சந்தோஷ் ஹாசினி சுப்பிரமணியம்

அடடா எத்தனை நாட்களுக்குப் பின்னர் இப்படி ஒரு அழகான கவிதைபோன்ற தமிழ்ப் படம். அடிதடி இல்லை இரட்டை அர்த்த வசனம் இல்லை குத்துப்பாட்டில் தொப்புள் தரிசனம் இல்லை என தமிழ் சினிமாவின் பல நம்பிக்கைகளை உடைத்த படம். தெலுங்குப்படத்தின் ரீமேக் என்றாலும் அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா.


மகன் தந்தைக்கு இடையில் நடக்கும் பிரச்சனைதான் கதை. இடையில் நிச்சயதார்த்தம் காதல் என சில தவிர்க்கமுடியாத சம்பவங்களை நிறைய நகைச்சுவை கலந்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜா.

படத்தின் கதையை நேரில் திரையில் பாருங்கள்( நிச்சயம் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் திரையில் பார்க்கலாம்). விரும்பினால் உங்கள் தந்தையோ தாயோ ஸ்பொன்சர் செய்து பார்ப்பது இன்னமும் நல்லது.

நடிகர்களுக்கிடையிலான போட்டியில் முதலிடம் பெறுவது என்னவோ இதுவரை காலமும் பெயர் சொல்லும்படியாக எந்தப் படத்திலும் நடிக்காத ஹரிணி சாரி ஜெனிலீயாதான்.



அவரின் பெயர் ஹாசினி. இப்படியான பெண்களை நிஜத்தில் காண்பது அரிது. பிச்சைக்காரன் முதல் கொண்டு அனைவரிடம் நட்புடன் இருப்பது, எந்த நேரமும் வாய்மூடாமல் பேசியபடியே இருப்பது பின்னர் ஜெயம் ரவிக்கு தன் காதலைச் சொல்லும் விதம் என முற்பாதியில் விறுவிறுப்பாக பேட்டிங் செய்த அம்மணி கிளைமாக்ஸ் சீனில் பிரகாஸ்ராஜ்யுடன் பேசும் காட்சிகளில் சென்சரியே அடித்துவிட்டார். அதிலும் இரண்டாம் பாதியில் ஜெயம் ரவியின் வீட்டில் தங்கியிருக்கும் காலத்தில் ரவியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தன் வலையில் வீழ்த்தும் காட்சிகளில் செம கலக்கல். சில இடங்களில் ஓவர் டோஸ் போல் தெரிகின்றதை கொஞ்சம் குறைத்திருந்திருக்கலாம். இதே பாத்திரத்தை நம்ம அசின் செய்திருந்தால் இன்னமும் பிரமாதப்படுத்தி இருப்பார்.

அடுத்த விருது நம்ம செல்லம் பிரகாஸ்ராஜ்யுக்குத்தான். மனிசன் எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அசராமல் நடிக்கின்றார். எம் குமரனில் கண்டிப்பான தகப்பனாக இருந்தவர் இதில் அதிகம் அன்பைப் பொழிகின்றார் ஆனால் அந்த அன்புதான் தனக்கும் தன் மகனுக்கு எதிரி எனத் தெரியாமல். இறுதிக்காட்சியில் ஜெனிலீயா வீட்டு வாசலில் நிற்பதும் தன் மகனுக்காக சாயாஜி ஷிண்டேயுடன் சண்டைபோடுவதும் என தன் பங்குக்கு செல்லமும் நன்றாக உழைத்திருக்கிறார்,

மூன்றாவதுதான் ஹீரோ ஜெயம் ரவி. அண்ணன் உடையான் எதற்க்கும் அஞ்சான் என்பதுபோல் தன் அண்ணனை நம்பி மீண்டும் ஜெயித்திருக்கிறார். இவரது நடிப்பும் குரலும் நன்றாக மெருகேறிவிட்டன. குடித்துவிட்டு தந்தையைத் திட்டும் காட்சிகளிலும், சாயாஜி ஷிண்டேயுடன் வம்புக்கு போகும் காட்சிகளிலும் இறுதியாக பிரகாஸ்ராஜை எதிர்த்துப்பேசும் காட்சிகளிலும் தன் நடிப்பை நன்றாக காட்டியுள்ளார்.

கீதா ஜெயம் ரவியின் அம்மாவாக வந்து பொதுவாக எல்லாம் அம்மாக்கள் போலவும் மகனுக்காக பரிந்துபேசுகின்றார். இவர் பாட்டுப் பாடுவதாக காட்டியிருப்பார்கள் ஏனோ அந்தக் குரல் இவருக்கு பொருந்தவில்லை.

சந்தானம், சத்யன் , பிரேம்ஜி, காதலிக்க நேரமில்லை ஸ்ரீ (ஸ்ரீ நாத்) கொமடியில் கலக்குகின்றார்கள். முற்பாதியில் இவர்களின் லூட்டியில் தியேட்டரே அதிர்கின்றது. அதிலும் சந்தானம், பிரேம்ஜி, ஸ்ரீ பிரகாஸ்ராஜைச் சந்திக்கின்ற காட்சிகள் அசத்தல்.

எம் எஸ் பாஸ்கரும் அப்துல் கலாம் கெட்டப் எல்லாம் போட்டு தன் பங்குக்கு சிரிக்கவைக்கின்றார்.

சடகோபன் ரமேஸ் இந்தப் பிட்சிலும் ஸ்கோர் பண்ணவில்லை. ஏனோ தானோ என வந்துபோகின்றார். இதே கதிதான் கெளசல்யாவுக்கும் எந்த நேரமும் போனில் பேசிக்கொண்டிருக்கும் பாத்திரம், இவரை விட அந்த பேசியல் செய்யும் தங்கை அதிகம் கவருகின்றார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கும் ரகங்கள். பின்னணி இசையிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

சாதாரண தந்தை மகன் உறவுக்கு அழகான திரைகதையாலும் கவிதைத்தனமான சில வசனங்களாலும் முகம் சுழிக்க வைக்கதா நகைச்சுவையாலும் ரீமேக் படத்தையும் தன்னால் வெற்றிகரமாக தரமுடியும் என நிரூபித்த ராஜாவுக்கு பூந்தோட்டத்தையே பரிசளிக்கலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் ரோஜாப்பூவில் முற்கள் இருப்பதுபோல் அவற்றைப் பார்த்தால் சந்தோஷ் சுப்பிரமணியம் சந்தோசமான படம்.


13 கருத்துக் கூறியவர்கள்:

யாத்ரீகன் சொல்வது:

>>>> அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா <<<<

what has he done ?! he has just replicated exactly the same way as the Bomarilu movie.. scene by scene.. even dialogue by dialogue .. even the song lyrics are translated onese..

a dubbing artist could do this job of replication..

still the media is giving credits to raja as if he is a creative director..

வந்தியத்தேவன் சொல்வது:

மன்னிக்கவும் யாத்திரீகரே நான் தெலுங்குப்படம் பார்க்கவில்லை பார்க்க சந்தர்ப்பமும் கிடைக்காது ஆகவே ராஜாவைப் பற்றி என் விமர்சனத்தை எழுதியிருக்கின்றேன் அவ்வளவுதான்.

கானா பிரபா சொல்வது:

இந்தப் படத்தின் மூலம் "பொம்மரிலுவை" கடந்த மாதம் தான் பல தேடலுக்கு பின் சிங்கப்பூரில் வாங்கினேன். சம்திங் சம்திங் போல தெலுங்கு மூலத்தில் ஜோடிப் பொருத்தம் சிறப்பாக இருக்கும். அதனால் என்ன தமிழில் இப்படி நல்ல பொழுது போக்கு கிடைத்தால் ராஜா தாராளமாக கொப்பி அடிக்கலாம்.

நாதஸ் சொல்வது:

I agree with யாத்திரீகன் . They even copied the dressings... :(

பிரேம்ஜி சொல்வது:

நல்ல விமர்சனம். விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

D சொல்வது:

மக்கா....ராஜா ஒன்னும் பெருசா பண்ணிடல...நீங்க பாராட்டணும்னா பொம்மரீலு இயக்குனர் பாஸ்கர பாராட்டுங்க....ஏன்னா நீங்க கவிதைன்னு சொன்ன எல்லாத்தையும் அழகா யோசிச்சு...அத திரையிலும் உலாவ விட்டிருப்பார்....ராஜா உடை,இசை, நடிப்பு அப்டீன்னு எல்லாத்தையும் திருடியிருப்பார்....படம் நல்ல படம்...ஆனா ராஜாவோ..இல்ல ஜெயம் ரவியோ பாராட்டுக்குரியவங்க இல்ல....இந்த கதைய தமிழ்-ல எடுக்க முடியாமத்தான் தெலுகுல எடுத்தார் பாஸ்கர்....அவரும் தமிழன் தான்...ஒங்க விமரிசனத்துல அவருக்கு இடம் இல்லாத்ததுனாலதான்...இவ்வளவு பெரிய மொக்கை.....

வந்தியத்தேவன் சொல்வது:

பிரபா, நாதாஸ், பிரேம்ஜி, யொஜிம்போ வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

நாதாஸ், யொஜிம்போ நான் தெலுங்குப்படம் பார்க்கவில்லை யாத்திரீகனுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கவும் ஆற்றல்வேண்டுமல்லவா? அந்த ஆற்றல் ராஜாவிடம் நிறைய இருக்கின்றது இதற்க்கு சிறந்த உதாரணங்கள் அவரின் ரீமேக் படங்கள். ஆங்கிலப்படங்களைச் சுட்டபின்னர் அந்த தவறை ஒத்துக்காத இயக்குனர்களுக்கு மத்தியில் ஒருபடத்தை தமிழில் தரும் ராஜாவில் என்ன குற்றம். சிலவேளைகளில் சுயமாக தமிழிலையே கதைபண்ணி இயக்க ராஜாவால் முடிந்தால் ஏன் வீண் ரிஸ்க் என நினைத்து படம் எடுக்கவில்லையோ தெரியாது.

ஸ்ரீமதன் சொல்வது:

இருக்கலாம் வந்தியத்தேவன் .நீங்கள் சொல்லும் மொழி மாற்றம் ஆங்கில படங்களில் இருந்தோ , ஈரோப்பிய படங்களிலோ,மிக குறைந்த பட்சமாக வடமொழியில் இருந்தோ செய்யப்படும் பட்சத்தில் ஒத்து கொள்ள பாட வேண்டியதே.ஆனால் இயக்குநர் ராஜா செய்வது அப்படிப்ட்டதல்ல.தமிழவருக்கும் தெலுங்க்கருக்கும் குடும்ப அமைப்பு,உடை,கலாசாரம்,பண்பாடு மற்றும் இன்ன பிற விசயங்களும் ஒன்றே போல மிகவும் ஒத்து போக கூடியவை(வேறுபாடுகள் மிக குறைவே).தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து கதையை மட்டும் எடுத்து கொண்டு தமிழவருக்கு மாதிரி சொல்ல வேண்டியது என்று பெரிதாக ஏதும் இல்லை.அதுவும் ராஜா செய்வது ஈயடிச்சான் காப்பி.வசனங்கள்,நடிகர்கள்,உடைகள்,வீடு அமைப்பு,குடும்ப அமைப்பு மிக முக்கியமாக இசை மற்றும் பாடல் வரிகள் முதற்கொண்டு அப்படியே செய்வது எந்த விதத்திலும் க்ரியேடிவிடீ இல்லை என்பதே என்னுடைய கருத்து.தெலுங்கு படத்தில் சித்தார்த் மூக்கு உறிஞ்சினால் இங்கு ரவியும் மூக்கு உறிஞ்சுவது எல்லாம் .............

D சொல்வது:

மொழி பெயர்க்க தெலுங்கும் தமிழும் தெரிந்திருந்தால் போதும்....அவர் மறுபதிப்பு செய்வதாலேயே அவர் திறமைசாலியென்று சொல்வதைதான் நான் வெறுக்கிறேன்....முழுப்பெருமையும் பாஸ்கரைத்தான் சேரும்....ராஜா மாதிரி ஆட்களாலதான் பாஸ்கர் மாதிரி ஆளுங்க வெளிய தெரியாமலேயே போயிட்ராங்க....நீங்க பாராட்டுற மாதிரிதான் எல்லோரும் ராஜாவ பாராட்டுவாங்க.......என்னைக்குமே காப்பியடிக்கிறதுக்குதான் மதிப்பு போலிருக்கு...சே....

Anonymous சொல்வது:

"ஜெயம்" ரவி தனது பெயரை "ரீமேக்" ரவி என்று மாற்றிக்கொள்ளலாம்.
ஏற்கனவே ஒருவர் சாப்பிட்டு வாந்தி எடுத்ததை, இவர் சாப்பிட்டு திரும்ப எடுத்துள்ளார்.
நல்ல இயக்குனர்கள் தங்கள் படங்களையே மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயங்குவார்கள்.
இந்த வாடகை சிந்தனைக்காரார்கள் என்றுதான் சுயமாக சிந்திப்பார்களோ?

manjoorraja சொல்வது:

பொம்மரில்லு தெலுங்கு படத்தை தமிழில் மீண்டும் எடுத்திருக்கிறார்கள் என்னும் போது இந்த படத்தை மூலத்தை விட சிறப்பாக செய்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் இயக்குனரை பாராட்டலாம். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. அதே நேரத்தில் கெடுத்துவிடாமல் மூலப்படத்தின் தரத்திற்கே எடுத்திருப்பதை பாராட்டலாம்.

G.Ragavan சொல்வது:

இந்தப் படத்தில் மூலத்தை நானும் தெலுங்கில் பார்த்துள்ளேன். நல்ல படத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததிற்கு இயக்குனருக்குப் பாராட்டுகள்.

ஜெராக்ஸ் மிஷின் இயக்குனராக ராஜாவும் நடிகராக ரவியும் மாறிக்கொண்டேயிருப்பது நல்லதல்ல.

மற்றபடி இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல மாறுதலான படம் என்பதில் ஐயமில்லை.

தெலுங்கிலும் ஜெனிலியாதான். பிரகாஷ்ராஜேதான். அம்மாவாக வருவது ஜெயசுதா. தமிழில் கீதா. கோட்டா சீனிவாசராவின் பாத்திரத்தில் ஷியாஷி ஷிண்டே.

Anonymous சொல்வது:

//இப்படியான பெண்களை நிஜத்தில் காண்பது அரிது.//

Ppl look at such girls like some weirdos. I experienced it. But, dun give a damn abt what they think :)