காதல்... காதல்... காதல்...

நேற்றைய விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் தற்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலில் தோற்றவர்களும் விவாதித்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கரு.பழனியப்பனும், பாடகி கல்பனாவும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பலரும் பலதைப் பேசினாலும் ஹைலைட்டான விடயமே மூன்று பெண்களின் கருத்துக்கள் தான்.

முதலாமர் ஒரு பெண்மணி காதலிக்கும் வயசில் தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறினார். இவர் தன் மாமனை விரும்பியதாகவும் மாமன் அதிகம் படிக்கவில்லை என்பதால் பெற்றோர்கள் சடுதியில் பணக்கார மாப்பிள்ளை ஒருவரை மணம்முடித்துக்கொடுத்ததாகவும், பெற்றோர்களின் விருப்பத்தை தட்டவிரும்பாதபடியால் தன் மனதுக்கு ஒவ்வாத அந்த திருமணத்தைச் செய்ததாகவும், தன் முதலிரவிலே தன் கணவனுக்கு மாமனுடனான காதலைச் சொல்ல அவர் தன்னை தன் மாமனுடன் சேர்த்துவைக்கிறேன் என்றாராம். பின்னர் தான் குடும்ப கெளரவம், கலாச்சாரம் போன்றவற்றைக் கருது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இன்றைக்கும் தன் மாமனை நெஞ்சில் சுமப்பதாகவும் கூறினார். இவரது மாமன் இன்னமும் திருமணம் செய்யவில்லையாம். இவர் தன் கணவரை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்வதாக 10 வருடங்களுக்கு முன்னர் கூறியதாகவும் சொன்னார்.

அவரது காதலை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் ஒரு பெண் அதுவும் திருமணமான பெண் தன்னுடைய பழைய காதல் பற்றி பொது இடத்தில் தொலைக்காட்சியில் பேசியது துணிச்சலாக இருந்தாலும். அவரது பல கருத்துக்கள் முரண்பாடாகவே இருந்தன. காதலைனையும் விட மனமில்லை அதே நேரம் கணவனுடன் ஏனோ தானோ என வாழ்வதாகவும் கூறினார்.

இந்தப் பெண் செய்வது சரியா?

இன்னொருவர் இளைஞி4 நாட்களுக்கு முன்னர் தான் காதல் முறிந்ததாகவும் தன் வீட்டில் தன் காதலை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஆனாலும் காதலன் தன்னை விட்டு விட்டு இன்னொருவரைக் காதலிப்பதுடன் கூடாத பழக்கங்கள் பழகுவதாகவும் குறிப்பிட்டார். இன்றைக்கும் தன் காதலன் மனம் மாறினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருப்பதாகவும் தன் காதலனுக்கு தொலைக்காட்சியினூடாக தன் விருப்பத்தையும் அறிவித்தார். அவர் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அடுத்த எதிர்முகாமில் இவரது நண்பி ஒருவர் இருந்தார். அவர் பேசும் போது தன் நண்பி காதலனைப் பிரியும்போது கூட இவ்வளவு உணர்ச்சி வசப்படவில்லை என்றும் இன்றைக்கு அந்தப் பிரிவு அவரை வாட்டுவதாகவும் நண்பிக்கு ஆதரவு கொடுத்தார்.

அடுத்த இளைஞி பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். தன் காதலனை செருப்பால் கல்லூரியில் மாணவர்களுக்கு முன்னிலையில் அடித்ததாக ஆங்கிலத்தில் கூற கோபிநாத் அதனை தமிழிழும் ஒருக்கால் சொல்லுங்கள் என தமிழிழும் கூறினார். தான் அடித்தபின்னர் தன் காதலன் தன்னை திருப்பி அடிப்பார் என எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தன் தவறை ஒத்துக்கொண்டதுபோல் சென்றுவிட்டார் என்றும் கூறினார். தன் காதலன் வேலையற்று இருக்கிறார் என்றும் அவரது செலவுகளை தானே செய்ததாகவும் நம்பமுடியாத ஒரு உண்மையையும் சொன்னார்.

இவரை மீண்டும் அதே காதலுடன் சேர்வீர்களா எனக்கேட்டபோது 50% சேரும் ஆசை இருப்பதாகவும் 50% அவரை கைவிடுவது சரியென்றும் சொன்னார். இரண்டும்கெட்டான் மனநிலையில் இருக்கின்றார்.

இந்த மூன்று பெண்களும் துணிச்சலாக தம் கருத்துக்களை வெளியிட்டார்கள், மூன்று பேரும் வெவ்வேறு மனநிலையிலும் இருக்கிறார்கள். பாவம் காதல் இவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது.

காதலில் தோற்ற அனைவரும் ஒட்டுமொத்தமாக இனி ஒரு காதல் தங்கள் வாழ்க்கையில் இல்லையென்றார்கள்.

காதலித்துக்கொண்டிருப்பவர்களின் பேச்சுக்கள் சுவாரசியமாக இருந்தபோதும் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இப்படியொரு காதலி/காதலன் இல்லையே என பொறாமை ஏற்படுத்தியது.

இன்னொரு சுவாரசியமான தலைப்பில் கோபிநாத் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு நடத்தினாலும் சிறப்பு விருந்தினர்களை அதிகம் பேசவிடவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

5 கருத்துக் கூறியவர்கள்:

priyamudanprabu சொல்வது:

சிங்கபூரில் இன்னும் ஒளிபரப்பாகவில்லை
பார்த்துவிடு சொல்கிறேன்

கிடுகுவேலி சொல்வது:

முதல் பெண்மணி செய்வது தவறு என எனக்கு படுகிறது. இதைத்தானே புஷ்பா தங்கதுரை எழுதிய "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது" என்ற நாவல் மூலம் ஒரு உண்மைக்கதையை சொன்னார். அது திரைப்படமாக கூட வெளிவந்தது. இதே நிலைதான். பின்னர் சுஜாதா மனம் மாறி சரத்பாபுவுடன் வாழ்வது போல இருக்கும். என்னதான் துணிச்சல் இருந்தாலும் இப்போது ஏனோ தானோ என வாழ்கிறேன் என்பது அபத்தமே.

காதலில் வென்றவன் சொல்வது:

//என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இப்படியொரு காதலி/காதலன் இல்லையே என பொறாமை ஏற்படுத்தியது. //

இளநீர் குடியுங்கள் வயிற்றெரிச்சல் குறையும்

Unknown சொல்வது:

முதல் பெண்மணி செய்வது தவறு வந்தி.. அவரது கணவர் அவரை அவரது மாமனோடு சேர்த்துவைக்கத் தயாராக இருந்திருக்கிறார்... திருமணமாகி பிள்ளைகள் பிறக்க முன்னமே...முடிவு இந்தப் பெண்ணின் கையில் இருந்தபோது கலாசாரம் கருதி மாமனை மணக்க மாட்டேன் என்றாராம். இப்போ தன்னுடைய வாழ்க்கை போய்விட்டதே என்ற ரீதியில் பேசுகிறார். இத்தனைக்கும் இப்படி பேசுவதையும் அந்தக் கணவர் அனுமதிக்கிறார்... எனக்குத் தெரிந்து அந்தப் பெண்மணி காதலையும் திருமண உறவுகளையும் கொச்சைப் படுத்திவிட்டார்

J.P Josephine Baba சொல்வது:

எனக்குத் தெரிந்து அந்தப் பெண்மணி காதலையும் திருமண உறவுகளையும் கொச்சைப் படுத்திவிட்டார்
நானும் ஆமோதிக்கின்றேன்.முகமூடி அணிந்துள்ள பெண்கள். உண்மை காதல் இதுவல்ல ஒருவரின் நல்லதும் கெட்டதும் ஏற்று அவரை அவராக ஏற்று கொள்வது இப்படி பொதுத் தளத்தில் பேசுவதால் உண்மையானவர்கள் என்றில்லை பொய்மைக்கு அடையாளம் சேர்க்கின்றனர். ஒருவரை உண்மையாக காதலித்து விட்டு அடுத்தவருக்கு குழந்தை கொடுப்பது நினைத்து பார்க்க இயலாத துரோகM!!!