நானும் சிலதை முயற்சி செய்திருக்கின்றேன். என்னை முகநூலில் ஒரு சிறந்த விவசாயியாக மாற்றிய பெருமை என் அன்புச் சகோதரி தூயாவிற்க்கே சேரும். அனானித் தாக்குதல்கள் நடந்தால் ஆறுதல் கூறுகின்றவர்.

யோகா

யோகாவினையும் வலையுலகின் மூலம் அறிந்தாலும் பின்னர் நேரடியாக தொலைபேசியில் மின்னஞ்சலில் என நட்பு தொடந்துகொண்டேயிருக்கின்றது. சில தொழில்நுட்ப சிக்கல்களால் அண்மைக்காலமாக எழுதுவதை குறைத்துக்கொண்டமை கவலையளிக்கின்றது.

இவர்களை விட பலர் பின்னூட்டங்களின் மூலமும் முகநூலிலும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் பட்டியல் எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் மிகவும் நீண்டது. இங்கே பட்டியலில் இருக்கும் நண்பர்கள் ஏதோ ஒருவகையில் என்னுடன் தொடர்புடன் இருப்பவர்கள் மாத்திரமே.

என்னுடைய உளறல்களை தங்களுடைய பொன்னான நேரத்தை பயன்படுத்தி வாசிக்கும் அனைவருக்கும் என்னைப் பிந்தொடரும் அப்பாவிகள் 153 பேருக்கும் பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகள்.

பின்குறிப்பு : நேரமும் காலமும் கைகொடுத்தால் இங்கிலாந்து பற்றிய ஒரு தொடர் என் பார்வையில் எழுத இருக்கின்றேன். ஏதாவது உருப்படியாகவும் எழுதவேண்டும் தானே.

நான்காம் ஆண்டும் நட்புகளும்

இன்றுடன் நான் உளறத் தொடங்கி நான்கு வருடங்கள் முழுமையாக முடிந்துவிட்டன. 2006ல் ஏனோ தானோ எனத் தொடங்கிய வலைப்பதிவு இன்று வரை 270 பதிவுகள் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் 145 பிந்தொடர்பவர்கள் என ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக என்னை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கும் பெயருடனும் பெயரில்லாமலும் வந்து திட்டியவர்களுக்கும் பின்னூட்ட இட்ட திரட்டிகளில் ஓட்டுப்போட்ட நண்பர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய திரட்டிகளான தமிழ்மணம்,யாழ்தேவி, தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் என்னுடைய சில பதிவுகளையும் அறிமுகத்தையும் பிரசுரித்த தினக்குரல், இருக்கிறம், மெட்ரோ நீயூஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் , அத்துடன் ஈழத்துமுற்றம், சகலகலா வல்லவன் ஆகிய வலைகளில் என்னுடைய ஆக்கங்களை வெளியிட்ட அதன் நிர்வாகிகளுக்கும், என்னுடைய உளறல்களைப் பிந்தொடரும் 145 அப்பாவிகளுக்கும் அல்லது பொறுமைசாலிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.



ஏற்கனவே வலை எழுத வந்த கதையை எழுதியிருப்பதால், இந்தப் பதிவில் என்னை ஊக்குவிக்கின்ற வலையுலக நண்பர்களையும் வலையுலகில் எனக்கு கிடைத்த நண்பர்களையும் பற்றி ஒரு சின்ன தொகுப்பு.

முதலில் வலையுலகில் எனக்கு கிடைத்த குருநாதர்களைப் பற்றிப் பார்த்தபின்னர் நண்பர்களைப் பார்ப்போம்.

லக்கிலுக் :

என்னுடைய வலையுலக வாழ்க்கையை ஒரு துரோணராக இருந்து கற்பித்த குரு. இன்றைக்கு தனக்கென ஒரு பாணி, ஒரு வட்டம் என அமைத்து இடையிடையே என் வலையையும் எட்டிப் பார்க்கின்ற இனிய நண்பன். சில அரசியல் கருத்து வேறுபாடுகள் எமக்கிருவருக்கிடையில் இருந்தாலும் என்றைக்கும் அவர் என் குருதான்.

கானா பிரபா :
வலை எழுத வருமுன்னர் கிடைத்த இன்னொரு நட்பு. பின்னர் வலையுலகில் நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு. அனானித் தாக்குதல்களைச் கருத்தில் எடுக்கவேண்டாம் என பலவேளைகளில் ஆறுதல் கூறியதுடன் பின்னர் ஈழத்துமுற்றத்தில் என்னையும் இணைத்து இன்றைக்கும் உலாத்தல் நாயகனாக ட்விட்டர் சிங்கமாக வலம் வருகின்றவர். இன்று நண்பனாக, அண்ணனாக, குருவாக பல அவதாரம் எடுத்து என்னுடன் அன்பு பாராட்டுகின்றவர்.

லெனின் :
வலை எழுத முன்னரே லக்கியுடன் அறிமுகமான சகோதரன் என்னுடைய ஒரு தம்பி என்பதில் பெருமை அடையலாம். என்னுடைய வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்த பெருமை இவனுக்குத் தான் சேரும் (இவர் என எழுதினால் என்னுடன் கோவிப்பார்). நக்கல், நளினம், இவரிற்க்கு கைவந்த கலை. வலை ஒன்றை ஆரம்பித்து இடையில் வேலைப் பழுகாரணமாக‌ கைவிட்டுவிட்டு இன்று நறுமுகையின் சொந்தக்காரராக அடுத்த அடி வைத்திருக்கின்றார். எனக்கு மொக்கைப் பதிவுகளை எழுத ஊக்கம் கொடுத்த லெனினாந்தா இவர் தான்.

என் நட்புகளை ஒன்றானவன் இரண்டானவன் என வகைப்படுத்த முடியாதபடியால் அகர வரிசையில் (ஆங்கில) தருகின்றேன்.




அசோக்பரன் :
முதலாவது சந்திப்பில் அறிமுகமான நண்பர். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக கூறுகின்றவர். பின்னூட்டங்களில் மட்டுமல்ல பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்னுடன் நட்பு பாராட்டுகின்றவர். நடமாடும் கால்ப் பந்து திரட்டி.

அச்சுதன் :
பங்குச் சந்தை என அறியப்பட்டவர், தற்போது லண்டனில் இருக்கின்றார். நேரிலும் ஓரிருமுறை போனிலும் பேசியிருக்கின்றேன். லண்டனில் இருந்தும் பங்குச் சந்தையைக் கொண்டு நடத்துகின்றார். விரைவில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.

ஆதிரை :
முதலாவது பதிவர் சந்திப்பின் ஒரு அச்சாணி. நளபாகத்தின் முன்னாள் புல்லட்டை என்னுடன் கதைக்கவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் இன்றைக்கு என்னைக் கலாய்ப்பது என்றால் அவருக்கு அலாதி ப்ரியம். விசாப் பிள்ளையாரின் பக்தன். என் பாடசாலையில் எனக்கு சில வருடங்கள் இளையவர். நல்லதொரு தம்பியாக இருக்கவேண்டியவர் நல்ல நண்பனாக மாறிவிட்டார். இன்றும் எலித் தொல்லையால் கஸ்டப்படுவதாக வெள்ளவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திரமான பதிவர், சிலவேளைகளில் மொக்கையும் எழுதி என்னைக் கவலை அடையவைத்தவர். இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர்.

ஆயில்யன் :
வலையில் கிடைத்த இன்னொரு நட்பு இந்தச் சின்னப்பாண்டி. ட்விட்டரில் இவரும் கானாவும் இருந்தால் களை கட்டும். அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர். துரியோதனன் கர்ணன் நட்புக்குப் பின்னர் இவரதும் கானாவினதும் நட்பும் தான் பதிவுலகில் பிரபலம். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் (பதிவுலகில் தான்) சிக்காதவர்.

பவன் :
இதுவரை நேரில் கண்டிராத கலகலப்பான பொடியன். போனில் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன்,இவனிடம் உசாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர். எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம்.

பாலவாசகன் :
நேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது.

புல்லட் :
முதலாவது சந்திப்பின் ஆணி வேர். பல தடவை உணவகங்களில் சந்தித்த இனிய நண்பன். கொழும்பில் எந்த கடையில் சாப்பாடு ருசி என இவரிடம் கேட்டால் பதில்ல் கிடைக்கும். ஏனோ அண்மைக்காலமாக எழுதுவதில்லை. என்னை லண்டன் போனபின்னர் அடிக்கடி எழுதக்கூடாது போனவிடயத்தை கவனிக்கவும் என அன்பாக மிரட்டிய தம்பி. டைமிங் சென்சில் இன்னொரு கவுண்டமணி.(செந்தில் ஆதிரையா எனக்கேட்ககூடாது). தன்னுடைய அஞ்ஞாதவாசத்தை கைவிட்டு விரைவில் வலையுலகில் கலக்குவார் என புல்லட்டின் மூன்று கோடி வாசகர்கள் சார்பில் பத்துமலை முருகனை வேண்டுகின்றேன். (உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).

டொன் லீ :
நீண்ட காலமாக பதுங்குகுழியில் பதுங்கியே இருக்கும் சிங்கை மாதவன். வலையுலகில் ஆரம்பித்த நட்பு இன்று ட்விட்டரில் பரகுவே மொடல் அழகி லாரிசா ரிக்கீயூமீ பற்றி ட்விட்டுகின்ற வரை தொடர்கின்றது. பேஸ்புக்கில் ஃபார்பிலேயில் விவசாயம் கற்றுக்கொடுத்தது ஒரு யானையையும் எனக்கு அன்பளிப்புச் செய்த நண்பன். பதுங்குழியில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தன்னுடைய வலைப் பதிவை எழுதவேண்டும் என்பது பலரது விருப்பம். இப்போது தன்னை ஒரு வலைப்பதிவர் என்பதை விட ஒரு ட்விட்டியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றார் இந்தச் சிவதயாளன்.

ஜாக்கி சேகர் :
தன்னுடைய வெள்ளந்தியான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னுடன் நட்புப் பாராட்டும் இனிய நண்பன். இவரின் திரைவிமர்சனங்களால் பார்த்த படங்கள் சில, பாராமல் தப்பிய படங்கள் பல. என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பிற்க்கு இவரின் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் தான் காரணம். விரைவில் வெள்ளித்திரையிலும் மின்னவிருக்கும் நட்சத்திரம்.

கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்

என்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட குருவைப் பல இடங்களில் மிஞ்சிய சிஷ்யன். முதலாவது சந்திப்பில் அமைதியாக பம்மிக்கொண்டிருந்தவர் பின்னர் தன்னுடைய முதலாவது பின்னூட்டங்களால் பலரின் நட்பை பெற்றவர். கிரிக்கெட் தரவுகளில் இவர் ஒரு நடமாடும் களஞ்சியம். என்னைப்போல் ஒரு தாவரபோஷணி. விரைவில் பசுப்பையன் மதுவினால் மாமிச போசணியாக மாறப்போவதாக ஏதோவொரு சமூகவலைத்தளத்தில் தகவல் இருந்தது. எந்தவொரு விடயத்தைக்கேட்டாலும் கூகுள் அம்மன் அருளால் உடனே பெற்றுத் தருபவர். அண்மைக்காலமாக இந்த உருவத்தின் மீதும் பலரின் கண்ணூறு பட்டுள்ளதால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ளார். இவரின் ஜீமெயில் காதல் மேசேஜ்களைப் பார்த்தால் பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர். கங்கோன் மீண்டும் உன் எழுத்துக்கள் எமக்குத் தேவை ஆகையால் மீண்டும் வரவும்.

கரவைக் குரல் :
இலங்கைப் பதிவுலகின் மூத்த பதிவரான தாசனினால் அறிமுகம் செய்யப்பட்டவர். இன்றைக்கு லண்டனில் வசிக்கும் இன்னொரு பதிவர் அலைஸ் ஊடகவியளாளர். என்னுடைய பள்ளியின் இளையமாணவர். அடிக்கடி போனில் கதைத்தாலும் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை. அவரின் ஆவலும் விரைவில் நடந்தேறும் என நினைக்கின்றேன். ஈழத்து மண்வாசனையில் பல விடயங்களை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பதிவர் இவர்.

கீர்த்தி :
முதலாவது பதிவர் சந்திப்பில் சந்தித்த கவிதாயினி. முன்னர் தினமும் ஒரு கவிதை எழுதியவர் இப்போ இடையிடையே தான் எழுதுகின்றார். அடிக்கடி பேஸ்புக்கிலும் ஜீமெயிலிலும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு மறைந்துபோவர். நல்லதொரு நண்பி.

கிருத்திகன் :
பலதரப்பட்ட பதிவுகளை தன்னுடைய வலையில் எழுதிய கீத் எனப்படும் கிருத்திகனின் நட்பு பின்னர் பேஸ்புக், ட்விட்டர் எனப் பரவியது. இவரும் எனது பாடசாலை பழைய மாணவன். தன்னுடைய கருத்துகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத கீத் சிலவேளைகளில் அனானிகளால் சில விடயங்களில் நான் பாதிக்கப்பட்டபோது அவற்றை பெரிதாக எடுக்கவேண்டாம் என எனக்கு அறிவுரையும் வழங்கியவர். பாடசாலை காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்தான் என அவரின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். நல்ல நண்பன் என்பதை விட நல்லதொரு தம்பி என்றே கூறவேண்டும்.

லோஷன் :
பாடசாலைக் கால நண்பர், பின்னர் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தபடியால் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையுலகில் எனக்குப் பின்னர் வந்தாலும் பல பதிவுகளை எழுதிக் குவித்துள்ளார். சில நாட்களில் 3 அல்லது 4 பதிவு போட்டு சாதனை படைத்திருக்கின்றார். வலையுலகில் எழுதியபின்னர் மீண்டும் எம் நட்பு தொடங்கியது. நல்லதொரு நண்பன் சிலவேளைகளில் எனக்கு அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்.

மருதமூரான் :
பெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன்.

மு.மயூரன் :
வலைப்பதிவு எழுதுவதற்க்கு முன்னரே கணணி வகுப்பில் அறிமுகமானவர். இலங்கைப் பதிவுலகின் பிதாமகன் இவர் தான். தான் சொல்லவந்தவற்றை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் இவரின் குணம் தான் இவரின் மிகப்பெரிய பலம். பாமின், பாலினி எனப் பலவகையான விசைப்பலகைகளுடன் குடும்பம் நடத்தினாலும் லினெக்ஸ்தான் இவரின் முதல் மனைவி. இவருடன் இணைந்து சில விடயங்கள் செய்வதற்கான திட்டம் இருந்தது ஆனாலும் என்னுடைய பெயர்வும் வேறுசில காரணிகளும் அவற்றைத் தள்ளிப்போட்டுவிட்டன.

பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்.

சமுத்திர சங்கீதம் - புதுமை , காதல் , அர்ப்பணிப்பு

சில புத்தகங்களை வாசிக்கத் ஆரம்பித்தால் அதன் கடைசிப் பக்கத்தில் முற்றும் வாசிக்கும் வரை நிறுத்தமுடியாது. என் வாசிப்பு அனுபவத்தில் பெரும்பாலான சுஜாதா கதைகள், பொன்னியின் செல்வன், செங்கைஆழியானின் நாவல்கள் இந்த அனுபவத்தை தந்தவை. அந்த வகையில் அண்மையில் சமுத்திர சங்கீதம் என்ற ஒரு புதுவகையான நாவலை அனுபவித்து வாசித்திருந்தேன்.

சமுத்திர சங்கீதம் திரு.புதுயுகன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ஃபாண்டசி அல்லது மெஜிக்கல் ரியலிசம் (தமிழ்ப் பெயர் தெரியவில்லை) எனப்படும் வகைக்குள் அடங்கும் நாவலாகும். ஒரு அம்புலிமாமா கருவினை பல தத்துவங்களுடனும் சிந்தனைகளுடனும் புதுயுகன் விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கின்றார்.

ஏட்ரியல் எட்மண்ட் என்ற இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் இந்தியாவைப் பற்றி எழுதுவதற்கு தன் நண்பன் தாமஸின் ஊரான கன்னியாகுமரிக்கு வருகின்றார். அந்த அழகிய கடற்கரையில் அவர் ஒரு அழகிய மச்சக் கன்னியை சந்தித்து அவளின் மேல் அல்லது அதன் மேல் மையல் கொள்கின்றார். அதே நேரம் அவரது நண்பரான தாமஸின் சகோதரி கிறிஸ்டி ஏட்ரியலின் மேல் காதல் கொள்கின்றார். இடையில் வேதாச்சலம் என்ற பெரிய மனிதர் அந்த மச்சக் கன்னியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து வில்லனாக மாறுகின்றார். ஏட்ரியல் மச்சக் கன்னியுடன் சேர்ந்தாரா? கிறிஸ்டியின் காதல் நிறைவேறியதா? வேதாச்சலம் வெற்றி கண்டாரா? போன்ற விடயங்களை சுவாரசியமாக தனது கன்னி நாவலில் புதுயுகன் படைத்திருக்கின்றார். நாவலின் முடிவு எவராலும் எதிர்பார்க்க முடியாத‌து தான் இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கின்றேன்.

புதுயுகனின் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது ஒவ்வொரு அத்தியாய ஆரம்பங்களிலும் முதல் அத்தியாய முடிவுடன் ஒட்டியதான ஒரு தத்துவத்தை பாத்திரத்தினூடாக விளக்கி கதையைத் தொடர்கின்றார். வசனங்கள் யாதர்த்தமானவை மட்டுமல்ல ஆழமானதும் கூட. சில இடங்களில் ஆசிரியர் தன்னுடைய மெய்ஞான அறிவைக் காட்டியிருக்கின்றார். உதாரணமாக மரணத்தினை இலகுவாக விளக்கும் இடத்தைக் குறிப்பிடலாம்.

ஏட்ரியலும் தாமசும் மீனவக் குப்பம் ஒன்றில் எதிர்பாரத விதமாக சென்றபோது அவர்களின் விருந்தோம்பலை தவிர்க்கமுடியாமல் இருந்த இடத்தில் நடந்த உரையாடல் இது ;

"ஏட்ரியல் இவர்கள் அயல்நாட்டவரின் நட்புக் கிடைத்ததில் ரொம்ப பெருமை . அதனால் தான் உன்னை விடமாட்டேன் என்கின்றார்கள். எப்படி எங்கள் இந்தியர்களின் விருந்தோம்பல்?

உங்கள் விருந்தோம்பலைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இருநூறு ஆண்டுகளாக நாங்கள் இங்கு விருந்தாளிகளாக இருந்தோமே! அதிலிருந்து தெரியவில்லையா?

தாமஸ் என்னை முறைத்தான்"

இதில் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தமையை ஏட்ரியல் விருந்தோம்பல் என்ற ரீதியில் கிண்டலாகச் சொல்ல தாமஸ் முறைத்தான் என்பது இன்றைக்கும் இந்தியர்கள் அதனை மறக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது.

இப்படிப் பல இடங்களில் புதுயுகன் சிந்திக்க வைக்கின்ற வரிகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் பல பாத்திரங்கள் இல்லாமல் ஒரு சில பாத்திரங்களூடு கதையைக் கொண்டு சென்றதும் அவரின் ஆற்றலுக்கு சான்று. சாமுத்திரிகாதேவி என்ற பாத்திரம் சாமுத்திரிகா லட்சணம் என்ற எண்ணக் கருவில் உருவானது போல காட்டியிருப்பது சிறப்பானது.

தத்துவமசி என்கின்ற உபநிடத தத்துவத்தை அதாவது நீ எதுவாக எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற எண்ணக்கருவை இந்தக் கதையின் நாயகன் ஏட்ரியலின் பாத்திரம் உணர்த்துகின்றது. அத்துடன் இன்பம் போலியானது, இயற்கையுடன் கூடவே மனிதன் வாழவேண்டும் என்பது போன்ற தத்துவங்கள் அல்லது சிந்தனைகள் மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் விளக்கப்பட்டிருக்கின்றது.

"தன் இயல்பான மொழியில் பாசங்கில்லாத வெளிப்பாட்டில் ஒரு நாட்குறிப்பின் தொனியில் இந்த நாவல் நடையைப் புதுயுகன் அமைத்திருக்கின்றார். அதனால் வாசிப்பவர் மனதுக்குள் சோர்வைத் தராது சுகமாய் இடம் பிடித்து விடுகின்றது இவரின் நடை.

இவர் தெறிப்பான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் என்பதனை இந்தப் படைப்பின் வழி அறியமுடிகின்றது "

என கவிப்பேரரசு வைரமுத்து தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

"காதலுக்குரிய கண்ணியம், கெளரவம் ஆகியவற்றை அமரர் கல்கி போலவே இவரும் தருகின்றார். அத்தியாயங்களின் எண்ணிக்கை மட்டும் கூடவில்லை கதையின் போக்கில் எதிர்பார்ப்பும் கூடுகின்றது."

என கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தின் நிர்வாக அறங்காவலர் திரு.அ.வேதரத்னம் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.

லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.அசோகன் த‌ன் அணிந்துரையில் நாவலைப் பற்றி மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டு இந்தக் கதை காதல் கதை நிறைந்த அனுபவத்துடன் புதுமையாக எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

பிரபல ஓவியர் ஜெ... என அறியப்பட்ட திரு.ஜெயராஜ் தன்னுடைய அணிந்துரையில் புதுயுகன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றார். அவருடைய எழுத்து நடை கடலலையின் அடுக்குத் தன்மையை மென்மையை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது என்கிறார்.

அவருக்கும் என்னைப்போல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அவரின் ஓவியங்களும் நாவலுக்கு வலு சேர்க்கின்றது என்றால் மிகையில்லை.

ஒரு வித்தியமாசமான களத்தில் எதிர்பாரத முடிவுடன் நிறைவடைந்துள்ள இந்த நாவல் வாசித்தமை எனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த நாவலை வாசித்தபின்னர் இன்னமும் மனதில் கன்னியாகுமரிக் கடற்கரையும், ஜென்னியும் ஏட்ரியலும் நிற்கின்றது.

புதுயுகன் :
திரு.டி.கே.ராமனுஜம்(ராம்) என்கின்ற புதுயுகன் "காந்தி காவியம்" புகழ் கவிராஜர் ராமானுஜனார் அவர்களின் பேரனாவார். தற்போது லண்டனிலுள்ள கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக‌ பணியாற்றுகின்றார். அண்மையில் நடந்த உலகத் தமிழ்ச் சொம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் எனது விரிவுரையாளரும் கூட.

ஒருநாள் கல்லூரி உணவு அறையில் சும்மா பேசிக்கொண்டிருக்கும் போது என்னைத் தமிழர் என அறிந்தபின்னர் இலக்கியங்கள் பற்றி எம் பேச்சு திரும்பியபோது தான் திரு.ராம் அவர்கள் எனக்கு தன்னுடைய புத்தகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சின்ன அறிமுகம் செய்தார். இதுவரை அவரை ஒரு தொழில்சார் நிபுணராக பார்த்தேன் இனிமேல் அவரை ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கவேண்டும்.

ஆங்கிலத்திலும் நிறையப் பாண்டித்தியம் பெற்றவர் என்பதால் இதனை பலர் கோரியதுபோல் ஆங்கிலத்திலும் விரைவில் மொழிபெயர்ப்பார் என நினைக்கின்றேன்.

சமுத்திர சங்கீதம் - புதுமை காதல் அர்ப்பணிப்பு

நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி

மொழிக்கு மாநாடு என்பது காலத்தின் கட்டாயம். இதுவரை நடந்தேறிய உலகத் தமிழாராட்சி மாநாடுகள் இதனைத் தான் செய்தன. அங்கே தமிழுக்கு மட்டும் தான் ஆராய்ச்சி நடந்தது. இன்றைக்கு இணையத்தில் ஆங்கிலத்திற்க்கு அடுத்து ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்க்கு என பொறுப்பான குழு இருக்கும் போது, கருணாநிதியால் முதலில் தமிழாராய்ச்சி மாநாடு என அறிவிக்கப்பட்டு பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அவர் கூறிய காரணம் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த போதிய அவகாசம் போதாது என தமிழாராய்ச்சி மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தான் என்னவோ தன்னுடைய தலைமையுரையில் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளை விட இது பெரியது சிறப்பானது என கூறினாரோ.

உண்மைதான் ஏனென்றால் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளில் தமிழைத் தான் ஆய்வு செய்தார்கள். கோவையிலோ தமிழர் தலைவன் என்பவரையல்லவா ஆய்வு செய்தார்கள்.

எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் வெளியே கேட்காத குரல்களுக்கும் மத்தியில் செம்மொழி மாநாடு நடந்துமுடிந்துவிட்டது. பலரால் எதிர்பார்க்கப்பட்டது போல் கருணாநிதிக்கு பிரமாண்டமாக நடந்த பாராட்டுவிழா போல் தான் செம்மொழி மாநாடு நடந்தேறியது.

முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மாநாட்டின் மைய்ய நோக்குப்பாடலே தமிழிசையில் இல்லாமல் தமிழில் அழகாகப் பாடமுடியாத தமிழைக்கொலை செய்யும் பாடகர்களினால் ஏஆர் ரகுமானால் பாடவைத்து தன்னை மலையாளி என காட்டிக்கொள்வதில் பேருவகை அடையும் கெளதம் வாசுதேவ மேனனினால் படமாக்கப்பட்டது. பாடலை கவிஞர் கருணாநிதி அழகாக தொகுத்திருந்தார். தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்த வரிகளை அழகுறத் தொகுத்தபடியால் இதனை அவர் எழுதிய கவிதை எனச் சொல்லமுடியாது தானே.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பது போல் கோவையில் எத்தனையோ மொழிஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் உரைகள் நிகழ்ந்திருந்தாலும் கவியரங்கத்தில் கருணாநிதி புகழ்பாடிய கவிஞர்கள் இதனைத் தலைவன் விழாவாகவே மாற்றிவிட்டார்கள்.

மு.மேத்தா,வாலி,நா.முத்துக்குமார் என மதிப்பு வைத்திருந்த கவிஞர்கள் தங்கள் மதிப்பையும் தமிழ்த் தாயின் மதிப்பையும் குறைத்தே விட்டார்கள். வைரமுத்து சொல்லவே தேவையில்லை கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கவே பிறந்தவர். அண்ணா நூற்றாண்டுக் கவியரங்கத்தில் தம்பிக்கு கவி பாடி, அண்ணாவை உயர்த்துகின்றேன் என மஹாத்மாவையே கீழிறக்கிய அற்பன். கருணாநிதியின் பேர்த்தி கயல்விழியோ கவிதை வாசிக்கும் போது "ஸ்டாப்" என ஆங்கிலத்தில் எழுதி அந்த இடங்களில் நிறுத்தி வாசிக்கும் "புகல்" வாய்ந்த கவிஞர், தன் தாத்தாவின் உமிழ்நீர் கூட தமிழ்நீர் எனப் புதிய கண்டுபிடிப்பை மாநாட்டு மேடையில் முழக்கி பெருமை சேர்த்துவிட்டார்.

வாலியோ தமிழுக்கு ஆராய்ச்சி செய்யாமல் குஷ்புவை ஆராய்ச்சி செய்தார். சோ என்ற விஷக் கிருமியைக் கண்டிக்கின்றேன் என சாதியை தமிழாராய்ச்சி மேடையில் உரைத்தார்.

ஐயா கவிஞர்களே நடந்ததோ செம்மொழி மாநாடு. ஒரு வரலாற்று நிகழ்வு அங்கே ஏன் அரசியல்? சினிமா?. உங்கள் தலைவன் சிறந்த கதாசிரியர் தான் அதனால் தான் என்னவோ மாநாடு தொடங்குவதற்க்குச் சிலநாட்களுக்கு முன்னரும் நல்லதொரு திரைக்கதை அமைத்திருந்தார். செம்மொழி மாநாட்டை கருணாநிதி தமிழுக்கு எடுத்த விழாவாக நடத்தி முடித்தபின்னர் அவருக்கு நீங்கள் எடுக்கும் பாராட்டுவிழாவில் அவரைப் பாராட்டி இருந்தால் ஒருதரும் உங்களைப் பழிக்கமாட்டார்களே? ஆனால் அப்படிச் செய்யாமல் நீங்கள் அனைவரும் இப்போ பாணபத்திர ஓணான்டியை விட கீழிறங்கிவிட்டீர்கள். இந்தக் கலங்கத்தைத் துடைக்க நீங்கள் எத்தனை கவிராயன் கவிதையோ, கிருஷ்ணாவதாரமோ, கண்ணீர்ப்பூக்களோ எழுதினாலும் முடியாது.

கவியரங்கம் தொடங்குமுன்னரே கருணாநிதி என்னைப் பாடாமல் என் தமிழைப் பாடுங்கள் என உத்தரவிட்டிருக்கலாம். ஏனோ செய்யவில்லை.

இனியவை நாற்பது என்ற தமிழக் கலாச்சார ஊர்வலத்தினை காட்டிய கலைஞர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் மன்னரையும், மஹாராணிகளையும், இளவரசர்களையும், இளவரசியையும் அவரது புதிய தோழி பச்சைத் தமிழச்சி குஷ்புவையும் காட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். கருணாநிதியின் குடும்ப அங்கத்தவர்கள் 84 பேர் மேடையில் அமர்ந்திருந்ததாக விகடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தமிழை ஆட்சிமொழியாக கொண்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்களை அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். சில நாடுகளில் இருந்து அரசியல்ப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் பக்கத்து நாடான இலங்கையில் இருந்து எந்த அரசியல்வாதிகளும்(தமிழ் பேசும்) அழைக்கப்படவில்லை.

பேராசிரியர் சிவத்தம்பி ஆரம்பத்தில் இதற்க்குச் செல்லமாட்டேன் என மறத்து பின்னர் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றி நாமும் ஆங்கிலம் பேசுவோம் என செம்மொழி மாநாட்டில் நிரூபித்துள்ளார்.

கம்பனுக்கு கவிபாடும் கம்பவாரிதி ஜெயராயோ "நாம் தமிழ்த் தாய் பெற்றவர்கள், கருணாநிதியோ தமிழத் தாயைப் பெற்றவர்" என ஒரு வரியைச் சொல்லி கருணாநிதியைக் குளிர்வித்திருக்கின்றார். யாழ் நூலகம் எரித்தவர்களுக்கு துணை போனவருக்கு பாராட்டுவிழா நடத்தியவர்களிடம் இதனைவிட அதிகம் எதிர்பார்த்தேன்.

தமிழில் கதைத்தால் குற்றமென அபராதம் விதிக்கும் பத்மா சுப்பிரமணியத்தின் நடன நிகழ்வு, ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற வாசுகி ஜெகதீஸ்வரனின் இந்திய வம்சாவளி நடனங்கள். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேஸ்வரன் நாட்டுக்கூத்தை வாசுகியின் நடனத்திற்க்குப் பதிலாக இலங்கையில் இருந்து தருவித்திருக்கலாமே.

இன்னும் பல குற்றச்சாட்டுகளை எழுதலாம். ஆனாலும் என்னை தமிழனாகப் பார்க்காமல் ஈழத்தமிழனாகப் பார்க்கும் சில திமுக அன்பர்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இதனை எழுதியிருக்கின்றேன் என நினைத்து திட்டுவார்கள். அன்பர்களே தமிழனாக இருந்து நான் சொன்ன சில குற்றச்சாட்டுகளைப் ஆராய்ந்தால் நடந்தது தலைவனுக்கு பாராட்டுவிழாவே அன்றி தமிழன்னைகான விழா இல்லை என்பது புலப்படும்.

தனக்கு பாராட்டு விழாவாக இல்லாமல் இதனை செம்மொழி விழாவாகவே நடத்தியிருந்தால் கலைஞர் கருணாநிதி என்றென்றும் தமிழர் மனங்களில் பழைய கசப்புகளை மறந்து இடம் பிடித்திருப்பார்.

பட உதவி : ஆனந்த விகடன்

அதிரடி ஆர்ஜென்டீனா, ஆக்ரோச பிரேசில், உலக கோப்பை யாருக்கு?

ரோமுக்குப் போனால் ரோமானியனாக மாறு என்ற பழமொழிக்கு அமைய நானும் கிரிக்கெட்டை மறந்து செல்சீ, மஞ்சஸ்டர் யூனைட்டட், ஆர்சனல், கிறிஸ்டல் பலஸ், வெஸ்ட்காம்( மிகவும் அழகான மைதானம்) என உதைபந்தாட்ட ரசிகனாக மாறிவிட்டேன். ஆனாலும் ஏன் ஒரு பந்துக்கு 22 பேர் அடித்துக்கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை.

இந்த மாற்றத்தினால் தென்னாபிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பைப்போட்டிகளை பார்க்கும் பாய்க்கியம்(தொலைக்காட்சியில் தான்)கிடைத்தது. வீரர்களைவிட வக்கா வக்கா என அக்கா ஷகிரா (34 வயதாம் அப்போ அக்காதானே) ரொம்பவே கவர்ந்துவிட்டார்).

நேற்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. நடப்புச் சம்பியன் இத்தாலி, முன்னாள் சம்பியன் பிரான்ஸ், போட்டிகளை நடத்தும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் வெறும் கையுடன் வெளியேறிவிட்டன. இங்கிலாந்து மயிரிழையில் அடுத்த சுற்றுக்குச் சென்றாலும் பலம் வாய்ந்த ஜேர்மனியுடன் மோதவேண்டும்.



குழு A யில் முதன்முறை சாம்பியனான உருகுவே, முன்னால் சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ கலந்துகொண்டன. முதலாவது போட்டியில் மெக்சிகோவை 1 க்கு 1 என சமநிலைப் படுத்தி தென்னாபிரிக்கா தன்னுடைய திறமையை உலகிற்க்கு காட்டியது. பிரான்சுடனான போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றாலும் உருகுவேயுடனான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குழுவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதே நேரம் உருகுவே மெக்சிகோவையும் தென்னாபிரிக்கைவையும் வீழ்த்தி குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.

குழு B யில் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனா, தென்கொரியா, கிறீஸ், நைஜீரியா ஆகிய அணிகள் விளையாடின. ஆர்ஜென்டீனா விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்று முதல் இடத்தையும் தென்கொரியா கிறீசுடனான போட்டியில் வெற்றி பெற்றது அத்துடன் நைஜீரியாவை சமப்படுத்தி இரண்டாம் இடத்தில் பி பிரிவில் இடம் பெற்றது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, சுலவேனியா ஆகிய அணிகள் பிரிவு C யில் இடம் பெற்றன. இங்கிலாந்து இலகுவாக இந்தப் பிரிவில் முதலிடம் பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அமெரிக்காவைச் சமநிலைப்படுத்தியது, அடுத்த போட்டியில் அல்ஜீராவை கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி வாழ்வா சாவா என்ற சுலவேனியாவுடனான போட்டியில் டெஃபோவின் அபார கோலினால் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துவிட்டது. ஆனால் நாளைய போட்டியில் ஜேர்மனியுடன் மோத இருப்பதால் இங்கிலாந்தும் நடையைக்கட்டும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. அமெரிக்கா அல்ஜீரியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று கோல் அடிப்படையில் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.

பிரிவு Dயில் முன்னால் சாம்பியன் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா, சேர்பியா ஆகிய அணிகள் மோதின. ஆசியுடனான போட்டியில் 4 கோல்கள் அடித்த ஜேர்மன், சேர்பியாவுடனான அடுத்த போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கானாவுடனான இறுதிப்போட்டியில் மீண்டும் தன்னுடைய அதிரடியைக் காட்டி பிரிவில் முதலிடத்தை ஜேர்மனி பிடித்தது. சேர்பியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆசியுடனான போட்டியில் சம்நிலையையும் பெற்று கானா இரண்டாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.

பிரிவு Eயில் நெதர்லாந்து, ஜப்பான், கமரூன், டென்மார்க் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நெதர்லாந்து எதிர்த்து விளையாடிய மூன்று அணிகளையும் வென்று இலகுவாக முதலிடத்தை அடைந்தது. ஜப்பான் கமரூனையும் டென்மார்க்கையும் வீழ்த்தி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதே நேரம் பலராலும் எதிர்பார்க்கபபட்ட கமரூன் சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. நெதர்லாந்தும் ஆர்ஜென்டீனாவும் மாத்திரமே விளையாடிய அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரிவான Fவில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, பரகுவே, சொலவாக்கியா, நீயூசிலாந்து ஆகிய அணிகள் ஆடின. பரகுவே சொலவாக்கியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று மற்ற இரு போட்டிகளையும் சமநிலைப்படுத்தியது. சொலவாக்கியா பலம் வாய்ந்த இத்தாலியை வென்ற்றதுடன் நீயூசிலாந்துடனான போட்டியை சமநிலைப்படுத்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. நான்கு தடவைகள் சாம்பியனான நடப்புச் சாம்பியன் இத்தாலி ஒரு போட்டியைத் தானும் வெல்லாமல் கோப்பையை தென்னாபிரிக்காவில் பறிகொடுத்துவிட்டு வெறும் கையுடன் இத்தாலிக்குத் திரும்பினார்கள்.

ஐந்து தடவைகள் சாம்பியனான பிரேசில், இம்முறை உலகக்கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள போர்த்துக்கல், ஜவரி கோஸ்ட், வட கொரியா ஆகிய நாடுகள் பிரிவு G யில் இடம் பெற்றன. பிரேசில் வடகொரியா, கோஸ்ட்ரோரிக்கா இரண்டையும் வெற்றி பெற்றாலும் போர்த்துக்கல்லுடனான போட்டியை மிகவும் கடினமாக ஆடி சமநிலைப்படுத்தி பிரிவில் முதலிடம் எடுத்தது. போர்த்துக்கல் வடகொரியாவை ஏழுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலகுவாக வென்றாலும் பிரேசிலையும் ஜவரி கோஸ்ட்யும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் சுற்றில் போர்த்துக்கல்லும் உருகுவேயும் தான் எந்தக் கோலையும் எதிரணியினர் அடிக்கவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எட்டாவது பிரிவான Hசில் ஸ்பெயின், சிலி, சுவிஸ்ர்லாந்து மற்றும் கொன்டூரஸ் ஆகிய நாடுகள் விளையாடியன. முதலாவது போட்டியில் ஸ்பெயின் சுவிசிடம் அடிவாங்கிச் சறுக்கினாலும் அடுத்த போட்டிகளில் சுதாகரித்து வெற்றி பெற்று பிரிவில் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள். ஸ்பெயினிடம் தோல்வியடைந்த சிலி ஏனைய இரண்டு போட்டிகளையும் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இன்று இரண்டாவது சுற்றான லாஸ்ட் 16 ஆரம்பமாகியது. (கிரிக்கெட் போல் சூப்பர் சிக்ஸ்டீன், சூப்பர் சிக்ஸ் எனப் பெயரிட மோடி போல் பீபாவில் எவரும் இல்லையோ) முதல் போட்டியில் உருகுவே தென்கொரியாவும் மோதிய விறுவிறுப்பான போட்டியில் உருகுவே 2 க்கு 1 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தெரிவானது.

சில குறிப்புகள் :
1. இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் இந்திய அணிபோல் காணப்படுகின்றது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வெற்றி அரிதாக இருக்கின்றது. ஜெராட், ரூனி, ரெறி, லம்பார்ட், குறூச் எனப் பெரிய பட்டாளமே இருக்கின்றது. பயிற்சியாளருடனான சண்டைகளும், வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லையும் இவர்களைப் பின்னடையச் செய்கின்றது.

போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர் பலரது வீடுகளிலும் வாகனங்களிலும் இங்கிலாந்து கொடிகள் பறக்கவிடப்பட்டன இரண்டாவது போட்டியையும் சமநிலைப்படுத்தியதும் பலர் அவற்றை அகற்றிவிட்டனர். மீண்டும் சொலவேனியாவை வென்று அடுத்த சுற்றுக்கு சென்றதனால் கொடிகள் மீண்டும் தென்படுகின்றன.

2. 1986ல் ஆர்ஜென்டீனாவிற்க்கு இரண்டாம் தடவை உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்த டிக்கோ மரடோனாவின் பயிற்சியால் ஆர்ஜென்டீனா இம்முறை கிண்ணம் வென்றாலும் ஆச்சரியமில்லை. கோல் அடித்த வீரர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதும், கோல் அடித்த வேளைகளில் ஏனையவர்களை பாய்ந்து பாய்ந்து கட்டிப்பிடிப்பதும் என மனிதர் கலக்குகின்றார். சில பயிற்சிவிப்பாளர்கள் ஏனோ தானோ என இருக்கும் போது இவரின் நடைமுறைகள் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற அனைவருக்கும் சந்தோசம் தருகின்றது.

3. ரூனி எத்தனை கோல் அடிப்பார்? இன்றைய போட்டியில் வெல்வது யார்? இங்கிலாந்து ஜேர்மனியை 3க்கு 2 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தும் என பந்தய நிறுவனங்களின் கல்லா களைகட்டுகின்றது. பல முக்கிய போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்தபடியால் இவர்களுக்கு வருமானம் கூடுகின்றது. ஒரு நிறுவனம் போட்டிக்காலத்தில் வாங்குகின்ற தொலைக்காட்சி, மடிக்கணணி போன்றவற்றிற்கு இங்கிலாந்து கிண்ணம் சுவீகரித்தால் பணத்தை திரும்ப தருவதாக விளம்பரம் செய்திருக்கின்றார்கள்.

4. வழக்கமாக கால்ப்பந்துப் போட்டிகள் என்றால் அழகான காட்சிகளையும் பெண்களையும் காட்டும் கமேராமேன்கள் இம்முறை இனியவை நாற்பதுவில் ஊர்வலத்தைத் தவிர்த்து கருணாநிதி குடும்பத்தைக் காட்டியதுபோல் போட்டியை மட்டும் காட்டுகின்றார்கள்.



எதிர்வரும் 11ந்திகதி உலக சனத்தொகையில் 30%மான மக்கள் ரசிக்கும் போட்டியின் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை என்ன என்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ பொறுத்திருந்துபார்ப்போம்.

சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை.

ஹாட் அண்ட் சவர் சூப் 17-06-2010

அரசியல்

இந்தியாவின் போபால் நச்சுப்புகை சோகத்திற்க்கு இருபது வருடங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. குற்றவாளி நிறுவனத்திற்க்கு கிடைத்த தண்டனையோ வெறும் 2 ஆண்டுகள் தான். இருபதினாயிரம் மக்கள் கொல்லப்பட்ட சோகத்திற்க்கு 20 வருடத்தின் பின்னர் வெறும் 2 ஆண்டுகள் தான் தண்டனை என்றால் மனுநீதி சோழனும் இராஜராஜனும் அசோகனும் இன்னும் பலரும் நீதி தவறாமல் ஆட்சி செய்த பாரத தேசத்தின் நிலையை நினைக்க வருத்தமாக இருக்கின்றது. இனிமேல் பாரதத்தை புண்ணியபூமி என அழைப்பது தவறாகும் போல் இருக்கின்றது.

இதைப் பற்றி அண்ணன் ஜாக்கி குமுறோ குமுறென்று குமுறியிருக்கின்றார். நீதித்துறையில் கூட பாரபட்சம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள். ஒரு தனிமனிதனுக்காக ஒரு இனத்தையே மாற்றம் தாய் மனப்பான்மையில் பார்ப்பவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாமா? ஒருகாலத்தில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இருந்த இந்தியா அண்மைக்காலமாக சர்வாதிகார நாடாக மாறுவது கவலை அளிக்கின்றது. (மனதில் ஹிட்லரை வீட முசோலினியே ஏனோ வந்துபோகின்றார்).

ஆன்மிகம்

44 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் நித்தியானந்தா மீண்டும் தன் ஆசிரமத்திற்க்கு வந்திருக்கின்றார். வந்தவர் சும்மா இருக்காமல் அக்னி சூழ தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். துறவி என்ற பெயரில் நித்தியானந்தா செய்தவை கண்டிக்கப்படக்கூடியவையே. காரணம் துறவு என்றால் முற்றும் துறத்தல் என்பது அர்த்தமாகும் ஆனாலும் இக்கால துறவிகள் எதனையும் துறக்காமல் துறவியாகிவிடுகின்றார்கள். சீதை தீக்குளித்தது போல் நித்தியானந்தாவும் தனக்குத் தானே அக்னிப் பரீட்சை வைக்கின்றாரோ தெரியவில்லை. கடவுளை நம்பினாலும் நம்பலாமே ஒழிய இந்த கடவுளின் பெயரால் தங்களை வளர்ப்பவர்களை நம்பவே கூடாது. எத்தனை பிரேமானந்தாக்கள், கல்கிகள், பகவான்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

நித்தியானந்தா வெளியே வந்துவிட்டார், ரஞ்சிதா எப்போ மீண்டும் வெளிஉலகிற்க்கு வருவார்?

உலகக் கோப்பை

நேற்றுடன் சகல அணிகளும் ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி பலம் வாய்ந்த அணிகள் மிகவும் கஸ்டப்பட்டதையும், இரண்டாம் தர அணிகள் பலமாக இருந்ததையும் பார்க்கமுடிந்தது. வழக்கம் போல் அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக வந்தன. இங்கிலாந்து அமெரிக்காவை சமநிலைப் படுத்தியது, பிரான்சும் கஸ்டப்பட்டு மெக்சிகோவை சமநிலைப்படுத்தியது. இம்முறை உலகச் சம்பியனாக வரும் எனப் பலரால் கணிக்கப்பட்ட ஸ்பெயின் பரிதாபமாக சுவிசிடம் தோற்றது. பிரேசில் பலத்த போராட்டத்தின் பின்னர் வடகொரியாவை வென்றது. நடப்புச் சம்பியன் இத்தாலியும் பரகுவேயை சமநிலைப் படுத்தியது.

இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆர்ஜென்டினாவும் ஜேர்மனியுமே பலமாக இருக்கின்றன. ஆனாலும் கால்ப்பந்தில் கடைசி நிமிடம் வரை எதையும் கூறமுடியாது என்பாதல் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆசியக் கிண்ணம்

உலக கோப்பை உதைபந்தாட்டப்போட்டிகளினால் பெரிதாக அறியப்படாத போட்டிகளாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அத்துடன் தம்ம்புள்ளை மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களும் எடுக்கமுடியாது (ஏன் தான் இங்கே வைக்கின்றார்களோ?). இதுவரை நடந்த 2 போட்டிகளையும் வைத்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது ஆனாலும் சொந்த மண்ணில் நடப்பதால் இலங்கைக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகின்றது. முரளிதரனும் நம்ம பாஉ போல் கொஞ்சம் களைப்படைந்துவிட்டது நேற்றைய போட்டியில் தெரிந்தது. எரியாத சுவடிகள் பவன், வலைமனை சுகுமார் நக்கலடிக்கமுன்னர் அவர் தன்னை மறுபரீசீலனை செய்வது நல்லது.

இராவணன்

இந்தவாரம் இராவணன் படம் வெளிவருகின்றது. அண்மைக்காலமாக எனக்கு ஏனோ மணிரத்னம் படங்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. அதிகமாக வரலாறுகளைத் திரிக்கின்றார். தமிழ் மன்னன், சிறந்த சிவபக்தன் இராவணனை வில்லனாக்கி ஆரியர்களின் மாயைக்கு உதவுகின்றாரோ தெரியவில்லை. இராவணன் என்பவரை வில்லனாக்கிய பெருமை ஆரியரையே சாரும் ஆனாலும் நாங்கள் (திராடவிடர்) ஆரியக் கடவுளுக்குத் தான் விழா எடுப்போம். எங்கள் தமிழ் மன்னனை மறந்துவிடுவோம். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேசனில் இராவணன் தான் கதாநாயகன். இராவணன் பற்றி விரைவில்(?) தனிப்பதிவே எழுதவேண்டும். இந்தவாரம் தமிழ்மணம், தமிழிஷ் எல்லாம் இராவணன் தான் அதிகம் அடிபடும் என்பதால் கொஞ்சம் ஆறுதலாக எழுதலாம்.

திரையுலகிற்க்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது, மறக்காமல் உங்கள் வாக்குகளை சிறந்தவர்களுக்கு அளியுங்கள். மேலதிக விபரங்களுக்கு :




நறுமுகை

என்னுடைய உடன்பிறவாச் சகோதரன் அன்புத் தம்பி லெனினால் அண்மையில் நறுமுகை என்ற பெயரில் ஒரு இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகளுடன் கருத்துக்களம், திரட்டி, வலைப்பதிவர்கள், குறும்படம் என பல விடயங்கள் இருக்கின்றன. லெனினின் திறமைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவரின் நறுமுகை இணையமும் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என நம்புகின்றேன். என்னுடைய வலையினை அழகுற அமைத்துத் தந்தவர் லெனின் தான். லெனினுடன் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இதனைச் செய்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



ஜெசி ஜெசி என உருகினவர்களுக்கு மன்மதன் அம்பு திரிஷா
பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.

பின்குறிப்பு : நீண்ட நாட்களின் பின்னர் சூப் ரசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.