அஞ்சாதே - ஆச்சரியம்

நீண்ட நாட்களின் பின்னர் திரையில் ஒரு சிறந்த படம் பார்த்தேன். வலையுலக நண்பர்களின் சீரிய விமர்சனங்களால் பொங்கல் படங்களை திரையில் பாராததாலும் அஞ்சாதே படத்தைப் பற்றிப் பலரும் நன்றகாச் சொல்வதாலும் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் பார்க்கமுடிந்தது.

சினிசிட்டியில் பில்லா, காளை, பீமா மற்றும் அஞ்சாதே ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பீமாவுக்கும் காளைக்கும் மக்கள் இல்லையென்பதால் இன்று திரையிடவில்லை என்றார்கள்.பில்லா இன்னமும் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் கதை இத்துடன் போதும்.




அஞ்சாதே பற்றிய கதை அனைவருக்கும் தெரிந்திருக்கம் எத்தனையோ பேர் எழுதியதால் அதனை எழுதவிரும்பவில்லை. இந்தப்படத்தில் மனதைத் தொட்ட விடய்ங்களை மட்டும் பார்ப்போம்.

1. பாண்டியராஜன் :
இதுவரை சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், நல்ல நகைச்சுவை நடிகராகவும் இருந்தவர் முதன் முறையாக வில்லன் பாத்திரம் செய்திருக்கிறார். ஏனைய வில்லன்கள் போல் காட்டுக்கத்தல் கத்தாமல் சைலண்டாக தன் வெள்ளை வேட்டி சட்டையுடன் இவர் செய்யும் வில்லத்தனங்கள் இவருக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது. அதிலும் " என்னை மீண்டும் வெள்ளை சட்டைப்போட வைக்காதீர்களாடா" என இவர் புலம்பும் போது பழைய பாண்டியராஜனாக இருக்கிறார். அந்தத் திருட்டுமுழியை இந்தப் படத்தில் காணமுடியவில்லை.

2. பிரசன்னா:
சாக்லேட் பையனாக அழகியதீயே, 5 ஸ்டார், படங்களில் பார்த்த பிரசன்னாவா இவர் என ஆச்சரியப்படவைக்கிறார். கொஞ்சம் கவனம் சிதறினால் கூட "காக்க காக்க" ஜீவனின் அல்லது "வேட்டையாடு விளையாடு" டேனியல் பாலஜியின் சாயல் கிடைத்திருக்கும் ஆனாலும் அவற்றைத் தவிர்த்து புதுப்பாணியில் இவர் செய்திருக்கும் வில்லத்தனம் தமிழ் சினிமாவிற்க்கு இன்னொரு நல்ல நடிகரை தந்திருக்கிறது. நீண்ட தலை முடி குர்த்தா என்பன தமிழ் சினிமாவிற்க்கு புதிதல்ல என்றாலும் இந்த கெட்டப்புடன் பிரசன்னாகாட்டும் சில நளினங்கள் புதிது. அத்துடன் இவர் அடிக்கடி கையைத் திருப்பி மணிபார்ப்பார் அது புதுசு கண்ணா புதுசு. நாலு படம் நடித்து முடிந்தவுடன் வில்லனாகவோ இரண்டு கதானாயகர்கள் கதை என்றால் ஓடி ஒளிகின்ற சில ஹீரோக்கள் மத்தியில் பிரசன்னா விதிவிலக்கு.

3. விஜயலட்சுமி :
சென்னை 28ல் ஒரே ஒரு வ‌ச‌ன‌ம் பேசி "யாரோ யாருக்குள் யாரோ என‌" டூய‌ட் பாடிய‌ பொண்ணு. அச்சுஅச‌ல் கால‌னியில் வ‌சிக்கும் பொண்ணாக‌வே வாழ்ன்திருக்கிறார். ச‌த்யா( நரேன்) ந‌ல்ல‌வ‌ன் என‌ த‌ன் அண்ண‌னிட‌ம்(கிருபா) சொல்லும் காட்சிக‌ளிலும் கிளைமாக்ஸ்சிலும் பாத்திர‌ம் உண‌ர்ந்து ந‌டித்திருக்கிறார். டூய‌ட்பாட‌லில் ம‌ட்டும் சினிமாத்த‌ன‌ம் அவ‌ர‌து மேக்க‌ப்பில் தெரிகின்ற‌து. ஆனாலும் த‌மிழ் சினிமாவில் ஸ்ரேயா, ந‌ய‌ன்தாரா ந‌மீதாக்க‌ளுட‌ன் போட்டி போட‌ இவ‌ரால் முடியாது. கார‌ண‌ம் இவ‌ர் த‌மிழ்ப் பெண்.

4. நரேன் :
படத்தின் கதாநாயகன் இவர் என்றாலும் பிரசன்னா, பாண்டியராஜன் மற்றும் அஜ்மல் மூவரும் இவரைவிட அதிகம் ஸ்கோர் செய்தபடியால் இந்திய அணியில் சச்சினின் நிலைதான் இவருக்கு, ஆனாலும் கிடைத்த சில இடங்களில் சிக்ஸ்சர் அடித்துப் பட்டையைக்கிளப்பியிருக்கிறார். குறிப்பாக ரெள்டியாக இருந்து சப் இன்பெக்ஸ்டராக மாறும் சில காட்சிகளிலும், ரோட்டோரம் ஒருவர் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் செய்வதறியாது ஓடித்திரியும் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.

5. அஜ்மல் :
அறிமுக நடிகர் என்றாலும் எந்தவித பதட்டமுமின்றி அற்புதமாக நடித்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் ஒரு ஹீரோ லுக் தெரிந்தாலும் பிரசன்னாவுடன் சேர்ந்த பின்னர் தாடியுடன் தன் சோகத்தை பிரதிபலித்தபடியே இருக்கிறார். அத்துடன் ஐஜின் பிள்ளைகளுக்கு உதவும் காட்சிகளில் ஒரு நியமான சகோதரனாகவே மாறிவிடுகின்றார். சூழ்நிலை ஒருவனை எப்படிக் குற்றவாளி ஆக்குகிறது என்றதற்க்கு சிறந்த உதாரண பாத்திரம்.

6. பொண்வண்ணன் :
அண்ணாம‌லை சீரிய‌லில் கோம‌திநாய‌மாக‌ வ‌ந்து அல‌ப்ப‌றை ப‌ண்ணிய‌ பொண்வ‌ண்ண‌னா இவ‌ர்? த‌ன் பாத்திர‌த்தை உண‌ர்ந்து இய‌ல்பாக‌ ந‌டித்துள்ளார். த‌மிழ்சினிமா ஏன் இவ‌ரை இன்ன‌மும் ந‌ன்றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்ப‌து புரிய‌வில்லை. போலிஸ்கார‌ரான‌ இவ‌ர் என்த‌ இட‌த்திலும் யூனிபோர்மில் வ‌ர‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

7. ஒளிப்பதிவு மகேஷ் முத்துச்சாமி:
ஆரம்பகாட்சியிலையே தரையிலிருந்து வானத்தைக் காட்டுவதிலையே தெரிந்துவிட்டது இது ஒரு வித்தியாசமான ஒளிப்பதிவாக இருக்கும் என்று. காட்சிக்கு காட்சி வியப்பை அளிக்கின்றார். ஆனால் சில இடங்களில் கமேரா அசையாமல் ஸ்டில் கமேராபோல் நிற்பது ஏன் எனப் புரியவில்லை. குறிப்பாக கிளைமேக்ஸ் கரும்புத்தோட்டக்காட்சிகளை வர்ணிக்கவார்த்தைகள் இல்லை. நிச்சயமாக அது ஒரு விசுவல் ட்ரீமெண்ட்தான். அஜ்மலும் விஜயலட்சுமியும் க்டைசியாகப்பேசும் காட்சியை ஏரியல் வீயூவில் எப்படித்தான் எடுத்தாரோ தெரியவில்லை காரணம் அது ஒரு குன்றின்மேல் நடக்கும் காட்சி. பிசிஸ்ரீராம், ரவி கே சந்திரன், ஜீவா, சந்தோஷ் சிவன் வரிசையில் அடுத்த ஒளிப்பதிவாளர்.

9. இசை சுந்தர் சி.பாபு :
படத்தில் மொத்தமாக மூன்றே மூன்று பாடல்கள் தான். அதிலும் "கண்ணதாசன் காரைக்குடி" பாடலும் "கத்தாழைக் கண்ணாலே" பாடலும் ரசிகர்களை கவர்ந்தாலும் டூயட் பாடல் இடைச் செருகல்போல் இருக்கின்றது. பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிப்பின்னணி அட்டகாசம். பல இடங்களில் வீணையைப் பயன்படுத்தியிருப்பது பிளஸ் பாயிண்ட்.

10. எழுத்தும் இயக்கமும் மிஷ்கின் :
சித்திரம் பேசுதடி சினிமாமூலம் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் உச்சத்திற்க்குப் போயிருக்கின்றார். எத்தனையோ போலிஸ் கதைகள் வந்தாலும் இதனை வித்தியாசமாக காட்டியிருக்கிறார். இளம் பெண் கடத்தல்களும் கொலைகளும் மன்மதன்களும் வல்லவன்களும் செய்திருந்தாலும் எந்த ஒரு காட்சியிலும் அவற்றைக் காட்டாமல் மறைத்திருப்பது சாமர்த்தியம். இதனால்தானோ என்னவோ இந்தப் படத்திற்க்கு" U" சேர்டிபிக்கேட் கிடைத்திருக்கிறது. மிஷ்கினின் அடுத்த படத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

மொத்தத்தில் "அஞ்சாதே" பார்ப்பவர்களை மட்டுமல்ல, பேரரசு, ஹரி, பி.வாசு போன்ற இயக்குனர்களிடமிருந்து தமிழ்சினிமாவைக் காக்க அமீர்,பாலா, பாலாஜி சக்திவேல் வரிசையில் இன்னொருவர் இருக்கிறார் நீங்கள் அஞ்சவேண்டாம் என்கிறது.

சில கேள்விகள்:
1. ஒரு சில நடிகர்களின் படத்திற்க்கு ஊடகங்கள் கொடுக்கும் பில்டப்புக்களுக்கு மத்தியில் ஏன் இப்படியான நல்ல படங்களுக்கு பக்கங்கள் ஒதுக்குவதில்லை. ஒரு நடிகர் தும்புகிறார் இருமுகிறார் எனச் செய்திபோடும் ஊடகங்கள் மிஷ்கினையோ, பிரசன்னாவையோ பாராட்டுவதில்லை?
2. அடுத்து டாப் டென்களில் பழனிக்கும் காளைக்கும் கொடுக்கும் மதிப்பு ஏன் இப்படியான படங்களுக்கு கொடுப்பதில்லை? அவர்கள் வசூலைப் பார்த்தாலும் பீமா, காளை எல்லாம் வசூல் கூட இல்லை என தகவல்.

படத்தில் சில நெருடுகள் இருந்தாலும் நல்ல விருந்தில் சோற்றில் உள்ள சில கற்களை எடுத்து எறிந்துவிட்டுச் சாப்பிடுவதுபோல் அவற்றை புறக்கணிக்கலாம்.

6 கருத்துக் கூறியவர்கள்:

பிரேம்ஜி சொல்வது:

அருமையான திரைப்பார்வை

Nimal சொல்வது:

நல்ல தெளிவான விமர்சனம்...!

வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

காத்திரமான விமர்சனம் வந்தி. எனக்கு ஒரு சந்தேகம். படத்தை ஒரு முறை தான் பார்த்தீர்களா?

வந்தியத்தேவன் சொல்வது:

பிரேம்ஜி, நிம‌ல், நிர்ஷ‌ன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

//இறக்குவானை நிர்ஷன் said...
காத்திரமான விமர்சனம் வந்தி. எனக்கு ஒரு சந்தேகம். படத்தை ஒரு முறை தான் பார்த்தீர்களா?//
ஒரே ஒரு முறைதான் பார்த்தேன். ஏன் இந்தச் சந்தேகம்.

Muruganandan M.K. சொல்வது:

சிறப்பான திரைப்பார்வை. மகிழ்ச்சி. பாராட்டுக்கள். நான் இன்னும் பார்க்கவில்லை

வந்தியத்தேவன் சொல்வது:

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
சிறப்பான திரைப்பார்வை. மகிழ்ச்சி. பாராட்டுக்கள். நான் இன்னும் பார்க்கவில்லை//

நன்றிகள் டொக்டர். ஒரு முறை நேரம் கிடைத்தால் பாருங்கள். உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றேன்.