நலம் நலமறிய ஆவல்

எப்படி இருக்கின்றீர்கள் நண்பர்களே. என்னை ஞாபகம் இருக்கின்றதா? ம்ம்ம் நீண்ண்ண்ண்ட நாட்களாக வலையுலகம் எனக்கு அந்நியப்பட்டிருந்தது. சில பதிவுகள் மட்டும் வாசித்துவிட்டு போய்விடுவேன், திரட்டிகளைக் கூட மறந்து(கடவுச் சொற்களையும் தான்) போனேன். எல்லாம் காலம் செய்த கோலம்.



வாழ்க்கையில் சில விடயங்கள் தீடிரெனத் தான் நடக்கும் என்றைக்கோ எதிர்பார்த்த விடயம் சரிவராது என மனம் தளர்ந்து சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என இருந்த விடயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தேறிவிட்டது, கல்விக்காக லண்டன் செல்லவேண்டி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில நண்பர்களுக்கு சொல்லமுடியாமல் விமான ஏறிவிட்டேன். இதனால் வலையுலகம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்தும் சில நாட்கள் மறந்து போய்விட்டேன்.

அதே நேரம் சொந்தநாட்டில் தாராளமாக கிடைத்த நேரம் இங்கே கிடைப்பது அரிது. ஆகவே அந்நியனாக மாறிவிட்டேன். அத்துடன் வலையில் வீண் பொழுதைப் போக்கவேண்டாம் என சிலர் அதிரடியாக கண்டித்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் விடுப்பு எடுத்துவிட்டேன்.

என்னதான் விடுப்பு எடுத்தாலும் தட்டிய கீபோர்ட்டும் கிளிக்கிய மெளசும் சும்மா இருக்கவிடவில்லை அதனால் இடையிடையே எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஏதாவது எழுதுவேன். என்ன இனி திரைவிமர்சனம் உடனடியாக எழுதமுடியாது. இங்கே படம் பார்க்கின்ற காசுக்கு ஊரிலை ஒரு பட்டாளமே படம் பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு வந்தபின்னர் இங்கேயிருக்கும் பதிவர்கள் மாயாவும் கரவைக்குரலும் என்னுடன் தொடர்புகொண்டார்கள். கரவைக்குரல் பகிடியாக இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடத்த இலங்கையில் இருந்து ஆட்களை அழைத்துவரவேண்டும் என்றார்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? என்பது இன்னொரு நாட்டில் வசிக்கும் போதுதான் தெரிகின்றது. ஒரு சில சுதந்திரங்கள் கிடைத்தாலும் இலங்கையில் வாழ்ந்ததுபோல் இல்லை. ஒரு சோர்ட்சும் ரீசேர்ட்டும் என இங்கே குளிரில் திரியமுடியாது. அப்படிக் குளிர் வாட்டுகின்றது. விரைவில் சமர் வரும் வெயில் கொடுமையாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.

என் நாட்டையும் நண்பர்களையும் குறிப்பாக பதிவுலக ட்விட்டர் நண்பர்களையும் கும்மிகளையும் ரொம்பவே மிஸ் பண்ணுகின்றேன். ஒன்றை இழந்துதான் இன்னொன்று கிடைக்கும் என்பதாலும் இன்றைய நவீன தொலைத்தொடர்பு முறைகளாலும் கொஞ்சம் மனத்திருப்தி.

சச்சினின் இரட்டைச் சதம்,நித்தியானந்தா, ரஞ்சிதா, நயந்தாரா, ஜனாதிபதித் தேர்தல், ஆயிரத்தில் ஒருவன், அசல், கோவா என இழந்தவை பல. அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவ்வளவு கிராக்கி இல்லை. கடும் குளிரிலும் மஞ்செஸ்டர் யுனைட்டடும் செல்சியும் ஒரு பந்துக்காக அடிபடுவதை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றார்கள் பின்னர் அது பற்றித்தான் செல்லும் இடம் எல்லாம் விவாதிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு பிளின்டொப், பீட்டர்சன், கொலிங்வூட் யார் என்பதே தெரியாது.

இங்கேயும் அம்மா பகவான் கல்கி பகவான் பக்தர்களும் இந்தியாவில் இருந்து வருகை தரும் ஜோதிடசிகாமணிகளும் அதிகம், இவர்களின் விளம்பரம் தொலைக்காட்சிகளிலும் வருகின்றது. மானாட மயிலாடவிற்க்கும் சில மெஹா சீரியல்களுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இனிவரும் நாட்களில் இன்னும் பல்சுவையான அம்சங்களுடன் மீண்டும் சந்திக்கின்றேன்(இந்தப் பதிவு எழுதி முடிக்கவே 4 நாட்கள் எடுத்தன).