நானும் என் மருமக்களும்



கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னர் ஒரு  ஃபோரத்தில் அங்கத்தவராக இருந்தபோது  ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது

வணக்கம் வந்தி அண்ணா
நீங்கள் வடமராட்சியா? நானும் வடமராட்சி தான்.

என ஆரம்பித்த மெயில் நட்பு பின்னர் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தபின்னர், அதே பெண் சில நாட்களின் பின்னர் ,நீங்கள் பீகோனில் தான் ரீயூசன் போனீர்கள்? நீங்கள் படிக்கின்ற காலத்தில் சரியான குழப்படியாம் போன்ற என்னைப் பற்றிய சில தகவல்களையும் சொல்லி என்னை அசத்தினார். எப்படி இதெல்லாம் தெரியும்  எனக் கேட்டபோது என்னுடைய போட்டைவைப் பார்த்த தன் அத்தை முறையான ஒருவர் இவர் மயூரன் தானே என்னுடன் படித்தவர் என்றதுடன் என்னைப் பற்றிய சில குறிப்புகளையும் சொல்லியிருக்கின்றார். அதுவரை பச்சிளம் பாலகனாக உலாவிய என்னை மாமா என உறவு முறை சொல்லி அழைத்தவர் அந்தப் பெண் தான். (ஏன் மாமா எனக் கூப்பிட்டார், என்ற கேள்வி எல்லாம் கேட்ககூடாது, கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன்).


அதன் பின்னர் முதலாவது பதிவர் சந்திப்பு அமைப்பு குழுவில் இருந்த புல்லட், லோஷன், ஆதிரை, சுபானு, மது, பால்குடி ஆகியோரை விட தான் வயதில் இளையவன் என்பதாலும் இந்த குழுவிலையே நான் பெரியவன் என்பதால் என்னை அண்ணா என அழைக்காமல் மாமா என அழைக்கத் தொடங்கினான்.

இப்படி சதீஸ் தொடங்கிய மாமா இப்போ வலையுலக நண்பர்களால் அன்பாக மாம்ஸ் என அழைக்கப்படும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டது. இதிலை கொடுமை என்னவென்றால் லோஷன் போன்ற வயதுபோனவர்களும் என்னை மாமா என அழைப்பதுதான்.

உலகிலையே தாய்க்கு அடுத்த உன்னதமான உறவு மாமா தான். அதனால் தானோ என்னவோ என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது எனக்கு அந்த உறவு முறை பிடித்துக்கொண்டுவிட்டது.

இவர்கள் சில வேளை பொது இடங்களில் அதுவும் அழகான பெண்களுக்கு முன்னாள் என்னை மாமா என அழைத்து, என்னைத் திரும்பிப் பார்க்க முயன்ற பெண்களை திரும்பிப்பாராமலே செய்துவிட்டார்கள். இதுதான் இவர்களுக்கு மாமாவாக இருப்பதால் நான் படும் ஒரே ஒரு கஸ்டம்.

ஒரு முறை டொக்டர் முருகானந்த‌ன் தன்னை ஒரு சிறுவன் தாத்தா என அழைத்ததாகவும் அதனால் தனக்கு வயதாகிவிட்டது என கவலை அடைந்ததாகவும் தன் பேஸ்புக்கில் இட்டிருந்தார். அதேபோல தான் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களை சில சிறுவர்கள் அங்கிள் என அழைக்கும் போது முகம் கொஞ்சம் வாட்டமடையும். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றுவிட்ட விடவேண்டியதுதான்.

அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் 2012 ஆண்டு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க வாழ்த்துக்கின்றேன்.

2011 சில நிகழ்வுகள் நினைவுகள்



அரசியல்


இலங்கை

இந்த ஆண்டில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை பாரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. யாழ்ப்பாண மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு விழுந்த அடியும் கிரிஸ் மேனும் தான் ஹைலைட்டான விடயங்கள். அதை விட ரணில் விக்ரமசிங்காவுக்கு உள்கட்சிக் குடைச்சல்கள் இன்னும் சுவாரசியமான விடயம். சங்கிலியன் சிலை விவகாரமும் கொஞ்சம் சூடுபிடிச்சு பின்னர் அப்படியே ஆறிவிட்டது.

இந்தியா

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைந்து மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தாமல் 5 ஆண்டுக்கு ஒரு முறை திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் தேர்தல் செலவு மிச்சமாகும். கனிமொழி கைது, கலைஞர் டிவி சிக்கல், அன்னா ஹசாரே, முல்லைப் பெரியாறு, தண்ணிப் பிரச்சனை என பல சிக்கல்கள் இன்னமும் நீடிக்கின்றது. இவ்வளவையும் சாமாளிக்கும் திறமைக்காக மன்மோகன் சிங்குக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

பிரிட்டன்

வில்லியம் கேட் மிடல்டென் திருமணம் இந்த வருட ஏப்ரலில் நடந்தது. என்னதான் மக்கள் அரச குடும்பத்தின் மேல் வெறுப்பாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாக ரோயல் வெடிங் நிகழ்ந்தது. வில்லியத்தின் மனைவி இளவரசி கேட்டை விட அவரின் தங்கை பிப்பா மிடெல்டன் தான் இப்போ பிரிட்டன் பத்திரிகைகளின் ஹாட் கேர்ல்.

ஆகஸ்ட் 6 ந்திகதி நடந்த இங்கிலாந்து கலவரங்கள். டொட்டனத்தில் மார்க் டக்கன் என்ற கறுப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் பொலீசாருக்கு எதிராக நடத்திய வன்முறை லண்டனில் தொடங்கு மஞ்செஸ்டர், லிபர்பூல், பேர்மிங்ஹாம், நொட்டிங்காம் என இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் பரவி பல்லாயிரம் பவுண்ட்ஸ் பெறுமாதியான பொருட்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.


உலகம்

ஜனவரின் தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகியது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முகாபேயின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு இந்த எழுச்சிகள் பரவி கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையும் காடபியின் மரணமும் இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகும்.

மே முதலாம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவிப்புச் செய்தார்.

நோர்வே ஒஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடும் இந்த ஆண்டில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வாகும்.

ஒக்டோபர் 1ல் உலக சனத்தொகை ஏழு பில்லியனாக உயர்ந்தது.

ஜ‌ப்பான் புக்கோஷிமா நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தமையும் அப்பிளின் சக ஸ்தாபகர் ஸ்ரிவ் ஜாப்ஸ் மற்றும் சி மொழியின் தந்தை டெனிஸ் ரிச்சி ஆகிய இருவரின் இறப்பு தொழில்நுட்ப சமூகத்தை உலுப்பிய மரணங்களாகும்.

விளையாட்டு

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டோணி தலைமையிலான அணி மீண்டும் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. எதிர்த்து விளையாடிய இலங்கை அணி மீண்டும் ரன்னர்ஸ் ஆகவே வந்தது, உலகக்கோப்பை வென்ற்
கையுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணியினருக்கு இங்கிலாந்து மரண அடிகொடுத்ததும் அதே இங்கிலாந்தை இந்திய ஆடுகளங்களில் வைத்து இந்தியா பழிக்கு பழி வாங்கியதும் விறுவிறுப்பான கிரிக்கெட் நிகழ்வுகள் ஆகும்.


தனது நூறாவது சதத்தை இன்றைக்கு அடிப்பார் நாளைக்கு அடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் இந்தப் பதிவு பிரசுரமாகும் வரை(மெல்பேர்ன் டெஸ்ட் முடிய‌ இன்னும் 2 நாட்கள் இருக்கின்றது)அடிக்கவில்லை. 

சச்சினின் ஒருநாள் உலகசாதனையான 200 ஓட்டங்களை அவரின் சகாவான சேவாக்கினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முறியடிக்கப்பட்டது. 

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஜோன் டெரி அன்டன் பேர்டினென்ட்க்கு எதிராக தெரிவித்த இனவாத கருத்துக்கள், இங்கிலாந்து நட்சத்திர வீரர் வெயன் ரூனியின் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளால் கால்பந்தாட்ட உலகம் சூடுபிடித்தது.


சினிமா

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாறன் சகோதரர்களின் மொனோபோலியில் இருந்து ஓரளவு தப்பியதால் சில படங்கள் உண்மையாகவே ஹிட் ஆகின. தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை சென்ற ஆண்டுப்படங்கள் அள்ளிக்கொடுத்ததை இந்த வருடம் அறிவித்தார்கள். கொலைவெறிப்பாடல் பட்டி தொட்டி என உலகமெல்லாம் பரவியது இந்த ஆண்டிலைதான்.

உலக அழகி ஐஸ்வர்யாயின் பிரசவமும் இந்த ஆண்டின் பரபரப்பான விடயம் நவம்பர் மாத அழகிக்கு இன்னொரு நவம்பர் மாத அழகி. நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான். 

புத்தகம்

இந்த ஆண்டில் பெரும்பாலும் வலை வாசிப்பே வாசித்ததால் பெரிதாக புத்தகம் எதுவும் வாசிக்கவில்லை. இலங்கை சென்றிருந்தபோது கானாப் பிரபாவின் கம்போடியாவும், அகிலனின் மரணத்தின் வாசனையும் வாங்கி விமானத்தில் வாசித்தேன். கம்போடியாவில் கானா கவர்ந்தார், மரணத்தின் வாசனையில் அகிலன் நடு வானில் கலங்கவைத்தார். இரண்டு புத்தகம் பற்றிய விமர்சனமும் எழுதவேண்டும் (எப்போ? இன்னும் ஆறுமாதத்தில் தானே என நீங்கள் கேட்பது புரிகின்றது)

நான் 

2011 ல் என் வாழ்க்கையில் ஒரு மாதம் மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒக்டோபர் 23ல் தொடங்கி நவம்பர் 22 வரை சொந்த மண்ணில் நண்பர்களுடன் உறவினர்களுடன் கழித்த நாட்கள் என்றும் இனிமையானவை. இந்த குறுகிய காலத்தில் வடக்கே யாழ்ப்பாணம் கிழக்கே மட்டக்களப்பு தெற்கே கதிர்காமம் என மேற்கில் கொழும்பிலிருந்த நான் திக் விஜயம் செய்து மகிழ்ந்தேன். மத்திய மலைநாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை.



என் தெரிவில் சில சிறந்த 2011 விருதுகள்
வலைத்தளம்
சாதாரணவனின் மனது என விசரன் எழுதும் வலை. இவரின் சில கதைகள் அட என ஆச்சரியமூட்டுபவை. புலம் பெயர் தேசத்து விடயங்களை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக எழுதுகின்றார். 

ட்விட்டர் 
சண்முகன் (இலங்கை) 
முழு நேர ட்விட்டராக மாறி பலரின் ட்விட்டகளை ரீட்விட்டுவதிலும் தன்னுடைய சில ட்விட்டுகளிலும் கவர்ந்தவர். http://twitter.com/#!/shanmugan10
ராஜன் லீக்ஸ் (இந்தியா) 
இவரின் சில ட்விட்டுக்கள் ஆச்சரியமாக இருக்கும்.
http://twitter.com/#!/RajanLeaks

வலைப்பதிவர்
மருதமூரான் (இலங்கை)
http://maruthamuraan.blogspot.com/
நடுநிலையான கருத்துக்களுடன் பலதும் எழுதுகின்றார், மொக்கை மட்டும் இன்னும் கைகூடவில்லை, அதே நேரம் இவர் பேஸ்புக்கில் இடும் காதல் வசனங்களுக்கு நான் ரசிகன்


ஜாக்கி சேகர் (இந்தியா)  http://www.jackiesekar.com/
இவரின் திரைப்பட விமர்சனங்களும் வெள்ளந்தித்தனமான சில பதிவுகளும் என்னை மிகவும் கவர்ந்தது.


படம்  : எங்கேயும் எப்போதும்


பாடல் : என்னமோ ஏதோ : படம் கோ


சிறந்த நடிகர் : அஜித் (மங்காத்தா)


சிறந்த நடிகை : அஞ்சலி ( எங்கேயும் எப்போதும்)


சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)


சிறந்த இயக்குனர் : சரவணன் (எங்கேயும் எப்போதும்)


சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி  ( கோ, நண்பன்)


தொகுப்பாளர்  : சிவகார்த்திகேயன் (இவரின் அது இது எது பார்க்காமல் விடுவதில்லை)


சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்

வடிவேல்

சும்மா இருக்காமல் அழகிரியின் சொல்லைக் கேட்டு விஜயகாந்தை எதிர்க்கின்றேன் என தேர்தல் மேடைகளில் மொக்கைப்போட்டு இப்போ வீட்டில் அடைந்து கிடைக்கின்றார். பாவம் கைப்புள்ளை கருணாநிதியின் நிதியை மட்டும் நம்பி மோசம் போய்விட்டார்.



அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2012 உங்கள் வாழ்வில் வசந்தங்களையும் சந்தோஷங்களையும் கொண்டுவர வாழ்த்துக்கின்றேன்.




காவலன் ஜெயந்தி

 இலங்கைப் பதிவுலக அதிகார மையத்தின் தலைவரும், பீப்பீமாமா, தலை, மங்காத்தா, வண்டிமாமா , அக்கா என பல செல்லப்பெயர்களால் அழைக்கப்படுபவரும் பெண் பெயரில் எழுதி வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் எங்கள் அருமை அண்ணன் மாலவனுக்கு (நீருஜா) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் தலைவர் பற்றிய சில ஞாபகச் சிதறல்கள். 

 தன் சொந்த நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் சில்க் கட் பேர்ப்பிளையும் சிமிர்னோவையும் விட்டு விட்டு புலம் பெயர் தேசத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிவந்த ஒரே ஒரு நாட்டுப்பற்றாளன் இவர்.

 இந்துக்களின் முழுமுதல் கடவுளாகிய பிள்ளையாரைப் போல உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் விசாலமானவர்.

 நாதஸ்வரம், ரம்பெட் போன்ற ஊதுகுழல்களின் தாய் பூவரசமிலைக் குழல் என்பதை இன்றைக்கும் மறக்காமல் அடிக்கடி பூவரசமிலைக் குழல் ஊதி பீப்பீ மாமா என யாழ்ப்பாணத்தில் பட்டம் பெற்றவர்.

 ஃபோர்ஸ்க்யூரில் தான் எங்கே நிற்கின்றேன் என்பதை நண்பர்களுக்கு மட்டுமல்ல தன் நேசத்துக்குரியவருக்கும் அடிக்கடி நினைவூட்டுகின்றவர்.
லண்டன் பிக்காடிலி சேர்கஸின் பெருமைகளை சதீஸுக்கு விளங்கப்படுத்தி சதீஸை சில நாட்கள் பிக்காடிலி பைத்தியம் பிடிக்க வழி சமைத்த வழிகாட்டி எங்கள் மால்ஸ்.

 உலகில் பயணம் செய்ய எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் புகை வண்டியில் பயணம் செய்வதே இவர் ஸ்டைல்.

 குழந்தைப் பிள்ளைகளால் குண்டு மாமா, வண்டி மாமா, தொந்திமாமா என அன்பாக அழைக்கப்படுகின்றவர் எங்கள் மால்ஸ்.

 தன் தொந்தியும் தலை அஜித்தின் தொந்தியும் ஒன்றெனச் சொல்லி இப்போ புதிதாக மங்காத்தா எனவும் பட்டம் பெற்றுக்கொண்டவர்.

 பெண்களின் காவலனான அனுதினனின் காவல் குரு இவர். தன்னுடன் படித்த வேலை செய்கின்ற பெண்களை பத்திரமாக பஸ் ஏத்தி சிலவேளைகளில் அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிலையம் வரை சென்று பாதுகாப்புக்கொடுப்பதில் இவர் ஒரு கறுப்புப்பூனை.

சீதனக் கொடுமைகளை புலோலியூறாக எடுத்தியம்பிய ஜாவாப் பாரதி இவர்.

 நண்பர்களுடன் குறிப்பாக புதுமாப்பிள்ளை சித்தப்பூவுடனும் நவீன வாத்ஸ்யாயனர் மதுவுடனும் வேலை செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அலுவலகத்திலையே ஜாவாவுடன் குடும்பம் நடத்துகின்றார்.
அண்மைக்காலமாக சித்தப்பூ கோ ஜீவா போல் மாறியதால் மாலின் வண்டவாளங்கள் அலுவலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.
அன்னக்கிளி உன்னைத் தேடுது மற்றும் அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க... மால்ஸின் மனம் விரும்பிய பாடல்கள்..

 நண்பர் லோஷனுடன் போட்டிக்கு குனிந்தபடியே தன் கால் விரலை இலகுவாகத் தொட்டு சாதனை படைத்தவர், (லோஷனுக்கும் அடி சறுக்கும்).

 நீரூஜா என்ற புனைபெயரில் எழுதி புல்லட் மருதமூரான் இருவரையும் மையல் கொள்ளவைத்த பெருமை எங்கள் அக்காவிற்கே சேரும். 

அண்மையில் பெந்தோட்டையில் கடல்குளியலுடன் சித்தமருத்துவ
முறைப்படி மணல் குளியலும் குளித்த கோமகன் எங்கள் மால்ஸ். 

அண்மையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற விதி இவரைப் பாடாய்ப்படுத்துகின்றது.


கடைசியாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர் சந்திப்பில் அன்னாசி ஜீஸ் குடிச்சும் பின்விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தப்பிய ஒரே ஒரு ஜீவராசி இவர் தான்.

தன் பிறந்தநாளை ஒட்டி பிறந்தநாளுக்கு முதல் நாள் (நேற்று), இன்று, நாளை என மூன்று நாட்கள் நண்பர்களுக்கு விருந்து தந்து அசத்திக்கொண்டிருக்கின்றார்.


மீண்டும் அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரூண்டி வாழ்க நண்பா.

விளையாடு மங்காத்தா

எந்திரனுக்கு பிறகு எழுதும் திரைவிமர்சனம் கடைசியாக திரையில் பார்த்த படம் கோ அதன் பின்னர் நேற்று மங்காத்தா.

கதை
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து வந்த முதல் தமிழ்ப் படம். 500 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் கொள்ளையர்களின் கதை.

திரைக்கதை
அர்ஜீன் , அஜித் என்ற இரண்டு நாயக‌ர்களையும் திரிஷா ,லக்ஸ்மிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்ற நான்கு நாயகிகளையும் வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா என்ற பெயரில் ஆடுபுலி ஆட்டம் தான் ஆடியிருக்கின்றார். இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பம். இந்தியன் படத்துக்குப் பின்னர் கிளைமாக்ஸ் மிகப் பெரிய எதிர்பாராத திருப்பம். வைபவ் அஞ்சலி காதல், ஆண்ட்ரியா அர்ஜூன் பாடல் கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கல்.

வசனம்
பிரேம்ஜியின் ட்விட்டர் கீச்சுகள் போல வசனங்கள். பல இடங்களில் ரசிக்கவைக்கின்றன. பிற்பகுதியில் ஆங்கிலப் படங்களில் வரும் வசனம் என்பதாலோ சென்சார் கையை நிறையவே வைத்துவிட்டது.

இயக்கம்
சென்னை 28, சரோஜா என இரண்டு சதமடித்த வெங்கட் பிரபு கோவாவில் சறுக்கினாலும் மீண்டும் மங்காத்தாவில் இரட்டைச் சதமடித்திருக்கின்றார். அதுவும் தலையை வைத்து இரட்டைச் சதமடித்தமை சாதனை தான். ஆனால் பிரேம்ஜி, பைவப், அரவிந்த் என தன் பழைய டீமையே வைத்து விளையாடுவதுதான் கொஞ்சம் நெருடுகின்றது, இந்திய அணிக்கே ரெய்கேனா, பர்தீப் பட்டேல் போன்றவர்கள் களம் இறங்கும் போது வெங்கட் பிரபுவும் வேறை டீமை வைச்சு அடுத்த இனிங்கசைத் தொடரலாம். விறுவிறுப்பான ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தமைக்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு சலூட்.

லக்ஸ்மி ராய்
என்னடா தலை ஆக்சன் கிங் என நாயகர்கள் இருக்கும் போது கதாநாயகிகளில் ஒருவரைப் பற்றி எழுதுகின்றேன் என யோசிக்கின்றீர்களா? எல்லாம் அவரின் திறமைதான். ஏற்கனவே சில படங்களில் வந்துபோனாலும் இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் கவருகின்றார். அதுவும் பல்லேலக்கா பாடலுக்கு அம்மணி லண்டன் சமர் போல ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றார். ஆனாலும் சென்சாரின் புண்ணியத்தில் அம்மணியை ரொம்பப் பார்க்கமுடியவில்லை என்பது பல ரசிகர்களின் கவலை. முதல் காட்சியில் தலை வீட்டில் செய்யும் லூட்டியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாதாம், எனிவே டோணிக்கு நன்றிகள்.


அஜித்
வாலி படத்திற்க்கு பின்னர் தலையை ரசித்துப் பார்த்தது மங்காத்தாவில் தான். நீண்ட நாட்களின் பின்னர் அலட்டலில்லாமல் அட்டகாச நடிப்பு. அதுவும் பிரேம்ஜியுடன் குடித்துவிட்டுச் செய்யும் அலும்புகளும், செஸ் போர்ட்டுக்கு முன்னால் இருந்து தன் சகாக்களை கொலை செய்ய பிளான் பண்ணும் காட்சியும் அல்டிமேட் ரகம். லக்ஸ்மிராயுடன் பொருந்திப்போகும் காதல் கெமிஸ்ரி ஏனோ திரிஷாவுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. 50 வயது தாண்டியவர்களே சின்னப் பெண்களுடன் டூயட் பாடும் போது தலை மட்டும் தலை முடியை வெள்ளையாக்கி தன் வயதை எல்லாம் சொல்லுவது நிஜத்தில் நல்லா இருந்தாலும் படத்தில் அவரின் கெட்டப் கொஞ்சம் நெருடல் தான்.

அர்ஜீன்
அர்ஜீனின் 1001ஆவது போலீஸ் வேடம், கொஞ்சம் வயதான போல் தெரிந்தாலும் சண்டைக் காட்சிகளில் அதே வேகமும் ஆக்ரோசமும் இருக்கின்றது. ஒரு பிட்டில் ஆண்ட்ரியாவுடன் டூயட்டும் பாடுகின்றார்.

த்ரிஷா
தமன்னாவுக்கு கிடைக்கவேண்டிய லூஸுப் பொண்ணு கேரக்டர் த்ரிஷாவுக்கு, பெரிதாக நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை, கிடைத்த வாய்ப்புகளிலும் லக்ஸ்மி ராய் சிக்சர் அடித்தபடியால் அம்மணி வாட்டர் பாய் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். த்ரிஷாவுக்கே இந்த நிலை என்றால் அஞ்சலி ஆண்ட்ரியா எல்லாம் காயமடைகின்ற இந்திய வீரர்களுக்கு ரிப்பிளேஸ்மெண்டில் வரும் ஏனைய வீரர்கள் போல் வந்துபோகின்றார்கள். அஞ்சலி பைவப்வுடன் ஒரு டூயட்டை அரைகுறையாக(ஆடை இல்லை பாடல்) ஆடி வைக்கின்றார்.

பிரேம்ஜீ

சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும் பல இடங்களில் அதே பழைய இம்சை. லக்ஸ்மிராயை முதன்முறை பார்க்கும் காட்சியில் பின்னணீ இசையும் பிரேம்ஜீயின் நடிப்பும் கலக்கல். (இசைஞானியின் பழைய பாடல் ஒன்று பாடலின் பெயர் ஞாபகம் வரவில்லை).

இசை
இசை வழக்கம்போல் தம்பியுடையான் இசைக்கஞ்சான் போல் வெங்கட் பிரபுவுக்கு ஸ்பெசலகா யுவனின் பாடல்கள் சூப்பர் டூப்பர் விளையாடு மங்காத்தா பாடலும் தீம் மியூசிக்கும் ஏற்கனவே பட்டி தொட்டிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஏனைய பாடல்களும் கேட்க இதமாக இருந்தாலும் படத்தில் இடைச் செருகல் போலத்தான் இருந்தது. பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, பிரேம்ஜி மூவரும் யுவனுக்கு உதவி செய்திருக்கின்றார்கள்.

நீண்ட நாட்களின் பின்னர் தலைக்கு மட்டுமல்ல தலை ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல பொழுதுபோக்கு படங்களின் ரசிகர்களுக்கும் மங்காத்தா மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.

பின்குறிப்பு 1: லண்டனில் சன் பிக்சர்ஸ் லோகோ எதுவும் வரவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விடயம். சன் செய்திகளில் லோகோவைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவராம் செய்கின்றார்கள் என மாசிலாமணி காலத்தில் இருந்து காட்டும் அதே டெக்னிக்கை மங்காத்தாவுக்கும் காட்டினார்கள் (திகார் ஜெயிலில் இன்னும் இடம் இருக்கின்றதாம்). அத்துடன் முதன்மை நிர்வாகி என ஷக்சேனாவின் பெயரும் மிஸ்சிங் (ஆள் எஸ்கேப்போ தெரியாது ).

பின்குறிப்பு 2: அஜித்தின் ஆரம்பக்காட்சிக்கு மட்டும் விசில் முழுங்கியது பின்னர் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிவிட்டார்கள்.

சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ

சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான்.

தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.

அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.

வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார்.

பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும்.

சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார்.

சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "
"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.

சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.


கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "
இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.

கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை
"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ

"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்.

சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது.

ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும்.

ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.

"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.
"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை.

கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.

பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.

தீப்பிடித்த லண்டனும் வேடிக்கை பார்த்த காவல் துறையும்

கடந்த ஞாயிறு மிதமான குளிர் அடித்துக்கொண்டிருந்த அதிகாலை வேளை வேலை இல்லாத நாளாக இருந்தபடியால் இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என பிளாங்கெட்டினுள் தூக்கத்தை அனுபவித்துக்கொண்டிருந்தபோது போன் அடித்தது நம்பரைப் பார்த்தால் இலங்கையில் இருந்து மைத்துனன்.

"மச்சான் நோர்த் லண்டன் டொட்டனம்(Tottenham) உங்களுக்கு அருகிலா?"
"இல்லை ஏன்டா கேட்கின்றாய்?"
"அங்கே கலவரமாம் அதுதான் கேட்டேன், நான் பிறகு எடுக்கின்றேன்" என்றபடி வோக்கி டோல்க்கியில் கதைப்பதுபோல சோர்ட் அன்ட் ஸ்வீட்டாகப் பேசியபடி வைத்துவிட்டான்.

தூக்க கலக்கத்தில் டிவியைப்போட்டால் ஸ்கை நியூசில் Tottenham பகுதியில் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையைக் காட்டினார்கள். அல்டி(ALDI) சூப்பர் மார்க்கெட் உட்பட பல கட்டடங்கள் சூறையாடப்பட்டத்துடன் எரிந்துகொண்டும் இருந்தன. ஒரு டவுள் டெக்கர் பஸ் எரிந்து பஸ்பமாகியது.

Mark Duggan

வடக்கு லண்டன் Tottenham பகுதியில் கடந்த வியாழக்கிழமை (04.08.20110 கறுப்பினர் இளைஞர் மார்க் டக்கன் பொலீசாரால் சுடப்பட்டு இறந்ததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பொலீஸ் நிலையம் முன்னாள் கடந்த சனி பிற்பகல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறி பொலீஸ்காரர்களின் கார்கள் உட்பட சில வாகனங்கள் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் என பல உடைத்தெறியப்பட்டு எரியூட்டவும் பட்டன.

ஞாயிறு மதியம் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்கியதாக Metropolitan பொலிஸார் தெரிவித்தார்கள். ஆனால் ஞாயிறு இரவு வடக்கு லண்டன் Enfield பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது.

திங்கள் காலை வழக்கம் போலவே லண்டன் வாசிகளுக்கு விடிந்தது. அவரவர் தங்கள் கடமைகளில் தம்மை மறந்து இருந்தபடியால் முதல் நாள் நடந்த சம்பவத்தை மறந்தேவிட்டார்கள். மாலையில் மீண்டும் Oxford Circus, Enfield, Lewisham, Brixton, Peckham, Camberwell என தென்கிழக்கு, வடக்கு லண்டனில் வன்முறை வெடித்தது. கார்கள் எரிப்பு, சூப்பர் மார்க்கெட்டுகளை உடைத்து பொருட்கள் சூறையாடல் என்பன பெரும்பாலும் இளவயது இளைஞர் யுவதிகளால் முகத்தை மூடியபடி நடத்தப்பட்டன.

வன்முறையின் உச்சக்கட்டமாக குறொய்டனில் உள்ள 100 வருடங்களுக்கு மேற்பட்ட ஹவுஸ் ஆவ் ரீவ்ஸ் (House of Reeves) என்ற தளபாடக் கடை தீயிடப்பட்டு கொழுந்துவிட்ட எரியத் தொடங்கியது. தீயணைப்பு படையினர் பெரும் பிரயத்தனம் செய்தும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. அத்துடன் Waltham Cross லுள்ள சொனி கம்பனியின் ஸ்டோர் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் எரியூட்டப்பட்டது.
ஈலிங்கிளுள்ள ஒரு கடை என் கமேராவில் சுட்டது


இதே நேரம் நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் Clapham சந்தியில் கூடி கறிஸ் டிஜிட்டல், டெபனாம்ஸ் ஆடையகம் போன்றன உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன.

கிழக்கு வடக்கு தென்கிழக்கு லண்டன்களில் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் போது மேற்கு லண்டன் மட்டும் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியிலும் இரவு 9 மணியளவில் மண் அள்ளிப்போட்டார்கள் வன்முறையாளர்கள். ஈலிங் (Ealing)பகுதியில் ஆடையகம் மக்டொனால்ட் உட்பட சில கடைகளை கொள்ளை அடித்ததுடன் இரண்டு கார்களும் எரியூட்டப்பட்டன. திங்கள் இரவு முழுவதும் லண்டனில் பெரும்பாலான நகரங்கள் தீயுடன் புகைந்தன.

லண்டனுக்கு வெளியே பெர்மிங்காமில் மட்டும் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டத்தொடங்கினார்கள்.

இவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கின்றதே, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலீஸார் உள்ள லண்டனில் எப்படிப் பொலிஸாரால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனது என்ற சந்தேகம் சாமான்யனுக்கும் ஏற்படும். உண்மைதான் லண்டன் பொலீசாரால் வேடிக்கை மட்டுமே சில மணி நேரம் பார்க்கமுடிந்தது. காரணம் அவர்களுக்கு வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. அத்துடன் பிரதமர் உட்பட பொறுப்பு வாய்ந்த பல அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்தார்கள்.

உள்துறைச் செயலாளர் திரேசா மே உடனடியாக தன் விடுமுறைய ரத்துச் செய்துகொண்டு வந்திருந்தாலும் அவரால் பொலீசாருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்கமுடியாமல் போனது. வெறுமனே இந்த வன்முறைகள் தண்டிக்கப்படவேண்டியவை என அறிக்கை மட்டுமே அடிக்கடி கொடுக்க முடிந்தது. ஸ்கொட்லாண்ட் யார்டின் பிரதி காமிசனர் ரிம் காட்வின் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளை உடனடியாக எங்கே இருக்கின்றார்கள் எனத் தேடும் படி அறிக்கை கொடுத்தார். இவர்கள் இருவரும் அடுத்தநாள் பிரதமர் டேவிட் கமரூன் வரும் வரை தாம் எதுவும் செய்யமுடியாது என்பதையும் தெரிவித்தார்கள்.

சில இடங்களில் வன்முறையாளர்கள் பொலீசாரை தாக்கிய சம்பங்களும் நடந்தன. இத்தனைக்கும் ஒரு சில ஆயிரம் பொலீஸார் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். விடுமுறையில் சென்ற பொலீஸார் மீண்டும் கடமைக்கு அழைக்கப்பட்டார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை முதல் நாள் நடந்த வேண்டத்தகாத சம்பவங்களினால் லண்டன் வாசிகளுக்கு பயத்துடனே விடிந்தது. பல கடைகள் திறந்து உடனடியாகவே மூடப்பட்டன. மத்திய லண்டனில் இருக்கும் லண்டன் ஐ போன்ற சுற்றுலா இடங்களும் பொலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறுது நேரமே இயங்கின. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்டது போல வன்முறை லண்டனில் வெடிக்கவில்லை மாறாக மன்செஸ்டரில் வெடித்தது.

வன்முறையாளர்களில் பலர் வயதுக்கு வராத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் 11 வயது மாணவனும் அடக்கம் என்பதும் பாடகி மியாவின் உறவினர் ஒருவரின் கடை கொள்ளையில் ஒரு 5 வயதுச் சிறுவன் ஈடுபட்டான் என்பதும் மியாவின் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இந்த வன்முறைக்கு மார்க் டுங்கனின் கொலை மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது, சமூக வலைத்தளங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடுத்த தாக்குதல் எங்கே என அறிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. பழமைவாதக் கட்சியின் சில கெடுபிடியான சட்டங்கள் மக்களை அரசின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. அரச உதவித் தொகையை மட்டுப்படுத்துவது, மாணவர்களுக்கான பல்கலைக் கழக கட்டணம் அதிகரிப்பு, போன்றன பலரிடம் அரசின் மீது வெறுப்பை தந்தது.

ஏற்கனவே மாணவர்கள் சென்ற வருடம் செய்த ஆர்ப்பாட்டங்கள் இத்தகைய வன்முறைக்கு அடிகோலினாலும் வன்முறைக்காரர்கள் அரசை எதிர்க்கின்றேன் என்று பொது மக்களின் சொத்துக்கு சேதம் விளைவித்ததும் கொள்ளை அடித்ததும் தண்டனைக்குரிய குற்றமே.

அத்துடன் பொலீசாரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையும் ஒரு காரணமாகும். நேற்றுத்தான் வன்முறையாளர்கள் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் வன்முறையாளர்களுக்கு காலுக்கு கீழ் அடிக்கவோ அல்லது சுடவோ அதிகாரம் கொடுக்கப்படவில்லை.(எங்கள் நாட்டுப் பொலீசார் என்றால் சகல அதிகாரமும் இருக்கு). அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தை விட கொஞ்சம் சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகமே என்றைக்கும் நன்மை பயக்கும்.

லண்டன் 2012 ஒலிம்பிக்குக்கு இன்னமும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் போது லண்டன் வன்முறைகள் பாரிய பொருளாதார பாதுகாப்பு நெருக்கடிகளை கமரூன் அரசுக்கு கொடுக்கும் என்பது நிச்சயம்.

பின்குறிப்பு :அடடே இது எனது 300ஆவது பதிவு. (ஷப்பா எவ்வளவு கஸ்டம்)

கோஷ்டி பார்த்த கதை

எங்கட ஊரிலை திருவிழா தொடங்கினால் கடவுளைக் கும்பிடுகிறமோ இல்லையோ ஐந்தாம் திருவிழாவுக்கு ஆற்றை கோஷ்டி, இந்தமுறையும் எட்டாம் திருவிழா எழும்புமோ? என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும்.

கோஷ்டி என்றால் இசைக்குழு. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. எங்கட காலத்திலை யாழில் பிரபலமான கோஷ்டிகள் ராஜன், சாந்தன், அருணா, யாழோசை கண்ணன், சப்தஸ்வரா போன்றவை. முன்னைய காலத்தில் கண்ணன் கோஷ்டி என்ற எழுச்சி இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் குழு பிரபலம்.

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எங்கட பக்கத்திலை மூன்று கோயில்களில் திருவிழா நடக்கும் அல்வாய் முத்துமாரி அம்மன், வதிரி பூவற்கரைப் பிள்ளையார், மற்றது கரணவாய் மூத்தவிநாயகர் கோயில். அதனாலை எங்கட பாடு ஒரே கொண்டாட்டம் தான்.

கோயில் திருவிழா தொடங்கினால் கோஷ்டி பிடிப்பது என்பது சில திருவிழாக்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். இந்த இந்த திருவிழாக்களுக்கு கட்டாயம் கோஷ்டி நடக்கும் என அடித்துச் சொல்லலாம். பகலில் திருவிழா என்று இறைவனை வணங்கி களைத்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த நிகழ்வாக இதனை நான் கருதுகின்றேன். சில ஏன் இந்த டாம்பீகச் செலவுகள் என்பார்கள். ஆனாலும் இதனால் இன்னொரு சாராருக்கு வருமானம் கிடைக்கின்றது என்ற உண்மையையும் மறுக்ககூடாது.

ஆனாலும் கோஷ்டியை மட்டும் தனித்து நடத்தமாட்டார்கள். இரவுத் திருவிழா முடிந்தபின்னர் ஒரு 8 மணியளவில் சமயச் சொற்பொழிவு நடைபெறும். கம்பன் கழக பேச்சாளர்கள் அவர்கள் இல்லையென்றால் ஊரில் உள்ள சமய அறிவு உள்ள பெரிசுகளை வைத்து இதனை நடத்துவார்கள். ஒரு சில குஞ்சுகுருமன்களும், பெரியவர்களும் பொறுமையாக இருந்து கேட்பார்கள். அதுமுடிய நாதஸ்வர தவில் கச்சேரி. பஞ்சாபிகேசன் குழுவினர், தவில் மேதை தட்சணாமூர்த்தியின் பிள்ளைகளான உதயசங்கர், ஞானசங்கர் குழுவினர், இணுவில் சின்னராசா குழுவினர் எனப் பலர் இதனை நிகழ்த்துவார்கள். சில இடங்களில் இரண்டு மூன்று கூட்டுச் சேர்ந்து வாசிப்பார்கள். ஒருமுறை மூத்த விநாயகர் கோவில் எட்டாம் திருவிழாவுக்கு பத்துக்கூட்டு மேளம், குழல். முன்னுக்கு இருந்து கேட்டவர்களுக்கு காது கிழிந்துருக்கும். எப்படியும் இவர்கள் ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிப்பார்கள்.

அதற்க்குப் பிறகு சிலவேளை பட்டிமன்றம் அல்லது வில்லுப்பாட்டு நடக்கும். பட்டிமன்றம் கம்பன் கழகக் குழுக்கள், கம்பன் கழகத்துக்கு நேரமில்லையென்றால் உள்ளூர் பேச்சாளர்கள். உள்ளூர் பேச்சாளர்களில் நவம் மாஸ்டர், நடராசா மாஸ்டர் இருவரும் சரியான பேமஸ். என்னவொன்று இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்தால் சிலவேளை பெரிய சண்டைகளே வரும். நானும் ஒரு சில மேடைகள் ஏறினேன் ஆனால் பெரும்பாலும் இவர்களது தலைப்புகள் பாரதம், இராமாயணம் என இருப்பதால் மெல்லக்கழண்டுகொண்டுவிட்டேன்.

வில்லுப்பாட்டுக்கு நல்லூர் ஸ்ரீதேவியும், சின்னமணி குழுவினரும் மிகவும் பிரபலம், அதிலும் ஸ்ரீதேவி அவர்கள் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டில் நடத்தும் போது பெண் குரலில் எல்லாம் கதைத்துப் பாடி நல்ல கைதட்டுப் பெறுவார்.

இதெல்லாம் முடிய கோஷ்டி தொடங்கும். கோஷ்டிகாரர்கள் தங்களை ஆயத்தப்படுத்த எப்படியும் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் அந்த இடையிலை சிலவேளைகளில் நல்ல நித்திரை கொண்டு எழும்புகிறது வழக்கம். எப்படியும் நித்திரையாகி இருக்கிறவர்களை மணிக்குரல் ஷண் அவர்களின் கணீர் குரல் எழுப்பிவிடும். ராஜன் கோஷ்டிக்கு அவர் தான் அறிவிப்பாளர்.

ஒவ்வொரு வாத்தியமாக அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்கள் மணிக்குரல் ஷண் என்பார் உடனே ராஜனின் பிரதான கீபோர்ட்டுடன் ஒரு ரம்ஸ் இசை வரும் அது அவர்களின் ரேட்மார்க் மியூசிக்.

எந்தக்கோயில் என்டாலும் முதலில் பிள்ளையார் பாட்டுத்தான் பெரும்பாலும் "பிள்ளையார் சுழிபோட்டு" என்ற பாடலுடனேயே ஆரம்ப்பிபார்கள். பிறகு முருகன் கோயில் என்றால் முருகன் பாடல், அம்மன் கோயில் என்றால் அம்மன் பாடல் என ஒரு சில பக்திப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் தாயக எழுச்சிப்பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சினிமாப்பாடல்கள் பாடுவார்கள். ஸ்டெனிஸ் சிவானந்தன், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் பிரபல பாடகர்கள். பலரின் பெயர்கள் ஞாபகம் இல்லை.

எப்படியும் கோஷ்டி முடிய விடிஞ்சுபோம். பிறகு அவசரமாக குளிச்சிட்டு பள்ளிக்கு போய் நித்திரை கொள்ளவேண்டியதுதான். சிலவேளை அடுத்த நாள் இன்னொரு கோஷ்டி இருக்கும். எப்படியும் பத்து நாள் திருவிழாவில் ஒரு ஐந்து முறையாவது இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

சில இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டி நட‌க்கும். கோயில் வடக்கு வீதியில் ராஜன் கோஷ்டி, தெற்கு வீதியில் சாந்தன் கோஷ்டி. அங்காலை கொஞ்சம் தள்ளி ரோட்டிலை அருணா என விளாசித்தள்ளுவார்கள்.

திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.

திருவிழாப்பார்க்கும் போது கச்சான்(மணிலாக் கொட்டை), சோளம், மஞ்சள் கடலை, கெளபி கரம் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கிறதும், லிங்கம் ஐஸ்கிறீம் வானில் சாமத்திலை அல்லது விடியப்புறத்திலை கோன் வாங்கிச் சாப்பிடுகிறதும் ஒரு சுகானுபவங்கள், மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

கடைசியாக நான் 2003ல் கோஷ்டி பார்த்தது இன்னும் இல்லை.

பின்குறிப்பு : ஆடி பிறந்தாளே ஊர்களில் திருவிழா தொடங்கிவிடும். திருவிழாவுக்கு போகமுடியாமல் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறவே ஈழத்துமுற்றத்தில் எழுதிய இந்தப் பதிவை மீண்டும் தந்திருக்கின்றேன்,

சுவாமி வந்தியானந்தாவின் தத்துவ மாலை

சுவாமி வந்தியானாந்தா சுவாமி விவேகானந்தர் போல் வரவேண்டியவர் கால நேர சூழ்நிலைகள் காரணமாக தன் திறமைக்கு ஏற்றது போல ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ஆசிரமம் நடத்திக்கொண்டிருப்பவர். அதனால் சில பல சீடர்களையும் ஓரிரு குருவை மிஞ்சிய சீடர்களையும் வைத்திருப்பவர். அவர் இடையிடையே உதித்த தத்துவ முத்துக்களை அவரின் அனுமதியுடன் பொறுக்கி இங்கே தத்துவ மாலையாக தந்திருக்கின்றேன். இங்கேயுள்ள கருத்துக்களுக்கு சுவாமி வந்தியானந்தாவே பொறுப்பு.

ஒரு பெண் எம்மைக் காதலிப்பது முக்கியமல்ல நாம் எத்தனை பெண்களைக் காதலித்தோம் என்பதுதான் முக்கியம்

ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை மணம் முடிப்பதில் உள்ள சூத்திரம் விளங்கவில்லை #சந்தேகம்

கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி கவிராஜன் எல்லாம் இருக்கின்றார்கள் ஆனால் ஏன் கவி இளவரசன் மட்டும் இன்னும் இல்லை #சந்தேகம்

ஆவின் பால் குடிப்பவன் எல்லாம் அமலா பாலைத் தேடுறான்

மதுவைப் போதைக்காக குடிக்காமல் மேசைக் கலாச்சாரத்துக்காக (Table Manners ) குடிப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல,

தமிழ்சினிமாவின் கனவுக்கன்னிகள் ஏன் எப்போதும் பிறமொழிக்கன்னிகளாகவே இருக்கின்றார்கள் #சந்தேகம்

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது. #சந்தேகம்

உணவு உடை உறையுள் போய் இனி பேஸ்புக் ட்விட்டர் கூகுள்+ என மாறும் #அத்தியாவசியம்

நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம்

சன் டீவியும் கலைஞர் டீவியும் முடக்கப்பட்டால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள் பெண்கள் தற்கொலை செய்வார்கள் #மெஹா சீரியல்

Google+ புதுப் பொண்டாட்டி மாதிரி ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கும் But Facebook காதலிபோல எல்லாமே பழகிவிட்டது #அவதானம்

குருவே பட்டும் தெளியாமல் இருக்கும் போது சிஷ்யன் மட்டும் படாமல் எப்படித் தெளிவது (என் முதன்மைச் சிஷ்யனுக்கு கூறியது)

அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்

ஐஸின் குழந்தையும் ஐஸ் பிறந்த அதே நவம்பரில் தானாம் டெலிவரி #அழகானவர்கள் அறிவானவர்கள் நவம்பரில் தான் பிறப்பார்கள்.

வங்கியில் பணம் மட்டுமல்ல காதலையும் வைப்புச் செய்யலாம். (விரைவில் இல்லறத்தில் இணையவிருக்கும் நண்பர் ஒருவருக்கு அருளியவாக்கு)

குக்கைத் திணறடித்த குஞ்சு

"நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை கெடுத்தது, யார்டா இந்த நேரத்திலை என நம்பரைப் பார்த்தால் 009477... என ஒரு இலங்கை நம்பரைக் காட்டியது.

தூக்க கலக்கத்துடன் "ஹலோ"

"ஹாய் மாம்ஸ் நான் தான் பவன்"

"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "

"மாம்ஸ் இங்கே விடிஞ்சுடுத்து"

"அடப்பாவி காலையிலையே உன் கடியா என்ன விசயம்டா"

"மாம்ஸ் உங்கே ஒரு கிழமைக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்க என்னை அனுப்புறாங்கள்"

"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"

"இல்லை மாம்ஸ் இது ஜஸ்ட் போர் எக்ஸ்சேஞ் ட்ரெயினிங்"

பவனின் ஆங்கிலத்திலையே பொடியன் ரெடியாகிவிட்டான் என்பது தெரிந்துவிட்டது.

"சரிடா எப்ப வாறாய்? பிளைட் விபரம் எல்லாத்தையும் மெயில் பண்ணு நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"

"எல்லாம் உங்களுக்கு இரவே மெயில் பண்ணிட்டன், இப்போ சுபாங்கன் அண்ணாவுடன் கட்டுநாயக்காவில் நிற்கின்றேன்"

"ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ"

மெயிலைத் திறந்து பார்த்தால் பவனின் கல்வி நிறுவனத்தில் சிறந்த பந்துவீச்சாளரான இவனை லோர்ட்ஸில் நடக்கும் 5 நாள் கோச்சிங் கேம்பில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பிதழும் பிளைட் விபரங்களும் அனுப்பியிருந்தான்.


நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு பிக்காடிலி லைனை அல்பேர்ட்டனில் பிடிச்சு ஒருமாதிரி ஹீத்ரு டெர்மினல் 4 க்கு சென்றுவிட்டேன்.

ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.

பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.

"டேய் யாரடா இவள் எங்கே பிடிச்சாய்?"

"ஹிஹிஹி இவள் மலேயில் ட்ரான்சிட்டில் என் பக்கத்து சீட்டில் ஏறியவள் என்னை ஸ்ரீலங்கன் கிரிக்கெட்டர் என நினைத்து ஒரே கிரிக்கெட் கதைதான், நானும் யா யா எனச் சொல்லி பிக்கப் பண்ணிட்டேன்"

"என்னடா?"

"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "

ஏற்கனவே அவள் பவனுக்கு முத்தமிட்டு என்னைக் கடுப்படித்துவிட்டாள் இதுக்குள்ளை அவளுடன் டின்னரோ என்ற ஆத்திரத்தில் "மவனே லேட்டாகுது வா" என்றபடி அவனின் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

என் ரூமில் லக்கேஜின் சிப்பைத் திறந்து எனக்கு நண்பர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை தந்தான்.


"ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார் அதனால் அவர் தன் சார்பாக இந்த நீலக் கலர் ரீசேர்ட்டை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார், அடுத்தமுறை நான் வரும் போது நளபாகம் ஸ்பெசல் வாய்ப்பான் தந்துவிடுவதாகச் சொன்னார்".

"ம்ம்"

"லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம். உவன் கோபி தான் வாங்கி வைத்த பருத்தித்துறை வடையை பசிக்குது என்று எயார்போட்டுக்கு வாறவழியிலையே சாப்பிட்டுவிட்டான். வதீஸ் அண்ணா அரசியல் கூட்டம் என்று மன்னாருக்கோ மட்டக்களப்புக்கோ போய்விட்டார் சந்திக்க கிடைக்கவில்லை, மற்றது எல்லாம் அனுவும் சுபாங்கன் அண்ணாவும் தந்தவை தான் என்றபடி முறுக்கு, ஊறுகாய், என ஊர்ச் சாப்பாடுகளை எடுத்து வெளியே வைத்தான். நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.

"ஓகேடா விடிய உனக்கு பிரெக்டிக்ஸ் இருக்கு நேரத்துக்கு படு"

அடுத்த நாள் காலையே லோர்ட்சில் பயிற்சிக்கு அவனை அழைத்துக்கொண்டு போனால் அங்கே இங்கிலாந்து டீமும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

"அடப்பாவி உனக்கு நல்ல அதிர்ஷ்டம்டா இண்டைக்கு"

"எனக்கு மலேயிலையே அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது" பவன்

சில நிமிடங்களிலையே பயிற்சி தொடங்கியது, பவனின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அதிவேகமாக ஓடிவந்து மெதுவாக ஸ்பின் போல வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள்.

இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜிம்மி அண்டர்சனோ பவனின் பந்துவீச்சில் மயங்கி பவனிடம் அவன் வீசும் பந்துவீச்சு என்ன வகை எனக் கேட்டார். பவனோ உடனடியாகவே இதன் பெயர் "பப்சர்" எனக் கப்சா விட்டான். "பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்" என விளக்கம் கொடுத்ததை கேட்டு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டாண்டிங் ஒவேசன் கொடுத்தார்கள்.

இந்த அலும்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சனியும் வியாழனும் டவுள் டெக்கர் போட்டு பவனின் தலையில் அமர்ந்துகொண்டதுபோல தெரிந்தது. பின்னை இவன் செய்வது கப்சா என்றால் என்னையும் சேர்த்து அடுத்த பிளைட்டில் டிப்போர்ட் செய்துவிடுவார்கள்.

ஆனால் பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள்.

சில நிமிடங்களில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு பயிற்சிப்போட்டி இங்கிலாந்து அணிக்கும் பயிற்சிக்காக வந்த ஏனைய நாட்டு மாணவர்கள் அணிக்கும் தொடங்கியது,

இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான்.

பவனின் பந்துவீச்சுகள் குக்கை திணறடித்தன. பவனின் வேகத்தைப் பார்த்து பந்து புல்டோசாக வரப்போகுது என குக் பேட்டை ஓங்க பந்தோ லெப்டில் பவுன்ஸ் பண்ணி யூடேர்ன் எடுத்து குக்கை குழப்பியது. கடைசியாக பவனின் ஆறாவது பந்து நேராகவே குக்கின் விக்கெட்டை தகர்க்க குக் பேட்டையும் களத்தே போட்டு விட்டு வெறும் கையோடு பவிலியன் திரும்பினார்.

பவனின் விளையாட்டைப் பார்க்கும் போது அடுத்த ஐபிஎல்லுக்கு ப்ரீத்தி சிந்தாவோ ஷில்பா ஷெட்டியோ பவனை ஏலத்துக்கு எடுக்கும் அபாயம் என் மனசுக்குள் மணி அடித்தது.

பயிற்சி முடிந்ததும் பவனும் நானும் வீடு திரும்பும்போது

" மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன், சொர்க்கமே என்றாலும் கூரேப் பார்க் போல வருமா ?"

தீடிரென்று பவன் என் காலில் விழுவது போல் இருந்தது
"டேய் ஏன்டா இதெல்லாம் நீ என் நண்பேன்டா எனச் சொல்ல "
"மாம்ஸ் நான் கழண்ட என் லேசைக் கட்டுறன் " வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.

இரவு படுக்கும் போது
"மாம்ஸ் எனக்கு இன்னொரு ஆசை இருக்கு நிறைவேற்றுவியளா?"
"என்னாடா ?"
"மரியா ஷரபோவாவுடன் விம்பிள்டனில் சென்டர் கோர்ட்டில் கலப்பு இரட்டையரில் விளையாடவேண்டும்"
எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.

காலையில் எழுந்து பார்க்கின்றேன் பவனின் பேஸ்புக்கில்

என்ற மெசேஜ் இருக்கின்றது.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு ஆக இருந்தது கிரேசி மோகனின் ஒரு கதை. அந்தக் கதையும் அதனுடன் எனக்கு நடந்த சம்பவமும் விரைவில் பதிவாக வரும்(எப்போ இன்னும் 2 மாதத்தின் பின்னரா என ஆதிரை கேட்பது போல பிரமை).

நிழலைத் திருடும் மழலை

"என்னமோ ஏதோ " என ஆலாப்ராஜின் குரலில் மாறனின் ஐபோன் சிணுங்கியது, நம்பரைப் பார்த்தால் புதிசாக இருந்தது,

"ஹலோ"

"டேய் நாதாரி என்னடா செய்கின்றாய்" என மறுபக்கம் கேட்ட வசனத்தை வைத்தே அந்தப் பக்கம் கதைப்பது ஆருரன் என்பது புரிந்தது. அவன் தான் ஹலோவுக்குப் பதிலாக நாதாரி என அழைப்பது அவன் ஒருத்தன் தான்.

"மச்சான் நான் கொழும்பிலை தான் நிற்கின்றேன் பின்னேரம் வெள்ளவத்தை கோசிக்கு வா, இதுதான் என்ரை நம்பர் ஓகேடா"

இதுதான் இவன்டை கெட்டபழக்கம் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணிவிடுவான்.

கிட்டத்தட்ட பத்து வருடத்துக்குப் பின்னர் அவனைச் சந்திக்கபோறேன்.

ஆரூரன் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் பிரபலமான மருத்துவன். இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கே இருதய மாற்றுச் சிகிச்சையில் மட்டும் செய்து இப்போ உலகம் பூராகவும் இளவயதில் பிரபலமானவன்.

மாறன் ஆருரன் இருவரும் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாகவே படித்தவர்கள். இருவரும் உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள், ஆருரன் மருத்துவத்துக்கு முதல் தரத்திலேயே எடுபட்டுவிட்டான். மாறனோ இரண்டாம் தடவையுடன் இதற்க்கு மேல் முயன்றால் ஒன்றும் கிடைக்காது என அந்தமுறை கிடைத்த விஞ்ஞானபீடத்துக்கு போய்விட்டான். இடையில் எதாவது பார்ட்டிகளில் சந்தித்தால் உண்டு. மற்றும்படி இருவரும் வெவ்வேறு துறைகளில் என்றபடியால் சந்திக்கவாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆருரன் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தபின்னர் மேல்படிப்புக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் ஏனோ தொடர்புகள் கால நேர மாற்றங்களினால் அறுந்துவிட்டன.

சரியாக 7 மணிக்கு ஆருரன் கோசிக்குள் நுழைய பின்னால் இருந்து ஒருதன் கட்டி அணைத்து மச்சான் எனக் கத்தினான்.

"டேய் நாதாரி நான் கே இல்லையடா கட்டிப்பிடிக்காதையடா " ஆருரன்

"இது உன்ரை அமெரிக்காஇல்லை இங்கே அன்பை எப்படியும் சொல்லலாம்."

ஓகேடா நல்ல டேபிளாக பார்த்து இருப்பம் என்றபடியே இருவரும் ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள்.

மெனு கார்ட்டைப் பார்த்தபடி முதலில் சூப்புடன் தொடங்கினார்கள்.

"சொல்லு மச்சான் எப்படி அமெரிக்க வாழ்க்கை?

"அடபோடா ஹாஸ்பிட்டல் வீடு என வாழ்க்கை போகின்றது,வீக் எண்டில் சிலவேளை பிரண்ட்ஸ், ரிலேட்டிவ் வீடுகளுக்கு விசிட் அடிக்கின்றது, சிலவேளை ஒன் கோல் என்றால் அதுவும் கட் தான்"

"ம்ம்ம் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் 9 தொடக்கம் 5 வரை வேலை" பிறகு வெள்ளவத்தையில் ரோட்டு அளத்தல் நைட் ஏதாவது படம் பார்த்தபடி தூங்கிவிட வேண்டியதுதான், அது சரி மச்சான் நீ ஏன் இன்னும் கட்டவில்லை?"

"ம்ம்ம் கட்டத்தான் வேண்டும் அம்மா பெண் பார்க்கின்றார் ஆனால் நான் தான் வேண்டாம் என தள்ளிப்போடுகின்றேன், என்னால் அவளை மறக்கமுடியவில்லையடா?"

"என்னாது அவளா? யாரடா அவள்?" கதை கேட்கும் ஆவலில் மாறன் எதிர்க்கேள்வி கேட்டான்.

"அவள்தாண்டா எங்களுடன் படித்த இந்துமதி."

"யூமீன் டொக்டர் இந்து? எனக்கு இந்தக்காதல் கதை தெரியாதே?"

"சொறிடா மச்சான் இந்தக் கதை எனக்கு மட்டும் தான் தெரியும் இப்ப உனக்கு மட்டும் சொல்றேன்டா"

மெழுகுதிரி சுழன்றது.


ஆகஸ்ட்டில் பைனல் சோதனை என்பதால் தாவரவியல் வகுப்பில் மாணவர்கள் படுமும்முரமாக வருங்கால மருத்துவர்கள் ஆக தீவிரமாக படித்துக்கொண்டிருந்தார்கள். வகுப்புத் தொடங்கி சில நிமிடங்களில் ஆருரன் கிரிக்கெட் உடையுடன் களைச்சு விழுந்து வந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த ஆசிரியர்

"நீ தேறமாட்டாய்? எக்சாமுக்கு இன்னும் 7 மாதம் தான் இருக்கு நீ இப்பவும் கிரிக்கெட் அடி பெரிய அசாருதீன் என நினைப்பு" என திட்டலுடன் நக்கலடிக்க வகுப்பே சிரித்தது.

ஆருரன் வந்த சில நிமிடங்களில் இந்துமதியும் "எக்ஸ்யூமி சேர்" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

"வாம்மா கவிதாயிணி உனக்கு என்ன கவியரங்கம், பட்டிமன்றமா? பிறகேன் வயோ படிக்க வந்தாய் போய் ஆர்ட்ஸ் படித்திருக்கலாம் தானே" மீண்டும் வகுப்பு சிரித்தது.

இந்துமதி அந்நியன் சதா போல இருப்பாள் சராசரியான உயரம், நீண்ட தலைமுடி, மின்னலடிக்கும் கண்கள், ஆனால் எந்த நேரமும் முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டிருக்கும், புத்தபெருமானின் மறு அவதாரம் என வகுப்பு ஆண்கள் நக்கலடிப்பது. சாதாரண தரத்தில் எட்டுப் பாடங்களில் அதிதிறமைச் சித்தி எடுத்து சாதனை படைத்தவள். வருங்காலத்தில் மருத்துவராக வேண்டும் என கடினமாகப் படிப்பவள் ஆனாலும் கவிதை, பட்டிமன்றம் என பலவிடயங்களில் ஆர்வம் திறமை இருப்பதால் அவற்றிலும் சில மணி நேரம் செலவளிப்பவள்.

ஆருரனுக்கு சில நாட்களாக இந்துமதியைக் கண்டால் மனதுக்கு ஏதோ இரசாயன பெளதிக வேதியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இதற்க்குப் பெயர் தான் காதல் என அவனின் மானசீக எழுத்தாளர் சுஜாதாவும் அனிதாவின் காதல்களில் எழுதியது ஞாபகத்துக்கு வர காதலர் தினம் அன்று எப்படியும் தன் காதலை இந்துமதிக்கு சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இன்டெர்மொட்டுக்குள் நுழைந்து அழகிய வெலன்டை கார்ட்டை அக்கம் பக்கம் யாரும் பாக்கின்றார்களோ என்ற பதற்றத்துடன் வாங்கிவிட்டான்.

இரவு பழைய விகடனில் இருந்த

"எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் எம்மைப்
பார்த்துக்கொள்ளட்டும்
காதலிப்போம் வா "

என்ற கவிதையைச் சுட்டு கார்ட்டில் எழுதி அடுத்தநாளுக்காக கனவுடன் தூங்கிவிட்டான்.

பலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் வழக்கம்போல் அந்த 14.02 விடிந்தது. லில்லி அவனியூ மூலையில் இந்துமதிக்காக ஆருரன் காத்துக்கொண்டிந்தான். நெஞ்சோ தடக்படக் என அதிவேகமாக அடிக்கத் தொடங்கியது. லில்லி அவ்னியூவுக்குள் இந்துமதி நுழையக் கண்டவுன் கொஞ்சம் முகத்தில் புன்னகை காதலடுன் அவளை நோக்கி நடந்தான்.

"எக்ஸ்க்யூஸ் மீ இந்து"
"ம்ம்ம் என்ன " கொஞ்சம் இறுக்கமாகவே இந்து கேட்டாள்.
"இல்லை இந்த கார்ட் உங்களுக்காக பிளீஸ் அக்செப்ட் இட்"
"வெரி சொறி எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எதிலும் நம்பிக்கை இல்லை" என்றபடி ஆருரன் நீட்டிய கார்ட்டை நாலாக எட்டாக கிழித்து ரோட்டில் வீசிப்போட்டு,
"இனிமேல் இப்படி நடந்து உங்கள் மேல் இருக்கும் மரியாதைக் குறைக்கவேண்டாம், ஒழுங்காக படித்து டொக்டராகவும், என் கனவும் அதுதான்" என்றபடி நடக்கத் தொடங்கினாள்.

ஒரு சிலநாட்கள் இந்தக் காதலின் வலி இருந்தாலும் தன் கனவுக்காக ஆருரன் நன்றாகப் படித்து மருத்துவனாகிவிட்டான். ஆனாலும் இன்னும் அவனால் அவளை மறக்கமுடியவில்லை.

"ம்ம்ம் இவ்வளவு விடயங்கள் நடந்திருக்கா? பரவாயில்லை விடடா உனக்கு என ஒரு தேவதை உந்த உலகத்தில் எங்கே ஒரு இடத்தில் காத்திருப்பாள் தேடு" மாறன்.

"அடே உனக்கு கலியாணம் முடிஞ்சுதா?" ஆருரன்
"ஓமோம் புரோபோசல் தான் நாளைக்கு நீ லஞ்சுக்கு வீட்டை வாடா"

அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை ஆருரன் அடித்தான்,

"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,

(யாவும் கற்பனையல்ல.)

டிஸ்கி : இதை சிறுகதையாகவோ புனைவாகவோ அல்லது ஒரு கட்டுரையாகவோ எடுப்பது வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.

நட்புகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என க‌ண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.

பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது.

உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான்.

பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.

பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு.

கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை.

இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.

சயந்தன்

ஆரம்பகால மூத்த‌ பதிவர், சாரலின் உரிமையாளர். இப்போது இலங்கைப் பதிவர்களின் அனைத்துலக சங்கத்தின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு பதிவுலகத்தை கூர்ந்து அவதானிக்கும் ஒருவர். நல்ல சிறுகதை எழுத்தாளர். இன்றைக்கு கூட முகநூலில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். நன்றாக நடனமாடக்கூடியவர் ஒருமுறை தன்னுடைய நடனம் ஒன்றை யூடூயூப்பில் இட்டு ட்விட்டரில் பகிர்ந்து அந்த ஒரு காணொளி மூலம் பல்லாயிரக்கணக்கான பிந்தொடர்பவர்களைப் பெற்றவர்.

தனது பிறந்தநாளுக்கு தன்னுடயகாதலி ஐபொட் பரிசாக தருவார் எனக் கனவு கண்டு அந்தக் கனவை இன்று நனவாக்க இருக்கின்றார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சயந்தன்.

கிருத்திகன்

வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார். அடிக்கடி சமூகத்தின் மீது தார்மீக கோபம் கொள்வது கிருத்திக்கு மிகவும் பிடித்த விடயம்.

நாளை(06.06.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011

அரசியல்

இலங்கை அரசியல் ஐநாவின் அறிக்கையுடன் ஒருபக்கம் போக இன்னொரு பக்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கெளத புத்தரின் வம்சாவழி என பிரபல சிங்களக் கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்த கருத்துக்கு சில சிங்கள ஆங்கில இணைய தளங்களில் பலத்த கண்டனம் எழுந்திருக்கின்றது.

ஜெக்சன் அண்டனியின் கருத்தின் பின்னால் பலமான அரசியல்தலைகள் இருப்பதுடன் இது ஏதோ ஒருவகையான பிரச்சார உத்தியோ என்ற சந்தேகமும் ஏனோ ஏற்படுகின்றது. பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே.

இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஜெ தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். பேயாட்சி முடிந்து இப்போ பிசாசு ஆட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்கள் தான் பாவம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது. கடந்தவருடம் செம்மொழியான தமிழ்மொழியாம் என கருணாநிதியின் புகழ்பரப்பிய மாநாட்டின் சுவடுகள் மறையும் முன்னர் கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் என சாதாரண பொதுமக்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள்.

கருணாநிதி வினைத்த வினைகளை அறுவடை செய்யத்தொடங்கிவிட்டார். வடிவேலுக்கு வடை மட்டுமல்ல வாய்ப்பும் போச்சே. சன் தொலைக்காட்சி ஜெயாபுகழைக் கொஞ்சம் கொஞ்சமாக பாடத்தொடங்குகின்றது. இனிமேல் கண்களும் பணிக்காது இதயமும் இனிக்காது.

விளையாட்டு

ஐபிஎல் திருவிழா முடிவடைந்துவிட்டது. சென்னை சூப்பர் சிங்கங்கள் மீண்டும் கோப்பையை வென்றுவிட்டார்கள். தோணிக்கு இனி வெல்லுவதற்க்கு எந்தக் கோப்பைகளும் இல்லை, ராசிக்கார கப்டன்.

நேற்று முந்தினம் வேல்ஸ் தலைநகர் கார்டிவ்வில் நடந்த இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக மழை தெரிவாகும் எனப் பார்த்தால், தில்ஷானின் புதிய வீரர்களோ இரண்டாவது இனிங்கிஸில் போனமச்சான் திரும்பிவந்தான் என்றதுபோல அணி நடை பயின்றார்கள். இங்கிலாந்துப் பத்திரிகைகளே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பெரும்பாலும் தங்கள் அணியை மிக உயரத்தில் வைத்து அல்லது மிகவும் கீழே வைத்தே எழுதுவார்கள் ஒரு நாளும் நடுநிலையாக(மன்னிக்கவும் நடுநிலை என்பது பதிவுலகத்தில் கெட்டவார்த்தை)எழுதுவதில்லை.

அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது,

சினிமா

அண்மைக்காலத்தில் பெரிதாக எந்தப் படமும் பார்க்கவில்லை, கோ மட்டும் ஓரளவு பிடித்திருக்கின்றது ஆனாலும் அயனில் இருந்த பரபரப்பான திரைக்கதை கோ ல் மிஸ்சிங். அஜ்மல் பாத்திரம் மூலம் படித்த இளைஞர் தலைவராக அரசியலுக்கு வந்தால் நக்சல்போல் தான் இருப்பார் என்ற நச்சுக் கருத்தை ஏன் கே,வி.ஆனந்த் விதைத்தார் என்ற மர்மம் புரியவில்லை. சாதாரணமாக பார்த்தால் நல்ல படம் வினவுக் கண்ணுடன் பார்த்தால் பல இடங்களில் முதலாளித்துவம் மின்னுகின்றது. பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சின்னத்திரை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இம்முறை உலகளவில் என கனடா, சிங்கப்பூர், நோர்வே என சில நாடுகளில் இருந்து பங்குபெறும் சில வெளிநாட்டவர்களுடன் நடக்கின்றது. இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸீ எல்லாம் உலகத்தில் தமிழர்கள் வாழாத நாடுகளா? திவ்யா என்ற ஒரே ஒரு பாடல் பாடிய பிரபல பாடகி தமிழைக் கொல்வதுடம் மலையாளிகள் உன்னியுடனும் சுஜாதாவுடனும் மலையாளத்தில் கொஞ்சுவது ஏதோ கேரளா சேனல்கள் பார்ப்பது போல் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் சில நேரங்களில் தொகுத்து வழங்குவது அருமையாக இருக்கின்றது. அதிலும் சுஜாதா பேசும் தமிழுக்கு ஒரு எபிசோட் தேவை, எத்தனை நல்ல தமிழ்ப் பாடகர்கள் பாடகிகள் இருக்கும் போது தமிழ் ஒழுங்காக கதைக்கத் தெரியாத சுஜாதாவை வைத்திருப்பதன் மர்மம் என்னவோ?

இந்தவாரம் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான் அறிவிப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார், வழக்கம் போல கோபி கலக்கல். நடுவராக நித்யஸ்ரீ கலந்துகொள்கின்றார் நித்யஸ்ரீயின் தமிழ் கேட்கும் போது இன்பத்தேன் பாய்கின்றது.

வலையுலகம்

சில காலமாக வலையுலகத்தில் விகடன், குமுதம் மலர்களில் வரும் கட்டுரைகளைச் சிலர் அப்படியே எடுத்து ஏதோ தாங்கள் எழுதியதுபோல் எழுதுவது வலைப்பதிவர்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நான் கருதுகின்றேன். உண்மைத் தமிழன் போல் சிலர் மட்டும் அடைப்புக்குள் அந்தப் பத்திரிகைகளுக்கு நன்றி சொல்கின்றார்கள். இதைவிட கேலிக்குரியது என்னவென்றால் அந்தப் பதிவை கொப்பி பேஸ்ட் செய்த பதிவரின் அபிமானிகள் அந்தக் கட்டுரையே அவரே எழுதியதுபோல் அவரைப் புகழச் செய்வதைப் பார்க்கும் போது பதிவை வாசிக்காமல் டெம்ளேட் புகழுரைபோல் தெரிகின்றது. ஆரோக்கியமாகச் செல்லும் வலையுலகத்தில் வேண்டாமே இந்த ஈயடிச்சான் காப்பி பதிவுகள். சிலவேளை இவைதான் கிரியேட்டிவ்வான பதிவுகளோ தெரியவில்லை.

என் உளறல்

மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் வலையுலகம், ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஆனாலும் இடைக்கிடை வலையுலகத்தை எட்டிப் பார்பேன். அதாவது இம்சை தொடரும். எத்தனையோ விடயங்கள் எழுதமுயற்சித்து இடைவெளியில் நிற்கின்றது.

படித்ததில் சிரித்தது

திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் வென்றிருக்கும் யுவராசா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

படித்ததில் ரசித்தது.

கடவுள் மனிதர்களை படைத்தான், மனிதன் இசையைப் படைத்தான், இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)

பார்த்ததில் ரசித்தது

இதுவும் இசைஞானியின் பாடல் தான். ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா ஜெயராம் அலைஸ் பாக்கியராஜின் நடனமும் கலக்கல். பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.

கானா என்ற நட்புக்கு

"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" : ஆயில்யன்

கானா என்றால் இசைப் ப்ரியர்களுக்கு கானா உலகநாதனும் இசையமைப்பாளர் தேவாவும் நினைவுக்கு வருவார்கள் ஆனால் வலைப்பதிவர்களுக்கோ கானா பிரபா என்ற அழகான வதனத்தையும் சிரிப்பையும் கொண்டு உலகம் சுற்றும் உலாத்தல் பதிவர் தான் ஞாபகம் வருவார்.


ஒரு கறுத்தகொழும்பான் மாம்பழத்துடன் எங்கள் உறவு ஆரம்பித்தது. அதன் பின்னர் நான் வலையெழுத வந்தமைக்கும் கானாவின் நட்பும் ஒரு காரணம்.

நேரடியாக இதுவரைக் காணாவிட்டாலும் தினமும் இவரின் சிட்னியில் காலை இனிதே விடிந்தது என்ற ட்விட்டைப் படித்துவிட்டு தான் நான் நித்திரைக்கே போவது, தொலைபேசியில் உரையாடி இருந்தாலும் ஈமெயில்களீனூடும் சமூக வலைத்தளங்களினூடும் கானாவுடன் உரையாடுவது என்பது இனிமையானது.


வலையுலகில் உலாத்தல் கட்டுரைகள், இசைப்பிரிப்புகள், நேர்முகங்கள், ஈழத்து மரபுகள், தமிழ் சினிமா விமர்சனம் எழுதாவிட்டாலும் மலையாள சினிமா விமர்சனம் ஆங்கில சினிமா விமர்சனம் என பலதரப்பட்ட காத்திரமான பதிவுகளை எழுதும் சீரியசான பதிவர்.

என்னைப்போன்ற யூத்துகளுக்காக தனது லுமாலா சைக்கிள் காலக் காதல் கதையை எழுதி மேலிடத்தில் இருந்து வந்த செல்ல மிரட்டலுக்காக அதனை நிறுத்திய காதல் இளவரசன்.

ட்விட்டருக்கு வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனச் சொல்லியபடி கானா வரும் அழகை ரசிக்கவே அவரின் நட்புகள் காத்திருப்பது வழக்கம். அதிலும் கானா வந்தால் தான் ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்க்கும் எங்கள் அன்புச் சின்னப்பாண்டி ஆயில்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்கவர்(சின்னப்பாண்டி அண்ணோய் விரைவில் உங்களுக்கும் ஸ்பெசல் போஸ்ட் ரெடி ).

சினிமாப் பாடல்களில் அண்ணன் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். எந்தப்படத்தில் எந்தப்பாட்டு எனச் சந்தேகம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார். அதிலும் எங்கள் இசைஞானியின் பரமரசிகர்(இது ஒன்றே எம் இருவரையும் பிணைக்கும் இன்னொரு சங்கிலி). அதனால் தான் என்னவோ இராமராஜனின் தீவிர விசிறி.

ஆஸியில் தமிழ் வானொலி ஒன்றில் கானாவின் நிகழ்ச்சியை பல தடவை கேட்டு மகிழ்ந்துள்ளேன். எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தை அதிகம் நேசிப்பதனாலோ என்னவோ இவரின் நிகழ்ச்சி ஒன்றிற்க்கு முத்துமணி மாலை எனப் பெயரிட்டிருக்கின்றார். முத்துமணி மாலையும் அதில் அண்ணனின் பாடல் தெரிவுகளும் சிறப்பாகவே என்றைக்கும் இருக்கின்றது. அத்துடன் அண்ணன் சிறந்த மிமிக்ரிக் கலைஞரும் கூட, முத்துமணிமாலை நிகழ்ச்சி முன்னோட்ட விளம்பரத்தில் சிறுகுழந்தையின் குரலில் பேசுவது வேறுயாருமல்ல எங்கள் அண்ணன் கானாவே.

சரோசா அக்காவின் சாப்பாட்டுக்காகவே பகல் பந்தி என்ற வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர். இணையத்தில் சகல வானொலிகளையும் கேட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் எந்த வானொலியில் நடக்கின்றதோ அதனை ஏனையோருக்கு அறியத் தந்து தான் பெற்ற இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கர்ணன் இவர்.

அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவை எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).

நடிகைகள் ரசனையைப் பொறுத்தவரை அந்தகாலத்து பத்மினி வரை இந்தக்காலத்து ஹன்சிகா மேத்வானி வரை பாரபட்சமின்றி யூத்தாக மாறி ரசிப்பார். வெள்ளைக் கரப்பான் தமன்னாவினை ரசிப்பது எங்களின் இன்னொரு உறவான முன்னாள் பதுங்குகுழிப் பதிவர் டொன்லீக்கு பிடிக்காமல் தமன்னாவை தனது தம்பிக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டாராம்.

அண்மைக்காலமாக தனது உடம்பைத் தேர்த்திக்கொள்ள ஜிம்முக்கும் மனதைத் ஒருமுகப்படுத்த கோவிலுக்கும் செல்கின்றாராம்.

கானாவைப் பற்றி நிறைய எழுதலாம் ஆனாலும் இப்படியான பாராட்டுகளை அவர் என்றைக்கும் விரும்புவதில்லை.

இன்று (14.05.2011)தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் அண்ணன் ட்விட்டர் மன்னன் உலாத்தல் பொடி கானா பிரபாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் அதே கள்ளச்சிரிப்புடனும் கலகலப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல மடத்துவாசல் பிள்ளையாரையும் சிட்னி முருகனையும் வேண்டுகின்றேன்.

கன்னியின் செல்வன் - வரலாற்று மொக்கை

முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.

அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள்.

மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள்.

கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.

டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?

பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.

டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன்

லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?

வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்

லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.



கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.

டொன்லீ : அருள்மொழிவர்மனாக‌ லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும்.

வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான்.

கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே?

வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம்,

வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து

கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன்.

லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,

ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.

நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள்.

வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.

கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?

டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.

அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான்.

வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.

தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென

கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.

வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.

கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.

மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.

வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.

கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.

மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?

லோஷன் : ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.

கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?

டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.

கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.

வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.

லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.

வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.

ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.

கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.

லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.

டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது.

நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.

லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.

கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.

வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார்.

வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்

லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.

பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.

லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி

கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்.

மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்

லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.

டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.

கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.

டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.

கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.

ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?

வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.

லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.

எல்லோரும் ஒட்டுமொத்தமாக : அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .

எவன்டி உன்னைப் பெத்தான் - பின்நவீனத்துவப் பாடல்

அண்மைக்காலமாக நடிகர் சிம்பு எழுதிய வானம் படத்தின் எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியிருந்தாலும் சிலரிடம் பலத்த அடியும் வாங்கியிருக்கின்றது. அந்தப் பாடலில் மறைமுகமாக இருக்கும் தத்துவங்களை விளக்கவே இந்தப் பதிவு,

மிக முக்கிய குறிப்பு : இது ஒரு சீரியஸ் பதிவு ஆனாலும் கும்மிக்கு இடமிருக்கு,

பாடல் ஆரம்பிக்கும் போதே தமிழர்களின் சொந்தமொழியான ஆங்கிலத்தில்

Oh baby I feel like flying
Flying above up in the air
When I look at you looking and me like
you wanna make love to me then,

இந்த வரிகள் வருகின்றன. எனக்கு ஆங்கிலம் தெரியாதபடியால் இதனை விளங்கபடுத்த முடியவில்லை (இதனை விளங்கபடுத்தினால் கடைசியாக வரும் ஆங்கில வரிகளுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டும் அதனை விட ஆங்கிலம் தெரியாதவனாக இருப்பதே மேல்)

உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்.


இந்தவரிகளில் கவிஞர் சிம்பு அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற இராமாயண வரிகள் போல தன் காதலியைத் தான் பார்த்த அந்த வினாடியே தன்னை அவளிடம் தொலைத்துவிட்டதாக கூறியிருக்கின்றார். என்றைக்கும் ஆண்கள் தான் பெரும்பாலும் காதலில் தொலைகின்றார்கள் என்பதையும் இந்த இடத்தில் மறைமுகமாக காணோம் என்ற வரிகளில் சொல்கின்றார்.

சத்தியமா எனக்கு நீ வேணாம்,
கண்டிப்பா எனக்கு நான் வேணும்..

இந்த வரிகள் காதல் தோல்வியில் காதலியை வேண்டாம் எனச் சொல்கின்றாரா என நினைத்தால் அதுதான் இல்லை, ஏற்கனவே முதல் வரியில் அவளிடம் தன்னைத் தொலைத்தபடியால் அவளுக்குள் இருக்கும் அவனும் அவனுக்குள் இருக்கும் அவளும் தான் இங்கே உவமையாக காட்டப்படுகின்றது, நீ வேணாம் என்றால் காதல் தனக்கு தன்னுடைய இதயத்தை வேண்டாம் என்கின்றார். அதேமாதிரி நான் வேணும் என்பது காதலி வேண்டும் என்பது பொருள்.

ஒன்னு என்ன கண்டுபுடிச்சு குடு,
இல்ல ரொம்ப simple உன்னை எனக்கு குடு,
இல்ல தயவுசெஞ்சு ஒரு Gunனெடுத்து என்ன சுடு.


இந்த வரிகளில் காதலும் வியாபாரம் தான் என்பதை கவிஞர் அழகாக நிலையுறுத்துகின்றார். தன்னை தன் காதலி கண்டுபிடிக்கமாட்டார் ஆகவே அவர் கட்டாயம் தன்னை காதலுனுக்கு கொடுக்கவேண்டும் என்ற கொடுக்கல் வாங்கல் இங்கே காட்டப்படுகின்றது. அதே நேரம் காதலிலும் வன்முறை உண்டு என்பதைக் காட்ட Gunனெடுத்து என்ன சுடு என்கின்றார், இந்த இடத்தில் கவிஞரின் சிலேடை புகுந்து விளையாடுகின்றது Gun என ஆங்கிலத்தில் துப்பாக்கி எனவும் அர்த்தம் கொள்ளலாம் இல்லையென்றால் காதலி தன்னுடைய கண்ணால் பார்க்கவேண்டும் என்ற இரண்டாவது அர்த்தமும் கொள்ளலாம். கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்ற திருக்குறளின் அடிநாதம் தான் இந்த வரிகளில் தொனிக்கின்றது.

எவன்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்,
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்.

இந்த விஞ்ஞானபூர்வமான வரிகளுக்கு ஏன் பலரும் கண்டனம் தெரிவிக்கின்றார்கள் என்பது விளங்கவில்லை. எங்கடை ஊர்களில் யார் பெத்த புள்ளையோ என ஒரு சொலவடை உண்டு. அதனைத்தான் கவிஞர் சிம்பு கொஞ்சம் மாற்றி காதலியின் தாய்க்கும் தந்தைக்கும் அவரின் பிறப்பில் பங்குண்டு என்ற விஞ்ஞான விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதனை ஆணாதிக்க கருத்தாக பலர் விளங்கிக்கொண்டுள்ளமைதான் கவலையளிக்கின்றது.

முதலாவது சரணத்தில் தற்போதைய இளைஞர்கள் மட்டுமல்ல வயதுபோனவர்களும் பல மணி நேரத்தை செலவிடும் பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் என தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகளை காதலியுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். எத்தனை நாளுக்குத் தான் நிலாவுடனும் மலர்களுடனும் காதலியை ஒப்பிடுவது. 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களின் நினைவாகவே இருக்கும் பலர்போல காதலனும் தன் காதலியின் நினைவாக இருக்கின்றான் என்பதையே

என் Facebook statusசும் நீதான்,
என் Twitter tweetingகும் நீதான்,
என் Skype callலும் நீதான், நீதான்...
என் BBMமும் நீதான், என் FaceTimeமும் நீதான்,
என் iPhone iPad எல்லாமே நீதான்,
என் iTunes playlist நீதான்,
அதில் Love songகும் நீதான்,
அது play ஆகுற speaker நீதான்,

வரிகள் விளக்குகின்றன.

அடுத்த வரிகள் கவிஞரின் உச்சத்திறமையையே காட்டுகின்றன். உலகில் தாய் தந்தையருக்கு நிகரான எவரும் இல்லை என்பதுதான் வெளிப்படை உண்மை, அதையே உடைத்து தன் காதலியை தன் அப்பா அம்மாவுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். அத்துடன் தன்னுடைய சொத்தாக காதலியையே ஒப்பிடுகின்றார். இதற்க்கு எல்லாம் மேலாக கடவுளுடன் காதலியை ஒப்பிடுகின்றார். காரணம் இரண்டுமே பலருக்கு இன்னும் எட்டாத விடயம் என்பதால் கடவுளாகவும் கண்டுபிடிக்கமுடியாத விடயம் என்பதால் உயிர் எனவும் உவமிக்கின்றார்.

என் அப்பாவும் நீதான்,
என் அம்மாவும் நீதான்,
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்,
என் கடவுளும் நீதான்,
என் உயிரும் நீதான்,
எனக்கு எல்லாமே நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்...


இரண்டாவது சரணத்தில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையுடன் காதலியை ஒப்பிடுகின்றார், காலையில் எழும்பி பல் துலக்கும் பேஸ்டுடனும் பிரசுடனும் ஒப்பிட்டு என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதால் தலையை அழகுபடுத்தும் ஷவர் ஜெல்லும் தன் காதலிதான் என்கின்றார். இப்படியே பெண்களின் ஒப்பனைப் பொருட்களாக எல்லாம் தான் இருப்பதாகவும் புலம்பி ஹைலைட்டாக அவளின் வீட்டு வோட்ச்மேனாகவும் இருப்பான் என்பதைச் சொல்லி வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்க தான் சம்மதம் என்கின்றார்.

பின்னர் மனித உடம்பின் எலும்பு சதை இரத்தம் எல்லாவற்றிலும் தன் காதல் நிறைந்துள்ளது என புலம்புகின்றார். இறுதியாக காதலியின் நண்பனும் நான் தான், அவரின் காதலனும் தான் தான் என முடிக்கின்றார். இந்த இடத்தில் நட்பு காதலாக மாறலாம் என்ற தத்துவத்தைத் தொட்டுச் செல்கின்றார் கவிஞர் சிம்பு.

இப்படிப் பல அர்த்தங்கள் மறைந்திருக்கும் அற்புதமான பாடல் தான் எவன்டி உன்னைப் பெத்தான் என்றபாடல். இந்தப் பதிவைப் படித்தபின்னர் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் மறைபொருட்கள் துல்லியமாகத் தெரியும்.

கீழேயுள்ள காணொளியும் உங்களின் மனதை சந்தோஷப்படுத்தும்,



பின்குறிப்பு : இந்தப் பாடலின் வரிகளை எனக்கு தட்டச்சு செய்து தன்னுடைய வேலைப் பளுக்களுக்கிடையில் எனக்கு மின்னஞ்சிய எனது சிஷ்யன் கன்கோனுக்கும் மிக்க நன்றிகள்.

இந்தப் பாடலைக் கேட்டபின்னர் சிம்புவின் தந்தையாரின் "தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ! ..." என்ற கவித்துவமான வரிகள் எல்லாம் மறந்தேபோயின.

அந்தப்பாடலும் உங்கள் பார்வைக்கு.

உபகண்டத்தில் கிரிக்கெட் யுத்தம்

இலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.


அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே.

அவுஸ்திரேலியா

நடப்புச் சாம்பியனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் ; ரிக்கி பொண்டிங்

எதிர்வுகூறல் : அரை இறுதி

வங்கதேசம்

சொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.

கவனிக்கவேண்டியவர் : தமீம் இக்பால்

எதிர்வுகூறல் : கால் இறுதி

கனடா

தங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.

கவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன்

எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

இங்கிலாந்து

ஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.

கவனிக்கவேண்டியவர் : பீட்டர்சன்

எதிர்வுகூறல் :கால் இறுதி

இந்தியா

ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான்.

கவனிக்கவேண்டியவர் : யூசுப் பதான்

எதிர்வுகூறல் :இறுதிப்போட்டி

அயர்லாந்து

இன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்)

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

கென்யா

2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் :ஸ்டீவ் ரிக்கலோ

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

நெதர்லாந்து

இன்னொரு சாதாரண அணி அயர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

நியூசிலாந்து

பாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.

கவனிக்கவேண்டியவர் :டானியல் வெட்டோரி

எதிர்வுகூறல் :கால் இறுதி

பாகிஸ்தான்

உட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : அப்ரிடி

எதிர்வுகூறல் : கால் இறுதி

தென்னாபிரிக்கா

இதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.

கவனிக்கவேண்டியவர் :ஜாக் கலீஸ்

எதிர்வுகூறல் :அரை இறுதி

ஸ்ரீலங்கா

போட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்கை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம்.

கவனிக்கவேண்டியவர் :முரளிதரன்

எதிர்வுகூறல்: இறுதிப் போட்டி

மேற்கிந்தியத்தீவுகள்

ஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.

கவனிக்கவேண்டியவர் :சந்திரபோல்

எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறலாம்.

சிம்பாவே

இன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகளை மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது.

கவனிக்கவேண்டியவர் :பிரன்டன் டைலர்

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.

எந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.