மனித நேயம் வளர்ப்போம்

கடந்த சில காலங்களாக கருத்துக்களங்களிலும் வலைப்பூக்களிலும் ஒரு சிலர் ஜாதி வெறிகொண்டு அலைகின்றனர். அதிலும் அனேகர் இளைஞர் என்பது வேதனைக்குரியது. சென்ற தலைமுறைகளில் இருந்த இந்தப் பிரச்சனையை இன்னும் சிலர் தூக்கிப்பிடிப்பது ஏன் என்று புரியவில்லை. யாரோ ஒருவன் சில தேவைகளுக்காக அன்று எழுதியவையை ஏன் நாம் இப்பவும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இந்த களங்கம் தமிழர்களிடையே மட்டும் பெரிதாக இருப்பது வருந்தத்தக்கது.

உலகத்துக்கு திருகுறள் என்ற பொதுமறை தந்தவர்கள் நாம். வீரத்தையும் காதலையும் மிக அழகாக புறநானூறூ அகநானூறு என்று தந்தவர்கள் நாம், தொல்காப்பியம் எனும் அழியாப்புகழ் பெற்ற வாழ்க்கைனெறிகளைக் கூறும் நூலையும் தந்தவர்கள் நாம் , இப்படி பல விழுமியங்களை உடைய நாங்கள் இன்றும் ஜாதி என்னும் நச்சு செடியை வளர்ப்பது முறையா?

இந்த ஜாதியைப் பற்றிக் கதைக்கும் எல்லா இடங்களிலும் ஏன் பிராமணர்களை மட்டும் தாக்குகிறிர்கள்? சிலர் பிராமணர்களையும் யூதர்களையும் ஒப்பிட்டுக்கூட எழுதுகிறார்கள். இதுவரை எந்தப்பிராமணராவது வன்முறையில் இறங்கியிருக்கிறார்களா? அவர்களின் மூதாதையர் தவறு செய்திருந்தால் ஏன் தற்போதைய சந்ததியை தூற்றுகிறீர்கள்?

இத்தகைய நிலையை இளைஞர்களாகிய நாம் ஏன் மாற்ற முடியாது? சுவாமி விவேகானந்தர் தனக்கு நல்ல 100 இளைஞர்களை கொடுத்தால் உலகையே மற்றூவேன் என்றார் ஏன் நாம் சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களாகி இந்த உலகை திருத்த முடியாது? முதலில் இந்த ஜாதி வெறியை மாற்றுவோம்.

இதற்கு என்ன செய்யவேண்டும்?

இனிவரும் காலங்களில் ஜாதி மத இன வெறி பிடித்த வலைப்பூக்களை தவிர்ப்போம்

ஜாதி பற்றிய திரெட்டுகளை ஆரம்பித்தால் அந்த தலைப்புகளை தவிர்ப்பதுடன் அதை எழுதுவரையும் புறக்கணிப்போம்.

கருத்துக் களங்களாயின் அவற்றை நடத்துபவர்கள் ஜாதி பற்றி எழுதுபவர்களை இடை நிறுத்தலாம்.
ஜாதி பற்றி எழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள் சஞ்சிகைகள் என்பவற்றை வாங்குவதை நிறுத்துவோம்.

ஜாதிக் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பதை முற்றாக தவிர்த்தல்.(இது சிலவேளைகளில் அவர்கள் சேரும் கூட்டணிக்கட்சி நல்லதாயின் மறைமுகமாக அவர்களை ஆதரிப்பதுபோல் வரும்).

இப்படி பல சொல்லிகொண்டிருக்கலாம். ஆனால் இவை நடமுறைக்கு சாத்தியமா?

இந்த கட்டுரைக்கே நான் ஜாதியை ஒழிப்போம் வாருங்கள் என தலைப்பிடாமல் மனித நேயம் வளர்ப்போம் என தலைப்பிட்டதே தலையங்கத்தில் கூட ஜாதி வரக்கூடாது என்பதற்காகத்தான்.

வாருங்கள் நண்பர்களே ஒன்றாக வடம் பிடிப்போம். ஜாதி என்ற அரக்கனை ஒழிப்போம். இளைஞர் சக்தியை உலகிற்கு உணர்த்துவோம்.