எத்தனை நாளாச்சு இப்படி ஒரு வேகமான திரைக்கதையுடைய படத்தைப் பார்த்து, சென்னை ஏர்போர்ட்டில் ஆரம்பிக்கின்ற படம் கொங்கோ, மலேசியா, சென்னை என பல இடங்கள் பறந்து அதே ஏர்போர்ட்டில் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. 
சூர்யா :
மிகவும் சாதாரணமாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து சாமார்த்தியமாக கடத்தல் செய்யும் இளைஞனாக படம் முழுவதும் வியாபித்திருக்கின்றார். கொங்கோ சண்டைக்காட்சியிலும், மலேசியா கார் ஷேசிங் காட்சியிலும் ஆக்சன் ஹீரோவாக மாறி, தமன்னாவுடன் காதல்காட்சிகளில் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ரிகாரணமாக சர்வசாதாரணமாக காதல் வயப்படுகின்றார். பாடல்களில் பழைய காக்க காக்க அன்புச்செல்வன் போல் மிடுக்காகவும் அழகாகவும் இருக்கின்றார்.
தியேட்டரில் ஏன் இத்தனை பெண்கள் கூட்டம் என்பது சூரியாவின் சட்டை இல்லாத உடும்பைப் பார்த்த்போதுதான் புரிந்தது. பெரும்பாலும் முதல் வாரத்துதில் தியேட்டரில் இளைஞிகள் கூட்டம் இருக்காது ஆனால் இரண்டாவது நாளான இன்றே சூரியாவைப் பார்க்க ரொம்பக்கூட்டம். அடுத்தகாட்சி வரிசையில் முதல் பத்துபேர் அக்மார் பாடசாலை மாணவிகள்.
ஜோதிகா உங்கள் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்.
கே.வி.ஆனந்த் :
கனாக் கண்டேன் வியாபார ரீதியில் போகாவிட்டாலும் வித்தியாசமான கதையால் முதல் படத்திலையே திரும்பிப்பார்க்க வைத்த பிரபல ஒளிப்பதிவாளர். இந்தப் படத்திலும் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவிடம் கொடுத்துவிட்டு கதை,திரைக்கதை,வசனத்தை சுபாவுடன் பங்குபோட்டதுடன் மிரட்டலாகவும் இயக்கியிருக்கின்றார். அதிலும் எப்படிக் கடத்துகின்றார்கள் என்பதை பிளாஷ்பேக்கில் சொல்வதும் வித்தியாசமாக இருந்தது.
நண்டு ஜெகனும் சூரியாவும் ஒரு வீட்டில் நுழைந்து செய்யும் அலப்பறைகளும் பின்னஎ அதேபோல் காட்சிகள் தமன்னா வீட்டில் நடப்பதும் தியேட்டரையே கலகலக்க வைத்தது. கேவி ஆனந்தின் அடுத்த படம் என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கின்றேன்.
எம் எஸ் பிரபு:
இன்னொரு ஒளிப்பதிவாளரின் படத்தில் தன் திறமைகள் அனைத்தையும் காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். குறிப்பாக கொங்கோ காட்சிகளில் திரையில் ஒரு மெல்லிய கறுப்பால் ஆபிரிக்கா கண்டத்தின் கலரை கண்முன்னர் கொண்டுவருகின்றார். அத்துடன் கொங்கோ மலைகளை அதளபாதாளம் வரை கமேரா சுட்டுத் தள்ளியிருக்கின்றது. மலேசியா கார் ஷேசிங்காகட்டும் கொங்கோ சண்டையாகட்டும் பறந்து பறந்து படமாக்கியிருக்கின்றார்.
பாடல் காட்சிகள் அழகாகவந்திருக்கின்றன. குறிப்பாக பாலைவனத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் கொள்ளை அழகு. விழிமூடி ஜோசிக்கின்றேன் பாடல் ஒவ்வொரு காட்சியும் ஹக்கூ கவிதை.
சுபா :
வசனத்தில் தங்கள் எழுத்தை காட்டிய சுபா இரட்டையர்கள் கதையிலும் குறிப்பாக கடத்தல் காட்சிகளில் தங்கள் கதை எழுதிய வாசித்த அனுபவங்களை எடுத்துவிட்டிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. சில டெக்னிக்கள் ஏற்கனவே அறியப்பட்டாலும் மினரல் வாட்டர் போத்தலில் வைரம் கடத்தியது விசிலடிக்க வைத்த காட்சி.
எடிட்டர் ஆண்டனி :
படத்தை தூக்கி நிறுத்திய ஒருவரில் இவரும் ஒருவர். தேவையான இடங்களில் கத்தரியை நன்கு பயன்படுத்தியிருக்கின்றார். போரடிக்கின்றது போல் ஒரு காட்சியும் இல்லை. திரைப்படத்தின் வேகத்திற்க்கு இவரே முக்கிய காரணம்.
ஹாரீஸ் ஜெயராஜ் :
காக்க காக்க, கஜனி, வாரணம் ஆயிரம் என சூரியாவுடன் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துவிட்டு இப்போ நான்காவதாக அயனையும் ஹிட் பண்ணியுள்ளார். விழிமூடி ஜோசிகின்றேன் ,நெஞ்சே நெஞ்சே சன் மியூசிக்கில் இனி தினமும் ஒளிபரப்பாகும். ஹானி ஹானி பாடல் வரிகளே விளங்கவில்லை. பின்னணி இசை சுமார் தான். இன்னும் கொஞ்சம் மினைக்கெட்டிருக்கலாம்.
சண்டைப் பயிற்சி :
கொங்கோவில் நடக்கும் முதல் சண்டைக்காட்சிகள் ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தின. கட்டடங்களுக்கு கட்டடம் சூரியா தாவிகிறதும் பின்னர் அடியாட்களை அடித்துத்வைப்பது அட்டகாசம். நல்லவேளை கட்டடங்களுக்கு இடையில் பெரிதாக இடைவெளி இல்லை இல்லையென்றால் சூரியாவும் இன்னொரு விஜயாக புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயற்பட்டிருப்பார். அதிலும் கூரையில் நடக்கும் சண்டை கண்ணுக்கு குளிரிச்சியாக இருக்கின்றது.
நண்டு ஜெகன் :
சூரியாவுக்கு அடுத்ததாக இந்தப்படத்தில் பேசப்படுவார். கனாக் கண்டேனில் விவேக்கைவைத்து காமெடி என்றபெயரில் மொக்கைபோட்ட கேவிஆனந்த் இந்தமுறை நண்டு ஜெகனை காமெடி மற்றும் துணைப் பாத்திரத்தில் உலாவவிட்டது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதுவரவு. சந்தானத்திற்க்கு போட்டியாளாராக வரும் வாய்ப்பு உள்ளது. தங்கையை சூரியாவுடன் காதல் பண்ண வைக்கும் இடங்கள் மட்டும் கொஞ்சம் லாஜிக் மீறுகின்றது. அண்ணனாக இல்லாமல் மாமாவாக அந்தக் காட்சிகளில் தெரிகின்றார், தவிர்த்திருக்கலாம். இவரின் டைமிங் காமடிகள் கலகல. குறிப்பாக "தமன்னாவை நீ பார்க்கத் தான் சினேகா செய்வது எல்லாம் நமீதா" என்ற இடத்தில் விசில் மழை.
இளைய திலகம் பிரபு :
கல்யாண் ஜூவலேர்ஸ் கெட்டப்பில் இல்லாமல் நான்கு நாள் வெள்ளைத் தாடி சேர்ட் என படத்தை நிறைத்து நிறைவாகவும் செய்திருக்கின்றார். நீண்ட நாட்களின் பின்னர் பெயர் சொல்லும் கதாபாத்திரம். சூர்யாவின் குரு வழிகாட்டியாக கடத்தல் செய்பவர். குளோசப் காட்சிகளில் திரையை நிறைக்கின்றார். இனிமேல் இவர் கதாநாயகனாக நடிப்பது கஸ்டம் தான் காரணம் டூயட் எல்லாம் ஆட முடியாது. இவரின் முடிவுதான் வழக்கமான தமிழ்சினிமாபோல் அமைந்தது கவலை.
தமன்னா :
கல்லூரியில் அறிமுகமானவர் கதாநாயகியாக வந்துபோகாமல் சில இடங்களில் குறிப்பாக காதல்காட்சிகளில் ஜோதிகாவைப் பொறாமைப்பட வைத்து நடித்தும் உள்ளார். அசின் அல்லது நயந்தாரா செய்திருந்தால் இன்னும் நல்லாயிருக்கும். அவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று இவரிடம் மிஸ்போல் எனக்குத் தெரிகின்றது. விக்னேஸ்வரன் ஆதவன் போன்ற தமன்னா ரசிகர்கள் மன்னிப்பார்களாக.
வில்லன் :
வட இந்திய முகச் சாயல் என்பதால் இவரைத் தெரிவுசெய்திருந்தாலும் தன் பங்கை ஓரளவு சிறப்பாக செய்திருக்கின்றார். கோலங்கள் ஆதியின் குரல் நல்லாக செட் ஆகியிருக்கின்றது. சாயலில் பைவ் ஸ்டார் கிருஷ்ணா போல் இருக்கின்றார். இவருக்குப் பதிலாக டானியல் பாலாஜியை நடிக்க வைத்திருக்கலாம்.
பொன்வண்ணன், ரேணுகா(சூரியாவின் தாய்), போன்றொரும் தங்கள் பங்கை திறம்படவே செய்திருக்கின்றார்கள்.
சில கேள்விகள்:
1 . அயன் என்ற பெயர் எதற்காக? காரணம் அயன் என்றால் பிரம்மா என வடமொழியில் அர்த்தம். அயன் தமிழ்ப் பெயரும் அல்ல என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் அயன் என்றால் படத்திற்க்குப் பொருத்தமாக இருக்கும்.
2. கடத்தல் செய்யும் முறைகளை அக்குவேறு ஆணிவேறாகக் காட்டுகின்றார்கள் இது ஏனையவர்களை கடத்தல் செய்யத் தூண்டாதா?
3. ஒரு குற்றவாளி எப்படி பின்னர் அரச உத்தியோகத்தில் சேரலாம்?
இப்படிச் சில கேள்விகளை சும்மாவிட்டுவிட்டு பார்த்தால் அயன் அட்டகாசம் தான்.
டிஸ்கி : சன் பிக்சர்சின் தயாரிப்பு என சன் குழுமத்தின் சகல சானல்களிலும் காட்டுகின்றார்கள் ஆனால் நான் பார்த்த தியேட்டரில் ஏவிஎம்மின் அயன் தான். ஒரு வரிகூட சன் பிக்சர்ஸ் பெயர் வரவில்லை. என்ன காரணமோ?
ஏவிஎம்மின் அயன் - அட்டகாசம்.
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
திமுக கூட்டணியில் வீரத்தளபதி ஜே.கே.ரீத்திஷ்
திமுக சார்பில் வீரத் தளபதி ஜேகேரித்திஷ், கயல்விழி அழகிரி மற்றும் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகனான பிரபாகரன், நடிகர் ரஜினியின் டாக்டர் நண்பர் பாரதிமோகன், அமைச்சர் பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் இப்போதைக்கு புதுமுக பட்டியல் என்ற யூக லிஸ்ட்டில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தி ஆதாரம் : ஜூனியர் விகடன்.
எழுதியது வந்தியத்தேவன் at 0 கருத்துக் கூறியவர்கள்
ரீமிக்ஸ் இசையமைப்பது எப்படி?
கடந்த சில ஆண்டுகளாக மீழ்கலவை இசை எனப்படும் ரீமிக்ஸ் கலாச்சாரம் திரைப்படங்களிலும் ஏனையவர்களிடமும் அதிகமாக வேரூண்டிவிட்டது. கணணி இயக்கத் தெரிந்த நண்டு சிண்டுகள் கூட ரீமிக்ஸ் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இசையமைப்பாளர்களோ பழைய பாடல்களைக் கெடுப்பதற்காக மீண்டும் அந்தப் பாடலின் கற்பை அழிக்கின்றார்கள்.
பெரும்பாலான ரீமிக்ஸ் பாடல்கள் அந்தகால அல்லது இடைக்கால ஹிட்டான பாடலை அழிப்பதையே நோக்கமாககொண்டிருக்கின்றது. அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மன்மதன் படத்தில் இடம் பெற்ற" என்னை ஆசை மைதிலியே" பாடல் ரீமிக்ஸ் இல்லை அச்சு அசல் என்றே சொன்னான். தான் பிடித்த முயலுக்கு காலே இல்லாதவர்களிடம் நான் விவாதிப்பதில்லை அப்படியே விட்டுவிட்டேன்.
ரீமிக்ஸ் செய்வது எப்படி. இதொன்றும் பெரிய விடயம் இல்லையென்று பழைய பாடல்களைக் கெடுக்கின்ற நண்பனும் சொன்னான். ஏதோ சில மென்பொருள்கள் இருந்தால் சரி அதனை விட பழைய அசல் பாடலும் வேண்டும் என்றான்.
என் பார்வையில் ரீமிக்ஸ் இசையமைப்பவர்கள் ஒருவிதமான டெம்லேட் பாவிக்கின்றார்கள். அந்த டெம்லேட் செய்முறை விளக்கம் கீழே:
1. முதலில் ரீமிக்ஸ் செய்யவேண்டுய ஒரிஜினல் பாடலை தேர்ந்தெடுங்கள். எதற்க்கும் ஆறு அல்லது ஏழு தடவை திரும்ப திரும்ப கேளுங்கள்.
2. பாடல் ஆரம்பிக்க முன்னர் வேறு ஏதாவது ஒரு பாடலின் முதல் இசையை அல்லது அதேபாடலின் இசையை சற்றே மாற்றி பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் இஅய்ங்கவிடுங்கள்.
3. பின்னர் ஒரிஜினல் பாடலின் சரணத்தை இதேபோல் பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் பாடவிடுங்கள் அல்லது வித்தியாசம் தெரியாமல் இருக்க அதே பாடலுக்கு பின்னணியில் வேறு இசைக்கருவிகளை இசைக்க விடுங்கள்.
உதாரணம் "ஆசை நூறுவகை" பாடல் கொஞ்சம் பாஸ்மோட், "காதல் வைபோகமே" அதே பாடல் பின்னணி இசை கர்ணகடூரம்.
4. பல்லவி முடிந்தபின்ன வரும் முதல் சரணத்தின் இடையில் வரும் முதல் பிஜிஎம்முக்கு வேறு ஏதாவது பாடலின் பிஜிஎம் அல்லது ராப் பாடுவதுபோல் ஏதாவது ஆங்கிலம் அல்லது வேறுமொழி வரிகளை கொஞ்சம் முக்கிமுனகிக் கொண்டு அல்லது காட்டுக்கத்தலாக இசைக்கவும்.
உதாரணம் :பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" பாடல் வேறு பிஜிஎம் ரகம் பிரேம்ஜி அமரன் இசையமைத்த ஒரு படத்தில் பாடலுக்கு "இளமை இதோ இதோ" பாடலின் பிஜிஎம் அப்படியே சுட்டுப்போட்டிருப்பார்.
5. குறிப்பு நாலில் உள்ளதுபோல் இரண்டாவது சரணத்தின் பிஜிஎம்முக்கும் செய்யவும்.
6. இறுதியாக பாடல் முடிந்தபின்னர் கூல், கமோன், ஸ்வீட்டி என ஏதாவது வசனம் சேர்த்து முடிக்கவும் பாடல் தயார்.
பின்னர் சேர்க்கவேண்டிய இசையையையும் பாடகரையும் தயார் செய்த்து நல்லதொரு ரீமிக்ஸ்சை ரசிக மஹா ஜனங்களுக்கு பரிமாறவும்.
ஒரு சில நல்ல ரீமிக்ஸ் பாடல்களும் வந்துள்ளன. ரகுமான் தொட்டால் பூமலரிலும் பாடலில் கலக்கி பொன்மகள் வந்தாலில் சொதப்பியிருப்பார்.
எழுதியது வந்தியத்தேவன் at 7 கருத்துக் கூறியவர்கள்
யாவரும் பயம் - விமர்சனம்
வலையுலகப் பதிவுகள் மூலம் படத்தைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டாலும் முதன்முறை பேய்ப்படம் தியேட்டரில் தனியாகப் பார்க்கபோனது இந்தப் படத்திற்க்குத் தான். ஏற்கனவே தீ படம் பார்த்து நொந்த மனதை இப்படியான படங்கள் பார்ப்பதன் மூலம் கொஞ்சம் ஆற்றிக்கொள்ளமுடியும்.
முதல்காட்சியிலிருந்தே ஏற்படும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இடைவேளையில் பாப்கோர்ன் வாங்கவதையோ ஐஸ்கிறீம் வாங்குவதையோ மறக்கவைக்கின்றது. பின்னர் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் டல் அடித்தாலும் கிளைமாக்ஸ்சில் சீட் நுனிக்கு வரவைக்கின்றது. இயக்குனருக்குப் பாராட்டுகள்.
படத்தின் கதையைச் சொல்லவிரும்பவில்லை. ஒரு திகில் படம் அவ்வளவுதான். சுஜாதாவின் நாவல் ஒன்றை வாசித்த உணர்வு இந்தப் படம் பார்க்கும்போது வரும். அதிலும் சமையல் குறிப்பு புத்தகம் ஒன்றை மனைவிக்கு மாதவன் பரிசளித்து நடத்தும் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இதுவரை எத்தனை கணவர்மார் தங்கள் மனைவிக்கு இந்தப் புத்தகத்தை பரிசளித்தார்களோ தெரியாது. சர்வேசன் ஒரு சர்வே எடுக்கவும்.
புதுமுக இயக்குனர் விக்ரம் குமார் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கின்றார். வில்லன் யார் என்பதிலிருந்து ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் சஸ்பென்ஸாக இருக்கின்றது. யாரும் எதிர்பாராத திருப்பம் என்றாலும் ராஜேஸ்குமார், சுஜாதா , சிட்னிஷெல்டன் போன்றவர்களின் மர்ம நாவல்கள் படித்தவர்களுக்கு ஓரளவுக்கு முடிவையும் கொலையாளியையும் ஊகிக்கமுடிந்திருக்கும்
பிசி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தி பிளாஷ்பேக் காட்சிகளில் இன்னொரு நிறம் என இவரது காமேரா நிறம் மாறுகின்றது. அதிலும் அடிக்கடி லிப்டை காட்டுகின்ற கோணங்கள் அசத்தல்.
படத்திற்க்கு பாடல்கள் தேவையில்லை ஆனாலும் முதல் பாதியில் அரைகுறையாக இரண்டுபாடல்கள். இசை சங்கர் எஸான் லாய் பெரிதாக பாடல்கள் கேட்கவில்லை. பின்னணி இசை இன்னொருவரின் பெயர் போடுகின்றார்கள். அவர் பின்னணீ இசையில் அதகளப்படுத்தியிருக்கின்றார் சிலவேளைகளில் கொஞ்சம் ஓவராகவும் இருக்கின்றது. சில இடங்களில் சைலண்டாக விட்டிருந்தால் நிச்சயம் பார்வையாளர்களின் இதயத் துடிப்புக்கேட்டிருக்கும். ஆனால் இந்த இடங்களில் இவர் ட்ரம்ஸ்சை அலறவிட்டுவிட்டார். படம் முடிந்த பின்னர் மாதவனுக்கு ஒரு ஐட்டம் பாடல்.
மொத்தத்தில் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வந்திருக்கும் ஒரு திகில் கலந்த மர்மப் படம்.இறுதியாக வந்த படம் விசில் என நினைக்கின்றேன் நாகாக் கதைகள். அந்த நாள் படம் அண்மையில் கேடிவியில் பார்த்தேன். அமரர் ஸ்ரீதர் கலக்கியிருப்பார். அதனைப்போல் படம் பார்த்தவர்கள் முடிவை மற்றவர்களுக்குச் சொல்லகூடாது.
மாதவன், சரண்யா மற்றும் பிளாஷ்பேக்கில் தோன்றும் சில சீரியல் நடிகர் நடிகைகளைத் தவிர்த்து ஏனையோர் புதுமுகங்கள். கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு ஒத்துவராது. புதுமுகங்களுக்குப் பதிலாக பழைய தெரிந்தவர்களை நடிக்கவைத்திருக்கலாம்.
சில லாஜிக் அத்துமீறல்கள்:
1. மாதவனின் தாயார் ஒரு காட்சியில் முதல் நாள் பார்க்காத சீரியலைப் பற்றி இன்னொருவரிடம் போனில் கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால் தங்கள் வீட்டில் மட்டும் ஒளிபரப்பாகின்ற சீரியலைப் பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை.
2. மாதவனுக்கு மட்டும் வேலை செய்யாத லிப்ட் பற்றி மாதவன் தவிர ஏனையோர் கவலையே படவில்லை.
3. எல்லாப் திகில் ப்டங்களில் இருப்பதுபோல் கண் தெரியாத ஒருவர். அவர் பின்னர் எங்கே போனார் எனத் தெரியவில்லை.
இப்படிச் சில இடங்களில் லாஜிக் அடிபட்டாலும் குருவி, வில்லு,ஏகன் , தீ போன்ற படங்களைப் பார்த்து ரசித்த நம்ம ரசிகர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு நிச்சயம் தெரியாது. என்ன மீண்டும் மீண்டும் பார்க்கமுடியாது ஆகவே ரிப்பீட் ஓடியன்ஸ் இந்தப் படத்திற்க்கு அவ்வளவு இருக்காது.
அதுசரி நண்பர்களே உண்மையில் பேய் இருக்கா இல்லையா? லோஷன் கூட பேய் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்தப் படமும் பேய்ப்படம் ஆனாலும் மருந்துக்கும் ஒரு வெள்ளை உருவம், புகை ஆவி எனப் பயமுறுத்தவில்லை. இதற்கான விடையை ஏனோ இயக்குனர் சொல்லவில்லை. அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியில் எப்படி இவர்களுக்கு மட்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகின்றது என்பதையும் அவர் ஏனோ சொல்லவில்லை.அட்லீஸ்ட் தசாவதாரம் கமல் போல் பேய் இல்லை இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இப்படி இவர் ஒன்றும் சொல்லாதது என்னைப்போன்ற சிறுவர்களை இரவில் நித்திரை கொள்ளமுடியாமல் செய்துவிடும். பாருங்கள் யாவரும் நலம் என டைப் செய்ய நினைத்து பயத்தில் யாவரும் பயம் என டைப் செய்துவிட்டேன்.
பயப்படாமல் பார்க்ககூடிய பயம் கலந்த படம்.
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்



