"பா" - திரை விமர்சனம்

தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் நடித்திருக்கும் இல்லை இல்லை வாழ்ந்திருக்கும் படம் தான் பா. அமிதாப், அபிஷேக் வித்யா பாலன் என ஒரு சில குறிப்பிட்ட பாத்திரங்களுடன் சிறந்த கதையினாலும் இசையினாலும் மனதைக் கொள்ளையடித்துவிட்டது.



கதை

ஆரோ(அமிதாப்) progeria என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன். அதாவது இந்த நோய் வந்தவர்கள் தங்கள் வயதை விட அதிகம் வயதுடைய தோற்றம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். ஆரோவின் பாடசாலைப் பரிசளிப்பு வைபத்துக்கு பிரதம விருந்தினராக வரும் அமோல்(அபிஷேக்)சிறுவன் ஆரோவின் வெள்ளையடிக்கப்பட்ட பூமிப் பந்தைப் பார்த்துக் கவர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறந்த மாணவன் விருதை வழங்குகின்றார். அத்துடன் அந்தச் சிறுவனின் நிலையைப் பற்றி ஊடகங்களுக்கும் அறிவித்தும் விடுகின்றார். இதனால் ஆரோவைத் தேடி அவனது பாடசாலைக்கு ஊடகங்கள் முற்றுகை இட இதனால் ஆத்திரமடைந்த ஆரோ இதற்க்கு காரணமான அமோலுக்கு தன்னுடைய எதிர்ப்பை மின்னஞ்சல் செய்கின்றான். இதிலிருந்து ஆரோவுக்கும் அமோலுக்குமான உறவு ஆரம்பிக்கின்றது.

அமோல் யார் என்றால் ஆரோவின் தந்தை என்பதையும் அவருக்கும் வித்யாவிற்க்கு(வித்யா பாலன்)இடையிலான காதலில் கருத்தரித்தவன் தான் ஆரோ என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகின்றார் இயக்குனர். இந்த வேண்டாத கர்ப்பத்தால் வித்யா அமோலை விட்டுப் பிரிந்துவிடுகின்றார்.

ஆரோ தன் தந்தை அமோல் தான் என்பதை அறிந்தாரா? வித்யாவும் அமோலும் சேர்கின்றார்களா? என்பதை 2 மணித்தியாலம் 15 நிமிடங்களில் சொல்லும் கதை தான் ஹிந்தியில் வெளியான பா(Paa).

ஆரோ :



நெடிதுயர்ந்த கம்பீரமான குரலில் பார்த்துப் பழக்கப்பட்ட அமிதாப் பச்சனை வயது போன தோற்றத்தில் வித்தியாசமான குரலில் ( ஒரு பாடல் கூடப் பாடியிருக்கின்றார்)பார்ப்பது புதுமை. எந்தவொரு இடத்திலும் அமிதாப்பை தெரியவில்லை ஆரோ தான் தெரிந்தான்(ர்). தன்னுடை கண்களாலே சில இடங்களில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். எத்தனையோ கான்கள் வந்தாலும் எப்படி அமிதாப்பால் இன்றைக்கும் ஹிந்தி சினிமாவில் நின்று நிலைக்க முடிகின்றது என்ற கேள்விக்கு தன் நடிப்பாலே பதில் சொல்லியிருக்கின்றார். தான் ஒரு நோயாளி என்பதைத் வெளிக்காட்டாமல் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதும் நக்கல் நையாண்டிகள் செய்வதும் ஆரோவின் வயது 12 தான் என்பதை உணர்த்துகின்றது. சில படங்களில் மாற்று ஆற்றல் உள்ளவர்களை ஏனைய நண்பர்கள் கிண்டலடிப்பார்கள், ஆனால் பாவில் கிளைமாக்ஸ் காட்சிக்கு உதவிய சிறுமியைத் தவிர ஒருவர் கூட ஆரோவின் இயலாமையை கிண்டல் செய்யவில்லை. அமிதாப்பின் குரலும் ஒப்பனையும் நேர்த்தி.

திரைக்கதை :

ஒரு சோகமான செண்டிமென்டான கதையை நகைச்சுவை, காதல், அரசியல் பழிவாங்கல்கள், பாசம் என்ற பல கலவைகளினூடாக கொண்டு சென்றிருக்கின்றார் இயக்குனர் பால்கி. ப்ப்ப்பா என ஜெயாப் பச்சான் திரைப்படத்தின் கலைஞர்கள் ஒவ்வொருவராக தன் குரலினூடக அறிமுகப்படுத்துவதுடன் அறிமுகம் அமிதாப் பச்சான் என்பதிலிருந்து ஆரம்பித்த திரைக்கதை, தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கின்றது. இடைவேளையில் அதிர்ச்சியான ஒரு விடயத்தை எந்தவித ஆர்ப்பாடமும் இன்றிச் சொல்வதில் நிறுத்தி மீண்டும் அடுத்த பாதியில் சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்தாலும் குறையில்லாத திரைக்கதையாகவே இருக்கின்றது.

வசனம் :

படத்தின் பலமே வசனங்கள் தான்( ஹிந்தி தெரியாவிட்டாலும் ஆங்கில சப் டைட்டில் காப்பாத்திவிட்டது). அமோலும் ஆரோவும் பேசுமிடங்கள் அதிலும் அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு ஆரோ கொடுக்கும் விளக்கத்தில் தியேட்டரே கலகலத்தது. வித்யா பாலனும் அவரது அம்மாவும் ஒரே வசனத்தில் கர்ப்பத்தை என்ன செய்வது எனப் பேசுவது எனப் பல இடங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.

இயக்கம் :

ஏற்கனவே "சீனி கம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய பால்கியின் இரண்டாவது படம் இது. ஆரம்ப காட்சிகளில் இருந்து இறுதிக்காட்சிவரை நேர்த்தியான இயக்கம். அதிலும் ஒரு சோகமான கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. அத்துடன் ஒருவித்தியாசமான கதைக் களத்தில் ( சில வேளைகளில் கதையின் சாயல் அஞ்சலியை நினைவுபடுத்தினாலும் அது வேறை இது வேறை)ஒரு சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு திறம்பட இயக்கியிருக்கின்றார்.

இசை அல்லது இளையராஜா :

ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.

ஒளிப்பதிவு :

இன்னொரு நம்மவர் பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு காட்சிகளும் கண்ணில் நிற்கின்றன. சில கமேராக் கோணங்களும் குளோசப் காட்சிகளும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றவை. ஒரு காட்சியில் வித்யா பாலனினதும் அமிதாப்பினதும் முகம் மட்டும் திரையை இருவரின் கண்ணீருடன் நிறைக்கும் சிம்ப்ளி சூப்பர்.



அபிஷேக் :

அப்பாவுடன் போட்டி போட்டு நடிக்கவேண்டிய பாத்திரம், தன்னால் முடிந்ததைச் செய்திருக்கின்றார். சில இடங்களில் குருவில் பார்த்த நடிப்பு. குறைசொல்லமுடியாத அளவிற்க்கு நடித்திருக்கின்றார்.

வித்யா பாலன் :

ரேவதி, சுஹாசினி இருவருக்கும் பின்னர் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் காட்டியுள்ளார். முகத்தினாலையே பல இடங்களில் அழுகின்றார், கேள்வி கேட்கின்றார் காதல் வயப்படுகின்றார். தமிழில் நல்ல படங்கள் கிடைத்தால் நடிக்கலாம்.

ஆரோவின் தந்தை, வித்யாவின் தாய், ஆரோவின் நண்பன் விஷ்ணுவாக வரும் அந்தச் சிறுவன், ஆரோவின் ந‌ண்பியாக வரும் அந்தச் சிறுமி( கோல்ட் வின்னர் விளம்பரச் சிறுமி)போன்ற பாத்திரங்களும் தங்கள் பங்கை திறம்படச் செய்திருக்கின்றார்கள்.

நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கதால் பா எல்லோர் மனதையும் நிச்சயம் கவரும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது எழுந்த கேள்வி தமிழில் ஏன் எப்படி வித்தியாசமான கோணங்களில் கதைகள் வருவதில்லை?

"பா" ர்த்தேன் ரசித்தேன்

பின் குறிப்பு : தியேட்டரில் ஜேம்ஸ் கமரூனின் அவதார் படத்தின் ட்ரையிலர் போட்டார்கள், மிரட்டியிருக்கின்றார்கள். வேட்டைக்காரன் வெளியாகும் 18 ந்திகதி உலகமெங்கும் வெளியாகின்றது அவதார்.

ஹாட் அண்ட் சவர் சூப் 11-12-2009

யாழ்ப்பாணப் பயணம்

கடந்த சில நாட்களாக உறவினர்கள் சிலருக்காக யாழ்ப்பாணம் செல்வதற்கான பயணச் சீட்டுக்களைப் பெற கொழும்பு பிரதான பஸ் நிலையத்திற்குச் செல்லவேண்டி இருந்தது. தமிழன் என்றாலே வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்க்கிணங்க நீண்ட வரிசையில் அதிகாலையில் நின்றால் தான் அன்றைய இரவிற்க்கான பயணச் சீட்டுக் கிடைக்கும்.

கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்டவர்களுக்கு பயணச் சீட்டு வழங்க ஒருவர் மட்டுமே அந்த பஸ் நிலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கின்றார். 7 கருமபீடங்கள் இருந்தும் ஒன்றில் தான் யாழ் செல்வதற்கான பயணச் சீட்டு வழங்குகின்றார்கள். ஆகக்குறைந்தது ஒரு மூன்று அல்லது நாலு கருமபீடங்களில் சீட்டை வழங்கினார் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனாலும் நம்மவர்கள் இதிலும் தங்கள் கைவரிசையைக் காட்டிவிடுகின்றார்கள். உள்ளே பயணச்சீட்டுக் கொடுக்கும் நபர் தமக்குத் தெரிந்தவர் என்றால் பின்கதவு வழியாக பயணச்சீட்டைப் இலகுவாக பெற்றுக்கொள்கின்றார்கள். அத்துடன் அந்தக் கருமபீடத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாததால் பலருக்கு மொழிப் பிரச்சனையால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா?

தமிழன் என்ற வரைவிலக்கணத்துடன் மறக்காமல் வரிசையையும் இணைக்கவேண்டும்.

ஐயப்பனும் சிறுவர்களும்

தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் அனுஷ்டிக்கும் காலம். வீதிகளில் கறுத்த உடைகளுடன் பல ஐயப்பன் பக்தர்களை காணக்கிடைக்கின்றது. பெரியவர்களுடன் சில சிறுவர் சிறுமிகளும் மாலை போட்டிருப்பது ஏனோ மனதை நெருடுகின்றது. காரணம் ஒரு மனிதனின் தனித்துச் செயல்ப்படும் வயது 18 வயதின் மேல் தான் ஆரம்பமாகின்றது எனச் சொல்கின்றார்கள். அப்படியிருக்கையில் சிறுவர்களை பெற்றோர்களின் உந்துதலின் பெயரில் மாலை போட அனுமதிக்கலாமா? சிந்திக்க தெரியாத வயதில் சபரிமலை விரதம் என்பது கடினமானது. ஆன்மிகவாதிகள் கோபம் கொள்ளாது தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சிறுவர்களாக இருக்கும் பெளத்த துறவிகளைப் பார்க்கும் போதும் இதே எண்ணம் எனக்கு ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் போராளிகள் என பலதுக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகள் மதம் சம்பந்தப்பட்டதாலோ என்னவோ இதனைக் கண்டுகொள்வதில்லை.

இளையராஜா

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை தன் இசைக்குள் வைத்திருந்த இசைஞானியைப் பற்றி இப்போ சில கற்பூரவாசனை தெரியாதவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருவரின் இசை என்ன மொழியில் இருந்தாலும் கேட்பவரின் மனதைத் தொட்டால் அது சிறந்த இசைதான். ராஜாவின் இசைக்கோலங்கள் பல எத்தனை தடவை கேட்டாலும் இன்னமும் மறக்கமுடியாது.

ஒரு படத்தினை வைத்து இசைஞானியை எடைபோடும் கோமளிகளை என்னவென்று சொல்வது? தமிழர்களுக்கு எழுதுகின்ற இவர்கள் தங்கள் பெருமைகளை இன்னொரு மொழி பேசும் இடத்தில் கேளுங்கள் சொல்வார் என பீத்துவதும் சிறுபிள்ளைத் தனமானது. ராஜாவின் இசை தென்னிந்திய மொழிகளில் பிரபலம் என்பது அந்தப் பிரபலத்துக்குத் தெரியவில்லையோ. அண்மையில் உயிர்மையில் அவரின் இசை பற்றிய கட்டுரையில் இசைஞானியைத் தவிர ஏனைய இசையமைப்ப்பாளர்களின் இசைகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் பாடல்வரிகள் மட்டும் ஆபாசமாக இருப்பதாகவும் எழுதித் இசைஞானியின் மேல் தனக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டியிருந்தார்.

இசைஞானி, கலைஞானி மேல் இவர்காட்டும் காழ்ப்புணர்ச்சி அறிந்ததுதான் ஆனாலும் இவர் அடிக்கடி தன் காழ்ப்புணர்ச்சியை இவர்கள் மேல் வைக்காமல் தன் புணர்ச்சியை எழுதட்டும் எவரும் தட்டிக் கேட்கமாட்டார்கள்.

ராஜாவின் இசைக்கு எப்படி மக்கள் மயங்குகின்றார்கள் என்பதற்க்கு இந்தக் காணொளியைப் பாருங்கள். ஒவ்வொருவரினதும் மனநிலையை தெளிவாகப் பார்க்கலாம், இளம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் உற்சாகம், நடிகர் பிரசன்னாவின் முகத்தில் காணப்படும் பரவசம், வினுச்சக்கரவர்த்தியின் ஆனந்தக் கண்ணீர் என பலரை ராஜாவின் இந்த கானம் பரவசப்படுத்தியிருக்கின்றது.



நடிகைகள் படம்

என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் படம் போடுவது வழக்கம். இந்தப் படம் பலரையும் கவர்ந்திருக்கின்றது. அதே நேரம் சில நண்பர்கள் என்னிடம் இது தேவையா? எனவும் குறைப்பட்டார்கள். இப்படியான பல்சுவைகளை எழுதும் சிலர் வயது வந்தவர்களுக்கான ஜோக் என எழுதும் போது வெறுமனே படம் போடுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் எண்ணம் ஆனாலும் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பாக சுபானுவின் கடந்த முறை சூப்பின் பின்னூட்டத்திற்காக இதனை நிறுத்த இருந்தேன்.

ஆனால் ஏனைய நண்பர்களின் பலரின் அன்பு மிரட்டலால் மீண்டும் சூப்பில் படம் போடுவது என முடிவுக்கு வந்துள்ளேன். சுபானு போன்ற நண்பர்கள் பொறுத்தருள்க.


இலங்கைப் பதிவர் சந்திப்பு 2

நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த சந்திப்பு மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. முதலாவது சந்திப்பின் இனிமையான நினைவுகள் மறையும் முன்னர் அடுத்த சந்திப்பு நடைபெறவிருப்பதால் நண்பர்களை மீண்டும் காணும் ஆவலில் பலர் இருக்கின்றார்கள்.

வித்தியாசமான நிகழ்ச்சி நிரல், சில போட்டிகள், சில சுவாரசியங்கள் என இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர் தயாராகவுள்ளனர். இந்தமுறை அதிக பதிவர்களை ஏற்பாட்டுக்குழுவினர் எதிர்பார்க்கின்றார்கள்.



இச்சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி

அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று :

பயனுறப் பதிவெழுதல், பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.

கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன

சிற்றுண்டியும் சில பாடல்களும்

கலந்துரையாடல் மூன்று :
இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?

கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்

பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி :
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.

உங்களுக்குள் உரையாடுங்கள்

கடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

சில ஏற்பாட்டுக்களுக்காக தங்கள் வருகையை இலங்கைத் தமிழ்ப் பதிவர் வலைத் தளத்தில் உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்.

Blog Widget by LinkWithin