கர்னாடக சங்கீதத்தில் புறக்கணிக்கப்படும் தமிழிசை

விஜய் தொலைக்காட்சியின் "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகளில்" சிறுமி ஒருவர் கடந்தவாரம் கர்நாடக சங்கீதத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என மிகவும் காட்டமாகவும் காத்திரமாகவும் உறையாற்றினார்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழிசையும் தமிழ்ப் பண்களும் இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளே ஆன கர்நாடக சங்கீதத்தால் மெல்ல மெல்ல திட்டமிட்டபடி அழிக்கப்படுகின்றது.



தமிழ்ப் பண்களான கொல்லி, புறநீர்மை, நாட்டை, குறிஞ்சி என அழகிய தமிழ்ப் பெயர்கள் இன்றைக்கோ வாயினுள் நுழையாத வடமொழிப் பெயர்களான மாயாமாளவகௌளை, ஹரிகாம்போஜி, ஷட்விதமார்க்கிணி, கரகரப்ரியா என அழைக்கின்றார்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், தேவார திருமுறைகள், பாரதியார் பாடல், பாரதிதாசன் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்கள் தமிழில் இருக்க ஏன் மொழி புரியாத தெலுங்குக் கீர்த்தனைகளை பாடுகின்றார்கள். தமிழ்ப் பாடல்களைத் துக்கடா என அழைத்து கடைசியில் ஒரு நிமிடங்கள் மட்டும் பாடுவார்கள். எம் வீட்டில் அதிகமான உணவுகளை வைத்துக்கொண்டு ஏன் பிச்சை எடுக்கவேண்டும்?

பல சங்கீதமேடைகளில் தெலுங்குகீர்த்தனைகளைத்தவிர வேறு ஏதும் பாடுவதில்லை. அப்படிப் பாடினாலும் அவை துக்கடாக்களாத்தன் இருக்குமே தவிர ஒரு முழுமையான கீர்த்தனையாய் இராது. இந்த இசை ஜாம்பவாங்கள் அனைவரும் ஏதோ கர்னாடக சங்கீதம் தெலுங்கில் இருந்து பிறந்தது என எண்ணிக்கொண்டிரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல தமிழில் தான் அது முதலில் உருவானது பின்னர் கால ஓட்டத்தில் அது தெலுங்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் சொல்லுகிறார்கள் தமிழில் போதிய பாடல்கள் இல்லையென்று, ஐயா மேதாவிகளே நமது முண்டாசுக் கவிஞனின் பாடல்களே பல தலைமுறைக்கு போதும் அதனை விட நமது தேவாரதிருவாசகங்கள் பல நூறு தலைமுறைகளுக்கு போதும் பின் ஏன் நீங்கள் தமிழில் பாடாமல் தெரியாத மொழியில் பாடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்.கம்பன் விழா இசை வேள்வியில் திரு,ராஜ்குமார் பாரதி பாடினார்.

சீர்காழி சிவசிதம்பரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பாடினார். இதுவரை கம்பன் கழகம்( கன்னித் தமிழ் வளர்ப்பவர்கள்) ஒரு இசை வேள்விக்கேணும் சீர்காழி சிவசிதம்பரத்தை அழைக்கவில்லை. ராஜ்குமார் பார‌தியும் ஒரே ஒரு தடவை மட்டும்தான்.

ஒரு முறை கம்பன் கழக இசைவேள்வியில் பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ ஒரே இறுதியில் ஒரே ஒரு தமிழ்ப் பாடல் மட்டும் பாடி ஏனையவற்றை தெலுங்கில் பாடிச் சாதனை செய்தார்.

தமிழக இசைக் கலைஞர்கள் தான் தெலுங்கிற்க்கு மகுடம் சூட்டுகின்றார்கள் என்றால் நம்மவர்களும் தெலுங்கு மோகத்தில் மயங்கிவிட்டார்கள். அவர்களிடம் தமிழ்ப் பாடல் ஏன் பாடுவதில்லை எனக் கேட்டால் தமிழ்ப் பாடல்கள் பாடினால் தங்கள் திறமை தெரியவராதாம்!!

இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் பெயர்கள் கூட தமிழில் காண்பது அரிது. இசைக்கு மொழி இல்லை தான் ஆனால் தமிழர்களிடம் தமிழ்ப் பாடல்கள் அதிலும் பல நூற்றாண்டு தொன்மையான செம்மொழித் தமிழில் எத்தனையோ பாடல்கள் இருக்கும்போது அந்நிய மொழியில் ஏன் பாடவேண்டும்?

எமது முத்தமிழை ஒழிக்க பலர் பல்வேறு வடிவங்களில் அலைகிறார்கள் என்னை பொறுத்தவரை இவர்களிடமும் இருந்து எம் மொழியை காக்கவேண்டிய அவசியம் தேவை. சும்மா சினிமா படங்களின் தலைப்பை மாத்தசொல்லி போராடும் தமிழ்குடிதாங்கிகள் இதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சில வேளை இது மேல்தட்டு மேல்ஜாதி மக்களின் துறை என நினைத்து சும்மா இருக்கிறார்களா?

இது பற்றியும் சற்று சிந்திபோம்.

9 கருத்துக் கூறியவர்கள்:

கனககோபி சொல்வது:

உங்கள் வலைப்பதிவு முகவரியை மாற்றுங்கள் அண்ணா...
இது உளறல்ல.... உண்மை....

என்ன செய்வது...
தமிழைத்தவிர எல்லாமே வளர்கிறது.
எங்கள் தமிழில் வடமொழிச் சொற்களும், வேற்றுமொழிகளும் தான் இப்போது பிரதானமாகப் போய்விட்டன.
எனது பெயரில் கூட 'ஷ்' வருகிறது...
அதைப் பயன்படுத்துவதை பெரிதும் விரும்பாமல் தான் கனககோபி என்று பயன்படுத்தி கொண்டேன்...

சிந்துபைரவி படம் தான் ஞாபகம் வருகிறது............
என்ன செய்ய..........
ஏக்கப் பெருமூச்சுகள் மட்டுமே எங்கள் வாழ்க்கையாகிப் போயின....

சந்ரு சொல்வது:

நல்ல பதிவு.....


இன்று தமிழை வளர்க்கின்றோம் என்று மார்தட்டிக்கொண்டிருப்பவர்கள் இதுபற்றி சிந்திக்காது கவலைக்குரிய விடயமே. பின்னொரு காலத்திலேயே தமிழிலே இருக்கின்ற பல இனிய சொற்களும், கலைகளும் இல்லாதொழிந்து போய்விடும் என்ற கவலைதான் என்னுள்ளும்.

ஆனால் இது பற்றிச் சிந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டியவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பது பெருங்குறையே.

மருதமூரான். சொல்வது:

வந்தி……

இந்தப் காத்திரமான கண்ணியமான பதிவை நேற்றே இட்டிருக்கலாம். ஏன் நான் இவ்வாறு குறிப்பிடுகிறேன் என்று தங்களுக்கு புரிந்திருக்கும். தமிழிசை வளர்முகத்தில் செல்லாமைக்கு மரபு ரீதியிலான பின்னடிப்புக்களும் காரணம்.

யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:

எனக்கு சங்கீத ஞானம் பற்றி பெரிதாக தெரியாது எனினும் சில விடயங்கள் எனக்கு என்றும் உறுத்தலை தரும்.

அதிலொன்று இந்த புரியாத மொழியில் பாடும் சங்கீதம். இவை பற்றி கேள்வி கேட்டால் “நீ ஞானசூனியம் உனக்கு இது பற்றி தெரியாது” என கூறிவிடுவார்கள்.

உலக தமிழின தலைவராக தன்னை கூறிக்கொள்பவரும், தமிழில் திரைப்பட பெயர்கள் வைத்தால் தமிழ் வளர்ந்துவிடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

Subankan சொல்வது:

யோ அண்ணாவைப் போலத்தான் எனக்கும். சங்கீத ஞானம் பற்றித் தெரியாது. இந்தப் பிரச்சினை பலராலும் அலசப்பட்டிருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

வேந்தன் சொல்வது:

நல்ல பதிவு...
எனக்கு இசை பற்றி பெரிதாக தெரியாது...இருப்பினும் தமிழ் உணர்வு காரணமாக உங்கள் கருத்துக்களை ஆதரிக்கின்றேன். தமிழ் இசை மேதைகள் இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இது பற்றி தமிழோசையில் ஒலி பரப்பானது நினைவில் வருகின்றது.

Balavasakan சொல்வது:

ம்...ம் .....
நம்ம நாட்டு தமிழ் இலக்கிய பாடப்புத்தகத்தை எடுத்து பாருங்க அண்ணா
நாங்க படிக்கும் பொது இருந்த பல இலக்கிய பாடங்களை காணோம் அப்போது நாங்கள் படிக்கும் பொது திட்டி திட்டி தான் படித்தோம் இப்ப பாக்கும் பொது கவலையாய் உள்ளது

Kiruthikan Kumarasamy சொல்வது:

பிரச்சினை இதுதான் வந்தியண்ணா. ஒரு கர்னாடக சங்கீதக் கச்சேரிக்குப் போகிறீர்கள். முன் வரிசையில் இருந்து தப்புத் தாளங்கள் போடவேண்டும். அசந்தர்ப்பமாகக் கைதட்டவேண்டும். இப்படி எல்லாம் செய்து உங்களை இசை ரசிகர்களாகக் காட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உங்களை மதிக்கமாட்டார்கள். அதுவும் என்னைப் போல் கடைசி வரிசையில் இருந்து ஃபோனில் கேம் விளையாடினால் சொல்லவே வேண்டாம். இது இப்போது நடுத்தர வர்க்கத்தின் ஃபாஷனாகப் போய்விட்டது. கிறுக்குத் தனமான ரசிகர்கள் இருக்கும்வரை இப்படியான முட்டாள்தனங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதைவிடப் பெரீய்ய்ய்ய்ய்ய கொடுமை, ஒரு வகையான தோற்கருவி வாசிப்பவன் வித்துவான் இன்னொரு வகையான தோற்கருவி வாசிப்பவன் பறையன் என்று கலைகளுக்கிடையே வேறுபாடு காணும் கேவலமான மனப்பான்மை. இதனால்தான் கர்னாடக சங்கீதம், வீணைக் கச்சேரி இன்னபிறவற்றை ரசிப்பது உயர்வாகவும், நாட்டுக்கூத்தை ரசிப்பது தாழ்வாகவும் பார்க்கிற ஒரு மனநிலை எம்மவரிடம் பரவிவருகிறது.

பள்ளிக்கூடகாலத்தில் எனக்கு முன்னால் இரு தேர்வுகள் இருந்தன. கர்னாடக சங்கீதம் அல்லது சித்திரம். என்னதான் ஒரே உருவத்தையே ஆடு, மாடு, குதிரை, நாய் என்று வரைகிற அபார சித்திர ஞானம் இருந்தும் என்னால் சங்கீதப் பக்கம் திரும்பிப்பார்க்க முடியவில்லை. காரணம், வித்வான்கள் காட்டிய படம் அப்போதே எனக்கு பயமாக இருந்ததுதான்.

இந்தப் பிரச்சினையைத் 'தமிழார்வம்' என்கிற கண்ணாடி மூலம் என்னால் பார்க்கமுடியவில்லை. கலைகளுக்கிடையே காட்டப்படும் பிரிவினையும், கர்னாடக சங்கீதம் பற்றிய அபத்தமான ஒரு பார்வை அல்லது மிதப்புமே தமிழிசையை அழித்துச் செல்வதாகச் சொல்லமுடியும். அதாவது கர்னாடக சங்கீதம் பாடுவது அல்லது அதை ரசிப்பது ஒரு status தருவதாக ஒரு கட்டமைப்பு இருக்கிறது. (ஆங்கிலம் பேசுவது மாதிரி)... அவ்வளவுதான்

பால்குடி சொல்வது:

நல்ல கருத்துக்கள் வந்தியண்ணா,
நான் சொல்ல நினைத்ததைக் கிருத்திகன் சொல்லி விட்டார்.

// (ஆங்கிலம் பேசுவது மாதிரி)... அவ்வளவுதான்

எல்லாமே ‘படம்’ காட்டுவதற்காக என்று மாறிக் கொண்டு வருகிறது.

Blog Widget by LinkWithin