தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்

கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். Save TN Fisherman

ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது.

சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே . யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை.



முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது.

எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள்.

நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.

இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).

அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும் கொல்லும்.

ஹாட் அண்ட் சவர் சூப் 26-01-2011

அரசியல்

இலங்கை

இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் பலரிடம் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஒரு சாரார் அவர் தனது தனிப்பட்ட சொந்தப் பயணமாகச் சென்றிருக்கின்றார் எனவும் இன்னொரு சாராரோ அவர் யாழில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கச் சென்றபோது அவரின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்தது அபசகுனம் என்பதால் சோதிடர்களின் ஆலோசனைப் படி சில நாட்கள் சொந்த நாட்டில் நிற்ககூடாது என்ற ஆலோசனையின் பெயரில் சில நாட்கள் அமெரிக்காவில் நிற்பதாகவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அமைய யுத்தகுற்றங்களை விசாரிக்க அவர் சென்றதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இலங்கை சுதந்திரதினமான பெப்ரவரி 4ந்திகதி அவர் இலங்கைக்கு வந்து ஆற்றும் உரையில் தான் உண்மைகள் தெரியவரலாம் அதாவது அவரின் அமெரிக்க விஜய உண்மைகள்.


இந்தியா

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது மானாட மயிலாட போல வாரம் தோறும் நடக்கின்றது. கருணாநிதியும் தன்னுடைய டெம்லேட் கடிதத்தை வழக்கம்போல் மன்மோகனுக்கு அனுப்பிவிடுவார். தமிழக மக்களும் இதனைவிட தலையாய விடயங்களான இம்முறை எந்தக் கட்சி என்ன இலவசம் தரும், ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கோடிகளில் எமக்கு தேர்தல் பணமாக எவ்வளவு தருவார்கள் போன்றவற்றை மட்டும் சிந்திப்பார்கள். ஒரு சில வலைப்பதிவர்கள் மட்டும் ஆவேசமாக பதிவு எழுதுவார்கள் ஆனாலும் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவார்கள் காரணம் கேட்டால் ஜெயலலிதாவைவிட கருணாநிதி ஊழல் செய்தது குறைவு எனச் சொல்வார்கள். அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மாக்காளக இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப சுயநல அரசியலை நடத்தியே தீருவார்கள்.

சினிமா

மீண்டும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 2010 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் வந்துள்ளது. 127 Hours என்ற ஆங்கிலப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறையும் சென்ற முறைபோல் இசைப்புயல் தன்னுடைய இரு கைகளிலும் விருதை உயர்த்திப்பிடிப்பாரா இறைவனுக்குத் தான் தெரியும்.

பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மபூசண் விருது இம்முறை கிடைத்திருக்கின்றது, ஏற்கனவே அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கெளரவித்த இந்திய அரசு இம்முறை பத்மபூசணையும் அவரது மகுடத்தில் இட்டிருக்கின்றது. இவருடன் நடிகர்கள் சசி கபூர் வகீதா ரகுமான் இருவரும் திரைத்துறையில் பத்மபூசண் விருதுபெறுகின்றார்கள். கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், பாடகி உஷா உதூப் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றார்கள்.

சிறுத்தை

சிறுத்தை படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. தனிப்பட்ட எல்லாம் விமர்சனம் எழுதனேரமில்லை ஆக்வே ஒரு சின்ன விமர்சனம். படம் பார்க்கின்றவர்கள் காதுகளில் மட்டுமல்ல உடல் முழுக்க பூப்பூவாக வைக்கின்றார்கள். தனிமனிதனாக சகல தாதாக்களையும் கார்த்தி ஒருவரே நின்று அடித்துதுவைக்கின்றார். கார்த்தி சந்தாணம் நகைச்சுவைகள் படத்தின் பலம், வித்தியாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. போலிஸ் வேடம் கார்த்திக்கும் பொருந்துகின்றது. தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம். ஜிந்தக்கா ஜீந்தாக்கா. இதுபோல் ஒரு கதையுடன் அல்லது சில காட்சிகளுடன் விஜயகாந்த் படமோ அர்ஜூன் படமோ வந்ததாக ஞாபகம், கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது. மொத்தத்தில் சிறுத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.

தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோலங்கள் மற்றும் ஆனந்தம் ஆகியவை சிறந்த நெடுந்தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் நடந்தது என நினைக்கின்றேன். கோலங்களின் போது தேவயாணிக்கு இரண்டுதடவை குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கும் ஏதோ ஒரு விருது கிடைத்திருக்கின்றது, அனைத்துவிருதுகளும் சன், கலைஞர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இல்லை சின்னத்திரை என்றாலே அரச குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானதா?

விளையாட்டு

தென்னாபிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தோற்றுவிட்டது. உலகக்கோப்பைகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் டோணி உட்பட யுவராஜ் சிங், ரெய்னா, போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக டோணி சோபிக்கவேயில்லை. யூசுப் பதான் என்ற தனிமனிதனையும் சச்சின் என்ற இமயத்தையும் மட்டும் நம்பி இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கினால் 96ல் ஈடன்கார்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சி ரிப்பீட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுபக்கம் ஆஷாஸை வென்ற இங்கிலாந்து தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆஸியிடம் தடுமாறுகின்றது. இன்றைய போட்டியிலும் ஆஸி வென்றால் தொடர் அவர்களுக்குத் தான்.

சந்தேகம்

"நடுநிலையாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடிவதில்லை..#பட்டறிவு,"
என லோஷன் தனது பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் இட்டிருந்தார். அதற்க்கு பலரும் பலவிதமான கருத்துக்கள் சொன்னாலும் மருதமூரான் என்கின்ற புருசோத்தமன் தங்கமயில்
"உண்மை. நடுநிலையாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் பட்டறிவு"
என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் அதற்க்கு என் பெயரை மையப்படுத்தி அண்ணன் கானாபிரபா
"வந்தியைச் சொன்னாரோ இவர்? வந்தி தான் தமனாவும் அழகு அமலா பால் உம் அழகு என்று நடு நிலையாக இருக்கிறார்"
என்றார். அதற்க்கு என் பதில்
"பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் தமன்னாவின் இடுப்புத்தான் அழகு என்பேன் #நடுநிலை "

அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?

ரசித்த ஜோக்

ஒருமுறை மிஸ்டர் ஜீக்கு (மிஸ்டர் எக்ஸின் உரிமை ஆனந்தவிகடனுக்குத் தான்)இடுப்பு பிடித்துவிட்டது. அதனால் தன்னுடைய நண்பனை அழைத்து மருத்துவரிடம் செல்ல உதவி செய்யுமாறு கேட்டார். மிஸ்டர் ஜீயின் நண்பரோ இதற்கெல்லாம் மருத்துவர் தேவையில்லை ஹாஸ்பிட்டலில் புதிதாக இருக்கும் மிசினில் உன் சிறுநீரின் மாதிரியை செலுத்தினால் அந்த மிசின் உனக்கு ஆலோசனை சொல்லும் என்றார். உடனடியாக மிஸ்டர் ஜீயும் நண்பரும் ஹாஸ்பிட்டல் சென்று மிஸ்டர் ஜீயின் கொண்டுபோன சிறுநீரை அந்த மிசினில் அதற்குரிய குழாயினுள் செலுத்தினார்கள். ஒரு நிமிடத்தில் மிசின் தனது வாயிசில் "உனக்கு சாதாரண இடுப்பு நோ, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்" என்றது.

அடுத்தநாள் அந்த மிசினைச் செக்பண்ண மிஸ்டர் ஜீ தன்னுடைய சிறுநீருடன் தனது வீட்டு நாயின் மலம், தனது மனைவியின் சிறுநீர், மகளின் உமிழ்நீர், மற்றும் தன்னுடைய வீட்டுக் கிணற்று நீர் என அனைத்தையும் கலந்து கொண்டுபோனார்.

கொண்டுபோன கலவையை அந்த மிசினில் செலுத்தியபோது மிசின் கூறியது "உன் வீட்டுக் கிணற்றில் சுண்ணாம்பின் அளவு கூடிவிட்டது, உன் நாய்க்கு ஒழுங்காக குளிக்கவார்க்கவும் அதற்க்கு தோல் வியாதி, உன் மகள் கஞ்சாவிற்க்கு அடிமையாகியுள்ளாள் உரிய நடவடிக்கை எடுக்கவும், உன் மனைவி கர்ப்பம் ஆனால் காரணம் நீ அல்ல, இனிமேல் என்னைப் பரிசோதிக்க முயன்றால் உன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".

பாடும்நிலா பத்மபூசண் எஸ்பிபிக்காக‌


சாகர சங்கமத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பத்மபூசணை எஸ்.பி.பிக்கு கிடைத்த இன்னொரு தேசிய விருதுப்பாடல். இசைஞானி, கலைஞானி, பாடுநிலா என எனக்குப் பிடித்தவர்கள் இருப்பதால் இந்தப் பாடலை பத்மபூசண் எஸ்.பி.பி க்கு சமர்ப்பிக்கின்றேன்.


ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்

பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல நல்ல நண்பர்கள், ஒழுக்கம், விளையாட்டு, வாசிப்பு மற்றும் பல விடயங்களை எமக்கு பெற்றுத்தரும் ஒரு இடம். இதனை விட என் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகமான ஒரு விடயம் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் ராணி காமிக்ஸ் எங்கள் பள்ளியில் மிகவும் பேமஸ்.

நான், கவி, வேந்தன், கபில்(பெயரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடுவான் என நினைக்கவேண்டாம்), மலர் என ஐந்துபேர்கள் பஞ்சபாண்டவர்கள் போல வகுப்பில் ஒன்றாகவே குழப்படி செய்வோம். எது கிடைத்தாலும் (வேறு என்ன அடிதான்) ஐவீரும் ஒருவீராக பகிர்ந்துகொள்ளும் நல்ல பழக்கமும் எமக்கு உண்டு.

பெரும்பாலும் மலரே ராணி காமிக்ஸ் நெல்லியடி மொடேர்ன் ஸ்ரோரிலோ அல்லது பருத்தித்துறை உதயன் புத்தகநிலையத்திலோ(டொக்டர் முருகானந்தன் மருத்துவசாலை கட்டடத்தில் இருந்த கடை) வாங்கிவருவான். அதனை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் ஐந்துபேரும் ஒன்றாக இருந்தால் யாராவது சீபிளேன்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதால் மூன்று பேர் முதலிலும் மற்ற இருவர் பின்னரும் வாசிப்போம்.

எங்கள் பாடசாலையில் அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா போன்ற புத்தகங்களுக்கு அனுமதி ஆனால் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு தடா. ஏனென்றால் அவற்றில் வரும் படங்கள் சிறுவர்களைக் கெடுத்துவிடுமாம். ஏனென்றால் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியையோ அல்லது ஏனைய ஏஜெண்டையோ முத்தமிடாமல் அவரின் எந்தக் கதைகளும் வருவதில்லை. மாடஸ்தி பிளைசி பெரும்பாலும் உள்ளாடைகளுடனே துப்புத் துலக்குவ்பார். இரும்புக்கை மாயாவியும் சிலவேளைகளில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுவார். ஆகவே பாட்சாலையில் இப்படியான காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை போட்டது சரிதான், ஆனால் அந்த நேரம் எமக்கு அந்த உண்மை விளங்கவில்லை. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகளை வாசித்தால் புரிகின்றது.

ஆசிரியர்களிடமும் மாணவர் தலைவர்களிடமும் பிடிபடாமல் வாசிக்க நாம் செய்யும் உத்திகள் புத்தகத்தை விஞ்ஞானம் அல்லது சமயப் புத்தகத்தின் உள்ளே வைத்து வாசிப்பது, வெளியில் இருந்துபார்த்தால் பொடியள் மும்முரமாக அப்பர் தேவாரமும் மின்குமிழின் அமைப்பும் படிப்பது போல் இருக்கும். அடுத்தது பாடசாலையில் அனுமதியுள்ள கதை கட்டுரைப் புத்தகங்களிற்குள் வைத்து வாசிப்பது. வாங்கிற்க்கு(பெஞ்ச்) அடியுள் வைத்து வாசிப்பது அதுவும் கஸ்டம் என்றால் மைதானத்திற்க்கு மற்றவர்கள் விளையாடச் செல்லும் வேளையில் அங்கே சென்று சுதந்திரமாக வாசிப்பது. நாங்கள் ஐவரும் பாடசாலையில் விளையாட்டுக்காக எதுவுமே செய்தது கிடையாது.

அதே நேரம் எமது வகுப்பில் இன்னொரு பிரிவில் கற்கும் மாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு பாட நேரத்திற்க்கு 50 சதம். கொஞ்சம் பெரிய தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் என்றால் புத்தகத்தின் சைசுக்கு ஏற்றபடி 1 ரூபா 2 ரூபாவாக அந்த வாடகை மாறும். வாடகைக்கு புத்தகம் விடுபவர்களின் சட்டதிட்டம் பொது நூலகத்தை விட கொடூருமானது

குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை வாசித்துவிட்டுக்கொடுக்கவேண்டும்.

சிலவேளைகளில் அவர்களே அடுத்து யாரிடம் கொடுக்ககூடாது.

ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தலைவர்களின் கைகளில் மாட்டினால் தம்மைக் காட்டிக்கொடுக்ககூடாது.

அப்படிக் காட்டிக்கொடுத்தால் இனிமேல் காட்டிக்கொடுப்பவனுக்கு புத்தகம் வாடகைக்குத் தரப்படமாட்டாது.

புத்தகம் பிடிபட்டால் அதற்க்குரிய பெறுமதியை அவருக்கு கொடுக்கவேண்டும்.

வாசிக்கும் நேரத்தில் தனது அனுமதி இன்றி இன்னொருவருக்கு புத்தகத்தை கைமாற்றம் செய்யக்கூடாது.

ஆகக்கூடியது இருவர் மட்டும் சேர்ந்துவாசிக்கலாம்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு கொண்டுபோய் வாசிப்பது என்றால் வாடகைப் பணம் இரண்டு மடங்கு.

இப்படிப் பல சட்டங்கள், நாங்கள் பொதுவாக எம்மிடையே காசைப் பங்கிட்டு எப்படியும் வாசித்துவிடுவோம். எங்கள் குறூப்புக்கு 007ம் மாடஸ்தியும் தான் பேவரிட் அதிலும் கவி இப்பவும் மாடஸ்தியின் நினைவுகளில் இருக்கின்றான். நாம் இடையிடையே சந்திக்கும் போது மீள நினைக்கின்ற விடயங்களில் பாடசாலை நாட்களில் வாசித்த இந்தமாதிரி எங்கள் சாகசங்களை நினைப்பது வழக்கம்.

அண்மையில் நாம் சந்தித்தப்போது இன்னொரு நண்பன் தான் வாசித்த ராணி காமிக்ஸை மாணவர் தலைவர் ஒருவரிடம் பறிகொடுத்து அதன் உரிமையாளருக்கு புத்தகத்தின் பெறுமதியான ரூபாய் 7.50 செலுத்திய கதையைச் சோகத்துடன் சொன்னான்.

சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ஒரு ராணி காமிக்ஸ் வாசித்தேன் பல வருடங்கள் போனாலும் ஜேம்ஸ் பாண்டும் மாறவில்லை ராணி காமிக்ஸின் தரமும் மாறவில்லை. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஏனோ பலர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி எல்லாம் ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தது.

பிற்குறிப்பு : 2010ல் ரசித்த பதிவுகள் பகுதி 2 சில நாட்களில் வெளிவரும். நேரமின்மை காரணமாக அது தாமதமாகின்றது. ஒரு பதிவு எழுத ஒரு மணி நேரம் போதும் அதுவே இங்கே கிடைப்பது கஸ்டம். அதனால் நான் தான் இடைக்கிடை மட்டும் என் இருப்பையும் தக்க வைத்துக்கொள்கின்றேன்.