நானும் சினிமாவும்

திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி என்னை ஆட்கொண்டுவிட்டது. இதனை நீங்கள் என் பதிவுகளில் இருந்தே கண்டுகொள்ளலாம். சிலவேளைகளில் இந்தியாவில் பிறந்திருந்தால் யாரோ ஒரு நடிகருக்கு பாலாபிசேகம் செய்கின்ற ரசிகனாக மாறியிருந்திருப்பேன். நல்ல காலம் ஈழத்தில் பிறந்தபடியால் சும்மா படம் பார்த்து நண்பர்களுடன் சேர்ந்து விமர்சிப்பதுடன் நிறுத்திவிட்டேன்.   நான் விடலையாக இருக்கும்போது தமிழ்சினிமாவை கமல்,ரஜனி என்ற இருவரின் ஆட்சி(இப்போதும் இளையவர்களுடன் போட்டிபோடும் வல்லமை இவர்களை விட்டால் வேறு யாருக்கும் இல்லை). இவர்களைத் தவிர்த்து சண்டைக்காக விஜயகாந்தையும், காதல் நகைச்சுவைக்காக கார்த்திக்கையும் பிடிக்கும். இப்பவும் மூத்த ந‌டிகர்களின் விசிறியாக இருந்தாலும் ஏனோ நடிகைகள் மட்டும் அடிக்கடி மாறுகிறார்கள். ஆரம்பத்தில் ஸ்ரீ தேவி, குஷ்பு, கெளதமி,ரம்பா,மீனா, ஜோதிகா, சிம்ரன், அசின், பாவனா, மீரா ஜாஸ்மின் என நீண்ட பட்டியல் தற்போது சரண்யா மோகனில் வந்து நிற்கிறது. என் சினிமா அனுபவங்களை அதிலும் முதல் முதல் தியேட்டரில் பார்த்த கதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்கின்றேன்.   என்னை இந்த சங்கிலித் தொடரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த அண்ணன்(?) கானாப் பிரபாவிற்க்கு நன்றிகள்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதன் முதலில் பார்த்த சினிமா ஞாபகம் இல்லை. ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் நெல்லியடி மஹாத்மா தியேட்டரில் கர்ணன் படம் பார்த்தேன். மஹாபாரதக் கதையும் கர்ணனாக நடித்த செவாலியே சிவாஜியின் அற்புத நடிப்பும் உள்ளத்தின் நல்ல உள்ளம் பாடலும் இன்னும் நினைவில் நிற்கின்றது. அந்தக்காலத்தில் உள்ளூர் சனசமூக நிலையங்களில் நிதி சேகரிக்க தொலைக்காட்சிப்பெட்டியில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து டிவி, டெக் போன்றன காரில் வரும் கார் வந்தவுடன் எம்மைப்போன்ற சிறுசுகள் டிவி டெக் பார்க்க ஓடிப்போறதும் பின்னர் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்து சிறிது நேரம் படம் பார்த்துவிட்டு அந்த வெறும் நிலத்தில் நித்திரையாகி பொழுதுவிடிந்தபின்னர் வீட்டுக்கு வந்து பாடசாலையில் நித்திரை கொள்வதும் ஆசிரியர்கள் என்ன இரவும் படம் பார்த்தியா எனக்கேட்டுவிட்டு மாணவர்களை அடிப்பதும் ஞாபகம் இருக்கின்றது. சனசமூகப் படங்களில் கமலின் "எத்துகேயே லி", "சனம் தெரி ஹசம்" போன்ற படங்கள், ரஜனியின் முரட்டுக்காளை, போன்ற படங்கள் அடிக்கடி திரையிட்டார்கள். சிவராத்திரி போன்ற சமய சம்பந்தப்பட்ட நாட்களின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பக்திப்படங்கள் போடுவார்கள்.   காலம் ஓடி திரையரங்குகள் யுத்ததில் அழிந்தபின்னர் மினிசினிமா என்கின்ற தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து படம் காட்டுகின்ற இடங்களில் பெரும்பாலான ராமராஜன் படங்களும் அந்தக்காலத்தில் வந்த ஏனைய படங்களும் பார்த்த ஞாபகம்.  முன்னர் நடிகர்களுக்காக படம் பார்த்த நான் பின்னர் இளையராஜாவின் இசை உள்ள படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இந்த மினிசினிமா கலாச்சாரமும் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தடைப்பட்டவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.   அதன் பின்னர் ஜெனரேட்டடில் படம் காட்டத்தொடங்கினார்கள். இந்தக்காலத்தில் நான் ஏஎல் மாணவன் அதனால் பெரும்பாலும் படம் பார்க்க போவதில்லை வீட்டில் படிக்கவேண்டும் என்று விடமாட்டார்கள். ஆனாலும் அயல் வீடுகளில் என்ன படம் போடுகின்றார்கள் என அறிந்தால் ரஜனி,கமல், கார்த்திக் படங்கள் என்றால் அதனை மட்டும் பார்த்துவிட்டு வருவேன். நீண்டகாலம் எந்தப் படங்களும் பாராமல் முதன்முதலில் ஜெனரேட்டர் காலத்தில் பார்த்த படம் சின்னத்தம்பி. இடையிடையே கட்டுப்பாடுகளை மீறி அடுத்த கிராமங்களில் கூட படம் பார்க்க நண்பர்களுடன் சென்ற அனுபவம் இருக்கின்றது.   மீண்டும் மினிசினிமா ஆரம்பமாகியது. டிக்கெட் விலை 5 ரூபா. இல்லையென்றால் ஜெனரேட்டருக்கு கால்ப்போத்தல் மண்ணென்னெய் கொடுக்கவேண்டும். பெரும்பாலும் பின்னேரங்களில் மினிசினிமாவில் படம் போடுவார்கள். ஒரு முறை நாம் படம் பார்த்துக்கொண்டிருந்த மினிசினிமாவில் கிட்டத்தட்ட 50 பேரை இராணுவம் சுற்றிவளைத்து கைது செய்தார்கள். பின்னர் அனைவரையும் விட்டுவிட்டார்கள். அன்றைக்குப் பார்த்த படம் "அண்ணாமலை". அடுத்த நாள் மிகுதிப்படம் பார்த்தோம்.  

அந்த நாளில் சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் அறிந்திருந்தேன். நடிகர்கள் நிஜமாக சண்டைபோடுகிறார்கள். நம்பியார் என்றவர் மிகவும் கெட்டவர். எம்ஜிஆர் தான் நல்லவர் என்ற விம்பங்கள் மனதில் உண்டாகின.   பின்னர் சில காலங்களில் இயக்குனர்களுக்காக படம் பார்க்கின்ற தகுதி வந்துவிட்டது. பாரதிராஜா, பாலசந்தர், ஷங்கர், மணிரத்தினம், சுந்தர்.சி என சிலரின் படங்கள் தவறவிடுவதே இல்லை. 

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"ச‌ரோஜா" வெங்கட் பிரபுவின் சென்னை 28 தந்த அனுபவத்தில் பார்க்கச் சென்ற படம். வெங்கட் பிரபு ஏமாற்றவில்லை. யுவனின் இசையும் பிரேம்ஜியின் நகைச்சுவையும் ஒரு திரில்லரையு விழுந்துவிழுந்து சிரிக்க வைத்தது. 

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தினமும் ஏதாவது ஒரு படம் முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ (சில படங்கள் ஒரு கிழமையாக விட்டுவிட்டு பார்த்திருக்கின்றேன் உதாரணம் குருவி, சத்யம்) டிவிடியில் பார்ப்பது உண்டு. தற்போது தாம்தூம் ஓடிக்கொண்டிருக்கின்றது இன்னும் பார்த்துமுடியவில்லை. தியேட்டரில் படம் பார்ப்பதை விட வீட்டில் பார்ப்பது வசதி பாடல்களை ஓடவிடலாம், தேவையான நேரத்தில் நிறுத்திவைக்கமுடியும் போன்ற வசதிகளால் டிவிடி தான் தற்போது சிறந்த தெரிவு.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? 

இதுவரை பெரிதாக எந்த சினிமாவும் என்னைப் பாதிக்கவில்லை. குணா மகாநதி போன்ற படங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சில காதல் படங்கள் என்னைப் பாதிக்காவிட்டாலும் என் நண்பர்களை பாதித்ததை நேரில் கண்டேன் உதாரணம் காதலுக்கு மரியாதை.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? 
தசாவதாரம் படத்திற்க்கு சில மதவெறியர்கள் காட்டிய வீண் எதிர்ப்பும், குசேலன் படத்தையும் ரஜனி என்ற தனிமனிதனையும் ஊடகங்கள் கிழித்துக்காயப்போட்டதும். 

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய வாசிப்பதுண்டு. அதற்காக அந்த நடிகையின் நாய்க்குட்டி விபரம் இந்த நடிகரின் ஆட்டுக்குட்டி விபரங்களை எல்லாம் வாசிப்பதில்லை. கிசுகிசுக்கள் வாசித்து அந்த நபர் யார் எனக் கண்டுபிடிப்பதில் அலாதிப் பிரியம். சில தேர்ந்தெடுத்த விமர்சகர்களின் சினிமா சம்பந்தமான புத்தகங்கள் ஆக்கங்கள் படிப்பதுண்டு, கே.எஸ்.சிவகுமாரனின் ஆக்கங்கள். டொக்டர்.முருகானந்தனின் கட்டுரைகள் ரொம்ப பிடிக்கும். டொக்டர் பல நாட்களாக உங்கள் சுவைத்த சினிமாவில் ஆக்கங்களைக் காணவில்லை. இவர்களின் விமர்சனங்களின் பின்னர் பார்த்த பிறமொழிப்படங்கள் அதிகம். 

தமிழ் சினிமா இசை?
இசை என்றால் இளையராஜா என கருதும் இசைஞானியின் தீவிர ரசிகன் நான். அதற்காக மற்றவர்களைப் பிடிக்காது என்றில்லை. தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கு முக்கியம் கொடுத்தவர்களில் இசைஞானியின் பங்கு மிகப்பெரியது. மசாலாப் படமான வெற்றிவிழாவின் பின்னணி இசையை கசட் ரெக்கோடரில் ரெக்கோட் பண்ணி அடிக்கடி கேட்ட அனுபவம் உண்டு, ஜிந்தாவை மறக்கமுடியுமா? ஆனாலும் இதுவரை தமிழ் சினிமாவில் இசையை மையமாக வைத்து பெரிதாக படங்கள் வரவில்லை என்பது ஒரு சிறிய கவலை. சிந்துபைரவியில் கூட இசையுடன் காதலும் வருகின்றது. சில மலையாளப் படங்கள் இசைக்காகவே வந்தன உதாரணமாக மோகன்லாலின் "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா".

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
90களின் தொடக்கத்தில் மோகன்லால் மம்முட்டியின் பல மலையாளப் படங்கள் பார்த்தேன். மதிலுகள், வைசாலி, ஒரு மின்னாமினியின் நொருங்கு வட்டம், கைதியின் டயரிக்குறிப்பு( பெயர் சரியோ எனத் தெரியவில்லை) என்பவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. கொஞ்சம் ஆங்கில அறிவு வளர்ந்தபின்னர் உப தலைப்புகளுடன் வந்த ஹிந்திப்படங்கள் பார்த்தேன். தற்போது சில நல்ல ஹிந்திப்படங்கள் வருகின்றன என்பது என் தாழ்மையான விமர்சனம்.

ஆங்கிலப்படங்கள் வரிசையில் முதல் முதல் பார்த்த படம் "என்டர் த ட்ராகன் "புருஸ்லி படம். அதன் பின்னர் கெள பாய் படங்கள், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் குறிப்பாக அதிரடிப்படங்கள் விரும்பிப்பார்ப்பது. டைட்டானிக்கைத் தவிர எந்த ஆங்கிலக் காதல் படங்களும் பார்க்கவில்லை. அந்தளவுக்கு எனக்கு பொறுமையில்லை. சிலவேளைகளீல் நேரம் கிடைத்தால் திரைப்பட விழாக்களில் சில வாயினுள் நுழையமுடியாத வேற்றுமொழிப்படங்கள் பார்த்திருக்கின்றேன்.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை இல்லை, ஆர்குட்டில் கமல் ரசிகனாக இருக்கின்றேன் இதனால் சில கமல் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு உண்டு. கிரிக்கெட் வீரர்களுடன் படம் எடுத்ததுபோல் இதுவரை எந்த சினிமா சம்பந்தப்பட்ட நபர்களுடன் படம் எடுக்கவில்லை. அவர்களை ரசிக்கமட்டுமே முடிகின்றது படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்சினிமாவை சில இயக்குனர்களிடமிருந்து காப்பாத்தினால் உருப்படும். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் போல் இளையவர்களும் வர முயற்சி செய்தால் நிச்சயம் தமிழ் சினிமா உலகத்தரத்தை அடையும். அமீர், செல்வராகவன் போன்றவர்கள் முயற்சி செய்துள்ளார்கள். 

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒன்றுமே ஆகாது யாழில் சிலகாலம் எந்த தொடர்பும் இன்றி இருந்தனாங்கள் அதனால் இவை எல்லாம் எம்மைப் பாதிக்காது. ஆனால் இணையம் இன்றி இருப்பது என்பது கஸ்டம் உணவு உடை உறையுளுடன் இப்போது இணையமும் சேர்ந்துவிட்டது. 

இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் இனிய நண்பர்கள்.
1. இறக்குவானை நிர்ஷன்
2. மாயா
3. தூயா
4. சிவகுமார் அண்ணா
5. லோஷன்
6. டொக்டர் முருகானந்தன்( டொக்டர் உங்கள் அனுபவத்தை எப்படிம் ஒரு தடவையாவது எழுதுங்கள்)

22 கருத்துக் கூறியவர்கள்:

ஆயில்யன் சொல்வது:

//தற்போது சரண்யா மோகனில் வந்து நிற்கிறது///

அட எங்க கூட வந்து நிக்கிறீங்களா வெரிகுட்!

நாங்கெல்லாம் இப்பத்தான் இஸ்டார்ட்டு பண்ணியிருக்கோம் :)))

ஆயில்யன் சொல்வது:

//அண்ணன்(?) கானாப் பிரபாவிற்க்கு நன்றிகள்.//
எதுக்கு கொஸ்டீன் மார்க்கு?!
ஒரு வேளை பெரிய அண்ணன் சொல்ல வந்தீங்களா?:)

ஆயில்யன் சொல்வது:

//குசேலன் படத்தையும் ரஜனி என்ற தனிமனிதனையும் ஊடகங்கள் கிழித்துக்காயப்போட்டதும். /

:(((

Anonymous சொல்வது:

உங்களுடைய தொடர்பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்த்தேன். கலக்கிட்டிங்கண்ணா :)

Anonymous சொல்வது:

//அட எங்க கூட வந்து நிக்கிறீங்களா வெரிகுட்!//

எனக்கு வந்த அண்ணன்களில் ஒருவர் கூட திருந்த மாட்டாங்களா?என்ன கொடுமைடா இது?

கானா பிரபா சொல்வது:

ஆளாளாக்கு என்னை பெருசு ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே அவ்வ்வ்வ்

உங்கட படங்களின் லிஸ்டைப் பார்த்தால் உங்களை நான் சித்தப்பு எண்டு தான் கூப்பிடோணும். நல்லாயிருக்கு பதிவு

அருண்மொழிவர்மன் சொல்வது:

நல்ல பதிவு... அதிலும் குசேலன், தசாவதாரம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் நானும் ஒத்துவருகிறேன்

ARV Loshan சொல்வது:

எனக்கு ஒன்றுமே ஆகாது யாழில் சிலகாலம் எந்த தொடர்பும் இன்றி இருந்தனாங்கள் அதனால் இவை எல்லாம் எம்மைப் பாதிக்காது.//

சத்தியம். சைக்கில் டைனமோவில் பார்த்து, றேடியோ கேட்டகாலமும் உண்டு தானே.

சில காதல் படங்கள் என்னைப் பாதிக்காவிட்டாலும் என் நண்பர்களை பாதித்ததை நேரில் கண்டேன் உதாரணம் காதலுக்கு மரியாதை.//
நம்ப சொல்லுரீங்களா?

மாட்டி விட்டதற்கு நன்றி.
முடியுமானால் இன்றே பதில் பதிவு

முரளிகண்ணன் சொல்வது:

சூப்பர்

Nimal சொல்வது:

நல்ல பதிவு... உங்கள் அனுபவங்களை சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்...

மாயா சொல்வது:

அருமையான அனுபவப்பகிர்வு அண்ணா !!!

என்னை அழைத்தமைக்கு நன்றி நானும் எழுதிவிட்டென்

நன்றி

Muruganandan M.K. சொல்வது:

நல்ல பதிவு, என்னையும் சங்கிலித் தொடரில் எழுத அழைத்ததற்கு நன்றி. உங்கள் பதிவின் அழகு என்னையும் எழுதத் தூண்டுகிறது. சற்றுத் தாமதமானாலும் எழுதுவேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆயில்யன் said...
அட எங்க கூட வந்து நிக்கிறீங்களா வெரிகுட்!
நாங்கெல்லாம் இப்பத்தான் இஸ்டார்ட்டு பண்ணியிருக்கோம் :)))
ஆயில்யன் said...
எதுக்கு கொஸ்டீன் மார்க்கு?!//

வாருங்கள் ஆயில்யன் பொதுவாக எம்மைப்போன்ற இளைஞர்கள்(???) ரசனை அடிக்கடி ஏன் மாறுகின்றது என யாராவது மன நலம் சம்பந்தப்பட்டவரை அனுகவேண்டும். அத்துடன் கானாப் பிரபாவும் நானும் ஒரே வயதுடையவர்கள் என நினைக்கின்றேன். ஹிஹிஹிஹி

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆயில்யன் said...
//குசேலன் படத்தையும் ரஜனி என்ற தனிமனிதனையும் ஊடகங்கள் கிழித்துக்காயப்போட்டதும். /

:(((//
பொதுவாக பலரும் குசேலன் படத்தை கிழித்துக் காயப்படுத்தியபோது இரண்டு காரணங்களுக்காக நான் அந்தப் பக்கம் வரவில்லை. முதல் காரணம் நான் அடிப்படையில் ஒரு கமல் ரசிகன் என அறியப்பட்டவன். அதனால் ரஜனி படத்தை விமர்சனம் செய்தால் சிக்கல் ஏற்படலாம். நேர்மையாக விமர்சனம் செய்தாலும் நீ கமல் ரசிகன் தானே என ஒருவர் கேட்ககூடாது என்பதற்காக எந்தக் கருத்தும் சொல்லவில்லை. இரண்டாவது காரணம் இன்னும் நான் அந்தப் படம் பார்க்கவில்லை. ஆரம்பகாட்சிகள் சில பார்த்தேன் வாழ்க்கை வெறுத்துவிட்டது ரஜனி வரும் கிளைமாக்ஸ் மட்டும் நன்றாக இருக்கின்றது.

ஊடகங்கள் ரஜனி விடயத்தில் நடந்துகொண்டது குற்றம் தான். காரணம் இவர்கள் சம்பாதிப்பதே ரஜனியைவைத்துதான் அப்படிப்பட்டவர்கள் ரஜனி சொன்னது சரியோ பிழையோ என ஆராயாமல் கண்டமேனிக்கு அவரைத் தாக்கியது அதிலும் விகடன் போன்ற பாரம்பரிய பத்திரிகைகள் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//thooya said...

எனக்கு வந்த அண்ணன்களில் ஒருவர் கூட திருந்த மாட்டாங்களா?என்ன கொடுமைடா இது?//


வருகைக்கு நன்றிகள் தூயா. நீங்கள் ஏற்கனவே பதிவிட்டதை கவனிக்காமல் உங்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டேன். அதனால் என்ன இன்னொரு பதிவை எழுதுங்கள்.

தூயா நடிகைகளை ரசிப்பது என்பது காலம்காலமாக நடந்துவரும் ஒரு விடயம். என் தாத்தா கேபிசுந்தரம்பாளை ரசித்திருப்பார். அப்பா சரோஜாதேவியை ரசித்திருப்பார் நான் அசினை மன்னிக்கவும் சரண்யா மோகனை ரசிக்கின்றேன். பெண்கள் கார்த்திக்கையும் கமலையும் இன்றைக்கும் ரசிக்கிறார்கள் அதுபோல் தான் இதுவும். ஹிஹிஹி. அப்பாவின் நண்பர் ஒருவர் நடிகை பத்மினியை சந்தித்த கதை இன்னொரு நாள் சொல்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கானா பிரபா said...
ஆளாளாக்கு என்னை பெருசு ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே அவ்வ்வ்வ்

உங்கட படங்களின் லிஸ்டைப் பார்த்தால் உங்களை நான் சித்தப்பு எண்டு தான் கூப்பிடோணும். நல்லாயிருக்கு பதிவு//

வலையுலகில் நீங்கள் எங்களுக்கு மூத்தவர் அதனால்தான் அந்த மரியாதை. ஏற்கனவே பிரபல வலைப்பதிவாளர் ஒருவருக்கு மாமாவாக வேண்டியனான். அதனை சைக்கிள் கேப்பில் தவறவிட்டுவிட்டேன். ஹிஹ்ஹி

வந்தியத்தேவன் சொல்வது:

//அருண்மொழிவர்மன் said...
நல்ல பதிவு... அதிலும் குசேலன், தசாவதாரம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் நானும் ஒத்துவருகிறேன்//

அருண்மொழிவர்மரே வருகைக்கு நன்றிகள். சினிமாவை சினிமாவாக பார்க்காமல் விடுபவர்களின் தவறுகள் தான் இவை.

வந்தியத்தேவன் சொல்வது:

//loshan said...
சத்தியம். சைக்கில் டைனமோவில் பார்த்து, றேடியோ கேட்டகாலமும் உண்டு தானே.
நம்ப சொல்லுரீங்களா?//

லோஷன் காதலுக்கு மரியாதை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் அந்தப் பெண் எங்கள் வகுப்புத் தோழிதான்( உயிரியல் பிரிவு). ஏஎல் முடிந்தபின்னர் ஏற்பட்ட விபத்து அது. உங்கள் முன்னாள் வானொலி சக அறிவிப்பாளர் ஒருவருக்கு இந்த விடயங்கள் நன்கு தெரியும் அவரும் எங்கள் நண்பர் குழாத்தில் ஒருவர் இப்போது புலம் பெயர்ந்து இருக்கின்றார். அதிக பெண் ரசிகைகளை கவர்ந்த யானை அவர். (பெயரைக் கண்டு பிடியுங்கள்)

லோஷன் டைனமோ சுற்றிய கதை நம்ம பிரபாத் தம்பி எழுதியிருக்கிறார் படித்துப்பாருங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

முரளி கண்ணன் நிமல் வழக்கம் போல் உங்கள் வருகைக்கு நன்றிகள். நிமல் உங்களிடம் இருந்து இதனைவிட அழகாக எதிர்பார்க்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

மாயா வாழ்த்துக்கள். எந்த வலையில் எழுதியிருக்கிறீர்கள் என்பதை அறியத்தரவும்.

வந்தியத்தேவன் சொல்வது:

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல பதிவு, என்னையும் சங்கிலித் தொடரில் எழுத அழைத்ததற்கு நன்றி. உங்கள் பதிவின் அழகு என்னையும் எழுதத் தூண்டுகிறது. சற்றுத் தாமதமானாலும் எழுதுவேன்//

வருகைக்கு நன்றிகள் டொக்டர். நீங்கள் எழுதிய விமர்சனத்தைப் படித்து சில படங்களை காலம் கடந்துபார்த்தேன் அதேபோல் சற்றுப் பிந்தினாலும் உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த நாட்களில் புலோலி சினிமாவிலும் பருத்தித்துறை சென்றல் தியேட்டரிலும் எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு வாழை தோரணம் கட்டினார்கள் என அறிந்தேன் அவை பற்றியும் அறியத்தாருங்கள்.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்க.
என்னை அழைத்தமைக்கு நன்றிகள் வந்தி. ஏதோ எழுதியிருக்கிறேன்.

http://nirshan.blogspot.com/2008/10/blog-post_20.html

சினிமா அனுபவங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

/சில காதல் படங்கள் என்னைப் பாதிக்காவிட்டாலும் என் நண்பர்களை பாதித்ததை நேரில் கண்டேன் உதாரணம் காதலுக்கு மரியாதை.
//
பொய்சொல்லவும் பழகியிருக்கிறீர்கள் என்ன?