ரணிலின் கில்லி



ஜூலை 9ந்திகதி காலை எவராவது  நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் என கூறி இருந்தால் ரணிலை தவிர அனைவரும் சிரித்திருப்போம். 

1977 ஆம் ஆண்டு பாராளமன்றத்துக்கு ஐதேகவின் உறுப்பினராக உள்ளே நுழைந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இளைஞர் விவகார அமைச்சராகவும் பின்னர் கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியவர்.

ரணசிங்க பிரேமதாச அவர்களின் மறைவுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக 1993ல் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1994 ல் சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதி ஆனதும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுகிறார்.

1999ல் சந்திரிக்கா குமாரதுங்க அவர்களிடம் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரணில் விக்கிரமசிங்க மீண்டும் எதிர்க்கட்சி தலைவரானார்.

2001ல் நடந்த பாராளமன்றத் தேர்தலில் சந்திரிக்காவின் பொதுஜன ஐக்கிய முன்னணியை வெற்றிகொண்டு மீண்டும் நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தாலும் கருணாவை புலிகளிடம் இருந்து பிரித்த சாதனையை படைத்தார்(இது பின்னாளில் அவருக்கு வில்லனாக போகப்போகிறது).

தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னர் 2004 ல் மீண்டும் பொதுத் தேர்தலைச் சந்தித்து அதில் ரணில் விக்கரமசிங்க தலைமை தாங்கிய ஐக்கிய தேசிய முன்னணி தோல்வி அடைகிறது. 

சந்திரிக்காவின் ஆட்சிக் காலம் முடிவடைந்த பின்னர் 2005 ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் கிட்டத்தட்ட 180000 வாக்குகளால் தோல்வி அடைகிறார். வடமாகாணத்தில் விடுதலைப் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் ரணிலுக்கு இந்த நிலை ஏற்பட்டது. இல்லையென்றால் நிச்சயம் அவர் 2005ல் ஜனாதிபதி ஆகி இருப்பார். மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார் ரணில்.

2010ல் யுத்த வெற்றிவீரனாக மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் இறங்குகின்றார். இவரை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக இன்னொரு யுத்த வெற்றிவீரனான சரத் பொன்சேகா களம் இறங்கி தோல்வி அடைகிறார். இதனால் பாராளமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானர் ரணில்.

2015ல் மைத்திரி பால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி ஆகியதும் பாராளமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. மீண்டும் நாட்டின் பிரதமரானார் ரணில். இடையில் மைத்திரியின் எதிர்பாராத முடிவினால் பிரதமர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராகின்றார். இறுதியில் நீதிமன்ற தீர்ப்புக்கமைய மஹிந்தரின் பதவி செல்லாது என்பதால் ரணில் தன் பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றினார். 

2019ல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் போது ரணில் விக்கிரமசிங்க உட்கட்சி பூசல்களினால் சஜித் பிரேமதாச அவர்களை தேர்தலில் களமிறக்கிவிட்டு அத்தோடுதன் ஜனாதிபதி கனவையும் கைவிட்டுவிடுகிறார். 

அதுமட்டுமல்லாமல் அதன் பின்னர் நடந்த பாராளமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகுறைந்தளவு வாக்குகளை எடுத்து பாராளமன்ற உறுப்பினராக முடியாமல் தோல்வி அடைகின்றார். பின்னர் தேசியப்பட்டியல் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு எம்பியாக பாராளமன்றத்தில் நுழைகின்றார். இத்தோடு அவரது அரசியல் ஆட்டம் முடிந்துவிட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருந்தார்கள் ஆனால் அவரது சாணக்கியத்தனமும் அதிர்ஷ்டமும் கோத்தாபாய வடிவில் அவருக்கு வரும் என எவரும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்கள்.

2019ல் கோத்தபாய பதவி ஏற்றபோது இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் தான் இந்த நாட்டை ஆளப்போகின்றார்கள் என பலர் சொல்லி இருந்தார்கள். தலைமைத்துவம் முகாமைத்துவ ஆற்றலும் இல்லாத ஒருவரிடம் வெறும் யுத்த வெற்றியை வைத்து நாட்டைக் கொடுத்தது எவ்வளவு பிழையென அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் உட்பட பலர் வெகுவிரையில் உணரத் தொடங்கினார்கள். அதிலும் கட்சி அடிமட்ட உறுப்பினர்களால் 7 பேரின் மூளை கொண்டவர் என பசில் ராஜபக்ச என்று நிதியமைச்சரானாரோ அன்றே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அதலபாதாளத்தை நோக்கி போகத்தொடங்கியது. ஊழலும் தேவையற்ற கட்டுமானங்களும் மக்களை இன்னமும் எரிச்சலூட்டின இதன் விளைவாக அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் பெரும் எடுப்பில் ஆரம்பிக்கப்பட்டன. மே மாதம் 9 திகதி காலிமுகத்திடல் கலவரத்தின் பின்னர் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச ராஜினாமாச் செய்கிறார். யாராவது ஒருவர் அந்த இடத்திற்க்கு வாருங்கள் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தும் அந்தப் பதவியை ஏற்க எவரும் முன்வராத காரணத்தால் ரணில் விக்கிரமசிங்க தனது அனுபவத்தை கொண்டு இந்த சிக்கலை தீர்க்கலாம் என மீண்டும் பிரமராகின்றார்.

ஜூலை 9 போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன கைப்பற்றபட்ட நிலையில் மாளிகையை விட்டு ஓடிய கோத்தபாய மீண்டும் 13 திகதி நாட்டைவிட்டே ஓடுகின்றார். அந்த நேரத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமிக்கப்படுகின்றார். 

ஜூலை 20 ல் 134 பாராளமன்ற உறுப்பினர்களால் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார். 

இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி பிரதமர் பதவியை ஒருபோதும் முழுமையான காலம் வரை கடமையாற்றாதவர். இறுதிப் பாராளமன்ற தேர்தலில் படுதோல்வி என தோல்வியின் நாயகனாக எல்லோராலும் விமர்சிக்கப்பட்ட விக்கிரமசிங்க இறுதியாக விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என உதாரண புருஷனாக விளங்குகின்றார்.

கில்லி படத்தில் அரை இறுதியில் தோல்வி அடைந்த விஜயின் கில்லி அணியினர் எப்படி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்களோ அதேபோல தான் ரணில் விக்கிரசிங்கவும் பல போட்டிகளில் தோல்வி அடைந்தும் தன் இறுதி இலக்கை எப்படியோ எட்டி வெற்றி பெற்றுவிட்டார். 



54 மணித்தியாலங்கள்

 54 மணித்தியாலங்கள்

திங்கள் காலை 8 மணி ஒபிஸுக்கு போகும் வழியில் கண்டி வீதி , வீதி அபிவிருத்திச் சபை வாசல் வரை மட்டுமே லிங்கநகர் ஐஓசியில் எரிபொருள் நிரப்ப பைக்குகள் நின்றன.
காலை 9 மணி
மருமகன் போன் பண்ணி லிங்கநகர் ஷெட் லைனில் பைக் போடப்போகிறேன் உங்களுக்கு ஒரு இடம் பிடிக்கவா என கேட்டான், ஆம் நான் வேலையால் வந்து என் பைக்கை அங்கே விடுகிறேன். அவனது பைக், அவன் சித்தியின் பைக், இன்னொரு மாமாவின் பைக் என் பைக் என நான்கு பைக்குகள்.
மதியம் 12.30
என் பைக்கை அங்கே கொண்டு போக மருமகன் நிற்கும் லைன் உவர்மலை பழைய சீமெட் கிளினிக் அருகில் நிற்கிறது. என் பைக்கை அங்கே நின்ற இன்னொரு பைக்கு பதிலாக நிற்பாட்டி விட்டு இன்னும் பெற்றோல் வரவில்லை என்பதால் மருமகனை சாப்பிட அனுப்பிவிட்டு, அவன் திரும்பி வந்தபின்னர் நான் சாப்பிடப்போனேன்.
மதியம் 2.00 மணி
ஷெட்டுக்கு பெற்றோல் வந்துவிட்டதாகவும் அரசாங்க ஊழியர்களுக்கு இன்னொரு தனி வரிசையில் அடிக்கின்றார்கள் உடனே வரச் சொல்லி மருமகன் கோல். அரச ஊழியர்களின் தனி வரிசைக்கு போனால் அது முப்படையினருக்கும் போலிஸாருக்கும் ஆன லைன் என்றார்கள். இவ்வளவு படையினர் தங்களது சொந்த வாகனம் வைத்திருக்கின்றார்கள் என அப்போதான் தெரிந்தது. அவர்களது வரிசை தொடராக இல்லாமல் சமாந்தரமாக இருந்தது. அங்கே எமக்கு இடமில்லை என்பதால் மீண்டும் பழைய இடத்தில் காத்திருந்தோம்.
நேரம் மாலை 6 மணி
எங்கள் பக்க பைக்குகள் அசையவே இல்லை, பக்கத்து சுப்ரா பார்க்கில் காலாற நடந்துகொண்டிருந்தபோது மாணவன் ஒருவன் எமக்கு பின்னால் பல மீற்றர்கள் தள்ளி நின்றிருந்தான் அவனுடன் கதைத்துக்கொண்டிருந்த போது வாகனங்கள் அசைகின்றது என சொல்லவே என் இடத்துக்கு வர எங்கள் பைக்குகளுக்கு முன்னால் இருந்த இடைவெளிகளில் கிட்டத்தட்ட 30 பைக்குகள் உள்ளடக்கப்பட்டுவிட்டன.(இதற்க்கு தான் எப்பவும் ஒருதரை காவல் வைக்காமல் இடத்தை விட்டு அசையக்கூடாது என்பார்கள்) முன்னுக்கு நின்றவர்களை நான் நிற்கவேண்டிய இடம் இதுவல்ல முன்னுக்கு என்று சொல்லியும் பலர் இடம் தராத பட்சத்தில் அதே இடத்தில் நின்றோம்.(இந்த சம்பவம் கயோஸ் தியறியாக பின்னாலை ஒரு எபெக்ட் கொடுக்கும் என அப்போ தெரியவில்லை).
இரவு 8 மணி
எமக்கு முன்னால் சில இளைஞர்கள் தமது பைக்குக்காக கல்லுகள் துவிச்சக்கரவண்டிகளை அடையாளப்படுத்தி வைத்திருந்தார்கள், பின்னர் அந்த இடங்களை ரூபா 500 படி ஒரு சிலருக்கு விற்பனை செய்துவிட்டார்கள்.
வாகன வரிசை அசையாது என்ற அசாத்திய நம்பிக்கையில் நாம் ஒவ்வொருதராக வீடுகளுக்கு சென்று இரவு உணவுகளை சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதே இடத்தில். சும்மா நிற்பது விசரடிக்கும் என்பதால் இடைக்கிடை ஷெட் வரை போய் அங்கே நடக்கும் ஒழுங்கின்மை ஒழுக்கமின்மைகளை பார்த்து ரசித்துவிட்டு விட்டு வாறது.
நள்ளிரவு 12 மணி
ஏற்கனவே வீட்டில் இருந்துகொண்டு வந்த பாயை 22 ஆம் படையணி சந்தியில் போட்டு வீட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.
செவ்வாய் அதிகாலை 2 மணி
ஷெட்டில் பெற்றோல் முடிந்துவிட்டதாகவும் இனி நாளைக்கு வந்தால் வரிசையில் நின்ற ஏனையோருக்கு விநியோகிப்பார்கள் என்ற எதிர்பார்த்த செய்தி வந்தது. நிமிர்ந்து நின்ற எங்கள் பைக்குகளை மீண்டும் சரிந்த பாட்டில் அடுக்கும் போது எங்கள் பைக்குகள் 22 ஆம் படையணி சந்தியில் இருந்து வோட்டர் போர்ட்டுக்கு முன்னால் வந்துவிட்டன. நாளைக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பினோம்.
செவ்வாய் மதியம் 1 மணி
ஷெட்டுக்கு பெற்றோல் வந்துவிட்டதாக தகவல் கிடைத்தவுடன் சுமார் 2 மணியளவில் அங்கே சென்றோம். நாங்கள் நின்ற இடத்தில் இருந்து பைக் நகர எப்படியும் மாலை 6 மணி ஆகும் என்ற கணிப்பில் காத்திருந்தோம்.
இரவு 8 மணி
எமக்கு முன்னால் சிறிது தூரத்தில் நின்ற பைக்குகள் நகர ஆரம்பித்ததால் இரவு வீட்டுக்கு சாப்பிடச் செல்வது ரிஸ்க் என்பதால் சாப்பாட்டை கொண்டுவருமாறு வீடுகளுக்கு தகவல் அனுப்பினோம். மனைவி எனக்கு புட்டு என முதலிலையே கோல் பண்ணி இருந்தார்.
இரவு 9 மணி
எமக்கு சாப்பாடு பார்சலில் வரவும் எங்கள் பைக்குகள் நகரவும் சரியாக இருந்தது. பைக்கினை உருட்டுவதற்க்கு ஒருவர் வேண்டும் என்பதால் மூவரும் ஒன்றாக சாப்பிடாமல் ஒவ்வொருவராக சாப்பிடத்தொடங்கினோம். கடைசி ஆளாக நான் சாப்பாட்டு பார்சலை அவிழ்க்க அங்கே புட்டுக்கு பதிலாக இட்லி இருந்தது.
சாப்பிட்டபின்னர் மனைவிக்கு கோல் எடுத்து இட்லி நல்லா இருந்தது என சொல்ல அவரோ இட்லியா நான் உங்களுக்கு புட்டொல்லோ கட்டி அனுப்பினான் என்றார். மருமகன் என் சாப்பாட்டை மாறிச் சாப்பிட்டது அப்போதான் தெரிந்தது.
நத்தையை விட கொஞ்சம் வேகம் குறைவாக வாகனங்கள் நகரத்தொடங்கின எமக்கும் பெற்றோல் ஷெட்டுக்கும் இடையில் 50 மீற்றர் வித்தியாசம் இருந்தது. ஷெட்டை கண்டதும் எப்படிம் இன்றிரவு நமக்கு கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மெல்ல துளிர் விடத் தொடங்கியது.
நள்ளிரவு 1 மணி
கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையை பொய்யாக்குவது போல பெற்றோல் முடிந்துவிட்டது என்ற செய்தி வந்தது. பிறகு என்ன திரும்ப பைக்குகளை சரிந்தவாக்கில் அடிக்கிவிட்டு பைக் எத்தனையாவதாக நிற்கிறது என எண்ணிப்பார்த்தால் 27ஆவது பைக் என்னுடையது.(முதல்நாள் காலாற நடக்காமல் விட்டிருந்தால் இன்று கிடைச்சிருக்கும் விதி வலியது). இரவு 1.30 மணிக்கு வீடு திரும்பினோம்.
புதன் மதியம் 12.30 மணி
அலுவலக தேவை நிமித்தம் கிண்ணியாவில் நிற்கும் போது மருமகன் ஷெட்டுக்கு பெற்றோல் வருகிறது உடனே வாங்கோ என்றான். நண்பகல் 1 மணிக்கு பெற்றோல் வந்துவிட்டதாக தகவல் வர வேலையில் இருந்து திரும்பும் போது லிங்கநகரில் நான் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டேன்.
மதியம் 2 மணி
பெற்றோல் அடிக்க ஷெட்டில் உள்ளவர்கள் ஆயத்தம் செய்யும் போது விமானப்படை சிப்பாய் ஒருவர் வந்து முன்னால் காத்திருந்த எம்மிடம் அரசாங்க அதிபரின் சிபாரிசில் 140 அரச ஊழியர்கள் இன்னொரு வரிசையில் நிற்கின்றார்கள் அவர்களுக்கு முதல் விநியோகம் செய்துவிட்டு உங்களுக்கு தொடர்ச்சியாக அடிக்கிறோம் என்றார்கள். அங்கிருந்த எல்லோரும் கோபத்துடன் நாம் 2 இரவுகள் உட்பட மூன்று நாட்களாக நிற்கிறோம் அவர்கள் இப்போ வந்துவிட்டு எப்படி உடனே அடிக்கமுடியும் என எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தோம். முதல்நாள் இரவு இடையிடையே நடந்த சண்டைகளை முறைப்பாடு செய்தபோது எமக்கு ஷெட்டை பாதுகாக்க தான் உத்தரவு மக்களை பாதுகாக்க அல்ல என உரைத்த படையினர் இன்று அரசாங்க அதிபரின் உத்தரவு தங்கள் கடமையை மீறுகின்றார்கள் இதனை அவர்களுக்கு எடுத்துரைக்க வடிவேல் பாணியில் அது நேற்றைய உத்தரவு இது இன்றைய உத்தரவு என்றார்கள்.
இந்த விவாதாங்களை பார்த்துக்கொண்டு இருந்த சிபாரிசு கடிதத்துடன் வந்த எந்தவொரு ஊழியரும் எமக்காக கதைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். இத்தனைக்கும் பல அரச ஊழியர்கள் எம்முடைய வரிசையில் நின்றார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஒரு ஊர் ஓரு மனை என பேரம் பேசியது போல நாம் அவர்களில் 10 பேர் எங்களில் 5 பேர் என மாறி மாறி விநியோகியுங்கள் என சிப்பாயுடன் பேரம் பேசினோம். ஆனால் அவர்கள் அதற்க்கு இணங்கவில்லை பின்னர் ஒரு காவல்துறை அதிகாரி அவர்களில் இருவர் உங்களில் ஒருவர் என உள்ளே எடுக்கிறோம் என்றார்(அதைத்தானே நாங்களும் சொன்னோம் இவர்களின் கணித அறிவில் தீ வைக்க). இந்த சமரசத்தின் பின்னர் சுமார் 2.15 அளவில் பெற்றோல் விநியோகிக்கத்தொடங்கினார்கள்.
பிற்பகல் 3 மணி
எங்கள் பைக்குகள் உள்ளே சென்று 5.5 டொலருக்கு (ரூபாய் 2000 4 லீற்றர் சுப்பர் பெற்றோல்) பெற்றோல் அடித்துவிட்டு 3.15 மணியளவில் வீடு திரும்பினோம்.
பின்குறிப்பு : இடையில் பார்த்த பல சுவாரசியமான சம்பங்கள் காதல்கள், சண்டைகள், ஊழல்கள் மாபியாக்களின் இடையூறுகள் பதிவின் நீளம் காரணமாக தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.

பொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1


தமிழ் மொழி இலக்கியங்களில் ஐம்பெரும் காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கந்தபுராணம், பெரியபுராணம் என பல இலக்கியங்கள் பண்டைய காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் பாட்டுடைத்லைவனாக கடவுள்களையும் சில மன்னர்களையும் வைத்து எழுதப்பட்டவையே. பிற்காலத்தில் நாவல், சிறுகதை இலக்கியங்கள் தோன்றிய பின்னர் சாதாரணமானவர்களையும் கதையின் நாயக நாயகிகளாக வைத்து பல புதினங்கள் எழுதப்பட்டன. அவற்றில் கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவல் இன்றுவரை பலராலும் வியந்து பேசப்படும் ஒரு புதினமாகும்.
சோழர்களினதும் அவர்களது இராட்சியங்களினது பெருமையை முறையாக வரலாற்றுச் சுவடிகளில் பதிவு செய்ய நமது முன்னோர்கள் தவறி இருந்தாலும், செப்பு ஏடுகளில், கல்வெட்டுகளில் தமிழ் மக்கள் குறித்து வைத்து இருக்கிற செய்திக் குறிப்புகளைக் கொண்டு ஒருபொன்னியின் செல்வன்எனும் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படைத்தார் அமரர் கல்கி.
சோழப்பேரரசின் ஆட்சி பீடம் யாருக்கு என்பதுதான் கதை. சோழப்பேரரசின் அன்றைய அரசன் சுந்தரசோழர் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது சோழ அரியணை அவரின் மூத்த மகனான ஆதித்தகரிகாலனுக்கோ அல்லது இளையபிராட்டி என அழைக்கப்படும் சுந்தரச்சோழரின் பெண் வாரிசான குந்தவையின் அன்பினைப் பெற்ற அவரின் தம்பி அருள்மொழிவர்மனுக்கோ கிடைக்கவேண்டும். அதே நேரம் சுந்தரச்சோழரின் சகோதரன் கண்டராதித்தரின் மகன் மதுராந்தகசோழனை ஆட்சி பீடத்தில் ஏற்றவேண்டும் என பழுவேட்டைரையர்கள் தலைமையில் ஒரு குழுவினர் விரும்பினாலும் மதுராந்தகனின் தாயாரான செம்பியன் மாதேவி அதனை விரும்பவில்லை. இந்த மும்முனைப் போட்டியில் யார் அரியாசனம் ஏறினார்கள்? அதன் போது நடந்த சதிகள், சூழ்ச்சிகள், கொலைகள், பழிவாங்கல்கள், காதல்கள், சைவ வைஷ்ணவ சச்சரவுகள் தான் பொன்னியின் செல்வனின் கதை.
தமிழ் சினிமாவில் இந்த கதையினை ஆரம்பத்தில் முன்னாள் முதல்வரும் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டவருமான எம்ஜீஆர் அவர்கள் திரைப்படமாக எடுக்க முயன்றார். பின்னர் உலகநாயகன் கமலஹாசன் இதனை திரைப்படமாக்க முயன்றார் அவரின் முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியாக மகாபாரதத்தில் கர்ணன் கதையை தளபதியாகவும் இராமாயண இராவணனை இராவணன் எனவும் முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜீஆரின் கதையை இருவராகவும் திரைமொழியில் காட்சிப்படுத்திய இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியை ஆரம்பித்து செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார். இதற்கான ஒத்திகையாக அவரின் திரைப்படமான செக்கச் சிவந்த வானத்தை குறிப்பிடலாம்.
கல்கி அவர்களினால் ஐந்து பாகங்களில் எழுதப்பட்ட ஒரு கதையை வெறும் 3 மணி நேரத்தில் அடக்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இருக்கப்போகின்றது. பொன்னியின் செல்வனின் வாசகர்களுக்கு திரைக்கதையில் எந்தவிதமான மாறுதல்களும் இன்றி பாகம் பாகங்களாக வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் வணிக ரீதியான சினிமாவில் சில சமரசங்கள் செய்யவேண்டி இருப்பதால் மணிரத்னமிடம் இருந்து எந்த சம்பவங்களை வாசகர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பார்கள் என்பதையே இந்த தொடரில் பகிரவிருக்கிறேன். இது ஒரு வாசகனின் பார்வையில் திரைக்கதை எப்படி இருக்கும் என்ற கற்பனையே ஒழிய மணிரத்னத்திற்க்கு வழங்கும் ஆலோசனை இல்லை. வாசகர்களால் பலமுறை மீள்வாசிப்பு செய்யப்பட்ட கதைகளை சினிமா மொழியில் எடுப்பது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. ஓரிரு கதைகள் தவிர ஏனையவற்றை திரைப்படமாக கொண்டுவரும் போது அது ஏனோ ரசிகர்களை கவர்வதில்லை.
காட்சி 1:
கல்கி தனது முதலாவது அத்தியாயமான ஆடித்திருநாளை வல்லத்துவீரன் வந்தியத்தேவனுடனே தொடங்குகிறார். பொன்னியின் செல்வன் என அழைக்கப்படுபவர் அருள்மொழிவர்மனாக இருந்தாலும் இந்தக் கதையின் நாயகன் வந்தியத்தேவனே. அதே போல மணிரத்னமும் முதல்காட்சியில் வீரநாராயணபுரம் ஏரியில் வந்தியத்தேவன் வருகையையும் அன்றைய நிகழ்வான ஆடித்திருநாளையும் ஒரு பாடலில் மூலமாக காட்சிப்படுத்தலாம். மணிரத்னம் சினிமாவை பெரும்பாலும் ஆகத்தான் காண்பிப்பவர் அதாவது அவரின் திரைப்படங்களில் அதிக வசனங்களை விட காட்சிகளினூடாக ரசிகனை ஈர்ப்பவர். வீரநாராயணபுரத்தில் ஆரம்பிக்கும் போதே ஆழ்வார்க்கடியானையும் பெரிய பழுவேட்டரையும் அறிமுகப்படுத்தலாம்.
பழுவேட்டரையர்களின் வீரர்கள் வந்தியதேவனுடன் வீண் வம்புக்கு வரும் சந்தர்ப்பங்களில் அவன் அமைதியாக இருப்பதற்கான காரணத்தை அடுத்த காட்சியின் மூலம் காண்பிப்பதால் கல்கியின் கதையின் போக்கிலையே திரைக்கதையும் நகரும்.
காட்சி 2:
ஆதித்தகரிகாலன் அறிமுகம் இதனை ஒரு பிளாஷ்பேக் மூலம் காட்டமுடியும். காஞ்சியில் ஆதித்தகரிகாலனும் வந்தியதேவனும் இராச்சியம் தொடர்பாக பேசிக்கொண்டவையும் வந்தியதேவன் பழையாறைக் கோட்டைக்கு செல்லும் காரணமும் இந்தக் காட்சியின் மூலம் காண்பிக்கமுடியும். இந்த காட்சியை கொஞ்சம் நீட்டிக்கவிரும்பினால் கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன் ஆகியோரின் நட்பையும் காட்சிப்படுத்தலாம்.

காட்சி 3 :
வீரநாராயண ஏரியில் இருந்து பழையாறை அரண்மனை செல்லும் வழியில் வந்தியதேவன் கடம்பூர் மாளிகையில் தன் நண்பன் கந்தமாறனை சந்திக்கச் சென்றபோது அங்கே அவனுக்கு கிடைத்த வீரமான வரவேற்பு மூலம் வந்தியதேவனின் போர் ஆற்றலைக் காண்பிக்ககூடிய காட்சி இது. அந்தசிறிய சண்டையின் பின்னர் சம்புவரையர் அரண்மனையில் பழுவேட்டரையர் தலைமையில் இந்த கதையின் முக்கிய திருப்புமுனையான சதி ஆலோசனையும் தேவராளன் தேவராட்டியின் குரவைக்கூத்தும் அதன் பின்னர் மூடுபல்லக்கில் இருந்து மதுராந்தகனின் வருகையும் முக்கியமான இடங்களாகும்.


அகரம் செய்தி இணையத்தில் வெளியான கட்டுரை