அறிவு மணமும் ஐயப்பர் தலமும்.

அறிவு மணமும் ஐயப்பர் தலமும்.

இந்து சமயத்தின் ஏற்றத்துக்கும் இந்துமதத்தின் பெருமைக்கும் உரியதாக விளங்குகிறது திருச்சி ஐயப்பர் சுவாமி கோவில். மத மூட நம்பிக்கைகளும் அர்த்தமற்ற சில கிரிகைகளும் இந்துக் கோயில்களை ஆட்டிப்படைக்கும் இந்த காலத்தில் அறிவு மணம் கமழ்கின்ற ஆலயமாக அது விளங்குகிறது.
ஆலயத்தின் முகப்பில் வலது பக்கத்தில் "எந்த நாட்டவரும் எம்மதத்தவரும் எந்த இனத்தினரும் எந்த சாதியினரும் உள்ளே வரலாம்" என்ற வசனம் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இடது பக்கத்தில் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்று தொடங்கும் ஒளவையார் பாடல் காணப்படுகிறது.
ஆலயத்துள் செல்லும்போது இடப்பக்கத்தில் அலுவலகம் உள்ளது அதில் அறிவு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மக்களின் நல்வாழ்வுக்கு உபயோகமான அறிவுரைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு இருந்தன. உதாரணமாக பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பற்றி பிள்ளைகள் அறிந்திருக்கவேண்டியவை என்று ஒரு துண்டுப்பிரசுரமும் இன்னொன்று பிள்ளைகள் எதிர்பார்ப்புகள் பற்றி பெற்றோர்கள் அறிந்திருக்கவேண்டியவை என்றும் இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக துண்டுப்பிரசுரங்கள் உண்டு.
ஆலயத்தின் இரு மருங்கிலும் அழகிய பூந்தோட்டம் அதற்குள் காணப்படும் ஒரு அறிவித்தல் இப்படி இருந்தது. "அறுகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாம்' பூமரங்களுக்கு பக்கத்தில் இன்னொரு அறிவித்தல் 'அப்படியே விட்டுவிடுங்கள் சிரிக்கட்டும் செடியில் பூக்கள்' என்றிருந்தது. இன்னொரு இடத்தில் காணப்பட்ட அறிவித்தல் ' இருக்குமிடத்திலேயே இவைகளும் இருக்கட்டுமே'.
'செல்லிடத் தொலைபேசிகளைக் கொண்டு வராமலே இருப்பது உத்தமம் கொண்டு வந்து உபயோகப் படுத்தாதது மத்திமம் கொண்டு வந்து உபயோகப்படுத்துவது அதமம்' என்றும் ஓர் அறிவித்தல் காணப்பட்டது. பச்சைதமிழருக்கு சொந்தமான ஊடகங்களே கொச்சைத் தமிழ் பேசும் தமிழ் நாட்டில் என் இச்சைக்குரிய தமிழுக்கு இவ்வாறு இனிமை சேர்க்கும் அறிவித்தல் தமிழ்ப் பண்பாட்டைப் பறை சாற்றி நின்றன. வாசித்தபோது வாயெல்லாம் இனித்தது.
உட்பிரவேசிக்காதே, அதைத் தொடாதே இதைத் தொடாதே உத்தரவின்றி உள்ளே நுழையாதே என்றெல்லாம் எதிர்மறையாக அதிகார தோரணையுடன் நமது ஆலயங்களில் அறிவித்தல்களைப் பார்த்திருக்கும் நமக்கு ஐயப்ப சுவாமி ஆலயத்தில் இனிய தமிழில் கனிவான வகையில் காணப்பட்ட அறிவித்தல்கள் மிகவும் மகிழ்வைத் தந்தன.
1999 ல் கார்கில் போரில் வீரமரணம் அடந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனுக்கு செலுத்துவோம் என்ற நினைவுச் சின்னமும் காணப்படுகிறது. இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட சகோதரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகள் என்று சேலை தாவணி மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுரிதார் மட்டுமே என்று இருந்தது.
ஆலய வளவினுள் நுழைகின்றபோது காணப்பட்ட அந்த அறிவித்தலில் ஒரு பெண்ணின் இரண்டு பெரிய வண்ணப்படங்கள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு சுரிதார் அணிபவர்கள் எப்படி அணிய வேண்டும் என்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. துப்பட்டா முன்பக்கமாக மார்பை மறைக்கும் வகையில் அணியக்கூடிய இரண்டு முறைகள் காட்டப்பட்டிருந்தன.
ஓரிடத்தில் தாயை வணங்குவோம் என்ற அறிவித்தலோடு ஒரு ஆழி(சுவிச்) பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆழியை அமத்தியதும் "அம்மாவென்றழைக்காத உயிரில்லையே" என்ற யேசுதாஸ் பாடல் மிக அமைதியாக ஒழித்தது.
அழகிய சிறிய கோவில் மக்கள் அமர்ந்திருந்து தியானம் செய்யக்கூடிய வகையில் வசதிகளோடு கூடிய தியான மண்டபம் சுற்றிவர வெண்மணல் நிறந்த வீதி இப்படி ஆலயம் என்கின்ற பெயருக்கேற்ற வகையில் அக்கோயில் அமைந்திருக்கின்றது.

எழுதியவர் எஸ் ஸ்ரீஸ்கந்தராசா - கனடா
நன்றி வீரகேசரி.

2 கருத்துக் கூறியவர்கள்:

WeaselWorld சொல்வது:

Hello,
Nice Tamil Blog. Visited Iyappan tamil temple, it sure was very different. There were two things that stood out - very clear and explicit notices on Do's and Don'ts and the second thing - its even better to see people stick to the rules / norms of the temple. It sure is a "model" temple.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் நண்பரே. என் மேலும் நல்ல விடயங்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கிறேன்.